முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குஷ்வந்த் சிங்: ஒரு நூற்றாண்டின் மறைவு


-   


குஷ்வந்த சிங் தமிழக பத்திரிகையாளர்களைப் போல் அல்லாமல் ஒரு தலைவரை பெயர் போட்டு அழைக்கும் அதிகார பீடிகையும் தன்னம்பிக்கையும் கொண்ட அரசியல், சமூக விசயங்களை துணிச்சலாய் விமர்சித்து எழுதிய வடக்கத்திய பத்திரிகையாளர். எழுத்தாள அந்தஸ்தும், தில்லியின் அதிகார வட்டத்தில் தாக்கமும், பரவலான வாசக பரப்பும் கொண்டவர். ஒரு கலைமாமணி வாங்க நாம் இங்கு தலைவர்களின் காலடியில் தவம் இருக்க அவர் தனக்கு 74இல் வழங்கப்பட்ட பத்மபூஷன் விருதை சீக்கிய படுகொலைகளை கண்டிக்கும் நோக்கில் 84இல் திருப்பி அளித்தவர். ஆனாலும் அரசாங்கம் 2007இல் பத்ம விபூஷனை அவருக்கு அளித்தது.

குஷ்வந்த் சிங் 85 புத்தகங்கள் எழுதினார். பெரும்பாலானவை கட்டுரை நூல்கள். அவரது சீக்கிய வரலாற்று நூற்கள் முக்கியமானவை. அவரது உரைநடை கொஞ்சம் பழையது - பிரித்தானிய முறுக்கும் அறிவார்ந்த நகைச்சுவையும் நேரடி பகடியும் கொண்டது. புனைவில் அவரது நடை துல்லியமானது, பாசாங்கற்ற விவரணையின் காரத்தன்மை கொண்டது. Train to Pakistan (1956) மிக பிரபலமான நாவல். குஷ்வந்த் பிரிவினைக்கு முன் பாகிஸ்தானிய பகுதியாக இப்போது உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தவர். இஸ்லாமியர் மத்தியில் வளர்ந்தவர். இந்நாவலில் பிரிவினையின் போது எவ்வாறு இந்துத்துவா சக்திகள் ஒரு அமைதியான கிராமத்தில் முகாமிட்டு அங்கு மத பிரிவினையை தூண்டிவிட்டு கலவரத்தை ஏற்படுத்துகிறார்கள் என கூறுகிறார். அவரைப் பொறுத்தமட்டில் இந்து-முஸ்லீம் வெறுப்பு என்பது செயற்கையாய் திட்டமிட்டு இந்துத்துவா சக்திகளால் உருவாக்கப்பட்டது. இஸ்லாமியர் கிராமத்தில் இருந்து கூட்டங்கூட்டமாய் விரட்டப்படுகின்றனர். இரவில் பாகிஸ்தான் செல்லும் ஒரே ஒரு ரயில் வரும். அதன் மீது கணிசமான இஸ்லாமியர் ஏறித் தப்பிக்க போகிறார்கள். மதவெறியர்கள் ரயிலின் பாதையில் வானில் ஒரு கயிறைக் கட்டி வைக்கிறார்கள். ரயில் போகும் வேகத்தில் மேலே உட்கார்ந்திருப்பவர்கள் அதில் பட்டு வெட்டப்பட்டும் கீழே விழுந்தும் இறக்க வேண்டும் என்பது திட்டம். இந்த பலியாகப் போகும் கூட்டத்தில் ஒரு இஸ்லாமிய பெண். அவள் வயிற்றில் ஒரு இந்துக்காதலனின் கரு வளர்கிறது. அவளை அவன் எப்படி காப்பாற்ற போகிறான் என்பது கிளைமேக்ஸ். “தில்லி” (1990) மற்றொரு முக்கிய நாவல்.
The Company of Women (1999) போர்னோவின் விளிம்பில் தடுமாறி நடக்கும் நாவல். இந்நாவலை அவர் 83வது வயதில் எழுதத் துவங்கினார். இது பற்றி ஓரிடத்தில்ஒருவருக்கு வயதாகும் போது செக்ஸ் ஆசை இடுப்புக்கு கீழிருந்து தலைக்கு பயணிக்கிறதுஎன்றார். மோகன் குமார் எனும் ஒரு பணக்கார ஆண் மனைவியை விவாகரத்து செய்து விட்டு தன்னுடன் சில காலம் செக்ஸ் மற்றும் பணத்துக்காக தங்க விரும்பும் பெண்களுக்காய் பத்திரிகை விளம்பரம் தருகிறார். அப்புறம் நடப்பது தான் கதை. குஷ்வந்த் சிக்கலான ஆழமான மனிதர் அல்ல. அவரது நாவல்களும் இயல்பாக கொஞ்சம் தட்டையானவை தான். ரஷ்டி போல் இலக்கிய மினுமினுப்புகளும் இல்லாத சுவாரஸ்ய எழுத்து அவரது. ஆனாலும் அங்கங்கே வரும் அவதானிப்புகள் நம்மைக் கவரும். உதாரணமாக சரோஜினி பரத்வாஜ் எனும் ஆங்கில ஆசிரியை மோகனின் விளம்பரம் பார்த்து அவரை நாடி வருகிறார். முதல் நாள் அவர் காரில் ஷாப்பிங் போகிறார். எதிரே ஒரு காரில் ஒரு குறைந்த ஆடை அணிந்த பெண்ணைப் பார்த்துச்சீ தேவடியாஎன நினைத்துக் கொள்கிறார். அப்போது சட்டென்று அவருக்கு தோன்றுகிறது தான் தேவடியாவா சமூக அந்தஸ்து கொண்ட ஆசிரியையா எனஅவர் இரண்டும் இல்லை. அவர் இரண்டுக்கும் நடுவே இருக்கிறார்.

குஷ்வந்த் சிங் கடுமையான பா.. எதிர்ப்பாளர். பா..கவினர் அவரைஇந்தியாவில் வாழும் கடைசி பாகிஸ்தானிஎன வர்ணித்தனர். அவர் மதம் சார்ந்த அரசியல் நாட்டை சீரழிக்கும் என நம்பினார். ஆனாலும் அவரது 99வது பிறந்த நாளில் அத்வானி அவரை சந்தித்து வாழ்த்தினார். குஷ்வந்த் சிங் அனைவராலும் விரும்பப்படுகிற வெறுக்கப்படுகிற மனிதராக ஒரே சமயத்தில் இருந்திருக்கிறார்.
குஷ்வந்த் சிங் 1915இல் ஒரு பணக்கார வணிகக் குடும்பத்தில் பிறந்தார். பஞ்சாப் மற்றும் தமிழகத்தில் கவர்னராக இருந்த உஜ்ஜல் சிங் இவரது மாமா. தில்லியிலும் லண்டனிலுமாய் படிப்பை முடித்தவர் வக்கிலாக பணியாற்ற விரும்பினார். ஆனால் அத்துறை ஏமாற்றமளிக்க ..எஸ் தேர்வாக முயன்றி அதிலும் தோற்றார். வேறு வழியின்றி சில காலம் அரசு ஊழியராக பணியாற்றினார். பிறகு ஊடகத்துறையில் நுழைந்தார். The Illustrated Weekly of India, The National Herald, Hindustan Times ஆகியவற்றில் ஆசிரியராக செயல்பட்டார். எண்ணற்ற பத்திகள் எழுதினார். உருது கவிதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கினார். 1980இல் இருந்து 86வரை ராஜ்யசபா உறுப்பினராக பணியாற்றினார். பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் குஷ்வந்த் எழுதிக் கொண்டே இருந்தார். எண்ணற்ற பத்திகள் எழுதினார். Malice Towards One and All இவரது மிக பிரபலமான பத்தி.
ஆங்கில ஊடகத்தில் தவிர்க்க முடியாத குரலாக மாறினார். 99 வயதில் இறுதி மூச்சு விடும் வரை அவர் எழுத்தில் ஓய்வு பெறவே இல்லை. அவரது ஆயுள் என்பது இந்தியாவின் ஆன்மாவை சிதைத்த பிரிவினை வன்முறை, நேருவின் சோசலிஸ கொள்கைகள், இந்திரா காந்தியின் எமர்ஜென்ஸி, சீக்கிய படுகொலைகள், பாபர் மசூதியில் இந்துத்துவா மதவெறி, உலகமயமாதல், பொருளாதார எழுச்சி, லட்சியங்களின் வீழ்ச்சி என இந்தியாவின் வரலாற்றின் ஒரு சுழற்சி பருவமும் தான். தான் பார்த்த மாற்றங்கள் பற்றி அவர் பலவிதங்களில் எதிர்வினையாற்றினார். எமர்ஜென்ஸியை ஆதரித்தது, மன்மோகன் சிங்கை தொடர்ந்து பாராட்டியது கேலிக்கும் சர்ச்சைக்கும் ஆளானது. ஆனால் அவர் அனைத்தையும் பார்த்தார், எழுதினார். இந்தியாவின் போக்கோடு முகிழ்த்து மலர்ந்து வாடினார். ஒரு முழுமையான வாழ்வு!
நன்றி: ஏப்ரல் 2014 உயிர்மை

கருத்துகள்

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி .அழகிய பதிவு .

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நலத்திட்டங்களின் அடிப்படையான பிழை

  மகளிர் உதவித் (உரிமைத்) தொகைத் திட்டத்தைக் கைவிடுவதைக் குறித்து தவெக அரசு பரிசீலிக்க வேண்டும். அதற்காகச் செலவாகும் 15,000 கோடி ரூபாயை படித்து வேலை கிடைக்காமல் இருப்போரில் வருடாந்திர குடும்ப வருமானம் ஒரு அளவுக்கு மேல் குறைவாக இருப்போருக்கு அளிக்க வேண்டும். அதேபோல முறைசாரா தொழிலாளர்களுக்கு நொடிந்த தொழில்களில் ஈடுபட்டிருப்போருக்கும் கொடுப்பதை அரசு பரிலீக்க வேண்டும். அதாவது உதவி / உரிமைத் தொகையை பாலினம் சார்ந்ததாக அல்லாமல் தொழில் சார்ந்ததாகப் பார்க்க வேண்டும். மேற்சொன்ன பெண்களும் அப்போது இத்திட்டத்திற்குள் வந்துவிடுவார்கள். சொந்தமாக வீடும் சொத்தும் கொண்ட பெண்கள் இந்த தொகையைப் பெறுவதைத் தவிர்க்க இயலும். இந்த மாற்றத்திற்கான தேவைகளாக நான் கருதுவன: 1) வர்க்கரீதியாக இது திட்டமிடப்படாததால் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. 2) இதை அரசு மக்களுக்கு கொடுக்கும் லஞ்சமாக சிலர் காண்கிறார்கள். அதாவது பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அவர்களைத் தம் வசம் இழுப்பதற்காக அரசுகள் இத்திட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாக அவர்கள் நினைக்கிறார்கள். இதனால் மக்கள் நலத் திட்டத்துக்கே பெயர் கெடுகிறது. 3) தொழில்...

மக்களாட்சியின் தோல்வியும் மதிப்பிடுகளின் வீழ்ச்சியும் எப்படி முதலீட்டியத்தால் விளைந்தன?

ஏலியன்களே நம் நாட்டுக்கு வந்து கட்சி தொடங்கி ஆட்சியமைத்தாலும் ரௌடிகள், நில முகவர்கள், திடீர் பணக்காரர்கள், மோசடிக்காரர்கள் எம்.எல்.ஏ, அமைச்சர்கள் ஆவதையும், பெரும்பணக்காரர்கள் ஆட்சியைக் கையில் வைத்து தம் விருப்பப்படி உருட்டுவதையும் தவிர்க்க முடியாது என்று நினைக்கிறேன். நம் அதிகாரக் கட்டமைப்பு அப்படி. ஒரு செய்தி பார்த்தேன். எளியவர்களுக்கு வாய்ப்பளிப்போம் என்று கூறிய தவெகவின் எம்.எல்.ஏக்களில் 80% மேல் கோடீஸ்வரர்கள். குற்றவாளிகள், போலி சான்றிதழ் பேர்வழிகள், புரோக்கர்களும் உண்டு. கட்சியே ஒரு பக்கம் பாஜக கொடுத்த நிதியையும் இன்னொரு பக்கம் லாட்டரி குடும்பத்தின் நிதியையும் வைத்தே இத்தனை நாட்கள் நடந்தது. இனிமேல் டெண்டர் முறைகேடு, பல தளங்களில் ஊழல் என்று கொள்ளையடித்து 'தன்னிறைவு' ஆக முயல்வார்கள். அமைச்சர்கள் பல ஆயிரம் கோடிகள் சம்பாதித்து பெரிய நிறுவனங்களை ஆரம்பிப்பார்கள், வெளிநாடுகளில் முதலீடு செய்வார்கள், கறுப்புப் பணத்தைப் பதுக்குவார்கள். ஏன் எந்த ஆட்சி வந்தாலும் இந்த டெம்பிளேட் மாறுவதில்லை என்றே நாம் கேட்க வேண்டும்? யார் நல்லவர், யார் கொஞ்சம் குறைவாகக் கெட்டவர் என்பது அல்ல. நமது இப்போத...