முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அரசியல்வாதிகளை, காவலர்களை கொல்லுவது





சட்டீஸ்கர் முதல்வர் “மாவோயிஸ்டுகள் போலீஸ்கார்களை கொன்றால் அது மனித உரிமை மீறல் இல்லையா?” என கேட்டுள்ளார். முக்கியமான கேள்வி. சமீப மாவோயிஸ்டு தாக்குதலை ஒட்டி அறிவுஜீவிகளின் மாவோயிஸ ஆதரவை கண்டித்தும் இத்தாக்குதலை தீவிரவாத நடவடிக்கையாக பாவித்தும் டி.வி விவாதங்கள் நடந்தன. அதில் காங்கிரஸ்காரர்களும் அரசு அதிகாரிகளும் மட்டும் தான் இந்நிலைப்பாட்டை எடுத்தனர்.


வேறு புலங்களை சேர்ந்தவர்கள் இறந்தவர்கள் மீது எந்த ஒரு இரக்கமோ கண்ணீரோ காட்டாமல் பழங்குடிகளின் நிலையை எப்படி முன்னேற்றுவது என பேசினர். சமூக வலை தளங்களிலும் இது சம்மந்தமாக துக்க அலை அடிக்கவில்லை. யாரும் அழுது புலம்ப பதறவில்லை. எனக்கும் போலீஸ், காங்கிரசார் கொலைகள் வருத்தத்தை ஏற்படுத்தவில்லை. சமீபமாக இங்கிலாந்தில் இரு ராணுவ வீரர்கள் தலைவெட்டி கொல்லப்பட்ட போதும் எனக்கு அது ஒரு குற்றமாக படவில்லை. அந்தளவுக்கு ராணுவத்தினர், போலீசார், அரசியல்வாதிகள், அதிகாரிகள் மீது வெறுப்பும் கோபமும் வளர்ந்துள்ளது.

ஆனால் அதே வேளை தீவிரவாதிகள் பொதுமக்களை கொல்லும் போது கடுமையான கோபமும் வருத்தமும் ஏற்படுகிறது. இஸ்லாமியர் இந்துக்கோயில்களை அல்லது இந்துத்துவ அரசியல்வாதிகளை தாக்காமல் சிறுபான்மையினரும் உள்ளிட்ட பொதுமக்களை சந்தைகளிலும் பொதுவிடங்களிலும் கொல்லுவது ஒரு அபத்தமாகவே நினைத்திருக்கிறேன். அது வசதியானது என்பதைத் தவிர எளிய மக்களை கொல்லுவதில் எந்த நியாயமும் இல்லை. ஆகவே ஒரு தீவிரவாத எதிர்ப்பு என்கிற நிலையில் மேற்சொன்ன சம்பவங்களில் தாக்குதலின் இலக்கு சரி தான் என்கிற உணர்வு எனக்கு இருந்தது. ஆனால் ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது அரசியல்வாதியோ காவலரோ யாரைக் கொல்வதும் பிரச்சனைக்கும் தீர்வை கொண்டு வராது என புரிகிறது.
நஷ்டமும் இல்லை லாபமும் இல்லை. தற்போதைய மாவோயிஸ நிலைப்புக்கு அது பயன்படலாம். தம் தரப்பை வலுப்படுத்தத் தான் ஆயுதப்போராளிகள் தாக்குகிறார்கள். யாரும் யாரையும் முழுக்க அழித்து விடப் போவதில்லை என இரு தரப்புக்கும் புரியாமல் இல்லை. இடையில் அப்பாவி மக்கள் பலியாவது தான் கொடுமை.

இதெல்லாம் மாவோயிசத்தை ஆதரிக்கும் அருந்ததி ராய் போன்றோருக்கு தெரியும். அரசியல் அமைப்பு, நீதி, காவல்துறை இவற்றின் மீதெல்லாம் முழுக்க நம்பிக்கை இழந்து விட்டதனால் நாம் இன்று நம் எதிரியின் அதே ஆயுதத்தை ஏந்திய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம். மக்கள் அறவாதிகளாக இருக்கும் பட்சம் கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக இதே ஆயுதங்கள் கொண்டு காவலரும் ராணுவமும் பழங்குடி மக்களை அழித்திருக்கும். வலுக்கட்டாயமாக அவர்களின் நிலத்தை பறித்திருக்கும். சரி, அவர்கள் நியாயமான முறையில் ஜனநாயக வழியில் போராடி இருக்க முடியுமா?

சமீபத்தில் நாம் நிறைய மக்கள் போராட்டங்களை பார்த்தோம். அவை அத்தனையும் ஒடுக்கப்பட்டன அல்லது சுரத்து இழந்து ஓய்ந்து போயின. ஆனாலும் தொடர்ந்து போராடுவதே தற்போதைய இருப்பை தக்க வைக்க அவசியம் என நாம் நம்மையே நம்ப வைக்க முயல்கிறோம். ஆனால் அறவழி போராட்டங்கள் மீது இன்றைய சமூகத்துக்கு நிஜமாகவே நம்பிக்கை உள்ளதா என்ன?
அரசு ஊழியர்கள் போன்று அமைப்பு ரீதியான ஆதரவு உள்ளவர்கள் தாம் இனி கொடி பிடித்து கோஷமிட்டு பேரம் பேச முடியும். அரசும் அவர்களை மயில்தோகை கொண்டு அடித்து கொஞ்சி மிரட்டும். மற்றபடி இந்த சமூகம் முழுக்க முழுக்க அநீதி முன் அடிபணிந்து விட்ட ஒன்று. அநீதிக்கு எதிராக போராடுகையில் நீங்க அநீதியாகவே மாற வேண்டியது தான். 

அநியாயமாக உங்கள் மக்கள் கொல்லப்படும் போது நீங்கள் உண்ணாவிரதம் இருக்க முடியாது. அந்த லட்சியவாதம் செத்து அரைநூற்றாண்டு கடந்து விட்டது. கூடிய பட்சம் குழாயில் தண்ணீர் வரவில்லை என சாலை மறியல் பண்ணலாம். ஆனால் கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக அறவழி போராட்டங்கள் சாத்தியம் இல்லை. ஏனென்றால் அதற்கு நிறைய செலவாகும். செலவுக்கு நாம் ஹசாரே போல் கார்ப்பரேட்டுகளிடம் கையேந்த நேரிடும். மக்களும் சுயநலம் மிக்கவராகி தீமையில் கலந்து போய்க் கொண்டிருக்கிற காலத்தில் ஒரு பொது நீதியின் கீழ் ஒன்று திரளும் நம்பிக்கையும் அனைவருக்கும் இல்லாமல் ஆகிக் கொண்டிருக்கிறது.

இதனால் தான் சமூக ஆர்வலர்களும் அறிவுஜீவிகளும் மௌனமாக மாவோயிஸ்டுகளை ஆதரிக்க வேண்டி உள்ளது.

உயர்தட்டினர், உயர்ஜாதியினர், வலதுசாரிகள் போலீஸ், ராணுவத்தின் மீதுள்ள தாக்குதலை ஏற்க மாட்டார்கள். அவர்களுக்கு ஆதரவான சமூக படிநிலையை தக்க வைக்க காவலர்களும் ராணுவமும் தானே கைத்தடி. அவர்கள் எப்போது ஒழுக்கம் கட்டுப்பாட்டுக்கு அதிக அழுத்தம் கொடுப்பார்கள். அந்த பதற்றம் எங்கே தம் சமூக அந்தஸ்து மற்றும் இடம் காலியாகி விடுமோ என்கிற அச்சத்தில் இருந்து வருவது. அந்த அச்சம் பல நூற்றாண்டுகளாய் தாம் அநியாயமாய் அடுத்தவரின் உரிமைகளை பறித்து அனுபவித்து வருகிறோம் என்கிற குற்றவுணர்வில் இருந்து தோன்றுவது.

நாம் ஏதாவது ஒரு பக்கம் நிற்க வேண்டியதாகிறது. அது ஒரு வரலாற்று நிர்பந்தம். நாம் நம் பக்கம் தானே நிற்க முடியும்!

கருத்துகள்

Shyama இவ்வாறு கூறியுள்ளார்…
//அந்த அச்சம் பல நூற்றாண்டுகளாய் தாம் அநியாயமாய் அடுத்தவரின் உரிமைகளை பறித்து அனுபவித்து வருகிறோம் என்கிற குற்றவுணர்வில் இருந்து தோன்றுவது.//....உண்மை.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நலத்திட்டங்களின் அடிப்படையான பிழை

  மகளிர் உதவித் (உரிமைத்) தொகைத் திட்டத்தைக் கைவிடுவதைக் குறித்து தவெக அரசு பரிசீலிக்க வேண்டும். அதற்காகச் செலவாகும் 15,000 கோடி ரூபாயை படித்து வேலை கிடைக்காமல் இருப்போரில் வருடாந்திர குடும்ப வருமானம் ஒரு அளவுக்கு மேல் குறைவாக இருப்போருக்கு அளிக்க வேண்டும். அதேபோல முறைசாரா தொழிலாளர்களுக்கு நொடிந்த தொழில்களில் ஈடுபட்டிருப்போருக்கும் கொடுப்பதை அரசு பரிலீக்க வேண்டும். அதாவது உதவி / உரிமைத் தொகையை பாலினம் சார்ந்ததாக அல்லாமல் தொழில் சார்ந்ததாகப் பார்க்க வேண்டும். மேற்சொன்ன பெண்களும் அப்போது இத்திட்டத்திற்குள் வந்துவிடுவார்கள். சொந்தமாக வீடும் சொத்தும் கொண்ட பெண்கள் இந்த தொகையைப் பெறுவதைத் தவிர்க்க இயலும். இந்த மாற்றத்திற்கான தேவைகளாக நான் கருதுவன: 1) வர்க்கரீதியாக இது திட்டமிடப்படாததால் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. 2) இதை அரசு மக்களுக்கு கொடுக்கும் லஞ்சமாக சிலர் காண்கிறார்கள். அதாவது பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அவர்களைத் தம் வசம் இழுப்பதற்காக அரசுகள் இத்திட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாக அவர்கள் நினைக்கிறார்கள். இதனால் மக்கள் நலத் திட்டத்துக்கே பெயர் கெடுகிறது. 3) தொழில்...

மக்களாட்சியின் தோல்வியும் மதிப்பிடுகளின் வீழ்ச்சியும் எப்படி முதலீட்டியத்தால் விளைந்தன?

ஏலியன்களே நம் நாட்டுக்கு வந்து கட்சி தொடங்கி ஆட்சியமைத்தாலும் ரௌடிகள், நில முகவர்கள், திடீர் பணக்காரர்கள், மோசடிக்காரர்கள் எம்.எல்.ஏ, அமைச்சர்கள் ஆவதையும், பெரும்பணக்காரர்கள் ஆட்சியைக் கையில் வைத்து தம் விருப்பப்படி உருட்டுவதையும் தவிர்க்க முடியாது என்று நினைக்கிறேன். நம் அதிகாரக் கட்டமைப்பு அப்படி. ஒரு செய்தி பார்த்தேன். எளியவர்களுக்கு வாய்ப்பளிப்போம் என்று கூறிய தவெகவின் எம்.எல்.ஏக்களில் 80% மேல் கோடீஸ்வரர்கள். குற்றவாளிகள், போலி சான்றிதழ் பேர்வழிகள், புரோக்கர்களும் உண்டு. கட்சியே ஒரு பக்கம் பாஜக கொடுத்த நிதியையும் இன்னொரு பக்கம் லாட்டரி குடும்பத்தின் நிதியையும் வைத்தே இத்தனை நாட்கள் நடந்தது. இனிமேல் டெண்டர் முறைகேடு, பல தளங்களில் ஊழல் என்று கொள்ளையடித்து 'தன்னிறைவு' ஆக முயல்வார்கள். அமைச்சர்கள் பல ஆயிரம் கோடிகள் சம்பாதித்து பெரிய நிறுவனங்களை ஆரம்பிப்பார்கள், வெளிநாடுகளில் முதலீடு செய்வார்கள், கறுப்புப் பணத்தைப் பதுக்குவார்கள். ஏன் எந்த ஆட்சி வந்தாலும் இந்த டெம்பிளேட் மாறுவதில்லை என்றே நாம் கேட்க வேண்டும்? யார் நல்லவர், யார் கொஞ்சம் குறைவாகக் கெட்டவர் என்பது அல்ல. நமது இப்போத...