முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புத்தக விமர்சனக் கூட்டங்கள்: வேடிக்கை விரோதங்கள்





என்னுடைய நண்பர் ஒருவரை சுமார் பத்து வருடங்களுக்கு முன் ஒரு சினிமா நடிகரின் சார்பில் அவரது உதவியாளர் எழுதின கவிதைத் தொகுப்பு வெளியீட்டு கூப்பிட்டு பேசக் கேட்டார். நண்பர் அப்போது தீப்பிழம்பு போல் இருப்பாராம். அவர் சொன்னார்: “நான் பேசுகிறேன். ஆனால் புத்தகம் பற்றின என் உண்மைக் கருத்துக்களை தான் சொல்லுவேன்”.
அரைமணி கழித்து உதவியாளர் போனில் மீண்டும் அழைத்து “நீங்க கூட்டத்துக்கு வாங்க, ஆனால் பேச வேணாமுன்னு சார் சொல்றாரு” என்றாராம் பணிவாக. இப்போதெல்லாம் நண்பர் தணிந்து விட்டார். பொதுவாக என்னை விமர்சனக் கூட்டங்களுக்கு அழைக்கும் போது இந்த சம்பவம் நினைவு வரும்.
பிடித்த புத்தகங்களைப் பற்றி பேசுவது ஒரு கொடை. ஒரு அற்புத வாய்ப்பு. ஆனால் அது அரிது. 

பொதுவாக புத்தகக் கூட்டங்கள் கல்யாண வரவேற்பு போல. பையன் வீடு பெண் வீடு என பல பக்கங்களில் இருந்து வருவார்கள். எழுத்தாளனின் நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள், கூட்டங்களில் கலந்து கொண்டு இலக்கிய அப்டேட் செய்வதற்காக, பொழுது போக்க, என்னவென்றே தெரியாமல் வந்து அமர்வது என பல ரகங்களில் வருவார்கள். 
இடங்களைப் பொறுத்து எல்லா கூட்டங்களுக்கு ஒரு எண்ணிக்கையில் கூட்டம் வரும். 

மாலையானால் பூங்கா, கடற்கரை, டீக்கடை என கூடுவது போல் மக்கள் நிகழ்ச்சி அரங்கங்களுக்கும் கூடுவார்கள். பண்பாட்டு நிகழ்வுகளில் பங்கெடுக்க மக்களுக்கு நிச்சயம் ஆர்வமுண்டு. சென்னையில் அதற்கான இடம் குறைவு. இருந்தால் நூற்றுக்கணக்கான மக்களை தினமும் கூட திரட்டி பேச்சு, விவாதம் கொஞ்சம் இசை, நகைச்சுவை என வெற்றிகரமாக நடத்த முடியும். மேலும் கிராமங்களில் வாழ்ந்த காலத்தில் இருந்தே வேலை முடித்த பின் வில்லுப்பாட்டு, அரசியல் பேச்சு என கூடிய மரபு நமக்குண்டல்லவா. இந்த இடத்தை பின்னர் பட்டிமன்றம் ஆக்கிரமித்தது. இப்போது இலக்கிய கூட்டங்கள். தமிழர்களுக்கு பேச்சை கேட்பதிலும் பேசுவதிலும் உள்ள தாகம் அளப்பரியது. ஒரு இலக்கிய நிகழ்ச்சிக்கு வந்து கூடி கைத்தட்டும் மக்கள் எங்கிருந்து வருகிறார்கள் என விளக்கவே இவ்வளவும் சொன்னேன். 

ஒரு பெரிய பேச்சாள எழுத்தாளருக்கு வரும் ஆயிரக்கணக்கான ரசிகர்களையும், சின்ன எழுத்தாள பேச்சாளர்களுக்கு வரும் நூற்றுக்கணக்கானோரையும் வைத்து நாம் இங்கு இலக்கிய மறுமலர்ச்சி ஏற்பட்டு விட்டதாய் மயங்கி விடக் கூடாது.

சரி, அடுத்து வேறு விசயத்துக்கு வருவோம். விமர்சன அல்லது நூல் அறிமுகக் கூட்டங்களில் பேசுபவர்கள் இரண்டு அணுகுமுறைகள் வைத்திருப்பார்கள். மூத்த எழுத்தாளர் என்றால் கண்ணை மூடி புகழ்ந்து தள்ளி விடுவார்கள். அந்த மூத்த எழுத்தாளரை விட பேச்சாளர் மூத்தவர் என்றால் ஒன்றிரண்டு அறிவுரைகள் சொல்லலாம். இளம் எழுத்தாளர் என்றால் ஏகத்துக்கு அறிவுரையாய் பொழிந்து விடுவார்கள். “சின்னப் பையன் என்னவோ பண்ணி வச்சிருக்கான், பாருங்க” என்கிற ரேஞ்சில் தைரியமாக விமர்சிப்பார்கள். இது கூட நல்லது தான். நேர்மையான கருத்துக்கள் வந்து விழும்.

நடுவயது எழுத்தாளன் என்றால் பேச வந்திருப்பவர்கள் அவனுடன் அதே காலகட்டத்தில் எழுத வந்த அதே வெளுத்த ஆடையும் பிய்ந்த செருப்பும் அணிந்த ஆசாமிகளாக இருப்பார்கள். அவர்கள் “இவனை புகழக் கூடாது. அதுக்காக திட்டவும் வேணாம். ஏதாவது மையமாக பேசுவோம்” என நினைத்து பேசுவார்கள். பெரும்பாலும் “எழுத்தாளர்” என்றில்லாமல் “என் நண்பர்” என்று அழைத்து பேச ஆரம்பித்தால் “உன்னை எல்லாம் எழுத்தாளனாக அங்கீகரிக்க நாங்க தயார் இல்லை” என பொருள். அதனால் கடந்த கால நினைவுகள், கசப்புகள், வருத்தங்கள், சுயதம்பட்டம் என அரைமணிக்கு குறைவாக பேசுவார்கள். பேச்சை முடிக்கும் போது “இந்த புத்தகத்தில் எனக்கு சில இடங்கள் பிடித்திருக்கின்றன” என கண்ணாடியை பொருத்திக் கொண்டு புத்தகத்தை திறந்து தேடத் துவங்குவார்கள். சம்மந்தப்பட்ட எழுத்தாளன் அப்போது தான் ஆர்வமாகி நிமிர்ந்து உட்கார்ந்து கவனிப்பான். ஆனால் தேடின பக்கம் கிடைக்காது. பொத்தாம் பொதுவாக வாழ்த்தி அமர்வார்கள். மொத்தம் பத்தே நொடிகள் தான் புத்தகம் பற்றி பேசி இருப்பார்கள். அதற்கே “ரொம்ப புகழ்ந்துட்டோமோ” என மனசுக்குள் குமுறுவார்கள். 

இன்னும் ஒரு வகை நடுவயது அறிவுஜீவி பேச்சாளர்கள். இவர்கள் கோட்பாடு, தாம் படித்த பிற நூல்களைப் பற்றி அரைமணி ஜல்லியடித்து விட்டு “சார்த்தர், காம்யு இடத்தில் இந்த எழுத்தாளரையும் நாம் வைக்கலாம்” என சொல்லி சம்மந்தப்பட்ட எழுத்தாளரை நெளிய வைப்பார்கள். இந்த மாதிரி மிகையாக புகழ்வதும் பாராட்டாமல் இருப்பதற்கான ஒரு தந்திரம் தான். யாரும் பொருட்படுத்த மாட்டார்கள்.

உண்மையிலேயே நமக்கு உவப்பில்லாத ஒரு நூலைப் பற்றி எப்படி பேசுவது? ஒன்று நேர்மையாக மனதில் பட்டதை காயப்படுத்தாமல் சொல்லி விடலாம். யாரும் உங்களை கடித்து விடப் போவதில்லை. இறுதியில் பேசினால் நல்லது. முதலில் பேசினால் அடுத்து வருபவர் உங்களுக்கு பதில் கூறும் சாக்கில் நிறைய freehit சிக்ஸர்கள் அடித்து கைத்தட்டு வாங்குவார். நடுவில் பேசும் போது முன்னே வந்தவர்கள் பேசி உருவாக்கிய ஒரு குறிப்பிட்ட பாங்கை, தொனியை நீங்கள் முறித்து பேசும் சிக்கல் வரும்.

இன்று ஆங்கில நூல் விமர்சனக் கூட்டங்களில் உள்ள விவாத முறை இன்னும் மேலானது. நான்கு பேர் சுற்றி உட்கார்ந்து புத்தகம் பற்றி ஏதோ ஒரு புள்ளியில் இருந்து தம் விவாதத்தை ஆரம்பிக்கலாம். உதாரணமாக, “எனக்கு இந்த நாவல் சரளமாக எழுதப்பட்டது போல உள்ளது. ரெண்டே நாளில் படித்து விட்டேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என ஒருவர் ஆரம்பித்து இன்னொரு பேச்சாளரிடம் மைக்கை கொடுக்கலாம். பின்னர் பார்வையாளர்களிடம் கேள்விகள் கேட்க சொல்லலாம். யாராவது ஒருவர் புத்திசாலித்தனமாக ஒருங்கிணைத்தால் இந்த மாடல் வெற்றி பெறும்.

தமிழில் புத்தக கூட்டங்களில் உள்ள மேடைப்பேச்சு பாணியை யாராவது மாற்ற வேண்டும்.

கருத்துகள்

திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
பல இடங்களில் இதே பாணியைப் பார்த்து விட்டு அலுத்து விட்டது...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நலத்திட்டங்களின் அடிப்படையான பிழை

  மகளிர் உதவித் (உரிமைத்) தொகைத் திட்டத்தைக் கைவிடுவதைக் குறித்து தவெக அரசு பரிசீலிக்க வேண்டும். அதற்காகச் செலவாகும் 15,000 கோடி ரூபாயை படித்து வேலை கிடைக்காமல் இருப்போரில் வருடாந்திர குடும்ப வருமானம் ஒரு அளவுக்கு மேல் குறைவாக இருப்போருக்கு அளிக்க வேண்டும். அதேபோல முறைசாரா தொழிலாளர்களுக்கு நொடிந்த தொழில்களில் ஈடுபட்டிருப்போருக்கும் கொடுப்பதை அரசு பரிலீக்க வேண்டும். அதாவது உதவி / உரிமைத் தொகையை பாலினம் சார்ந்ததாக அல்லாமல் தொழில் சார்ந்ததாகப் பார்க்க வேண்டும். மேற்சொன்ன பெண்களும் அப்போது இத்திட்டத்திற்குள் வந்துவிடுவார்கள். சொந்தமாக வீடும் சொத்தும் கொண்ட பெண்கள் இந்த தொகையைப் பெறுவதைத் தவிர்க்க இயலும். இந்த மாற்றத்திற்கான தேவைகளாக நான் கருதுவன: 1) வர்க்கரீதியாக இது திட்டமிடப்படாததால் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. 2) இதை அரசு மக்களுக்கு கொடுக்கும் லஞ்சமாக சிலர் காண்கிறார்கள். அதாவது பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அவர்களைத் தம் வசம் இழுப்பதற்காக அரசுகள் இத்திட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாக அவர்கள் நினைக்கிறார்கள். இதனால் மக்கள் நலத் திட்டத்துக்கே பெயர் கெடுகிறது. 3) தொழில்...

மக்களாட்சியின் தோல்வியும் மதிப்பிடுகளின் வீழ்ச்சியும் எப்படி முதலீட்டியத்தால் விளைந்தன?

ஏலியன்களே நம் நாட்டுக்கு வந்து கட்சி தொடங்கி ஆட்சியமைத்தாலும் ரௌடிகள், நில முகவர்கள், திடீர் பணக்காரர்கள், மோசடிக்காரர்கள் எம்.எல்.ஏ, அமைச்சர்கள் ஆவதையும், பெரும்பணக்காரர்கள் ஆட்சியைக் கையில் வைத்து தம் விருப்பப்படி உருட்டுவதையும் தவிர்க்க முடியாது என்று நினைக்கிறேன். நம் அதிகாரக் கட்டமைப்பு அப்படி. ஒரு செய்தி பார்த்தேன். எளியவர்களுக்கு வாய்ப்பளிப்போம் என்று கூறிய தவெகவின் எம்.எல்.ஏக்களில் 80% மேல் கோடீஸ்வரர்கள். குற்றவாளிகள், போலி சான்றிதழ் பேர்வழிகள், புரோக்கர்களும் உண்டு. கட்சியே ஒரு பக்கம் பாஜக கொடுத்த நிதியையும் இன்னொரு பக்கம் லாட்டரி குடும்பத்தின் நிதியையும் வைத்தே இத்தனை நாட்கள் நடந்தது. இனிமேல் டெண்டர் முறைகேடு, பல தளங்களில் ஊழல் என்று கொள்ளையடித்து 'தன்னிறைவு' ஆக முயல்வார்கள். அமைச்சர்கள் பல ஆயிரம் கோடிகள் சம்பாதித்து பெரிய நிறுவனங்களை ஆரம்பிப்பார்கள், வெளிநாடுகளில் முதலீடு செய்வார்கள், கறுப்புப் பணத்தைப் பதுக்குவார்கள். ஏன் எந்த ஆட்சி வந்தாலும் இந்த டெம்பிளேட் மாறுவதில்லை என்றே நாம் கேட்க வேண்டும்? யார் நல்லவர், யார் கொஞ்சம் குறைவாகக் கெட்டவர் என்பது அல்ல. நமது இப்போத...