Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

உன் மீதான அன்பு குறித்து சில சொற்கள்




நான் பலசமயம் திருமணமாகி எத்தனை வருடங்களாகின்றன என்பதை மறந்து விடுவேன். பெரும்பாலும் ஐந்து ஆறு என மாற்றி மாற்றி சொல்வேன். ஒரு விதத்தில் எனக்கு திருமணமான உணர்வே இத்தனை நாளும் ஏற்பட்டதில்லை. 

அதற்கு என் மனைவிக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். அவள் என் மீது எந்த பாரத்தையும் சுமத்தியதில்லை; கண்காணித்து கேள்விகள் எழுப்பியதில்லை. அவள் எனக்காக மாறிக் கொண்டதோ என்னை தனக்காக மாற்ற முயன்றதோ இல்லை. இப்போதும் காதலிக்கும் போது நடந்தது போல நிறைய கோபிக்கிறாள்; சண்டை போடுகிறாள்; அட்டகாசமாய் அன்பை காட்டுகிறாள். அதே குழந்தைத் தனத்துடன் இருக்கிறாள். அதனாலே தான் நான் திருமணமானது பற்றி வருந்தியதோ யாரிடமும் புலம்பியதோ இல்லை. 
திருமணத்துக்கு அதற்கான பொறுப்புகள் உள்ளன தான். ஆனால் அவற்றை தலைமேல் பாரமாக்க நான் அனுமதித்ததில்லை.
பொதுவாக திருமணமான பின் மனைவி அல்லது கணவன் மீது பல ஏமாற்றங்கள் ஏற்படும். எனக்கு அப்படி ஏற்பட்டதே இல்லை. என் மனைவியை இன்னும் நன்றாக புரிந்து கொண்டிருக்கிறேன். மற்றபடி அவள் என் ஆரம்ப அவதானிப்பை பொய்க்க செய்ததே இல்லை. இன்னும் அவளிடம் அந்த ஒரு களங்கமின்மையும் கனிவும் இதயத்தின் ஆழத்தில் சுரந்து கொண்டு தான் இருக்கிறது. அது தான் ஆரம்பத்தில் இருந்தே அவளிடம் என்னை கவர்ந்தது என நினைக்கிறேன். இப்போதும் தன் கண்முன்னே ஒரு உயிர் வேதனைப்படுவது கண்டால் கண் கலங்கி உதவ முற்படுபவளாக இருக்கிறாள். சட்டென்று அழக் கூடியவளாக சிரிக்கக் கூடியவளாக இருக்கிறாள். அந்த நன்மை தான் என்னை தொடர்ந்து ஈர்த்துக் கொண்டிருக்கிறது. ஏனெனில் நான் நேர்மாறானவன். வாழ்வு தீமையாலானது என கராறாக நம்புபவன்.
எங்கள் உறவு பல பெரும் நெருக்கடிகளை சந்தித்து வந்திருக்கிறது. மனஸ்தாபம், கோபங்களின் போது வரும் அவநம்பிக்கையும் கசப்பையும் கடந்து ஏதோ ஒன்று அவள் மீது என்னை கட்டி வைத்திருக்கிறது. நான் என்றுமே அவளை முழுமையாக வெறுத்ததில்லை, மிகுந்த கோபத்தில் இருக்கையில் கூட என் நெஞ்சின் ஒரு பகுதி அவளை ரசித்தபடியே தான் இருந்துள்ளது.
மணிக்கணக்காக பேசிக் கொண்டிருப்போம். பரஸ்பரம் பேச எங்களுக்கு அவ்வளவு பிடிக்கும். என்னுடைய நாவலில் அவளிடம் பேசியும் வாழ்ந்தும் கவனித்த பல தகவல்களை பயன்படுத்தி இருக்கிறேன். பல நல்ல படங்களை, நாடகங்களை என்னை பார்க்க வைத்தது, நல்ல புத்தகங்களை வாங்கி அளித்தது, தொடர்ந்து எழுத ஊக்குவிப்பது எல்லாமே அவள் தான். புகைப்பட கலையின் நுணுக்கங்கள் சிலவற்றை அறிந்ததும் அவளிடம் இருந்து தான். சில எழுத்தாளர்களின் மனைவியை போல் அவள் எழுத்து சார்ந்த குற்றவுணர்வு அடைய விட்டதில்லை. 
ஒரு நல்ல மனைவி வீட்டு வேலை, தாம்பத்யம் சம்மந்தப்பட்டவளாக மட்டும் இருக்கக் கூடாது. அதையெல்லாம் கடந்த விசயங்கள் அவளிடம் இல்லாமல் போகையில் தான் உறவு கசக்கிறது என நினைக்கிறேன். 
நாங்கள் பெரும்பாலும் வீட்டைப் பற்றியோ காசு, சொந்தங்கள் பற்றியோ பேசுவதில்லை. அதனாலே எங்களுக்கு பேசவும் ஏகத்துக்கு தீராமல் இருந்து கொண்டே இருக்கிறது. கோபத்திலும் சலிப்பிலும் உரையாடல்கள் ஸ்தம்பிப்பதில்லை. எங்கள் வீட்டில் மௌனங்களே இல்லை. நான் எழுதிக் கொண்டிருக்கும் போது கூட அவள் என்னிடம் பேசிக் கொண்டிருப்பாள். நானும் எழுதியபடி நிறுத்தாமல் பேசிக் கொண்டிருப்பேன்.
இதை அன்பென்றோ காதல் என்றோ பிரியம் என்றோ எப்படி விளக்க என தெரியவில்லை. ஆனால் என் உடலின் உறுப்பு ஒன்றை போல் அவளை விட்டு விலகுவது அசாத்தியமாக தோன்றியிருக்கிறது.
உண்மையில் அன்புக்கும் வெறுப்புக்கும் விளக்கமாக எழுதப்பட்ட அத்தனை சொற்களும் பொய்யானவை. இருவர் ஏன் ஒன்றாக இருக்கிறார்கள் என கடைசி வரை அவர்களுக்கே தெரியாது.
இன்று என் அன்பு மனைவிக்கு பிறந்த நாள். பொதுவாக ஒரு கவிதை எழுதி சமர்ப்பிப்பேன். இன்று நான் இதுவரை எழுதின அத்தனை சொற்களையும் உனக்கு சமர்ப்பிக்கிறேன்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...