Skip to main content

சாகித்ய அகாதமியை திட்டலாமா?



-    

தமிழில் ஒரு தட்டையான எண்ணம் உள்ளது. அது ஒரு குறிப்பிட்ட வகையை சேர்ந்த எழுத்தாளர்கள் எழுதுவது அனைத்தும் இலக்கியம், முப்பது வருடங்கள் தொடர்ந்து இயங்கி மூத்த எழுத்தாளர் ஆனால் உடனே தனி அந்தஸ்து மரியாதை இடம் எல்லாம் தந்து விட வேண்டும் என. இது வெறும் குழு அரசியலும் மூத்தோரை கண்மூடித்தனமாய் மதிக்கும் இந்திய மனோபாவமும் தான்.

இக்காரணத்தினால் தான் நாம் “தீவிர” இலக்கிய வகையை சேர்ந்தவர்கள் சாகித்ய அகாதமி பெறும் போது போல கொண்டாடி புகழ்ந்து மகிழ்வதும் த.மு.எ.ச எழுத்தாளர் அல்லது ஒரு பழந்தமிழ் ஆய்வாளர் விருது பெறும் போது கசப்போடு மறுத்து விமர்சிப்பதும் நடக்கிறது. எந்த குழு அல்லது வகையை சேர்ந்தவர் என்றாலும் படைப்பு உலகத்தரமானதா என கராறாக நாம் அலசுவதே இல்லை. கடந்த முறை சு.வெங்கடேசனுக்கும் இம்முறை டி. செல்வராஜுக்கும் கிடைத்த போது அவர்கள் லாபி செய்து பெற்றதாக விமர்சனங்கள் எழுந்தன. அதேவேளை இன்னொரு தீவிர எழுத்தாளருக்கு சமீபத்தில் கிடைத்த போது அவரது படைப்புகள் எந்தளவுக்கு எதார்த்தமும் ஆழமும் கலைத்தன்மையும் கொண்டவை என நாம் பரிசீலிக்கவே இல்லை. செண்டிமெண்டலாக கண்கலங்கி வாழ்த்துகிறோம். பழைய எம்.ஜி.ஆர் படங்களில் ஒரு பாட்டு பாடினதும் விட்டுப் பிரிந்த சகோதரர்கள் ஒன்று சேர்வார்களே அது போல் இருக்கிறது மரியாதை தெரிவிக்க வருபவர்களைப் பார்த்தால்.
தொடர்ச்சியாக த.மு.எ.ச ஆட்கள் வாங்கிக் கொண்டே இருப்பதா என கேள்வி எழுகிறது. இது ஜாதி அடிப்படையிலான தொகுதிப் பங்கீடு போல உள்ளது. என்னைப் பொறுத்தவரையில் இந்த பரிசு வாழ்நாள் அங்கீகாரமாக மாறி வருவது தான் தவறு. அது வாசகனுக்கு ஒருநாளும் பயன்படாது. புக்கர் பரிசு போல அவ்வருடத்தில் மிக வித்தியாசமான தரமான நூல் ஒன்றை கண்டறிந்து அதற்கு அப்பரிசை அளிக்க வேண்டும். சாகித்ய அகாதமியும் பெயரளவில் அதைத் தான் செய்கிறது என்றாலும் அதன் நோக்கம் மூத்த எழுத்தாளர்களின் வாழ்நாள் சாதனையை அங்கீகரிப்பதாய் தெரிகிறது. சு.வெங்கடேசன் ஒரு விதிவிலக்கு எனலாம்.
உதாரணமாக எனக்கு எஸ்.ராவின் நெடுங்குருதி அல்லது ஜெ.மொவின் பின் தொடரும் நிழலின் குரல் பிடிக்கும். ஆனால் அவர்களின் வாழ்நாள் பங்களிப்பை அங்கீகரிக்க வேண்டும் என்பதால் அவர்கள் பின்னால் எழுத நேர்ந்த ஒரு சாதாரண நூலுக்கு விருதை கொடுக்க மாட்டேன். அதற்கு தனியாக எழுத்தாள அறக்கட்டளைகளை ஏற்படுத்தி நிதியளிக்கலாம். ஏனென்றால் ஒவ்வொரு முறையும் இவ்விருது வரும் போதும் வாசகர்களுக்கு எதிர்பார்ப்பு தோன்றும். புத்தகம் அதற்கு ஏற்றதாக இருக்க வேண்டும். ஏதோ கடவுளுக்கு படையல் போடுவது போல் விருதை சடங்காக மாற்றி நம் நன்றிக் கடனை தெரிவிப்பது தான் தவறான போக்கு.
உண்மையில் சாகித்ய அகாதமியால் அனைவரையும் திருப்திப் படுத்தும் வகையிலான தேர்வுகளை பண்ண முடியாது. முதல் பிரச்சனை இங்குள்ள குழு அரசியல். அது இந்தியர்களின் சாதிய மனப்பான்மையில் இருந்து வருகிறது. அதனை எளிதில் ஒழிக்க முடியாது. சாகித்ய அகாதமி மட்டுமல்ல சமீபத்தில் தோற்றுவிக்கப்பட்ட பல தனியார் விருதுகளும் கூட பூணூல் பார்த்து கைகுலுக்கும் வகையறாவாக இருக்கின்றன. நீங்கள் பாரபட்சமின்றி ஒரு விருது தர வேண்டும் என்றாலும் கூட தேர்வாளர்கள் பலவிதங்களில் தமது சார்பை உள்ளே கொண்டு வந்து விடுவார்கள். உதாரணமாக ஒரு புத்தகத்துக்கு நான்கு தேர்வாளர்கள் என்றால் மிச்ச மூவரும் பாரபட்சமின்றி மதிப்பெண் அளிக்கும் நிலையிலும் கூட ஒருவர் தமக்கு அணுக்கமானவரின் நூலுக்கு பத்துக்கு ஒன்பது மதிப்பெண் போட்டால் தராசு முழுக்க ஒரு பக்கம் சாய்ந்து விடும்.
இன்னொரு பக்கம் தேர்வுக்குழுவுக்கு பணம் கொடுப்பது, அவர்களை தொடர்ந்து ஜால்ரா அடிப்பது எல்லாம் நடக்கிறது. கடந்த வருடம் ஒரு எழுத்தாளர் ஒரு தேர்வுக்குழு தலைவரை தனது நிகழ்ச்சிக்கு தலைமை தாங்க அழைத்து அவர் முன் தன் விஸ்வரூபத்தை நிகழ்த்திக் காட்டினார். இது நடந்தது குறிப்பிட்ட விருது அறிவிக்கப்படுவதற்கு ஒரு மாதம் முன். ஆனால் வேறு ஒருவருக்காக பணம் முன்கூட்டியே கைமாறப்பட்ட நிலையில் முயற்சி தோல்வி அடைந்தது. இன்னொரு முறை அவர் ஒரு அயல் விருது வழங்கப்படுவதற்கு சில வாரங்கள் முன் அவ்விருதை தீர்மானிக்கும் முக்கிய புள்ளியைப் பற்றி அரைமணி நேரம் சிலாகித்து ஒரு மேடையில் பேசினார். ஆனால் இம்முறை கடவுள் சோதிக்கவில்லை. அவருக்கு விருது கிடைத்தது.
இன்னொரு படி மேலே போய் எழுத்தாளர்கள் தமக்கு இனி விருதே வேண்டாம் என்கிற நிலைக்கு வருவார்கள். ஏனென்றால் தாம் விருதைக் கடந்தவர்கள் விருது வாங்குவதை விட குடுப்பதே தம் அந்தஸ்துக்கு ஏற்றது என்கிற தன்னம்பிக்கை அவர்களுக்கு வந்து விடும். மேலும் விருது கொடுப்பதன் வழி தமது ஆதரவாளர்களின் படையில் எண்ணிக்கை கூட்டவும் சக எழுத்தாளர்களுக்கு சின்னதாய் ஒரு அச்சத்தை ஏற்படுத்தவும் விருதை ஸ்தாபிப்பது தான் நல்ல உத்தி என அவர்கள் அறிவார்கள். அவர்கள் மிகத் தெளிவாக தமது இலக்கிய குல கோத்திரத்தை சேர்ந்தவர்களைத் தவிர வேறொருவரின் பெயரைக் கூட பரிசீலிக்க மாட்டார்கள். எழுத்தாளருக்கு விடிகாலை சட்டென்று தூக்கம் கலைந்து எழுந்த உடனான திகைப்பில் ஒரு பெயர் தோன்றும். இவருக்கு தான் இந்த வருடம் என உடனே தன் தொண்டர் படைக்கு அறிவித்து விடுவார். இப்படியான ஒரு ஊழல் மிக்க சூழலில் ஒரு விருதை பாரபட்சமின்றி கொடுப்பது மிக மிக சிரமம்.
இன்னொரு சிக்கல் தமிழில் தீவிரமான நூல்கள் குறைவாகவே பிரசுரமாகின்றன. சில நல்ல நூல்கள் ஒரு சின்ன பதிப்பகம் மூலம் வந்து அறியப்படாமலே போய் விடலாம். அல்லது சுயபிரசுரமாகி ஒரு இருண்ட அறையில் தூங்கலாம். இதனோடு விருதுக்காக அதிகம் நாவல்களே பரிசீலிக்கப்படுவதால், அவையே வாசகர்களிடையே பிரபலம் என்பதால், நாவல்களும் மிக மிக குறைவாகவே இங்கு எழுதப்படுகிறது என்பதாலும் பரிசீலனைப் பட்டியல் மிகக் குறுகினதாகவே இருக்க நேர்கிறது. அபுனைவு, ஆய்வு நூல், அரசியல், சமூகவியல், அறிவியல், வரலாற்று நூல்களைக் கூட பொருட்படுத்தி விருது கொடுப்பது ஒரு தீர்வு. அதன் மூலம் மிகச் சிறந்த ஏதாவது ஒரு நூலை வாசகனுக்கு அறிமுகப்படுத்த முடியும். எழுத்தாளனை கௌரவிப்பதை விட நூலை அறிமுகப்படுத்துவது நோக்கமாக இருத்தல் முக்கியம்.
கடந்த வருடம் சு.வெங்கடேசனுக்கு இவ்வளவு சின்ன வயதில் எப்படி ஒருவருக்கு வழங்கலாம் என்று தான் பலருக்கும் கோபம் ஏற்பட்டது. நான் சு.வெங்கடேசனை கடுமையாக விமர்சித்த ஒரு எழுத்தாளரிடம் “ஒரு சுமாரான வயதான எழுத்தாளருக்கு தந்தால் அமைதியாக ஏற்றுக் கொள்கிறீர்கள். அந்த நூல் தரமானதா என்று கூட யாரும் ஆய்வு செய்யவில்லை. ஆனால் சு.வெங்கடேசன் என்றால் மட்டும் பக்கம் பக்கமாக அவரது புத்தகத்தை அலசி விமர்சிக்கிறீர்களே. ஏனிந்த பாரபட்சம்? என்றேன்”. அதற்கு அவர் “தமிழில் எத்தனையோ எழுத்தாளர்கள் இந்த விருது வராதா வராதா என எண்பது தொண்ணூறு வயது வரை காத்திருந்து செத்திருக்கிறார்கள். சீனியாரிட்டி பிரகாரம் சு,வெங்கடேசன் ரொம்ப பின்னால் இருக்கிறாருங்க. அவருக்கு தருவது நியாயமல்ல” என்றார் நக்கலாக.
சு.வெங்கடேசன் பக்கமிருந்து ஒரு கோரிக்கை வைக்கிறேன். தமிழில் உள்ள தனியார் விருதுகளை யாராவது ஒழுங்குபடுத்த வேண்டும். விருதின் பண மதிப்பைப் பொறுத்து ஒரு EMI திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும். இளைய எழுத்தாளர்கள் வருடாவருடம் ஒரு குறிப்பிட்ட தொகைய செலுத்தி தம் எதிர்கால விருதை முன்பதிவு செய்து கொள்ளலாம். விருது ஸ்தாபகத்தினர் 25% பங்களிக்கலாம். இத்திட்டத்தின் கீழ் தற்போதுள்ள இருபது முப்பதினாயிரம் எனும் பரிசுத் தொகையை நம்மால் லட்சக்கணக்கில் உயர்த்த முடியும்.
எப்படியும் தமிழ்ச் சூழலில் விருதுகளுக்கு எந்த மதிப்பும் இல்லாமல் ஆகி விட்டது. ஆனால் பணத்துக்கு என்றும் மதிப்பு உண்டு. இங்கு அதிகமாய் எழுதியும் சம்பாதிக்க முடியாது. அதனால் எழுத்தாளனுக்கான ஒரு காப்பீடாக அல்லது சேமிப்பாக இத்தகைய விருதுகளை மாற்றுவது நலம் பயக்கும். இருபத்தைந்து வயதில் எழுத ஆரம்பிக்கிறவர்கள் பெரும்பாலும் ஐம்பதில் ஓய்வு பெறுகிறார்கள். அவர்களுக்கு நாம் ஒரு மொத்தத் தொகையை விருதுடன் கொடுத்து விடலாம். இத்தனை நாள் எழுதி ஒன்றும் அடையவில்லையே என்கிற ஆற்றாமையும் எழுத்தாளனுக்கு ஏற்படாது. அங்கீகாரத்துக்கு அங்கீகாரமும் ஆச்சு. மூப்பு, அனுபவம் பொறுத்து விருதளிக்கிறோம் என்பதால் சு.வெங்கடேசனுக்கு நேர்ந்தது போல் அவப்பெயரும் நேராது. அதே போன்று புதிய இளம் எழுத்தாளர்களை இத்துறைக்கு ஈர்க்கவும் இத்திட்டம் பயன்படும்.
இந்த விருது பற்றி சர்ச்சையெல்லாம் வேடிக்கையாக பொழுதுபோக்காக நடக்கிறது என்பது சற்று நிம்மதி அளிக்கிறது. ஆனால் இது ஒவ்வொரு வருடமும் நரை கூட கூட விருதை எதிர்பார்த்து தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கும் தம் கணவனுக்கு கிடைக்கவில்லையே என ஆற்றாமல் கோபத்தில் இடது முலை திருகி காஸ் அடுப்பில் தீ பற்ற வைக்கும், பாண்டிய மன்னர்களின் காதை போனில் கடித்துத் துப்பும் அவர் தம் மனைவியர்க்கும் பொருந்தாது தான்.

Comments

ஜெயமோகன் ஒரு மாதிரி செட்டில் ஆகிவிட்டார்.தன்னை சுற்றி தான் விரும்புவதை பற்றி மட்டுமே பேசும் ஒரு கூட்டம்.அவருக்கு இதெல்லாம் காதிலேயே விழாது.அவர் சொல்பவருக்கு விருது.செயற்குழு , பொதுக்குழு எல்லாம் அவர் தான்.ஒரு அரசியல் கட்சி கூட இதை விட சிறப்பாக செயல்படும். அவரை பற்றி நீங்கள் எழுதிய இடங்கள் நல்ல கிண்டல்.மற்றபடி எனக்கும் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியதிலேயே நெடுங்குருதி தான் மிகவும் பிடிக்கும்.அதுபோல ஜெயமோகன் எழுதியவற்றில் பின்தொடரும் நிழலின் குரல்.நீங்கள் சொல்வது போல ஒரு புத்தகத்திற்காக என்றில்லாமல் வாழ்நாள் சாதனையாளர் போல சாகித்ய அகாதமி விருதுகள் இருப்பதால் ஜெயமோகனுக்கு விருது அளிக்கப்பட்டால் அதுவரை தமிழ் இலக்கியம் வாசிக்காதவர் ஜெயமோகனின் அனல் காற்று வாசித்து இதுதான் தீவிர இலக்கியமா என்று மகிழ்ச்சியடைவார் !

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...