முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மிக்கி ஆர்தரின் நீக்கம் ஒரு முக்கியமான மாற்றம்




மிக்கி ஆர்தர் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது ஒரு மிக நல்ல முடிவு. ஏன் என்று பார்ப்போம்.

இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை ஆகிய மூன்று நாடுகளும் கட்டுப்பாடு, ஒழுக்கம், கராறான திட்டமிடலை முன்னிறுத்துபவை. அதாவது வெற்றிக்கு திறமையை விட இவை தான் முக்கியம் என நினைப்பவை. இது ஒரு இங்கிலாந்து பாணி. இங்கிலாந்து பயிற்சியாளர்களின் தாக்கத்தினால் தென்னாப்பிரிக்காவும் இலங்கையும் இவ்வாறு ஒழுக்கத்துக்கு மிகுதியான முக்கியத்துவம் குடுக்க துவங்கின என சொல்லப்படுகிறது. ஆனால் இலங்கை ஒரு மிகச்சிறிய நாடு என்பதாலும் அங்குள்ள உள்ளூர் பயிற்சியாளர்களின் தூண்டுதலாலும் வித்தியாசமான மரபை மீறிய வீரர்களை ஊக்குவித்தனர். ஜெயசூரியா, முரளிதரன், மெண்டிஸ், மலிங்கா என அவர்களின் சாதனையாளர்கள் மரபை எதிர்த்தவர்கள் தாம். அவர்களால் தான் இலங்கை கிரிக்கெட் பெரும் உயரங்களை தொட்டது. தென்னாப்பிரிக்காவும் இலங்கையும் நல்ல வீரர்களை கொண்டிருந்தாலும் கற்பனையற்ற எந்திரத்தனமான கிரிக்கெட்டை பின்பற்றியதால் அவர்களால் ஒரு சராசரித்தனத்தை கடந்து சாதனைகள் படைக்க முடியவில்லை. எதிர்பாராத சூழல்களில் எப்போது பதற்றமுற்று விழி பிதுங்கி துவண்டனர். தொன்ணூறுகளில் தென்னாப்பிரிக்காவுக்கு இதுவே முக்கிய பிரச்சனையாக இருந்தது. பரீட்சையில் ஒரு கேள்வியை கொஞ்சம் வேறு மாதிரி கேட்டால் பதில் கூற தெரியாத மனப்பாட மாணவர்களைப் போல் இருந்தனர். பின்னர் ரெண்டாயிரத்தின் பின்பகுதியில் ஹஷிம் ஆம்லா, டுமினி ஆகிய மாற்று இனத்தவரின் வருகையும் கற்பனையுடன் ஆடக்கூடிய டூப்பிளசி ஆகியோரின் சேர்க்கையும் அணியை கொஞ்சம் ஆஸ்திரேலியா, இந்தியா போல் தடைகளை திறமை மூலம் தாண்ட முயலும் அணியாக மாற்றியது. தென்னாப்பிரிக்காவின் இந்த பரிணாமம் முக்கியமானது. அந்த கட்டத்தில் தான் மிக்கி ஆர்தரும் அதன் பயிற்சியாளர் பதவியில் இருந்து நீங்கினார். அதாவது தென்னாப்பிரிக்கா கிட்டத்தட்ட ஆஸ்திரேலியா போல் மாறி வரும் ஒரு கட்டத்தில்.
பின்னர் ஆர்தர் ஆஸ்திரேலியாவின் பயிற்சியாளர் ஆனார். ஆஸ்திரேலியா தனது மூத்த வீரர்களை இழந்து புது வீரர்களை கண்டடையும் எத்தனத்தில் இருந்தது. புது வீரர்களும் அத்தனை திறமையானவர்கள் அல்ல. அவர்கள் கொஞ்சம் இங்கிலாந்தைப் போல் இருந்தனர். பொதுவாக அணி பலவீனமாக இருக்கும் போது வாரியங்கள் சர்வாதிகாரத் தன்மை கொண்ட ஒரு பயிற்சியாளருக்கு முழு அதிகாரத்தை வழங்குவார்கள். இது இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய அணிகளில் உள்ள வழமை. அங்கு அணித்தலைவரை விட பயிற்சியாளர் அதிக அதிகாரம் கொண்டவராக இருப்பார். வீரர்கள் எப்போதும் ஊடகங்களிடம் பேசினாலும் ”எங்க பயிற்சியாளர் அப்படி சொன்னார்; அது படி பண்ணினோம்” என பள்ளி மாணவன் போல் பணிவு காட்டுவார்கள். அணித்தலைவர் வகுப்புத்தலைவர் போலவும் பயிற்சியாளர் தலைமை ஆசிரியர் போலவும் செயல்படுவார்கள். பயிற்சியாளர் தன்னிடம் பணிவாக உள்ள விசுவாசம் காட்டுகிறவர்களை தொடர்ந்து ஆதரித்து பிறரை பல வழிகளில் ஒழுக்கத்தின் பெயரில் ஒடுக்கப் பார்ப்பார்.
மிக்கி ஆர்தர் இதைத் தான் ஆஸ்திரேலியாவில் செய்யப் பார்த்தார். ஆனால் ஆஸ்திரேலியா மூத்த வீரர்களை இழந்த நிலையிலும் முழுக்க தென்னாப்பிரிக்கா போல் அதிகாரத்திடம் மண்டியிடும் அணி அல்ல என அவர் உணரவில்லை. ஆஸிகள் இயல்பிலேயே தன்னிச்சையாக அபாயகரமாக செயல்படுவதை விரும்புவார்கள். பாதுகாப்பை பணயம் வைத்து சாகசம் செய்வது அவர்களின் மரபில் உள்ளது. ஆர்தர் அடக்க முயன்றது இந்த உள்விழைவைத் தான். அவர் அணியை கிட்டத்தட்ட காயடிக்க பார்த்தார் என சொல்லலாம். அணித்தலைவரான கிளார்க்குக்கு இணையான ஆளுமை கொண்ட வீரராக வாட்சன் இருந்தார். வாட்சன் நம்மூர் யுவ்ராஜ், சேவாக் போன்றவர். அவரை தட்டிக் கொடுத்து வேலை வாங்கினால் ஆட்டத்தின் போது தன்னந்தனியாக மூன்று வீரர்களின் தாக்கத்தை ஏற்படுத்துவார். ஆனால் ஒற்றைப் புள்ளியில் அதிகாரத்தை குவிக்க முயன்ற ஆர்தர் மற்றும் கிளார்க்குக்கு வாட்சன் ஒரு தலைவலியாக இருந்தார். சமீபமாக நடந்த இந்திய டெஸ்டு தொடரின் போது வாட்சன் உள்ளிட்ட சில வீரர்களின் வீட்டுப்பாடம் எழுதவில்லை என்கிற அற்ப காரணம் காட்டி அணியில் இருந்து தடை செய்தது, மிக முக்கியமான கட்டத்தில் இவர்கள் இல்லாமல் அணி இந்தியாவிடம் தோல்வியை தழுவியது ஆகியவை ஆர்தர் எந்தளவுக்கு அணியின் வெற்றியை விட தன் அதிகார தக்க வைப்புக்கு முக்கியத்துவம் அளித்தார் என்பதற்கு உதாரணம். இந்த செயல் பல முன்னாள் வீரர்களின் கண்டனத்தை பெற்றுத் தந்தது. மிக சமீபமாக சேம்பியன்ஸ் கோப்பையின் போது ஆஸி அணியின் வார்னர் ஒரு பாரில் போதையில் இங்கிலாந்து அணி வீரர் ரூட்டின் மூக்கில் குத்தினார். விளைவாக அவர் தடை செய்யப்பட்டார். ஆனால் ஆர்தர் இந்த நேரத்தில் வார்னரை ஆதரிக்க துவங்கினார். ஏனென்றால் வார்னர் அவருக்கும் கிளார்க்குக்கும் அடங்கி நடக்கும் இளைய வீரர். நியாயப்படி அவர் வார்னரை கடுமையாக கண்டித்து இங்கிலாந்தில் இருந்து வெளியேற்றி இருக்க வேண்டும். ஆனால் வார்னரை அணியில் கூட தங்க அனுமதித்தனர். இது பொதுவாக சர்வாதிகார அதிகாரிகளிடம் காணும் போக்கு. கீழே உள்ளவர்கள் தமக்கு ஜால்ரா அடித்தால் அவர்கள் குற்றம் பண்ணினாலும் பாதுகாப்பார்கள். ஆனால் தன்னம்பிக்கையுடன் தன்னிச்சையாக செயல்படுகிறவர்களை அற்ப விசயத்தின் பேரில் தண்டிப்பார்கள். ஆர்தரின் இந்த பாரபட்சம் அவர் எந்தளவுக்கு மோசமான ஒரு தலைவர் என்பதை காட்டியது. மோசமான நிர்வாகத்தின் உச்சபட்ச உதாரணம் அணியை பிளவுபடுத்தி அதன் மூலம் அதிகாரத்தை கைப்பட்ட பார்ப்பது.
மேலும் ஆர்தர் ஆஸ்திரேலியாவின் பண்பாட்டை உணராமல் அதை தென்னாப்பிரிக்க போல் கட்டுப்பெட்டியானதாக மாற்ற முயன்று கொண்டிருந்தார்.
ஒரு ஆட்டம் தோற்றால் அது குறித்த கருத்துக்களை ஒரு அறிக்கையாக வீரர்கள் பயிற்சியாளர்களிடம் கொடுப்பது அந்த அணியை முன்னேற்ற அல்ல. பள்ளிக்கூடத்தில் மாணவர்களை தண்டனையின் பேரில் அவமானப்படுத்தி அவர்களுக்குள் அச்சத்தை தூண்டி அடிமையாக நடத்தும் ஆசிரியர்களின் அசட்டு ஒழுக்கவாதத்தை பார்த்திருக்கிறோம். மிக்கி ஆர்தருக்கு தேவை வீரர்கள் அவர் முன் மண்டியிட்டு குற்றமன்னிப்பு கேட்டு அப்படியே அ.தி.மு.க அமைச்சர்கள் போல் நடந்து கொள்வது. மிக்கி ஆர்தரை போன்ற ஒழுக்கவெறியர்கள் நம் பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்களாக, நிறுவனங்களில் அதிகாரிகளாக பல மட்டங்களில் நிறைந்திருக்கிறார்கள். முன்னேற்றத்துக்கு மிகப்பெரிய தடைக்கற்கள் இவர்கள் தாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நலத்திட்டங்களின் அடிப்படையான பிழை

  மகளிர் உதவித் (உரிமைத்) தொகைத் திட்டத்தைக் கைவிடுவதைக் குறித்து தவெக அரசு பரிசீலிக்க வேண்டும். அதற்காகச் செலவாகும் 15,000 கோடி ரூபாயை படித்து வேலை கிடைக்காமல் இருப்போரில் வருடாந்திர குடும்ப வருமானம் ஒரு அளவுக்கு மேல் குறைவாக இருப்போருக்கு அளிக்க வேண்டும். அதேபோல முறைசாரா தொழிலாளர்களுக்கு நொடிந்த தொழில்களில் ஈடுபட்டிருப்போருக்கும் கொடுப்பதை அரசு பரிலீக்க வேண்டும். அதாவது உதவி / உரிமைத் தொகையை பாலினம் சார்ந்ததாக அல்லாமல் தொழில் சார்ந்ததாகப் பார்க்க வேண்டும். மேற்சொன்ன பெண்களும் அப்போது இத்திட்டத்திற்குள் வந்துவிடுவார்கள். சொந்தமாக வீடும் சொத்தும் கொண்ட பெண்கள் இந்த தொகையைப் பெறுவதைத் தவிர்க்க இயலும். இந்த மாற்றத்திற்கான தேவைகளாக நான் கருதுவன: 1) வர்க்கரீதியாக இது திட்டமிடப்படாததால் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. 2) இதை அரசு மக்களுக்கு கொடுக்கும் லஞ்சமாக சிலர் காண்கிறார்கள். அதாவது பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அவர்களைத் தம் வசம் இழுப்பதற்காக அரசுகள் இத்திட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாக அவர்கள் நினைக்கிறார்கள். இதனால் மக்கள் நலத் திட்டத்துக்கே பெயர் கெடுகிறது. 3) தொழில்...

மக்களாட்சியின் தோல்வியும் மதிப்பிடுகளின் வீழ்ச்சியும் எப்படி முதலீட்டியத்தால் விளைந்தன?

ஏலியன்களே நம் நாட்டுக்கு வந்து கட்சி தொடங்கி ஆட்சியமைத்தாலும் ரௌடிகள், நில முகவர்கள், திடீர் பணக்காரர்கள், மோசடிக்காரர்கள் எம்.எல்.ஏ, அமைச்சர்கள் ஆவதையும், பெரும்பணக்காரர்கள் ஆட்சியைக் கையில் வைத்து தம் விருப்பப்படி உருட்டுவதையும் தவிர்க்க முடியாது என்று நினைக்கிறேன். நம் அதிகாரக் கட்டமைப்பு அப்படி. ஒரு செய்தி பார்த்தேன். எளியவர்களுக்கு வாய்ப்பளிப்போம் என்று கூறிய தவெகவின் எம்.எல்.ஏக்களில் 80% மேல் கோடீஸ்வரர்கள். குற்றவாளிகள், போலி சான்றிதழ் பேர்வழிகள், புரோக்கர்களும் உண்டு. கட்சியே ஒரு பக்கம் பாஜக கொடுத்த நிதியையும் இன்னொரு பக்கம் லாட்டரி குடும்பத்தின் நிதியையும் வைத்தே இத்தனை நாட்கள் நடந்தது. இனிமேல் டெண்டர் முறைகேடு, பல தளங்களில் ஊழல் என்று கொள்ளையடித்து 'தன்னிறைவு' ஆக முயல்வார்கள். அமைச்சர்கள் பல ஆயிரம் கோடிகள் சம்பாதித்து பெரிய நிறுவனங்களை ஆரம்பிப்பார்கள், வெளிநாடுகளில் முதலீடு செய்வார்கள், கறுப்புப் பணத்தைப் பதுக்குவார்கள். ஏன் எந்த ஆட்சி வந்தாலும் இந்த டெம்பிளேட் மாறுவதில்லை என்றே நாம் கேட்க வேண்டும்? யார் நல்லவர், யார் கொஞ்சம் குறைவாகக் கெட்டவர் என்பது அல்ல. நமது இப்போத...