Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

மாணவர்களும் புத்தக வாசிப்பும்: எங்கே ஆரம்பிக்கிறது பிரச்சனை?






கிருஷ்ண பிரபு புத்தக்க் கண்காட்சி பற்றி ஒரு முக்கிமான ஆய்வை செய்திருக்கிறார். அவர் எடுத்துக் கொண்டுள்ள சாம்பிள் சிறியது என்றால் முடிவு உண்மை. கல்லூரி மாணவர்களிடையே புத்தகக் கண்காட்சி பற்றி போதுமான விளம்பரங்கள் செய்யப்படவில்லை என்கிறார். அடுத்தமுறை பப்பாசி இதை கணக்கில் எடுக்கும் என நம்புவோம்.
எனக்கு இன்னொரு விசயமும் கவனிக்க வேண்டிதாய் படுகிறது. மாணவர்களின் அன்றாட நாள் எப்படி கழிகிறது என்பதையும் கூறுகிறார் கிருஷ்ண பிரபு. படிப்பு, கல்லூரி வகுப்புகள், அரட்டை, இசை, வீடு, சாப்பாடு, டி.வி, தூக்கம். இதுவும் உண்மை. ஆனால் இது இன்றோ நேற்றோ அல்ல பள்ளிப் பருவத்தில் இருந்தே இப்படித் தான் பழக்கப்பட்டிருக்கிறார்கள். நாம் அவர்கள் கண்ணோட்டத்தில் இருந்து பார்ப்போம்.

நாங்க எதுக்கு புத்தக கண்காட்சி வரணும்?
புத்தகம் ஏன் வாங்கணும்?
இது மாணவர்கள் கேள்விகள். நியாயமான கேள்விகள். சிறுவயதில் இருந்தே மத்திய வர்க்க பெற்றோர்கள் தம் பிள்ளைகள் படிப்புக்கும் வேலைக்கும் உதவும் புத்தகங்கள் தவிர பிறவற்றை படிக்க்க் கூடாது என்பதை கூறி வளர்க்கிறார்கள். இந்த கண்காட்சியின் போது உலக வரைபடம், ஆங்கில இலக்கணம் போன்றவை தவிர கதைப் புத்தகங்களை குழந்தைகளுக்கு வாங்கித் தர மறுக்கிற பெற்றோர்களைக் கண்டேன். இந்த பெற்றோர்களும் இப்படி வளர்ந்தவர்கள் தாம். வேலை குறித்த, எதிர்கால ஸ்திரத்தன்மை குறித்த அச்சம் இவர்களுக்கு சிறுவயதில் இருந்தே இருந்திருக்கும். தம் குழந்தைகளுக்கும் அந்த அச்சத்தை தான் ஊட்டுகிறார்கள்.
குழந்தைகளையும் பணம், வீடு, டி.வி என மட்டும் யோசித்து வாழ தூண்டுகிறார்கள். பொதுவாக பணம் குறித்த பதற்றம் அகன்றால் தான் இலக்கியம், தத்துவம், பண்பாட்டு நூல்கள் படிக்க தோன்றும். பொருளாதாரம் வாசிப்பு பழக்கத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணி.
வாழ அடிப்படையாக பணம் தேவை. அந்த பணம் இருந்தால் அடுத்து எப்படி வாழ என சொல்லித் தர புத்தகங்கள் தேவை. வாசிக்காதவர்களுக்கு வாழத் தெரியாதா? தெரியும், ஆழமாக வாழ்க்கையை புரியவும், அலசி ஆராயவும் தெரியாது. ஒரு விசயத்தை தர்க்கரீதியாய் விளக்கமாய் சொல்ல மொழி இருக்காது. இன்று டி,வி விவாதங்களில் பலரிடமும் இந்த மொழி ஊனத்தை பார்க்கிறோம். பேசுவது நம் பண்பாட்டின் பகுதி. பண்பாடு என்பது வெறுமனே பட்டிமன்றம் பார்ப்பது, சடங்குகள் செய்வது என நினைப்ப்பர்களுக்கு விவாதிக்கவும் பேசி தம்மை நிறுவவும் தெரியாமல் போகிறது – வரலாறும் தர்க்கமும் தான் வாதம் எனும் துப்பாக்கியின் தோட்டாக்கள். இவை இரண்டும் நம் மாணவர்களுக்கு பரிச்சயம் இல்லை. வெற்றுத்துப்பாக்கியை வைத்து ஒன்றும் செய்ய முடியாது.
இவர்கள் ஒரு அர்த்த்த்தில் ஊமைகள் தாம் – “அது வந்து இது இருக்கில்ல, அது அதோட அது அத்த் தான் சொல்றேன்” என்று திக்கிக் கொண்டே இருப்பார்கள். தாம் சொல்லி வருகிற விசயத்தை கூற ஏதாவது ஒரு சினிமா பாட்டை மேற்கோள் காட்டுபவர்களும் இந்த மொழி ஊனம் கொண்டவர்கள் தாம்.
ஆனால் எல்லாவற்றுக்கும் அடிப்படை நிம்மதியான கவலையற்ற வாழ்க்கை தான். அது உள்ள இடங்களில் வாசிப்பு பழக்கம் செழிக்கும். இது ஒரு வர்க்கரீதியான பிரச்சனை. மேல்மத்திய, பணக்கர வர்க்க குழந்தைகளிடம் இன்னும் பரவலான வாசிப்பு உள்ளது. குறைந்த்து சேத்தன் பகத், பவுலொ கொயில்ஹொவையாவது படிக்கிறார்கள். எழுத்தாளர்களின் பெயர்களை தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஏனென்றால் சிறுவயதில் இருந்தே அவர்களுக்கு வாசிப்பது நல்லது தான் என சொல்லப் படுகிறது. கதை வாசித்தால் வேலை கிடைக்காமல் சிரமப்படுவோம் என அவர்கள் நினைப்பதில்லை. இதனால் அவர்கள் மேலான வாசகர்கள் என நான் கூறவில்லை. ஒரு தோதான சூழல் அவர்களுக்கு இருக்கிறது.
நம் மாணவர்கள் கூட்டங்கூட்டமாக கண்காட்சிக்கு வருகிறார்கள் எனக் கொள்வோம். அவர்களில் மிகச்சில பேருக்கு தான் வாசிப்பு பழக்கம் இருக்கும். மிச்சபேர் வேடிக்கை பார்த்தபடி ஸ்வீட்கார்ன் வாங்கி சாப்பிட்டபடி கடந்து விடுவார்கள். பல பதிப்பாளர்களின் கவலையே ஏன் கடைக்குள் கூட எட்டிப் பார்க்காமல் கடந்து போகிறார்கள் என்பது. நான் இந்த இளைஞர்களை குற்றம் சொல்ல மாட்டேன். புத்தகத்தை வாசிப்பதை விடுங்கள், அதை அணுகி கண்டடைய அடிப்படையில் ஒரு பரிச்சயம் வேண்டும். நமக்குத் தேவையான பிடித்தமான நூல்களை அறிய ஒரு பழக்கம் வேண்டும்.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சுற்றுலா வருகிற குடும்பங்களை கண்டிருக்கிறேன். அவர்கள் ஒவ்வொரு மாடியாக நுழைந்து அலமாரிகளை எட்டிப் பார்த்து ஒரு ஒவ்வாமைப் பார்வையுடன் குழப்பத்துடன் கடந்து போவார்கள். ஐந்தாவது மாடியில் இருந்து கண்ணாடி ஜன்னல் வழியே வெளியே பார்த்து வியப்பார்கள். அவ்வளவு தான். ஒரு நூலகத்தில் புதிதாக நுழைவது அறியாதவரின் வீட்டுக்குள் புகுந்து வரவேற்பறையில் உட்காருவது போல் அந்நியமாகத் தான் இருக்கும். சிறுவயதில் இருந்தே நூலகமும், புத்தகங்களும், வாசிப்பதும் அவர்களின் அன்றாட வாழ்வின் பகுதியாக இருந்ததில்லை. இது யார் தவறு?
நம் அரசாங்கம், கல்வித்துறை, ஊடகங்கள் எல்லோரும் பொறுப்பெடுக்க வேண்டும். எனக்குத் தெரிந்து கல்வித்துறையில் ஒரு சிறுமாற்றத்தை பரிந்துரைக்கிறேன். பள்ளியில் வாரம் ஒருமுறை உள்ள நூலக வகுப்பை தின வகுப்பாக மாற்றலாம். நூலகத்தை ஒட்டி கதை சொல்லுதல், நடித்துக் காட்டுவதல் ஆகிய பண்பாட்டு நிகழ்ச்சிகளை வாரம் ஒருமுறை நடத்தும்படி ஒரு விதிமுறை கொண்டு வந்து, ஒரு வாசிப்பு நெறியாளரை அமர்த்தலாம். அவர் வேலை வாசிக்க தோதான சூழலை உருவாக்குவது, வாசித்த கதைகளை மாணவர்களை சொல்ல உதவுவது, கதையை நாடகமாக, பாடலாக மாற்றி நிகழ்த்த வழிகாட்டுவது ஆகியன. மெல்ல மெல்ல இது போன்ற கதை நிகழ்த்தலுக்கு மதிப்பெண்கள் வழங்க ஆரம்பிக்கலாம். கல்லூரியில் உள்ளது போல் 50% எழுத்து தேர்வு, 50% நடைமுறைத் தேர்வு என மாற்றலாம். நடைமுறைத் தேர்வில் மதிப்பெண் பெற பேசவும், நடிக்கவும், பாடவும் செய்ய வேண்டும் எனலாம். இந்த மாற்றங்களை சிறுக சிறுக கொண்டு வரலாம். ஏன் என்றால் இதை எல்லாம் முதலில் பெற்றோர்கள் தாம் கடுமையாக எதிர்ப்பார்கள்.
நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் போது ஒரு அழகான ஆசிரியை இருந்தார். அவர் எங்கள் வகுப்புக்கு என்று ஒரு நூலகம் துவங்கினார். எங்களிடம் உள்ள காமிக்ஸ் நூல்களை கொண்டு வரச் சொல்லி அங்கே பரணில் வைக்க செய்தார். அவற்றை மாணவர்கள் எடுத்து வாசித்து விட்டு திரும்ப வைக்க வேண்டும். பல அழகான காமிக்ஸ் நூல்களை அங்கு படித்திருக்கிறேன். என் பள்ளி வாழ்க்கையை நினைத்தாலே எனக்கு தோன்றும் உள்ள மிக இனிமையான அனுபவம் அது ஒன்று தான். பின்னர் நான் ஒரு அரசுப் பள்ளியில் சேர்ந்தேன். அங்கு உள்ள முக்கிய குற்றம் என்ன தெரியுமா? கதை புத்தகம் வகுப்புக்கு எடுத்து செல்வது. மாணவர்கள் ஆர்வத்தில் ஜட்டிக்குள் எல்லாம் மறைத்து காமிக்ஸ் கொண்டு வந்து பிறருக்கு கொடுப்பார்கள். கண்டுபிடிக்க்ப்பட்டால் பிரம்படி தான். கதை வாசித்தால் பிரம்படி கொடுக்கிற பள்ளிச் சூழலில் வளர்கிற குழந்தைகள் வளர்ந்ததும் புத்தக்க் கண்காட்சி வந்து புத்தகங்களை அள்ளிப் போய் வீட்டில் வைத்து வாசிக்க வேண்டும் என எப்படி எதிர்பார்க்க முடியும்?

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...