முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

“ஒரு வெயில் நேரம்”: ஒரு வாசிக்கத்தக்க தொகுப்பு





கதைகள் படுவேகமாய் சரளமாய் போகின்றன. இதை கொஞ்சம் அழுத்தியே சொல்ல வேண்டும். தற்போது தமிழில் தீவிர கதை எழுதுபவர்களுக்கு, அதிலும் வெகுவாய் கவனிக்கப்படுபவர்களில் பலருக்கும், ஒரு கதையை பிசிறின்றி சொல்லத் தெரியவில்லை. வாக்கியங்களை பிதுக்கி ஜெலேபி போல போட்டால் கவித்துவமாகி விடும் என நினைக்கிறார்கள்.
”வெயில் அடிக்கிறது” என எழுதமாட்டார்கள். ”வெயில் வானில் இருந்து விழுந்து கொண்டே இருக்கிறது” என்பார்கள்.
நர்சிம்மின் “ஒரு வெயில் நேரம்” சிறுகதைத் தொகுப்பு சுவாரஸ்யமான சின்ன சின்ன கதைகள் கொண்டது. கிராமத்து பாத்திரங்கள், குறிப்பாய் உருப்படியான சோலி ஏதும் இல்லாமல் சதா ஊர்வம்பு, ஊர் மக்களின் பிரச்சனை என அலைபவர்கள், வருகிறார்கள். இப்படியான வேலையில்லாத வேலையை கொண்டுள்ள மனிதர்களை கிராமத்தில் சாதாரணமாய் பார்க்க முடியும்.
இன்னொரு புறம் மக்கள் வாழ்க்கையை பதிவு செய்கிறோம் என்ற பெயரில் வறட்டுத்தனமாய் அரசாங்க கோப்புகளில் எழுதுவது போல் கதைசொல்லுபவர்கள் இருக்கிறார்கள். இவர்களிடம் சிக்கி நமக்கெல்லாம் மூச்சு முட்டும் போது ஒருவர் படிக்கும்படியாக எழுதுவதை குறிப்பிட்டு பாராட்ட வேண்டியாகிறது.
தொகுப்பின் முன்னுரையில் அமிர்தம் சூர்யா நர்சிம்மை வெகுஜனமா தீவிரமா என வகைப்படுத்த பிரயத்தனித்திருக்கிறார். நர்சிம்மை போன்றவர்களை பொறுத்தமட்டில் இது அநாவசியம் என நினைக்கிறேன். அவருடைய நோக்கம் சின்ன சின்ன வாழ்க்கைச் சித்திரங்கள் தீட்டுவது, ஒரு சின்ன மன சஞ்சலத்தை சித்தரிப்பது தான். இந்த வேலையை அநாயசமாக செய்கிறார் என்பது தான் பாராட்டத்தக்கது. குறிப்பாய் வசனம் எழுதும் சாமர்த்தியம் நிறைய இருக்கிறது. வசனங்கள் கொண்டு கதாபாத்திர இயல்புகளை, மனப்போக்கை சட்டென்று உணர்த்தி விடுகிறார். ஒரு கதையில் மாரியின் மனைவிக்கும் ஐம்பத்தெட்டு எனும் பெரிசுக்குமான சீண்டல் கலந்த உரையாடலை உதாரணம் சொல்லலாம். அதே போன்று இன்னொரு கதையில் ஊராருக்கு கடைக்கு போய் சாமான்கள் வாங்குவதை தொழிலாக கொண்ட ஒரு பிரம்மச்சாரி வருவார். ஊர்ப்பயைன்களுடனான அரட்டையில் அவரை இழுத்து ஒருவர் கேட்பான் “என் பஸ்ஸுல பொண்ணுங்கள் உரசுறியாமே”. அதற்கு அவர் “முட்டாள்தனமாய் பேசாதப்பா” என்று விட்டு ஒதுங்கி விடுவார். அவ்வளவு தான் நர்சிம் அதற்கு மேல் அவ்விசயத்தை விவரிப்பதில்லை. நமக்கு அவரது ஆளுமையின் இன்னொரு தனிமையான கோணலான பக்கம் கிடைத்து விடுகிறது.
குழந்தை பிறக்காததால் எந்த நிகழ்ச்சியிலும் சங்கடமின்றி கலந்து கொள்ள முடியாத ஒரு நண்பனின் கதை வருகிறது. குழந்தையில்லாதவர்கள் எப்படி சமூகத்துக்கு வெளியே அவ்வளவு சுலபத்தில் போய் விடுகிறார்கள் என்பதை தொட்டுணர்த்துகிறது. ஒரு மனம் பிறழ்ந்த பெண்ணை இரவில் பத்திரமான இடத்தில் சேர்ப்பிக்க இரு இளைஞர்கள் அலையும் கதை கூட நன்றாக வந்திருக்கிறது. பாசாங்கு கொண்டவர்களின் அவஸ்தையை அழகாக சித்தரிக்கிறார். அந்த இளைஞர்கள் சுஜாதாவின் ஸ்ரீரங்க திண்ணையில் இருந்து வேட்டியை உதறி மடித்து வெள்ளைச் சிரிப்புடன் எழுந்து வந்தவர்கள் போல் இருக்கிறார்கள்.
இந்த பாத்திர அமைப்புக்கு மேல் இக்கதைகளில் வேறொன்றும் இல்லை. நர்சிம் இவற்றுக்கு வலுவான முடிவு அளிக்க முயலும்போது வெகு செயற்கையாக இருக்கிறது. அநேகமாக இக்கதைகள் துவங்கி பாதி வந்ததும் முடிந்து போகின்றன. அதையும் ஒரு குற்றமாக பார்க்க முடியாது தான். ஏனெனில் அவருக்கு சிறுகதை எழுதுகிறேன் எனும் பாவனை சற்றும் இல்லை. அவரிடம் ஒருவித நேர்மை இருக்கிறது. மனிதர்களிடம் தான் அவதானிப்பதை தெளிவாக நகைச்சுவையாக எழுதுகிறார். நிச்சயமாய் இத்தொகுப்பில் உள்ள பல பாத்திரங்கள் உயிரோட்டமாய் இருக்கின்றன.
நர்சிம்மின் “அய்யனார் கம்மா” படித்திருக்கிறேன். மிக ஏமாற்றமளித்த தொகுப்பு. ஆனால் இந்நூலில் அபாரமான முன்னேற்றம் இருக்கிறது. சரளத்தில், கூர்மையில், கதாபாத்திர அமைப்பில், வசனத்தில். இது மேலும் பாராட்டுக்குரியது.

கருத்துகள்

கோவை நேரம் இவ்வாறு கூறியுள்ளார்…
தொகுப்பு நன்றாக இருக்கிறது....தங்களின் பார்வையில்...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...