Skip to main content

கல்லூரிக்கால அபத்தங்கள்


கல்லூரியில் படித்த காலம் வாழ்வின் சிறந்த பருவம். ஒவ்வொரு நாளையும் அதன் ஒவ்வொரு தருணத்தையும் ரசித்து வாழ்ந்தேன். ஒரு வகுப்பு கூட எனக்கு சலிப்பாக இருந்ததில்லை. ஆனால் பரீட்சையை பொறுத்தமட்டில் படுமுட்டாளாக இருந்தேன்.

கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக புது சிந்தனைகளை எழுத வேண்டும் என நினைப்பேன். மற்ற மாணவர்களைப் போல மனப்பாடம் செய்தவற்றை தொகுத்தெழுத பிடிக்காது. ஒருமுறை ஒரு நீண்ட கட்டுரை ஒரே பக்கம் மட்டும் எழுதினேன். அதற்கு மேல் தேவையில்லை என்றொரு நினைப்பு. துறைத்தலைவர் எனக்கு மிக அதிகமாக மதிப்பெண் தந்து பாராட்டிப் போக சகமாணவர்கள் கொந்தளித்து விட்டார்கள். அவர்கள் எல்லாம் பக்கம் பக்கமாக மேற்கோள்களோடு எழுதி இருந்தார்கள்.
ஆனால் இன்னொரு பரீட்சையில் தலைகீழாக நடந்தது. திருத்தின ஆசிரியர் வேறு ஆள். அவர் வகுப்பில் நான் அடிக்கடி மறுத்து பேசு கடுப்பேற்றுவேன். பரீட்சையில் ஒரு கேள்விக்கு ஒரே ஒரு பத்தி தான் எழுதினேன். அதற்கு மேல் எனக்கு மூட் இல்லை என்று கொடுத்து விட்டேன். அவர் நான் வேண்டுமென்றே அவரை அவமானப்படுத்தி அப்படி எழுதியதாக நினைத்துக் கொண்டார். ஆசிரியர் என்னை வீட்டுக்கு அழைத்து கடுமையாக கண்டித்தார். நான் எனக்கு மூட் போச்சு சார் என்று அபத்தமாக நியாயப்படுத்தேன். அவர் “நீ என்ன பெரிய கவிஞனா? அப்படி என்றால் ஏதாவது ஒரு காகிதத்தில் கிறுக்கி புதரில் எறிந்து விட்டுப் போ. ஆனால் என் பரீட்சையில் அதையெல்லாம் அனுமதிக்க மாட்டேன்” என்றார். அவர் அந்த வெறுப்பில் இறுதிப் பரீட்சை மற்றும் இண்டெர்னல் மதிப்பெண்களில் கைவைத்து விட்டார். பிறகு பிற பரீட்சைகளில் கடுமையாக போராடி அதிக மதிப்பெண் பெற்று மொத்த சராசரியில் முதலிடத்தை பெற நாய்ப்பாடு பட்டேன்.

அந்த காலத்தில் ஜெயமோகனின் இணையதளம் எல்லாம் வரவில்லை. அவர் திண்ணை தளத்தில் தான் எழுதிக் கொண்டிருந்தார். ஒருமுறை மகாராஜபுரம் சந்தானத்தைப் பற்றி ஒரு குறிப்பெழுதியிருந்ததை படித்து அவரை கேட்டேன். மனிதர் ஆரம்பத்திலேயே என்னை சுண்டி இழுத்து விட்டார். அறையில் சதா சந்தானம் தான் உருகிக் கொண்டிருப்பார். அதிலும் ”சின்னஞ்சிறு கிளியே” எனக்கு உயிர். அவரது பாரதியார் பாடல்கள் கேஸட்டை திரும்பத் திரும்ப போட்டு பக்கத்து அறை நண்பர்களை இரவில் தூங்க விடாமல் டார்ச்சர் கொடுப்பேன். எங்களுக்கு இந்திய இலக்கியம் பாடத்தில் பாரதியாரும் இருந்தார். அந்த பாட பரீட்சைக்கு வெகு சீக்கிரம் காலையில் எழுந்து சுமார் ரெண்டு மணிநேரம் சந்தானம் பாரதி வரிகளை பாடுவதை திரும்பத் திரும்ப கேட்டு ஒரு ”சன்னத” நிலைக்கு போய் அப்படியே பரீட்சை ஹாலில் நுழைந்தால் அன்று பாரதியார் கவிதை பற்றி ஒரு கேள்வி. நான் அன்று எழுதியதை பின்னர் அதைத் திருத்திய பேராசிரியர் குறிப்பிட்டு பாராட்டினார். எம்.ஏயில் நான் மிக அதிகமாக மதிப்பெண் வாங்கியதும் அந்த பரீட்சையில் தான். பேராசிரியர் பாராட்டுகையில் மகாராஜபுரம் சந்தானத்தை நன்றியுடன் நினைத்துக் கொண்டேன்.
பிறகு தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் போதும் ஹெட்போன் மாட்டி பாட்டுக் கேட்டுத் தான் பளு தெரியாமல் உழைப்பேன். ஆசிரியர் ஆன பிறகு மட்டும் எப்படி பாட்டுக் கேட்டபடி பாடம் நடத்துவது என தெரியவில்லை. ஆனால் இப்போதும் எதாவது எழுதும் மனநிலை கூட வேண்டுமென்றால் கேட்பதற்கு சில பாடல்கள் வைத்துள்ளேன். அதைக் கேட்டால் என் மனைவி தெறித்து ஓடி விடுவாள்.
திரும்ப இன்று மகாராஜபுரத்தை கேட்கும் போது கல்லூரிப் பருவத்தில் எவ்வளவு முட்டாளாக இருந்திருக்கிறேன் என புரிகிறது. அவ்வளவு ஈடுபாடும் தவமும் வீண். அந்த ஆத்மார்த்த ஈடுபாட்டில் விளைந்த மதிப்பெண்களும் வீண். சும்மா கிடைக்கிற நேரத்தில் உருப்போட்டதை வைத்து ஏதாவது கிறுக்கி இருந்தாலும் இன்று என் வாழ்க்கை ஒன்றும் அதிகம் மாறி இருக்காது. 

கல்லூரியில் வேலையின் போது எத்தனையோ விடைத்தாள்களை திருத்தியிருக்கிறேன். எல்லாமே ஒப்பித்தல் வகை தான். ஆனால் என்னைப் போல் ஒரே ஒரு பைத்தியத்தை மூன்றாவது வருடத்தில் பார்த்தேன். ஹைதராபாதை சேர்ந்த தால்ஸ்தாய், நீட்சே வாசகனான ஒரு மாணவன். சொந்த கருத்துக்களை சொந்த மொழியில் எழுதியிருந்தான். தான் எழுதியதன் மீது அவனுக்கு மதிப்பு இருந்தது. நாங்கள் நண்பர்கள் ஆனோம். கல்லூரியில் அவனுடன் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென்று “இப்போது இந்த மொத்த வளாகத்தில் தால்ஸ்தாய் பற்றி பேசுகிறவர் நாமாக மட்டும் தான் இருப்போம்” என வியப்பாக நினைத்துக் கொள்வேன். அது ஒரு தனி உணர்வாக இருக்கும். மொத்த உலகத்துக்கும் எதிர் அச்சில் நாங்கள் சுழல்வது போல். பிற மாணவர்களும் ஆசிரியர்களும் எங்களை விசித்திர ஜீவிகள் போல பார்த்து செல்வார்கள். அவனுடைய தனித்துவம் காரணமாகவே ஆசிரியர்கள் மட்டத்தில் இருந்து பல பிரச்சனைகள் அவனுக்கு வந்தன. நான் அவனிடம் பேசக் கூடாது என்று கூட தடை போட்டார்கள். அது தான் நடப்பியல் உலகம். நீட்சே, தால்ஸ்தாய், முராகாமி பற்றி பேசினால் தடை. எனக்கு அவனை பார்க்கையில் என்னுடைய மாணவப் பருவத்து லட்சிய கனவுகளும் அதைப் பின் தொடர்ந்த என் ஆவேசமும் நினைவு வரும்.
 

ஆனால் நாம் அப்படித் தான் என்றும் நடைமுறைக்கு விரோதமான முட்டாள்களாக இருந்திருக்கிறோம்! நமக்காக நாமே நம்மை ஏமாற்றிக் கொள்வது இனிமையான காரியம் தானே!

Comments

பல காரியங்கள் பின் நாளின் அசைபோடுதலில் அபத்தமாகத்தான் தோன்றுகிறது, ஆனால் 20 வயதில்தான் ரௌத்திரம் பழக வேண்டும் 60 வயதில் ரௌத்திரம் அபத்தம் இல்லையா?

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...