முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இளவரசனின் கொலைக்கு நடவடிக்கை எடுப்பாரா ஜெயலலிதா?


இளவரசனின் பிணம் போடப்பட்டுள்ள நிலை, அங்கு வைத்திருக்கும் மதுபுட்டி போன்றவை இது நிச்சயம் ஒரு செட்டப் செய்யப்பட்ட தற்கொலை என காட்டி விடுகிறது. மேலும் அவர் இறந்த நேரத்தில் அவ்வழி எந்த ரயிலும் போகவில்லை. 


திவ்யாவின் முன்னுக்கு பின் முரணான அறிக்கைகளும் இந்த பின்னணியில் பார்க்க கொஞ்சம் தெளிவாகின்றன. உயிர்மிரட்டல் தான் இத்தனைக்கும் பின் இருந்தது.
திவ்யா முதலில் தன் அம்மாவின் உயிர் குறித்து அஞ்சுவதாக தெரிவித்தார். ஆனால் டி.வி பேட்டிகளின் போது அவரது அம்மா ஒன்றும் ஆரோக்கியம் குன்றியதாக தெரியவில்லை. ஆக அம்மாவின் உடல்நிலை அல்ல பிரச்சனை. அவரது உயிரை பறிப்போம் எனவோ திவ்யாவின் குடும்பத்தையே அழிப்போம் எனவோ வன்னியர் சங்கத்தை சேர்ந்த குண்டர்கள் மிரட்டி இருக்கலாம் என அப்போதே ஒரு சந்தேகம் நிலவியது. ஒரு கட்டத்தில் திவ்யா தனக்கு இளவரசனுடன் வாழ ஆசை எனவும் அம்மாவின் சம்மதத்துக்காக காத்திருப்பதாகவும் சொன்னார். அடுத்து உடனே அதை மறுக்கும் பொருட்டு பத்திரிகையாளர்களை சந்தித்து “நான் இளவரசனை விரும்புவதாக வந்த தகவலினால் இன்று நான் ஆதரவின்றி தவிக்கும் நிலை வந்துள்ளது” என்றார். அவர் யார் ஆதரவை குறிப்பிடுகிறார்? வன்னியர் சங்க ஆதரவையா? நிச்சயம் தன் அம்மாவின் ஆதரவை அல்ல. முதலில் சொன்ன கருத்தை மறுத்து பேட்டி அளிக்கும் படி அவரை வற்புறுத்தியது யார்? நிச்சயம் இது குடும்ப தரப்பில் இருந்து தோன்றிய தூண்டுதலாக இருக்காது. மீடியா பிம்பம் பற்றி வன்னியர் சங்கம் போன்ற அமைப்புகள் தான் கவலைப்படும். ஆக அவர்களின் வற்புறுத்தல் தான் திவ்யாவை இப்படி பேச வைத்திருக்கிறது.
அடுத்து “இனி எம் அப்பாவின் நினைவுக்காக, அவரது மரணத்துக்கு பரிகாரம் தேடுவதற்காக கணவனிடம் இருந்து பிரிந்து வாழப் போகிறேன்” என்று ஒரு அபத்தமான கருத்தை தெரிவித்தார் திவ்யா. அப்பாவின் மரணத்துக்கு பரிகாரம் தேட அவர் சாதிப்பிரச்சனையை அல்லவா தீர்க்க வழி தேட வேண்டும். கணவனை பிரிந்தால் அப்பா திரும்ப வந்து விடுவாரா? எந்த திருமணமான பெண்ணும் இப்படி ஒரு காரணம் சொல்லி தனிமையில் வாழ உத்தேசிக்க மாட்டார். ஆக இதுவும் வன்னியர் சங்கத்தின் மூளைச்சலவை தான்.
இணையத்தில் இன்று திவ்யா தான் இளவரசனின் கொலைக்கு காரணம் என பல கொந்தளித்து பேசுகிறார்கள்? ஆனால் எனக்கு இது உண்மையல்ல என படுகிறது. வன்னியர் சங்கத்தினர் இளவரசனை கொன்று விடுவோம் எனவும் மிரட்டியிருக்கக் கூடும். அதனால் தான் தன்னால் இனி கணவன், தாயார் ஆகியோர் கொல்லப்பட வேண்டாம் என தீர்மானித்து அந்த பெண் விலகி இருக்க முடிவு செய்திருக்கக் கூடும். ஒரு அப்பாவிப் பெண் எப்படி ஒரு கொலைகார கும்பலின் சதி மிரட்டல் வலையில் மாட்டி தன் வாழ்வை பலி கொடுத்திருக்கிறது பாருங்கள்!
திவ்யா தன் கணவனை பிரிந்து வாழ்வதற்கு கூறிய காரணம் நியாயமானது அல்ல. திருமணம் என்பது ஒரு உடன்படிக்கை. அதற்கு ஒரு பொறுப்பு உள்ளது. (இங்கே இளவரசனுக்கு போதுமான வயது ஆக வில்லை என்பவர்களுக்கு நான் ஒன்று கேட்க விரும்புகிறேன். இந்த நாட்டில் எத்தனையோ பெண்கள் பதினைந்தில் இருந்து இருபது வயதுக்குள் மணம் புரிந்து கொடுக்கப்படுகிறார்கள். அவர்களை எல்லாம் பிரித்து வைக்கப் போகிறீர்களா?) திவ்யாவுக்கு தன் திருமணம் மீது ஒரு பாத்தியதை உள்ளது. அம்மாவுடன் வாழ விருப்பம் என திவ்யா தெரிவித்ததும் நீதிபதிகள் அதை ஏற்றுக் கொண்டு அவரை போக அனுமதித்தார்கள். இறக்கும் முன் ஒரு முறை தன் மனைவியிடம் பேசக் கூட இளவரசனை அனுமதிக்கவில்லை. நீதிபதிகளின் இந்த முடிவில் உள்ள அபத்தம் கண்கூடானது. ஒரு தம்பதி பிரிய ஒரு தகுந்த காரணம் வேண்டும். அம்மாவை மிஸ் பண்ணுகிறேன் என்பதெல்லாம் தகுந்த நியாயம் என்றால் அது ஆண்களுக்கும் பொருந்த வேண்டுமே! நாளை ஒரு ஆண் ஒரு பெண்ணை மணம் புரிந்து கர்ப்பமாக்கிய ஆறுமாதத்தில் எனக்கு என் பெற்றோருடன் தனியாக இருக்க விருப்பம் என மனைவியை கைவிட்டால் அதுவும் நியாயம் தான். அப்படிப் பார்த்தால் இந்த காரணம் சொல்லி ஒரு ஆண் வருடத்துக்கு ஒரு கல்யாணம் பண்ணிக் கொள்ளலாம். இப்படியான அற்பமான காரணங்களுக்காக ஒரு பெண் கணவனை பிரிய சட்டம் அனுமதிக்கக் கூடாது. அப்படி அனுமதித்ததால் தான் இன்று ஒரு உயிர் பலி வாங்கப்பட்டிருக்கிறது.

வடநாட்டில் இது போன்ற கௌரவக் கொலைகள் வாடிக்கை என அறிவோம். நம்மூரிலும் இது அரிது அல்ல. காதலுக்காக சொந்த பெண்ணையே கொன்று வீட்டுக்குள் புதைப்பது மதுரைப்பக்கம் சாதாரணமாக நடக்கும் என கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் நம் கண் முன்னாலே ஒரு அமைப்பு திட்டம் இட்டு ஒரு காதல் திருமணத்தை முன்னிட்டு இரு கிராமங்களை அழித்து, திருமண ஜோடியை பிரித்து வைத்து, காலையில் அப்பெண்ணை எனக்கு கணவன் வேண்டாம் என பேட்டி கொடுக்க வைத்து மதியம் கணவனை கொன்று ரயில் தண்டவாளத்தில் போடுவது நடந்திருக்கிறது. இவ்வளவு திட்டமிட்டு வன்னியர் சங்கத்தால் இதை செய்ய முடிகிறது என்றால் தம்மை தண்டிக்க மாட்டார்கள் என்கிற தைரியம் தானே காரணம்.
இந்த கொலைக்காக வன்னியர் சங்கத்தை தடை செய்து கொலைகாரர்களை கைது செய்து அவர்களுக்கு வழி காட்டிய ராமதாஸையும் உள்ளே தள்ள வேண்டும். அரசியல் அனுகூலங்கள் கருதி ஜெயலலிதா தாமதித்தார் என்றால் இந்த அப்பாவி இளைஞனின் கொலையில் அவருக்கும் மறைமுக பங்கு உண்டு என அர்த்தம். கடவுளும் இளவரசனின் ஆன்மாவும் உங்களை மன்னிக்க மாட்டார்கள். ஜெயலலிதா கலைஞர், வைக்கோவை கைது செய்த தருணங்களில் அது ஒரு அரசியல் பழிவாங்கல் என நாங்கள் எதிர்த்தோம். ஆனால் ராமதாஸை கைது செய்து தூக்கில் போட்டால் கூட வழக்கமாக தூக்குத்தண்டனையை எதிர்க்கும் பலர் கூட அதை ஆதரிப்போம். அஜ்மல் கசாபை விட கொடூரமானவர் அவர்.

கருத்துகள்

Desingh இவ்வாறு கூறியுள்ளார்…
சரியா சொன்னிங்க,, ஜாதி வெறி நாய்கள் இருக்கும் வரை இது ஓயாது.
ARUN இவ்வாறு கூறியுள்ளார்…
Sariyana idathil irunthu sariyana kattalaigal vanthirunthal intha kolai nadanthirukkathu. Vanniyarin sathiveriku mudivu kattum orey thalaivan engal thirumavalavan.
Orangur ARUN.
சிரிப்புசிங்காரம் இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த கொலைக்காக வன்னியர் சங்கத்தை தடை செய்து கொலைகாரர்களை கைது செய்து அவர்களுக்கு வழி காட்டிய ராமதாஸையும் உள்ளே தள்ள வேண்டும். -----
அப்படி பாத்தா இதுவரைக்கும் நடந்த எத்தனையோ கொலைகளுக்கு கருணாநிதி,ஜெயலலிதா-ன்னு உயிரோட இருக்குற தலைவர்கள் இல்லாம செத்தவங்களையும் தோண்டி எடுத்துக்கொண்டுவரணும்.....அட இதுல திருமாவளவன விட்டுட்டேனே.......
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
இப்படி ராமதாசை வெளிப்படையாக திட்டி எழுதினால் உங்களை எவனும் வந்து அடித்து விட மாட்டானா?
Ravichandran இவ்வாறு கூறியுள்ளார்…
10 நாட்கள் கழிந்த பின்னர்,போஸ்ட்மார்ட்டம் நடந்துள்ள நிலையிலும் ட்ரெயின் ட்ரைவர் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னரும் உங்கள் கருத்து இதுதானா?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...