முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கல்லூரிக்கால அபத்தங்கள்


கல்லூரியில் படித்த காலம் வாழ்வின் சிறந்த பருவம். ஒவ்வொரு நாளையும் அதன் ஒவ்வொரு தருணத்தையும் ரசித்து வாழ்ந்தேன். ஒரு வகுப்பு கூட எனக்கு சலிப்பாக இருந்ததில்லை. ஆனால் பரீட்சையை பொறுத்தமட்டில் படுமுட்டாளாக இருந்தேன்.

கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக புது சிந்தனைகளை எழுத வேண்டும் என நினைப்பேன். மற்ற மாணவர்களைப் போல மனப்பாடம் செய்தவற்றை தொகுத்தெழுத பிடிக்காது. ஒருமுறை ஒரு நீண்ட கட்டுரை ஒரே பக்கம் மட்டும் எழுதினேன். அதற்கு மேல் தேவையில்லை என்றொரு நினைப்பு. துறைத்தலைவர் எனக்கு மிக அதிகமாக மதிப்பெண் தந்து பாராட்டிப் போக சகமாணவர்கள் கொந்தளித்து விட்டார்கள். அவர்கள் எல்லாம் பக்கம் பக்கமாக மேற்கோள்களோடு எழுதி இருந்தார்கள்.
ஆனால் இன்னொரு பரீட்சையில் தலைகீழாக நடந்தது. திருத்தின ஆசிரியர் வேறு ஆள். அவர் வகுப்பில் நான் அடிக்கடி மறுத்து பேசு கடுப்பேற்றுவேன். பரீட்சையில் ஒரு கேள்விக்கு ஒரே ஒரு பத்தி தான் எழுதினேன். அதற்கு மேல் எனக்கு மூட் இல்லை என்று கொடுத்து விட்டேன். அவர் நான் வேண்டுமென்றே அவரை அவமானப்படுத்தி அப்படி எழுதியதாக நினைத்துக் கொண்டார். ஆசிரியர் என்னை வீட்டுக்கு அழைத்து கடுமையாக கண்டித்தார். நான் எனக்கு மூட் போச்சு சார் என்று அபத்தமாக நியாயப்படுத்தேன். அவர் “நீ என்ன பெரிய கவிஞனா? அப்படி என்றால் ஏதாவது ஒரு காகிதத்தில் கிறுக்கி புதரில் எறிந்து விட்டுப் போ. ஆனால் என் பரீட்சையில் அதையெல்லாம் அனுமதிக்க மாட்டேன்” என்றார். அவர் அந்த வெறுப்பில் இறுதிப் பரீட்சை மற்றும் இண்டெர்னல் மதிப்பெண்களில் கைவைத்து விட்டார். பிறகு பிற பரீட்சைகளில் கடுமையாக போராடி அதிக மதிப்பெண் பெற்று மொத்த சராசரியில் முதலிடத்தை பெற நாய்ப்பாடு பட்டேன்.

அந்த காலத்தில் ஜெயமோகனின் இணையதளம் எல்லாம் வரவில்லை. அவர் திண்ணை தளத்தில் தான் எழுதிக் கொண்டிருந்தார். ஒருமுறை மகாராஜபுரம் சந்தானத்தைப் பற்றி ஒரு குறிப்பெழுதியிருந்ததை படித்து அவரை கேட்டேன். மனிதர் ஆரம்பத்திலேயே என்னை சுண்டி இழுத்து விட்டார். அறையில் சதா சந்தானம் தான் உருகிக் கொண்டிருப்பார். அதிலும் ”சின்னஞ்சிறு கிளியே” எனக்கு உயிர். அவரது பாரதியார் பாடல்கள் கேஸட்டை திரும்பத் திரும்ப போட்டு பக்கத்து அறை நண்பர்களை இரவில் தூங்க விடாமல் டார்ச்சர் கொடுப்பேன். எங்களுக்கு இந்திய இலக்கியம் பாடத்தில் பாரதியாரும் இருந்தார். அந்த பாட பரீட்சைக்கு வெகு சீக்கிரம் காலையில் எழுந்து சுமார் ரெண்டு மணிநேரம் சந்தானம் பாரதி வரிகளை பாடுவதை திரும்பத் திரும்ப கேட்டு ஒரு ”சன்னத” நிலைக்கு போய் அப்படியே பரீட்சை ஹாலில் நுழைந்தால் அன்று பாரதியார் கவிதை பற்றி ஒரு கேள்வி. நான் அன்று எழுதியதை பின்னர் அதைத் திருத்திய பேராசிரியர் குறிப்பிட்டு பாராட்டினார். எம்.ஏயில் நான் மிக அதிகமாக மதிப்பெண் வாங்கியதும் அந்த பரீட்சையில் தான். பேராசிரியர் பாராட்டுகையில் மகாராஜபுரம் சந்தானத்தை நன்றியுடன் நினைத்துக் கொண்டேன்.
பிறகு தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் போதும் ஹெட்போன் மாட்டி பாட்டுக் கேட்டுத் தான் பளு தெரியாமல் உழைப்பேன். ஆசிரியர் ஆன பிறகு மட்டும் எப்படி பாட்டுக் கேட்டபடி பாடம் நடத்துவது என தெரியவில்லை. ஆனால் இப்போதும் எதாவது எழுதும் மனநிலை கூட வேண்டுமென்றால் கேட்பதற்கு சில பாடல்கள் வைத்துள்ளேன். அதைக் கேட்டால் என் மனைவி தெறித்து ஓடி விடுவாள்.
திரும்ப இன்று மகாராஜபுரத்தை கேட்கும் போது கல்லூரிப் பருவத்தில் எவ்வளவு முட்டாளாக இருந்திருக்கிறேன் என புரிகிறது. அவ்வளவு ஈடுபாடும் தவமும் வீண். அந்த ஆத்மார்த்த ஈடுபாட்டில் விளைந்த மதிப்பெண்களும் வீண். சும்மா கிடைக்கிற நேரத்தில் உருப்போட்டதை வைத்து ஏதாவது கிறுக்கி இருந்தாலும் இன்று என் வாழ்க்கை ஒன்றும் அதிகம் மாறி இருக்காது. 

கல்லூரியில் வேலையின் போது எத்தனையோ விடைத்தாள்களை திருத்தியிருக்கிறேன். எல்லாமே ஒப்பித்தல் வகை தான். ஆனால் என்னைப் போல் ஒரே ஒரு பைத்தியத்தை மூன்றாவது வருடத்தில் பார்த்தேன். ஹைதராபாதை சேர்ந்த தால்ஸ்தாய், நீட்சே வாசகனான ஒரு மாணவன். சொந்த கருத்துக்களை சொந்த மொழியில் எழுதியிருந்தான். தான் எழுதியதன் மீது அவனுக்கு மதிப்பு இருந்தது. நாங்கள் நண்பர்கள் ஆனோம். கல்லூரியில் அவனுடன் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென்று “இப்போது இந்த மொத்த வளாகத்தில் தால்ஸ்தாய் பற்றி பேசுகிறவர் நாமாக மட்டும் தான் இருப்போம்” என வியப்பாக நினைத்துக் கொள்வேன். அது ஒரு தனி உணர்வாக இருக்கும். மொத்த உலகத்துக்கும் எதிர் அச்சில் நாங்கள் சுழல்வது போல். பிற மாணவர்களும் ஆசிரியர்களும் எங்களை விசித்திர ஜீவிகள் போல பார்த்து செல்வார்கள். அவனுடைய தனித்துவம் காரணமாகவே ஆசிரியர்கள் மட்டத்தில் இருந்து பல பிரச்சனைகள் அவனுக்கு வந்தன. நான் அவனிடம் பேசக் கூடாது என்று கூட தடை போட்டார்கள். அது தான் நடப்பியல் உலகம். நீட்சே, தால்ஸ்தாய், முராகாமி பற்றி பேசினால் தடை. எனக்கு அவனை பார்க்கையில் என்னுடைய மாணவப் பருவத்து லட்சிய கனவுகளும் அதைப் பின் தொடர்ந்த என் ஆவேசமும் நினைவு வரும்.
 

ஆனால் நாம் அப்படித் தான் என்றும் நடைமுறைக்கு விரோதமான முட்டாள்களாக இருந்திருக்கிறோம்! நமக்காக நாமே நம்மை ஏமாற்றிக் கொள்வது இனிமையான காரியம் தானே!

கருத்துகள்

அகலிக‌ன் இவ்வாறு கூறியுள்ளார்…
பல காரியங்கள் பின் நாளின் அசைபோடுதலில் அபத்தமாகத்தான் தோன்றுகிறது, ஆனால் 20 வயதில்தான் ரௌத்திரம் பழக வேண்டும் 60 வயதில் ரௌத்திரம் அபத்தம் இல்லையா?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...