Skip to main content

நமக்கு வேறு போக்கிடம் ஏது?



உயிர்மையின் 11ஆம் ஆண்டை நிறைவு செய்கிற இம்மாத இதழை பார்க்கையில் கடந்த சில ஆண்டுகளில் பங்களித்த எழுத்தாளர்கள் கணிசமாய் மாறி உள்ளது தான் பளிச்சென்று கண்ணில் படுகிறது. மனுஷ்யபுத்திரன் அதன் அத்தனை சாதக பாதகங்களையும் அறிந்து தான் நிறைய புதியவர்களை அனுமதிக்கிறார். சட்டென்று ஒரு புதிய வெளிச்சம் பாய்ந்தது போல் இருக்கிறது. 


ஐந்து வருடங்களுக்கு முன்பிருந்தே இது குறித்து மனுஷ்யபுத்திரன் பேசிக் கொண்டிருந்தார். பத்திரிகை மாற்றமில்லாமல் ஒரே மாதிரியான கட்டுரைகளை தாங்கி வருகிறது என அடிக்கடி கவலை தெரிவிப்பார். ஆனால் திட்டமிட்டு உடனடி மாற்றங்களை செயல்படுத்துவது அவர் பாணி அல்ல. காலத்தின் காற்றடிக்கும் திசையை கவனித்துக் கொண்டே இருப்பார். அதன் போக்கில் தன்னையும் பத்திரிகையையும் நிகழ அனுமதிப்பார். நான் சில வாரங்கள் மட்டுமே உயிர்மையில் வேலை பார்த்தேன். அப்போது என்னுடைய பாணியில் அவரிடம் சில திட்டங்களை கூறி விவாதிப்பேன். அப்போது அவர் திரும்ப திரும்ப சொல்வது “திட்டங்கள் இட்டு நடைமுறைப்படுத்தும் பாணி தோல்வி அடைவதை பல முறை பார்த்திருக்கிறேன். மாற்றம் அதன் போக்கில் நடக்கும்” என்பது.
இம்மாத உயிர்மையை பார்க்கையில் பல புதியவர்களின் வருகையும் எழுத்தின் வீச்சும் இந்த மாற்றம் நம் கண் முன்னே நாமறியாமலே நிகழ்ந்திருப்பதை பார்க்கிறேன். ஒரு காலத்தில் காலாதிதன், சாகித்யன் போன்ற பெயர்கள் இருந்த இடத்தில் இப்போது டான் அசோக் போன்ற ஆட்கள் எல்லாம் எழுதுவது சுவாரஸ்யமான மாற்றம். இந்த டான் அசோக் தெளிவாக நேரடியாக அழகான நக்கலுடன் எழுதுகிறார். என்னையும் தற்போது எழுதி வரும் பலரையும் போல் அவரும் இணையத்தில் எழுதி பழகி பத்திரிகைக்கு வருகிறவர் தான். இவர்களால் நம் உரைநடையில் ஒரு கணிசமான மாற்றம் சமீப காலத்தில் நடந்திருக்கிறது. தொண்ணூறுகளில் தோன்றி தமிழை பாடாய் படுத்தின செயப்பாட்டு வினை வியாதி வெகுவாக மட்டுப்பட்டிருக்கிறது. “அப்படி செய்யப்படுவதாய் நினைக்கப்படுவதாய் சொல்லப்படுகிறது” என்று கொல்லுகிறவர்கள் வாய்க்கால் வரப்புகளில் ஏர் சாய்த்து ஓய்வெடுக்க போய் விட்டார்கள். நேரடியான சரளமான கொஞ்சம் கொச்சையான நடை ஒன்று தோன்றிக் கொண்டிருக்கிறது. இவர்கள் எதையும் சுற்றி வளைக்காமல் நேரடியாக சொல்லி விவாதிக்க தூண்டுகிறார்கள். சமூக வலைதளங்களில் எழுதிப் பழகியதன் விளைவு இது.
உயிர்மையை பற்றி நினைவை கிளறுகிறவர்கள் ஏதாவது ஒரு ரெண்டு மூன்று வருட காலத்தை குறிப்பிட்டு அப்போதெல்லாம் மிக நன்றாக இருக்கும் என கூறுவார்கள். ஆரம்பித்த புதிதில் ஒரு பெரும் கும்பலாக சிறந்த எழுத்தாளர்கள் உயிர்மையில் எழுதினார்கள். உயிரோசையில் எழுத கூட சுகுமாரன், தமிழவன், இந்திரா பார்த்தசாரதி போன்றவர்கள் முனைந்தது மனுஷ்யபுத்திரனிடம் இருந்த அணுக்கமும் நம்பிக்கையும் காரணமாக தான். அதன் பிறகு நிறைய புதிய எழுத்தாளர்களை உயிர்மை வெளிக்கொணர்ந்ததையும் அறிவோம். இவர்களில் யார் எழுதின கட்டம் நன்றாக இருந்தது என சொல்ல தெரியவில்லை. ஆனால் புதிய சிறந்த எழுத்தாளர்களை அறிமுகப்படுத்துவது குறித்த சில கேள்விகள் தோன்றுகின்றன.
ஹிந்து போன்ற மூன்று ரூபாய் ஆங்கில இதழ்களில் சிலவேளை தீவிர சமூக இலக்கிய இதழ்களில் வருவதை விட அருமையான பலதரப்பட்ட துறை சார்ந்த ஆட்களால் எழுதப்பட்ட கட்டுரைகள் படிக்க கிடைக்கின்றன. வடகிழக்கு மாநிலங்களில் கலவரம் நடந்த போது அங்கு வங்கதேசத்தில் இருந்து அதிக இஸ்லாமிய குடியேற்றம் நடந்ததால் சிக்கல் ஏற்படவில்லை, கடந்த இருபது வருடங்களில் இஸ்லாமிய மக்கள் தொகை குறையவே செய்துள்ளது என ஒரு புள்ளியியல் நிபுணர் அருமையான பதிவொன்று ஹிந்து நடுப்பக்கத்தில் எழுதினார். அவர் எழுத்தாளர் அல்ல; வேறு வேலை செய்பவர். ஆய்வாளர். ஒருவேளை இந்த பக்கமே முன்பு ஒதுங்காதவராக இருக்கலாம். ஆனால் பலரும் ஒரு பிரச்சனையை வழமையான கோணங்களில் அணுக ஒருவர் எங்கிருந்தோ வந்து புதிய கோணம் ஒன்றை அளிக்கிறார் – இது போன்ற ஒன்று தமிழ் இதழியலில் நடக்காது. இங்கே எழுதுபவர்கள் தான் தொடர்ந்து எழுத வேண்டும். எழுத வேண்டிய திறனும் நுணுக்கமும் புத்தி கூர்மையான ஆட்களும் தமிழில் இன்னும் நிறைய பேர் வெளியே இருக்கிறார்கள். அதாவது அவர்கள் இங்குள்ள பொருளாதார பிரச்சனைகள், மக்களை சென்றடைவதில் உள்ள தடைகள், மற்றும் எழுத்துசார் சோம்பலாலும் தன்னம்பிக்கை இன்மையாலும் தமிழில் எழுத முனைவதில்லை. இது நமக்கு ஒரு பெரும் நஷ்டம்.
நான் உயிரோசை இணையத்துக்காக ஒரே ஒரு மாதம் வேலை பார்த்த போது பத்திரிகையில் ஆட்களை எழுத வைப்பது எவ்வளவு சிரமம் என உணர்ந்தேன். எனக்கு பிடித்த பிளாகர்களை எழுத கேட்பேன். அவர்களுக்கு தீவிர இதழில் எழுதும் தயக்கம். அது பெரிய சாதிக்காரங்க நடக்கிற தெரு, அங்க நாங்க வர மாட்டோம் என்பது போல் தயங்குவார்கள். என்னுடைய வாசக நண்பர்களை எழுத கேட்பேன். என் நண்பர்களையும் தொந்தரவு பண்ணினேன். அப்படித் தான் கார்த்திக் முத்துவல்லி என்பவர் புகைப்பட கலை பற்றி ஒரு நல்ல தொடர் எழுதினார். ஆனால் நான் உயிர்மையில் வேலை செய்வதை உடல் நலமின்மை காரணமாய் நிறுத்த நேர்ந்ததும் அவரும் எழுதுவதை நிறுத்தினார். கார்த்திக் எழுதின கட்டுரைகள் தமிழில் தீவிர இதழ் ஒன்றில் புகைப்பட கலை பற்றி எழுதப்பட்ட சிறந்த அறிமுகக் கட்டுரைகள் என நினைக்கிறேன். முதல் கட்டுரைகளாகவும் இருக்கலாம். தொடர்ந்திருந்தால் ஒரு நல்ல புத்தகமாகவும் வந்திருக்கும். இன்னொரு நண்பரான விஜயராகவனும் அப்போது உயிரோசையில் எழுதினார். அதுவும் சினிமா பற்றின முக்கியமான கட்டுரை. அவரும் அதற்கு பின் அதிகம் எழுதவில்லை. இந்த சிரமங்களை பார்த்த பின் தான் மனுஷ்யபுத்திரன் போன்ற தீவிர இதழ் ஆசிரியர்கள் இத்தனைக் காலமாய் பண்ணி வந்த வேலையின் மகத்துவம் புரிந்தது.
வழக்கமாய் எழுதுகிறவர்களை வைத்து கவிதை, கதை, இடதுசாரி அரசியல் கட்டுரைகள், மூத்த படைப்பாளிகளை போற்றி வரும் சில விமர்சனங்கள் என இதழ் நடத்துவது எளிது. நிபுணர்களை, புதிய சிந்தனையாளர்களை எழுத்துக்குள் கொண்டு வந்து பிரசுரிப்பது மிக மிக சிரமம். ஆனால் அது தான் மிக முக்கிய பணி. தமிழில் நாம் உரைநடை எழுத்தை வளமாக்க அதைத் தான் செய்ய வேண்டும். மனுஷ்யபுத்திரன் அப்படித் தான் தியோடர் பாஸ்கரன், பாரதிமணி போன்றோரை ரோட்டில் போகிற போக்கில் கையை பிடித்து இழுத்து வாசலில் உட்கார வைத்த கதையாக தன் இதழில் எழுத வைத்தார். மனுஷ் மட்டுமல்ல இன்னும் பலர் அப்பணியை தமிழில் செய்திருக்கிறார்கள். ஜெயமோகன் தனது சொல்புதிதில் நிறைய புதியவர்களை அறிமுகப்படுத்தினார். அதாவது சும்மா அதே கவிஞர், கதையாளர் என்று இல்லாமல் வெவ்வேறு துறை சார்ந்து. எழுதாதவர்களை எழுத வைப்பது தான் முக்கியமான அவசியமான பத்திரிகை பணி.
Open Magazine, Tehelka போன்ற இதழ்களில் ஒரு மாதத்துக்கான கட்டுரைகள் எழுத்தாளர்களுடன் கூடி உட்கார்ந்து விவாதித்து எழுத வைக்கிறார்கள். கள ஆய்வு செய்கிறார்கள். அதற்காக பணம் கொடுக்கிறார்கள். அதனால் தான் அருமையான ஆழமான கூர்மையான அரசியல் பத்திகள் ஆங்கிலத்தில் எழுதப்படுகின்றன. தமிழ் பத்திரிகையில் இப்போது தான் மெல்ல மெல்ல இந்த பாணியை அந்திமழை போன்ற பத்திரிகைகள் பண்ண ஆரம்பித்துள்ளன. பிற பத்திரிகைகளுக்கு பொருளாதார நெருக்கடிகள் உள்ளன. இந்திய டுடே மொழிபெயர்த்து போட வேண்டிய ஒரு கட்டாயத்தில் சிக்கி தவிக்கிறது. தமிழ் ஆழி கூட இந்த மொழியாக்க கட்டுரை அபத்தத்தில் கொஞ்சம் மாட்டி உள்ளதை அதன் ஆசிரியரிடம் ஒருமுறை நேரடியாகவே விளக்கினேன். மோடி பற்றி ஒரு குஜராத்தி பத்தியாளர் எழுதுகிற வழக்கமான கட்டுரை அல்ல நமக்கு தேவை, அசலாக தமிழில் எழுதப்படுகிற பதிவுகள் தாம் – ஆங்கிலத்தனமான தமிழை நாம் வாசகர்கள் படிக்க விரும்ப மாட்டார்கள். ஜுனூன் தமிழே பல வாசகர்களை மீண்டும் விகடனை நோக்கி விரட்டி விடும். ஆனால் தமிழில் அப்படி நல்ல அரசியல் பத்தி எழுதுபவர்களும் குறைவு தான். ஆனால் நாம் எங்கிருந்தாவது ஆரம்பிக்க வேண்டும். மெட்ராஸ் கபே பற்றி ஏதோ மந்தீப் சிங் எழுதியதை மொழியாக்கி ஏன் தமிழில் தர வேண்டும்? அதைப் பேசத் தான் நாம் இருக்கிறோமே!
தமிழ் தீவிர இதழ்களில் ஏன் புதியவர்களுக்கு வாய்ப்பு தர மாட்டேன் என்கிறார்கள் என்றும், ஏன் நல்ல கட்டுரைகள், கதைகள் பிரசுரமாவதில்லை என்றும் இன்றும் புகார் கூறுபவர்களுக்கு இதுவே என் பதில். தமிழில் எழுதுபவர்களின் வட்டம், தீவிரமாக புத்திசாலித்தனமாக திறமையாக படைப்பூக்கத்துடன் எழுதுபவர்களின் வட்டம் மிக மிக சிறியது. அதை விரிவுபடுத்த வேண்டும்.
பொதுவாக நல்ல எழுத்து பிரசுரமாக வேண்டிய இடம் தவறான ஆட்களால் சுரண்டலுக்கு உள்ளாகிறது. இதை மீட்பதற்கும் மேற்சொன்னது தான் சிறந்த வழி. நாம் தான் புதிய நல்ல எழுத்தாளனை நோக்கி செல்ல வேண்டி இருக்கிறது. கண்டுபிடிக்க வேண்டி இருக்கிறது. சமீபத்தில் பேஸ்புக்கில் ஒரு பின்னூட்டம் மூலம் ஒரு புதிய எழுத்தாளனாகும் அறிவுத்திறன் கொண்ட ஒருவரை கண்டுகொண்டேன். ஜெ.பி. ராஜேந்திரன். இங்கிலாந்தில் உளவியலாளராக இருக்கிறார். தமிழில் உள்ள தீவிர இலக்கிய சூழலை உற்று கவனிக்கிறவர். அவர் இந்தியாவில் ஏன் எதிர்க்கலாசார எழுத்து அவசியமில்லை என்று எழுதிய நீண்ட பின்னூட்டம் ஆழமான கூர்மையான சுயமான புதிதான ஒன்றாக இருந்தது. ஆனால் அவரைப் போன்ற பலரும் தமிழகத்தில் எழுத்துத் துறைக்குள் வர மாட்டார்கள். இங்கு பணமில்லாமல் பிரசுர, வெகுமக்க: கவன வாய்ப்பில்லாமல் ஓரமாய் ஓடையில் நின்று துணி வெளுக்கும் பணியை செய்ய துணிய மாட்டார்கள். அது அவர்கள் தவறும் அல்ல. உலகில் வேறெங்கும் எழுத்தாளன் ஓசியில் மிகுந்த சிரமங்களுக்கு இடையே வேலை செய்ய துணிவதில்லை. இப்படியான மோசமான சூழல் இருப்பதால் பல நல்ல மாணிக்கங்களை எப்படி தவற விடுகிறோம் என குறிப்பிடவே இதை கூறினேன். தமிழ் எழுத்தாளன் ஒரு பெல்ட் வெடிகுண்டு தீவிரவாதி. அவன் தன்னையே சிதறடிக்க துணியலாம். ஆனால் பிற திறமையாளர்கள் அப்படி செய்ய துணிய அவசியமில்லை. நான் இங்கு சிறுபத்திரிகை பற்றி பேசவில்லை. நடுநிலை இதழ்களில் மேலும் பல நல்ல எழுத்தாளர்களை கண்டுபிடிப்பது பற்றி பேசுகிறேன்.
நாம் முதலில் புதியவர்களுக்கு அதிக வாய்ப்பு என்பதை கொள்கையாகவே கொண்டு செயல்பட வேண்டும். ஓப்பன், தெஹல்காவில் போல் பத்தி எழுதுபவர்களுக்கு நல்ல வருமானமும் அமைக்க வேண்டும். ஆனால் இங்கு நடப்பதென்ன? விகடன் போன்ற இதழ்களில் ஆசிரியர்கள் சர்வாதிகாரிகள் போல் தம் அதிகாரத்துக்கு இணங்குகிறவர்களை மட்டும் எழுத வைக்கிறார்கள். பெரும்பாலான பக்கங்களை நடிகை பேட்டி, புகைப்படங்கள், ஏன் குறட்டை விடுகிறோம் போன்ற அறிவுஜீவி மருத்துவ கட்டுரைகள் மற்றும் துணுக்குகள் மூலம் நிரப்புகிறார்கள். “சின்ன வயசில் நான் சைக்கிள் தள்ளிக் கொண்டு இளையராஜாவின் பாட்டு ஒன்றை முணுமுணுத்தபடி போன போது நாய் வள்வள் என்று குரைத்தது, ” என்பது மாதிரியான சுய அனுபவ பத்திகளை பிரசுரிக்கிறார்கள். இவர்களுக்கு எந்த எழுத்தாளனின் பங்களிப்பும் இல்லாமல் தம்மால் துணுக்கு, குஜால் படங்கள் கொண்டே பத்திரிகை நடத்த முடியும் என்ற இறுமாப்பு உள்ளது. ஒரு காலத்தில் பல நல்ல வெகுஜன புனைகதையாளர்களை வளர்த்து விட்ட மரபு கொண்ட இது போன்ற பத்திரிகைகள் இன்று வெறும் காப்பி பேஸ்ட் வேலை பணியை செய்வதே லட்சியம் எனும் நிலையில் இருக்கின்றன.
மத்திய அரசு நிதியில் நடக்கும் தமிழாராய்ச்சி நிறுவனம் போய் பாருங்கள். அங்கு ஆயிரக்கணக்கான சம்பளம் வாங்கி சோம்பி உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்கள் கடந்த பல வருடங்களில் செய்த மகத்தான பணி சிலப்பதிகாரம் போன்ற நூல்களுக்கு மறுபதிப்பு கொண்டு வந்தது தான். யுஜிஸி லட்சக்கணக்கான பணத்தை நிதியாக ஆய்வுக்கு வழங்குகிறது. ஒரு எழுத்தாளனுக்கு இந்த நிதியை யுஜிஸி கொடுக்காது. நிரந்தர பணியில் இருக்கும் பேராசிரியர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஒரு சமூகத்தின் ஆய்வாளர்கள், அறிவுஜீவிகள் என்பவர்கள் நிரந்த அரசுப்பணியில் உள்ள பேராசிரியர்கள் மட்டுமே என யுஜிஸி எப்படி முடிவு செய்கிறது என தெரியவில்லை. ஆனால் இதை பயன்படுத்தும் பேராசிரியர்கள் தேர்ந்தெடுக்கும் ஆய்வுத் தலைப்பு “சங்க காலத்தில் அறிவியல்” போன்று இருக்கும்.
இப்படித் தான் எழுத்தாளனுக்கும், பண்பாட்டு வளர்ச்சிக்கும் போக வேண்டிய பணம் சாக்கடைக்குள் பாய்கிறது. இந்த சூழலில் நம்மால் சில ஆயிரம் பேருக்கு நடத்தப்படும் காலச்சுவடு, அமிர்தா, உயிர்மை போன்ற தீவிர பத்திரிகைகளை ஆதரிப்பதை மட்டும் தான் பண்ண முடியும். வேறு என்ன போக்கிடம் நமக்கு?

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...