Skip to main content

இன்னும் மிச்சமுள்ளது உனது நாள்





இன்று தான்
அந்த நாள்
பிறந்தநாள்

எழுந்து பார்க்கிறாய்
சுற்றும் முற்றும்
வெளியே
ஜன்னல்களில்
மனிதர்களை மிருகங்கள் பூச்சிகளை
நீங்காப் புன்னகையுடன்
உலகை மீண்டும் ஒருமுறை
உற்சாகத்துடன் நம்பிக்கையுடன் ஏற்புடன் பார்க்கிறாய்
கண் திறந்ததும் வாழ்த்தத் தவறிய
என்னைக் கண்டிக்கிறாய்
முகம் கோணி அழ உத்தேசிக்கிறாய்
பின் விழ அரும்பிய கண்ணீரை
நிறுத்தி விட்டு
சிரிக்கிறாய்
இன்று நீ ஏமாற்றத்தை மறுப்பை கசப்பை
ஏற்றுக் கொள்ளப் போவதில்லை
ஒருக்காலும் இல்லை


இன்று உன்னை வாழ்த்தியவர்களை
அழுத்தமாய் நினைவில் வைக்கிறாய்
அவர்கள் உன் நினைவில் கடந்து போனவர்கள்
உன் முகத்தை நிமிர்ந்து நோக்கும் அவகாசம் அற்றவர்கள்
எத்தனையோ பெயர்களில் ஒன்றாக உன்னைக் கருதி உரையாடுபவர்கள்
ம்ஹும் இன்று உனக்கு விரோதிகளோ நண்பர்களோ இல்லை
இந்த நாளில் உன்னைச் சுற்றி
வாழ்த்துகிறவர்கள் மட்டுமே இருக்கிறார்கள்

இந்த நாளுக்காக அவ்வளவு
தயாராக இருந்தாய்
இந்த நாள் உனக்காகவே அச்சடிக்கப்பட்டு
வெதுவெதுப்பாய்
உன் உள்ளங்கையில் காத்திருக்கிறது
இந்த நாள் முடியும் முன்
வாழ்த்தினவர்களுக்கு
அவசர அவசரமாய் நன்றி
சொல்லிக் கொண்டு வருகிறாய்
உன் செல்போன் ஓயவில்லை
குறுஞ்செய்தி பெட்டி வழிகிறது
முகநூல் பக்கம் ஒரு சரம் போல் நீண்டு செல்கிறது
இன்று நீ
களைக்கவே மாட்டாய்
இன்றைய நாள்
உனக்கும் வாழ்த்துகிறவர்களுக்கும் இடையிலானது
இன்றைய நாள்
மெல்ல மங்கி இருண்டு
கேக்கின் கடைசி துண்டை
நீ வாயில் மெல்லும் போது
வைனின் இறுதித் துளியை
நுனிநாவில் வழிய விடும் போது
நீ ஆசீர்வதிக்கப்பட்டவளாகவே எண்ணுகிறாய்

இதோ கடிகார முள்
நாளின் இறுதி விநாடியை கடக்கும் போது
முதன்முறை அக்களைப்பை உணர்கிறாய்
இந்த முப்பது வருடங்களாய்
உணர்ந்த களைப்பை உணர்கிறாய்
ஒரே ஒரு பிறந்தநாளில் கடந்து விடக் கூடிய அக்களைப்பை
ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்தின் வெறும் களைப்பு என
உன் கண்ணாடியிடம் கூறி விட்டு
அரைதூக்கத்தில் விழுகிறாய்
ஆனால் அதற்கு முன்
அத்தனை வாழ்த்து செய்திகளையும் நினைவுகளையும் எண்ணிப் பார்த்து
கோப்பில் இட்டு மூடுகிறாய்
பரிசுகளை பரணில் பத்திரப்படுத்துகிறாய்
கசங்கிப் போன புத்தாடையை
அழுக்குத்துணி குவியல் மீது வைக்கிறாய்
வியர்வை வீச்சத்துடன் பிசுபிசுப்புடன்
ஏப்பங்களுடன் கண்ணெரிச்சலுடன் -
களைப்பு முழுமையாய்
மூடிக் கொள்கிறது

கடைசியாக ஓர் அழைப்பு
தாமதமாய் வாழ்த்துவதற்கு மன்னிப்பு கேட்டபடி
ஒரு பரிச்சயக் குரல்
ஒரு முழுநாளின் அலுப்புக்கு பின்னரும் மிச்சமுள்ள
சின்ன அன்புடன்.
“நேற்று முடிந்து போயிற்றே” என்கிறாய்
சின்ன வருத்தத்துடன்.
“எங்கே இன்னும் ஒரு நிமிடம் ஒரு நொடி இருக்கிறதே
என் கடிகாரத்தில்” என அங்கிருந்து நினைவுறுத்தப்படுகிறது
சட்டென்று உற்சாகம் பற்றிக் கொள்ள
“நன்றி” கூறுகிறாய்
அப்போது
கண்ணில் திரண்ட
அத்துளிக்கு
அர்த்தமே
விளங்கவில்லை
உனக்கு.
எல்லா பிறந்தநாள் முடிகையிலும் அழுகிறேனே
என உன்னையே கடிந்து கொள்வதன்றி
வேறெதுவும் தோன்றவில்லை
உனக்கு.

Comments

எல்லா பிறந்தநாள் முடிகையிலும் அழுகிறேனே...

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...