முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குழப்பமான தேர்தல் முடிவுகள்



மோடி எதிர்ப்பு ஓட்டு?


நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு கூட அதிர்ச்சி தான் என சில அதிமுக நண்பர்களிடம் பேசுகையில் அறிந்தேன். திமுகவினரிடம் பேசும் போது இவ்வளவு பாரித்த தோல்வியை அவர்களும் எதிர்பார்க்கவில்லை என தெரிந்த்து. ஆனால் ஒருவிதத்தில் மத்தியில் மோடிக்கு தனி பெரும்பான்மை கிடைத்த நிலையில் தமிழக முடிவுகள் அதிமுகவுக்கு சர்க்கரை நோய் வந்தவர் கையில் பாயச கிண்ணம் கொடுத்தது போல் ஆகி விட்டது. 15 சீட்டுகளுக்கு மேல் வாங்கி இருந்து ஒரு கூட்டணி கட்சி அமைகிற நிலை திமுகவுக்கு உதவியிருக்கும். ஆனால் இப்போது எல்லா வியூகங்களும் கலைந்து விட்டன. இரு கழக கட்சிகளுக்கு இத்தேர்தல் முடிவுகள் குறைவாகவும் கூடுதலாகவும் ஏமாற்றம் அளித்திருக்கும். மத்தியில் மந்திரி பதவி வாங்க 38 சீட்கள் பெற்றால் கூட போதாது. அதிர்ஷ்டம் வேண்டும். அதிமுகவுக்கு இதுவரை அது இல்லை.


மோடிக்கு எதிரான இஸ்லாமிய ஓட்டுகள் திமுகவுக்கு கிடைக்கும் என கூறினார்கள். இசுலாமிய கட்சிகளும் திமுக கூட்டணியில் தாம் இருந்தன. மோடி ஆதரவு அலை போகட்டும், மோடி எதிர்ப்பு அலை கூட கிடையாதா என வேடிக்கையாக தோன்றுகிறது.

0? இதைத் தான் திமுக தலைமை மீண்டும் மீண்டும் யோசிக்கும். அந்தளவுக்கு என்ன தவறு செய்து விட்டார்கள், ஏன் மக்களிடம் அப்படி ஒரு கெட்ட பெயர் ஆகி விட்டதா என அவர்கள் யோசிக்க வேண்டும். எப்போதும் மாநிலத்தில் ஆளும் கட்சி தான் மக்களவை தேர்தலில் அதிக இடங்கள் பெறும் என்றாலும் இது போல் செருப்பால் முகத்திலடித்தது போல் தோல்வி இருக்காது. மாநில தேர்தலில் கூட இப்படி ஒரு பாகுபாடான முடிவை ஒரு கட்சி புரிந்து கொள்ளும். ஆனால் இது அப்படி அல்ல.
ஒன்று இதற்கு காரணம் மோடி அலை அல்ல. ஏனென்றால் தமிழகத்தில் மோடி செல்வாக்கு விலை போகவில்லை. ஜெயலலிதா ஆட்சி மீதான மக்களின் அபிமானமும் அல்ல. ஏனென்றால் மின் தட்டுப்பாடு, விலைவாசி ஆகியவற்றால் சிறுதொழில்களும் மக்களும் நொந்து போயிருக்கிறார்கள். ஒன்றும் பெரிய கெட்ட பெயர் இல்லை என்றால் மக்களிடையே இந்த ஆட்சிக்கு பெரும் வரவேற்பும் இல்லை. ஆக இத்தேர்தல் படுதோல்விக்கு திமுக தன்னையே தான் குற்றம் காண வேண்டும்.
காங்கிரசுடனான கூட்டணி ஊழல் தந்த கெட்ட பெயரா காரணம்? அது தான் எனில் திமுக தலைமை தன் களங்கத்தை துடைக்க எதுவும் குறிப்பாய் செய்யவில்லை, தொடர்ந்து குற்றங்களை மறுத்தது அல்லாமல். குடும்ப அரசியல் பிரிவினைகள் மீதான மக்களின் கசப்பா? தெரியவில்லை. அதிமுக வாக்காளர்களுக்கு கொடுத்த பணம் சின்ன அளவில் வேலை செய்திருக்கும் என்றாலும் இப்படி திமுகவை 0க்கு தள்ளும் அளவுக்கு அது போதாது. அமைப்பு ரீதியாய் திமுக மிக மிக வலுவான கட்சி என்கிறார்கள். அல்லது அது தவறா? பலவீனங்கள் உள்ளனவா?
இந்த தேர்தல் முடிவு மிக மிக குழப்பமானது. மக்களின் மனநிலையை எளிதில் ஊகிக்க முடியவில்லை. இது ஊழலுக்கு எதிரான ஓட்டா அல்லது காங்கிரசுக்கு எதிரான ஓட்டா? காங்கிரசுக்கு எதிரன மனநிலையை அதிமுக எப்படி அறுவடை செய்தது?
அடுத்த மாநில தேர்தலில் முடிவுகள் வேறுவிதமாய்ப் இருக்கும் என்பது என் ஊகம். அதனால் இரு கழக கட்சிகளும் இம்முடிவுகளை கொண்டு சீட்டுக்கட்டுகளை கலைத்து விட மாட்டார்கள். தமிழகத்தை பொறுத்த வரையில் எப்படியும் இது லீக் போட்டி தானே!

தேசிய களத்தில் ஆம் ஆத்மியினரின் சொதப்பலான முடிவுகளும் பலரின் கணிப்புகளை கேலிக்குரியதாக்கின. கேஜ்ரிவல் மோடிக்கு நிகரான ஒரு எதிர்தலைவராக முன்வைக்கப்பட்டு அவரை பெரிதும் ஊதி வளர்த்தனர். ஆனால் அதிருப்தியை மட்டுமே வைத்து ஒரு தேர்தலை வெல்வது போகட்டும் கணிசமான தாக்கத்தை கூட ஏற்படுத்த முடியாது. அவர் மக்கள் தமக்களித்த வாய்ப்பை பயன்படுத்த தில்லியை ஒழுங்காய் ஆண்டிருக்க வேண்டும். எந்த விதத்திலும் கட்சியை பலப்படுத்தாமல் தேசிய அளவில் அவர் தேர்தலை சந்தித்து தவறு. மக்களின் பல பிரச்சனைகளுக்கு பொறுப்பாய் தீர்வு தேடி பொறுமையாய் போராடாமல் அவர் காங்கிரஸ் அதிருப்தி அலையை அறுவடை செய்யும் அவசரத்தில் இருந்தார். திமுக தமிழகத்தில் முதன்முதலில் ஆட்சியை பிடித்ததற்கு பின்னால் ஐம்பது வருடங்களுக்கு மேலான ஜஸ்டிஸ் கட்சி, திராவிட கட்சியின் வேலையும் கொள்கை பரவலும் இருந்தது. இந்தியாவில் ஒட்டுமொத்தமாய் என்னென்ன நிகழ்கிறது, பல்வேறு மாநில மக்களின் பிரச்சனைகளுக்கு என்ன தீர்வுகள் உண்டு என யோசிக்க ஆம் ஆத்மியினர் முனையவில்லை. தமிழக மீனவர் பிரச்சனை போல் சிக்கலான கேள்விகள் எழும் போது கேஜ்ரிவால் தடுமாறினார். தேசியவாதத்தை ஒவ்வொன்றுக்கும் தீர்வாக வைத்தார். மாநிலங்கள் தோறும் வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதிலும் இதே சிக்கல் தான். சில வாக்காளர்களுக்கு எதிராய் வைர கடத்தல் போன்ற வழக்குகள் கூட இருந்தன. தமிழகத்தில் அவர்களின் தேசியவாத கொள்கைக்கு முரணான அரசியல் கொண்ட உதயகுமாரை வேட்பாளராக்கவும் அவர்கள் தயங்கவில்லை. கிடைத்தவரை பிடித்து சாக்கில் போடு என்பதாய் இருந்தது அவர்களின் நிலைப்பாடு. 

உண்மையில் இரு அலைகள் இருந்தன. ஒன்று மோடி அலை, இன்னொன்று கேஜ்ரிவால் அலை. அதில் ஒன்று பொய்த்து விட்டது. கேஜ்ரிவால் இந்த சந்தர்ப்பவாத அவசர அரசியலை நிறுத்தி விட்டு கட்சியை கட்டியெழுப்ப முனைய வேண்டும். அடுத்து மாநிலங்களின் பிரச்சனைகளுக்கு ஏற்ப போராட்டங்களை திட்டமிட்டு நடத்த வேண்டும். அதற்கான மாநில தலைவர்களை உருவாக்க வேண்டும். சும்மா வீதிநாடகம் போடுகிறவர்கள், மீடியாவில் விவாதம் புரிகிறதோடு அரசியலை நிறுத்திக் கொள்கிற மேற்தட்டினரை தலைமையில் இருத்தினால் தமிழத்தில் அக்கட்சி வளராது. இவர்கள் தம் வீட்டு அருகில் சாக்கடை ஓடினால் கூட வேட்டியை தூக்கி கொண்டு ஒதுங்கி போகிறவர்கள். அடுத்து மக்கள் இனி வாய்ப்பளித்தால் தர்ணா செய்து, பெண்களின் குடியிருப்புக்கு குண்டர்களோடு போய் தகராறு செய்து, பதவியை ராஜினாமா செய்யாமல் அவர் ஒழுங்காய் ஆட்சி செய்ய வேண்டும். தன் திறனை நிரூபிக்க வேண்டும். முதலிரவில் குழந்தை பிறக்காது என்பது அரசியலில் அவருக்கு முதல் பாடம்.

தமிழகத்தில் அதே போல் வேடிக்கை கதையாகி விட்டவர் விஜயகாந்த். மக்கள் அவர் செய்கிற கோணங்கிகளை பார்த்து கைதட்டி விட்டு ஓட்டை மட்டும் மாற்றி போட்டு விடுவார்கள் என தெரிகிறது. தமிழக மக்களுக்கு சினிமா மயக்கம் உண்டு தான். அதற்காக ஏமாளிகள் அல்ல!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.