முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இன்னும் மிச்சமுள்ளது உனது நாள்





இன்று தான்
அந்த நாள்
பிறந்தநாள்

எழுந்து பார்க்கிறாய்
சுற்றும் முற்றும்
வெளியே
ஜன்னல்களில்
மனிதர்களை மிருகங்கள் பூச்சிகளை
நீங்காப் புன்னகையுடன்
உலகை மீண்டும் ஒருமுறை
உற்சாகத்துடன் நம்பிக்கையுடன் ஏற்புடன் பார்க்கிறாய்
கண் திறந்ததும் வாழ்த்தத் தவறிய
என்னைக் கண்டிக்கிறாய்
முகம் கோணி அழ உத்தேசிக்கிறாய்
பின் விழ அரும்பிய கண்ணீரை
நிறுத்தி விட்டு
சிரிக்கிறாய்
இன்று நீ ஏமாற்றத்தை மறுப்பை கசப்பை
ஏற்றுக் கொள்ளப் போவதில்லை
ஒருக்காலும் இல்லை


இன்று உன்னை வாழ்த்தியவர்களை
அழுத்தமாய் நினைவில் வைக்கிறாய்
அவர்கள் உன் நினைவில் கடந்து போனவர்கள்
உன் முகத்தை நிமிர்ந்து நோக்கும் அவகாசம் அற்றவர்கள்
எத்தனையோ பெயர்களில் ஒன்றாக உன்னைக் கருதி உரையாடுபவர்கள்
ம்ஹும் இன்று உனக்கு விரோதிகளோ நண்பர்களோ இல்லை
இந்த நாளில் உன்னைச் சுற்றி
வாழ்த்துகிறவர்கள் மட்டுமே இருக்கிறார்கள்

இந்த நாளுக்காக அவ்வளவு
தயாராக இருந்தாய்
இந்த நாள் உனக்காகவே அச்சடிக்கப்பட்டு
வெதுவெதுப்பாய்
உன் உள்ளங்கையில் காத்திருக்கிறது
இந்த நாள் முடியும் முன்
வாழ்த்தினவர்களுக்கு
அவசர அவசரமாய் நன்றி
சொல்லிக் கொண்டு வருகிறாய்
உன் செல்போன் ஓயவில்லை
குறுஞ்செய்தி பெட்டி வழிகிறது
முகநூல் பக்கம் ஒரு சரம் போல் நீண்டு செல்கிறது
இன்று நீ
களைக்கவே மாட்டாய்
இன்றைய நாள்
உனக்கும் வாழ்த்துகிறவர்களுக்கும் இடையிலானது
இன்றைய நாள்
மெல்ல மங்கி இருண்டு
கேக்கின் கடைசி துண்டை
நீ வாயில் மெல்லும் போது
வைனின் இறுதித் துளியை
நுனிநாவில் வழிய விடும் போது
நீ ஆசீர்வதிக்கப்பட்டவளாகவே எண்ணுகிறாய்

இதோ கடிகார முள்
நாளின் இறுதி விநாடியை கடக்கும் போது
முதன்முறை அக்களைப்பை உணர்கிறாய்
இந்த முப்பது வருடங்களாய்
உணர்ந்த களைப்பை உணர்கிறாய்
ஒரே ஒரு பிறந்தநாளில் கடந்து விடக் கூடிய அக்களைப்பை
ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்தின் வெறும் களைப்பு என
உன் கண்ணாடியிடம் கூறி விட்டு
அரைதூக்கத்தில் விழுகிறாய்
ஆனால் அதற்கு முன்
அத்தனை வாழ்த்து செய்திகளையும் நினைவுகளையும் எண்ணிப் பார்த்து
கோப்பில் இட்டு மூடுகிறாய்
பரிசுகளை பரணில் பத்திரப்படுத்துகிறாய்
கசங்கிப் போன புத்தாடையை
அழுக்குத்துணி குவியல் மீது வைக்கிறாய்
வியர்வை வீச்சத்துடன் பிசுபிசுப்புடன்
ஏப்பங்களுடன் கண்ணெரிச்சலுடன் -
களைப்பு முழுமையாய்
மூடிக் கொள்கிறது

கடைசியாக ஓர் அழைப்பு
தாமதமாய் வாழ்த்துவதற்கு மன்னிப்பு கேட்டபடி
ஒரு பரிச்சயக் குரல்
ஒரு முழுநாளின் அலுப்புக்கு பின்னரும் மிச்சமுள்ள
சின்ன அன்புடன்.
“நேற்று முடிந்து போயிற்றே” என்கிறாய்
சின்ன வருத்தத்துடன்.
“எங்கே இன்னும் ஒரு நிமிடம் ஒரு நொடி இருக்கிறதே
என் கடிகாரத்தில்” என அங்கிருந்து நினைவுறுத்தப்படுகிறது
சட்டென்று உற்சாகம் பற்றிக் கொள்ள
“நன்றி” கூறுகிறாய்
அப்போது
கண்ணில் திரண்ட
அத்துளிக்கு
அர்த்தமே
விளங்கவில்லை
உனக்கு.
எல்லா பிறந்தநாள் முடிகையிலும் அழுகிறேனே
என உன்னையே கடிந்து கொள்வதன்றி
வேறெதுவும் தோன்றவில்லை
உனக்கு.

கருத்துகள்

திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
எல்லா பிறந்தநாள் முடிகையிலும் அழுகிறேனே...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.