முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மெய்ப்பாடும் மிளகாயும்




சென்னை பல்கலைக்கழக ஆங்கிலத்துறையும் பிரசிடென்ஸி கல்லூரியில் தமிழ்த்துறையும் இணைந்து கவிதையில் பற்றி நேற்று ஒரு கருத்தரங்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில் தமிழ்ப் பேராசிரியர் ஸ்ரீனிவாசன் தொல்காப்பிய மெய்ப்பாடு கோட்பாட்டை பச்சை மிளகாய் உதாரணம் கொண்டு மிக எளிதாய் விளக்கினார்.

 மெய்ப்பாடு வாசிப்பு எனும் செயல் எப்படி நடக்கிறது என்பதை படிப்படியாய் விளக்கும் ஒரு கோட்பாடு. மெய்ப்பாட்டை புரிந்து கொள்ளும் பார்வை எப்படி சமகாலத்தில் எப்படி மாறி வந்துள்ளது என்பதை பேராசிரியர் அழகரசன் என்னிடம் பின்னர் தனிப்பட்ட முறையில் விளக்கினார். சமகாலத்தில் பிரபலமாய் உள்ள reader response விமர்சன கோட்பாட்டோடு தொல்காப்பிய சிந்தனை எவ்வளவு நெருக்கமாய் உள்ளது என்பது வியப்பான விசயம். இதையெல்லாம் பிறகு பேசுவோம். முதலில் பச்சை மிளகாய்.
ஸ்ரீனிவாசன் ஒரு புத்தகத்தை பச்சை மிளகாயோடு ஒப்பிடுகிறார். பச்சை மிளகாயின் வடிவம் இருக்கிறது அல்லவா அது தான் ஒரு புத்தகம். அதன் உள்ளே உறைந்துள்ள காரம் தான் புத்தகத்தின் உணர்ச்சி அல்லது கருத்து. மிளகாய் கடித்ததும் காரம் உறைக்கிறது அல்லவா இது தான் புத்தகம் வாசித்த்தும் நமக்குத் தோன்றும் மனநிலை. இனி ஒரு நிலை உள்ளது. இது தான் விசயத்தை சிக்கலாக்குகிறது. பச்சை மிளகாயை கடித்த்தும் நீங்கள் ஒரு முகபாவனை வெளிப்படுத்துகிறீர்களே அது போல் புத்தகம் வாசித்த்தும் நீங்கள் மனதினுள் அதை புதைக்காமல் வெளிப்படுத்துகிறீர்கள் என்கிறார் ஸ்ரீனிவாசன். இது புத்தகம் பற்றின உங்கள் மனநிலையோ எதிர்வினையோ ஆக இருக்கலாம். இந்த மனநிலையை நீங்கள் வெளியே சொல்லாமலோ எழுதாமலோ இருந்தால் கூட இது வெளிப்பாடு தான் என்கிறார். குழப்பமாக இருக்கிறதா? இது குழப்பமான ஒன்று தான்.

இன்றைய விமர்சன போக்கு வாசகனையும் படைப்பாளியாகத் தான் பார்க்கிறது. கற்பனை மற்றும் தன் அனுபவம் அல்லது அறிவு மூலம் அவன் ஒரு படைப்பை வாசிக்கையில் விரித்துக் கொண்டே போகிறான். பல சமயங்களில் எழுத்தாளன் உத்தேசிக்காத்து எல்லாம் அவனுக்கு தோன்றுகிறது. இப்போது அவன் எழுத்தாளனுக்கு நிகர் ஆகிறான். அவன் மனதில் தோன்றுகிறது புத்தகத்தில் எழுதப்பட்ட படைப்புக்கு நிகர் ஆகிறது. வாசகனின் படைப்பாக்கம் ஒரு அரூப நிலையில் நடக்கிறது என்பது தான் வித்தியாசம். பச்சை மிளகாய் கடித்து முகம் கோணும் போது வெளியே தெரிகிறது. ஒரு கவிதையை வாசிக்கையில் அது போல் தெரிவதில்லை. ஆனாலும் அதுவும் ஒரு வெளிப்பாடு தான் என்கிறது தொல்காப்பியம்; அல்லது ஸ்ரீனிவாசன் அவ்வாறு மெய்ப்பாட்டை அவதானிக்கிறார்.

இன்றுள்ள ஒரு கோட்பாட்டுக்கான விதை ரெண்டாயிரம் முன்பே விதைக்கப்பட்டுள்ளது என்பது மிக மிக வியப்பானது. நமக்கு எப்படியான ஒரு தொடர்ச்சி இருக்கிறது பாருங்கள். ஒரு விசையை துவக்கவோ அழிக்கவே முடியாது என்ற நியூட்டானிய கருத்தாக்கத்தை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே அரிஸ்டாட்டில் பேசி இருக்கிறார். நாம் பேசும் ஒவ்வொரு சொல்லுக்கு பின்னாலும் முன்னோடிகளின் காலடிச் சுவடுகள் நீள்கின்றன. நாம் தனியாகவே இல்லை!

கடைசியாக: இப்படியான செறிவான கூட்டங்கள் நம் இலக்கியப் பரப்பில் நடப்பதில்லை என்பது மிக வருத்தத்திற்குரிய விசயம். இங்கு நடப்பதெல்லாம் புத்தக சந்தைப்படுத்தல் கூட்டங்கள் தாம். கருத்தாக்கம் சார்ந்த, புதிய விசயங்களை விளக்கும் விவாதங்கள் நவீன இலக்கிய பரப்பில் முன்பு போல் நடைபெற வேண்டும். சென்னையில் நடைபெறும் தற்போதைய கூட்டங்கள் விளம்பரங்கள் மட்டுமே இடைவெளியின்றி வரும் ஒரு டிவி சேனல் போல் உள்ளன. இந்நிலைமை மாறும் என எதிர்பார்ப்போம்

கருத்துகள்

srinivasan இவ்வாறு கூறியுள்ளார்…
மெய்ப்பாடு பற்றிய உங்கள் கருத்துகள் அற்புதம். நாம் விவாதித்ததிலிருந்து அடுத்த கட்டத்திற்கு மெய்ப்பாட்டைக் கொண்டுசெல்வதாக உங்கள் பதிவுகள் உள்ளன. படித்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். நேற்று நாம் விளக்கியது ஒரு பகுதிதான். இதைத் தொடர்ந்து இன்னும் பல விதங்களில் புரிந்து கொள்ளவேண்டியுள்ளது. நீங்கள் பெற்றதைக் குறித்துத் தொடர்ந்து எழுதவும். மிளகாயுடன் புத்தகத்தை இணைத்திருப்பது புதுமையாகவும் பொருத்தமாகவும் உள்ளது. நம்முடைய மரபுச் செல்வத்தை இப்படிப் புதிய பார்வையிலும் நோக்கிலும் வெளிப்படுத்த வேண்டும். தொடர்ந்து உங்களிடம் அதை எதிர்பார்க்கிறேன்
இரா. சீனிவாசன்
ஆர். அபிலாஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நலத்திட்டங்களின் அடிப்படையான பிழை

  மகளிர் உதவித் (உரிமைத்) தொகைத் திட்டத்தைக் கைவிடுவதைக் குறித்து தவெக அரசு பரிசீலிக்க வேண்டும். அதற்காகச் செலவாகும் 15,000 கோடி ரூபாயை படித்து வேலை கிடைக்காமல் இருப்போரில் வருடாந்திர குடும்ப வருமானம் ஒரு அளவுக்கு மேல் குறைவாக இருப்போருக்கு அளிக்க வேண்டும். அதேபோல முறைசாரா தொழிலாளர்களுக்கு நொடிந்த தொழில்களில் ஈடுபட்டிருப்போருக்கும் கொடுப்பதை அரசு பரிலீக்க வேண்டும். அதாவது உதவி / உரிமைத் தொகையை பாலினம் சார்ந்ததாக அல்லாமல் தொழில் சார்ந்ததாகப் பார்க்க வேண்டும். மேற்சொன்ன பெண்களும் அப்போது இத்திட்டத்திற்குள் வந்துவிடுவார்கள். சொந்தமாக வீடும் சொத்தும் கொண்ட பெண்கள் இந்த தொகையைப் பெறுவதைத் தவிர்க்க இயலும். இந்த மாற்றத்திற்கான தேவைகளாக நான் கருதுவன: 1) வர்க்கரீதியாக இது திட்டமிடப்படாததால் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. 2) இதை அரசு மக்களுக்கு கொடுக்கும் லஞ்சமாக சிலர் காண்கிறார்கள். அதாவது பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அவர்களைத் தம் வசம் இழுப்பதற்காக அரசுகள் இத்திட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாக அவர்கள் நினைக்கிறார்கள். இதனால் மக்கள் நலத் திட்டத்துக்கே பெயர் கெடுகிறது. 3) தொழில்...

மக்களாட்சியின் தோல்வியும் மதிப்பிடுகளின் வீழ்ச்சியும் எப்படி முதலீட்டியத்தால் விளைந்தன?

ஏலியன்களே நம் நாட்டுக்கு வந்து கட்சி தொடங்கி ஆட்சியமைத்தாலும் ரௌடிகள், நில முகவர்கள், திடீர் பணக்காரர்கள், மோசடிக்காரர்கள் எம்.எல்.ஏ, அமைச்சர்கள் ஆவதையும், பெரும்பணக்காரர்கள் ஆட்சியைக் கையில் வைத்து தம் விருப்பப்படி உருட்டுவதையும் தவிர்க்க முடியாது என்று நினைக்கிறேன். நம் அதிகாரக் கட்டமைப்பு அப்படி. ஒரு செய்தி பார்த்தேன். எளியவர்களுக்கு வாய்ப்பளிப்போம் என்று கூறிய தவெகவின் எம்.எல்.ஏக்களில் 80% மேல் கோடீஸ்வரர்கள். குற்றவாளிகள், போலி சான்றிதழ் பேர்வழிகள், புரோக்கர்களும் உண்டு. கட்சியே ஒரு பக்கம் பாஜக கொடுத்த நிதியையும் இன்னொரு பக்கம் லாட்டரி குடும்பத்தின் நிதியையும் வைத்தே இத்தனை நாட்கள் நடந்தது. இனிமேல் டெண்டர் முறைகேடு, பல தளங்களில் ஊழல் என்று கொள்ளையடித்து 'தன்னிறைவு' ஆக முயல்வார்கள். அமைச்சர்கள் பல ஆயிரம் கோடிகள் சம்பாதித்து பெரிய நிறுவனங்களை ஆரம்பிப்பார்கள், வெளிநாடுகளில் முதலீடு செய்வார்கள், கறுப்புப் பணத்தைப் பதுக்குவார்கள். ஏன் எந்த ஆட்சி வந்தாலும் இந்த டெம்பிளேட் மாறுவதில்லை என்றே நாம் கேட்க வேண்டும்? யார் நல்லவர், யார் கொஞ்சம் குறைவாகக் கெட்டவர் என்பது அல்ல. நமது இப்போத...