முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சமூகம் எனும் மலைப்பாம்பு




எனக்குக் கூட சிலவேளை ஒரு தீவிரவாதியாகவோ சைக்கோ கொலைகாரனாகவோ ஆனால் என்ன எனத் தோன்றும். அப்போதெல்லாம் இன்னொரு எண்ணமும் வரும்: இந்த சமூக விரோதிகள் உண்மையில் தீவிர சமூக அக்கறை கொண்டவர்கள் என்று. என்ன தம் அக்கறையை எதிர்மறையாக காண்பிக்கிறார்கள். அழிப்பதன் மூலம் நானும் உங்களில் ஒரு பகுதி என பொது சமூகத்திடம் சொல்ல தலைப்படுகிறார்கள். அப்படிப் பார்த்தால், சமூக விரோதிகள் நீட்சேயியவாதிகளாக இருக்க முடியாது. அவர்களுக்கு சமூகத்திடம் மரியாதையும் தொடர்புறுத்தும் விருப்பமும் உண்டு. சமூகம் தமக்கு இணை என நம்புகிறார்கள். இல்லை என்றால் இவ்வளவு பிரயத்தனித்து சமூகத்தை திருத்தவோ அல்லது பழிவாங்கவோ முயல்கிறார்கள்?

இவர்களுக்கு சமூகம், வரலாறு குறித்து ஒரு கண்மூடித் தனமான நம்பிக்கை உள்ளது. ஒசாமா பின்லாடன் குறித்து படித்தவர்களுக்கு அவர் ஒரு லட்சியவாதி என புரியும். சமீபத்தில் அமெரிக்காவில் ஒரு இந்திய மாணவன் தான் படித்த வகுப்பு மாணவர்களை தாக்குவதற்காக நிமிடத்தில் ஐநூறு ரவுண்டுகளுக்கு மேல் சுடும் துப்பாக்கி ரவைகளை சேமித்து வைத்திருந்தான். ஆனால் தாக்குதலுக்கு முன்னரே மனம் சோர்ந்து தற்கொலை பண்ணி விட்டான். தனக்கு கிடைக்காது அவர்களுக்கு கிடைத்து விடக் கூடாது என்று கருதி இருக்கலாம். அல்லது அமெரிக்க சமூக அமைப்பு மீதுள்ள கோபமாக இருக்கலாம். ஆனால் இந்த சமூக அமைப்பும் ஜனங்களும் யாரையும் பொருட்படுத்துவதில்லை. சமூக இயக்கம் ஒரு குருட்டு மலைப்பாம்பு. அது அனைவரையும் முழுங்கி செரித்து நகர்ந்து மெத்தமனாய் கொண்டிருக்கும். மேற்குலகின் மீதான ஒசாமாவின் போர் ஒரு சின்ன பிம்பத்தை உருவாக்கி இருக்கிறது அவ்வளவு தான். நடைமுறை வாழ்வு அதன் பாட்டுக்கு முன் போலத் தான் இருக்கிறது. ஆனால் ஒசாமா தன்னால் வரலாற்றை மாற்றலாம் என்றெல்லாம் நம்பினார்.
ஒரு சின்ன பரிசோதனைக்கு நீங்கள் உங்கள் டீக்கடையில் அல்லது அலுவலகத்தில் யாரிடமாவது ஒரு கருத்தை சொல்ல தலைப்படுங்கள். அவர்கள் காது கொடுத்து கேட்காமல் தம் கருத்தை சொல்லத் தலைப்படுவார்கள். தம் கருத்திலும் அவர்களுக்கு அக்கறை இருக்காது. பாதியில் சொல்லிக் கொண்டிருக்கும் போது வேலை வந்தாலோ கவனம் திரும்பினாலோ எழுந்து போய் விடுவார்கள். அல்லது அவர்கள் உங்களை நலம் விசாரிக்கும் போது விலாவரியாக உங்கள் பிரச்சனைகளை பேசிப் பாருங்கள்; கொட்டாவி விடுவார்கள். அல்லது கேட்காமல் பக்கத்தில் உட்கார்ந்து இறகை சிலுப்பும் ஈயை கவனிப்பார்கள். சரி போகட்டும், பொதுப்பிரச்சனை பேசுங்கள். அது பற்றி அவருக்கு ஒன்றுமே தெரியாது என்பதை அகந்தையுடன் விளக்குவார். சரி போகட்டும், அவரது பிரச்சனையை பேசுங்கள். என்னைப் பற்றி எனக்குத் தெரியும், அதைச் சொல்ல நீங்கள் யார் என உங்களை மூக்கைத் தொட்டு சொல்வார்கள். சாம்பிளுக்கு இந்த நான்கு பேரே இப்படி இருக்கும் போது லட்சம் கோடி மக்கள் மீது ஒருவர் அக்கறை காட்டி வெடிகுண்டு வைப்பது ஏன்? ஜனங்கள் பற்றின தவறான புரிதலினால் தான். எப்போதும் போராளிகள், மீட்பர்களை அவர்களின் மக்களே சிலுவையில் அறைவது தான் நடக்கும்.

சரி நாம் யாருடம் தான் அக்கறை கொள்வது? இந்த உலகில் யாருமே அக்கறை காட்டாத ஒருவர் இருக்கிறார். அவரிடம். யார் அவர்? நீங்கள் தான். சுய அக்கறை சின்ன குற்றவுணர்வையும், சலிப்பையும் அதிருப்தியை தரும். ஆக உங்கள் வழியாக சமூக அக்கறை காட்ட துவங்குங்கள். நீங்கள் உங்களுக்கு செய்யும் சேவை இறுதியில் சமூக வளர்ச்சிக்குத் தான் உதவுகிறது. இருத்தலியவாதிகள் சொன்னது போல நான் தான் சமூகம். என்னை கிள்ளினால் சமூகத்துக்கு வலிக்கும். என்னை வளர்த்தால் சமூகம் வளரும்.
இந்த செவிட்டு குருட்டு சமூகத்துக்கு ஒரு மூளை உள்ளது. அதனுடன் நம்மால் உரையாட முடியும். சமூகத்தை பேசவோ கேட்கவோ வைக்க மூன்றாம் பிறை படத்தில் கமல் செய்வது போல குட்டிக்கரணம் அடிக்காமல் நாம் இந்த மூளையுடன் பேச எத்தனிக்கலாம். வரலாற்று நாயகர்களாக சுயமாய் நிறுவிக் கொண்டவர்கள் என்னதான் செய்தாலும் பேசினாலும் சமூகம் அதன் பாட்டுக்கு கவனிக்காமல் நகர்ந்து கொண்டிருக்கும் என்றேன். ஆனால் வரலாற்றுடன் அந்தரங்கமாக உரையாடிவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தமக்கு தாமே அறியாமல் சமூகக் கருவிகளாக மாறுகிறார்கள். அவர்கள் குண்டு வைப்பதோ பிரசங்கம் செய்வதோ இல்லை. ஆனாலும் வரலாறு பிறகு அவர்களையும் தின்று செரித்தே நகரும்.
போகிற போக்கில் நாயை கல்லால் அடிப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களும் உலகை மாற்ற கிளம்புபவர்களும் ஒன்று தான். ஒன்று நாய் வள்ளென்று ஓடும். இல்லையென்றால் நின்று பார்த்து உறுமும்.

கருத்துகள்

யுவகிருஷ்ணா இவ்வாறு கூறியுள்ளார்…
//
சரி நாம் யாருடம் தான் அக்கறை கொள்வது? இந்த உலகில் யாருமே அக்கறை காட்டாத ஒருவர் இருக்கிறார். அவரிடம். யார் அவர்? நீங்கள் தான்.//

சூப்பர் :-)
ஜீவ கரிகாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
தீவிரவாதி - நீட்ஷே, சமூக இறுக்கங்களையும், அதன் மனநிலை பற்றிய நல்ல புரிதலை இக்கட்டுரை முன் வைக்கிறது.....

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...