Skip to main content

முகமத் காயிப்: முழுமையடாத ஒரு அசார்




கேயிப்பை முதலில் பார்த்த போது எனக்கு அசருதீன் தான் நினைவு வந்தார். என் நண்பர்களும் அவர் கால்பக்கம் சொடுக்கும் ஷாட்டை பார்த்து அசரே தான் என்றார்கள். அசரைப் பொன்று ஒடிசலான ”போய் டீ வாங்க வரவா” என்கிற மாதிரியான துறுதுறுவென்ற தோற்றம். ரெண்டாயிரத்தின் துவக்கத்தில் கங்குலியின் கீழ் கண்டறியப்பட்ட சேவாக், யுவ்ராஜ் போன்றோர்களுடன் காயிப்பும் முக்கியமான திறமையாகவே கணிக்கப்பட்டார். ஆனால் பின்னர் மத்திய வரிசை மட்டையாளர்களின் நெருக்கடியில் காணாமல் போனார்.
காயிப் பந்தை அடிக்கும் போது எனக்கு நொறுக்குத் தீனியை மெல்கிறாற் போன்ற மொறுக் எனும் உணர்வு தோன்றும். அப்படி ரொம்ப கூர்மையான மட்டையாளர். திராவிட் போல் நீண்ட நேரம் ஆடக் கூடியவர். அதேவேளை இன்னும் நளினமானவர்.

சில விசயங்களில் துரதிஷ்டவசமானவர். திராவிட் இந்திய அணிக்கு தோன்றிய காலகட்டத்தில் காயிப் இன்னும் பொருத்தமாக இருந்திருப்பார். ரெண்டாயிரத்தின் பிற்பகுதியில் ஒருநாள் மட்டையாட்டம் கணிசமான மாற்றங்களைக் கண்டது. இன்னும் அதிரடியாய் பரபரப்பாய் காயிப்பின் ஆளுமைக்கு தோதில்லாமல் ஆனது. நேட்வெஸ்ட் தொடர் இறுதி ஆட்டத்தில் அவரது 87 பிரபலமானது. ஆனால் அந்த ஆட்டத்தில் கூட அவர் நீண்ட நேரம் ஆட யுவ்ராஜின் அதிரடி ஆட்டம் தான் ஒரு ஆக்ஸிஜன் குழாய் போல் உதவியது.
பின்னர் காயிப்பை எண் 6 அல்லது 7 இல் அனுப்பினார்கள். அந்தளவுக்கு இந்திய மத்திய வரிசை மட்டையாட்டம் செழுமையாக இருந்தது. கேயிப்பின் முக்கிய குறை அவரால் சூழலுக்கு ஏற்றவாறு தகவமைக்க முடியவில்லை என்பது. 45வது ஓவரில் வந்தால் முதல் சில பந்துகளை தடுத்தாடுவார். பின்னர் ஒற்றை ஓட்டங்களை எடுப்பார். இது பார்க்க எரிச்சலாக இருக்கும். அவர் அந்த சூழலை விரும்பவில்லை என்பது தெளிவாய் தெரியும்.
இன்னொரு குறை அவருக்கு காட்பாதர் யாரும் இல்லை என்பது. ரோஹித் ஷர்மா உருப்படியாய் ஒரு சதம் அடிக்க அவருக்கு நூற்றுக்கு மேல் ஆட்டங்களை வாய்ப்பாக அளித்தார் தோனி. ஆனால் கேயிப் தான் இறுதியாக ஆடிய டெஸ்ட் ஆட்டங்களில் ஆஸி அணிக்கு எதிராக 90 மற்றும் மே.இ தீவுகளுக்கு சென்று 145உம் அடித்தார். ஆனாலும் அவர் அடுத்து வந்த ஆட்டங்களில் நீக்கப்பட்டார். ஒரு பேட்டியில் கேயிப்பிடம் இது ஏன் எனக் கேட்கிறார்கள். “எனக்கே தெரியல” என சோகமாய் சொல்கிறார்.
திராவிட் மற்றும் அப்போதைய தேர்வாளர்களிடம் தான் கேட்க வேண்டும். அவர்களுக்கு என்று சில விருப்புவெறுப்புகள் இருக்கும். தேர்வை தர்க்கரீதியாய் செய்ய மாட்டார்கள். காயிப்பின் இடத்தில் தினேஷ் கார்த்திக்கை கொண்டு வந்தார்கள். கார்த்திக் அநியாயத்துக்கு பதற்றமானவர். ஒன்றை யோசித்தபடி இன்னொன்றை பண்ணியபடி புதிதாய் இன்னொன்றை திட்டமிடுவார். அதனால் தான் அவரால் இன்றைக்கும் அணியில் நிலைக்க முடியவில்லை. ஆனால் கார்த்திக்குக்கு உள்ள குறைந்த பட்ச ஆதரவு காயிப்புக்கு இல்லாமல் போனது துரதிஷ்டவசமானது.
இன்னொரு பக்கம் காயிப்பும் பொறுப்பு தான். அவர் அணியில் இருந்து நீக்கப்பட்ட பின் உள்ளூர் ரஞ்சி தொடர்களில் ஓட்டங்களை குவிக்கவில்லை. வி.வி.எஸ் லஷ்மணை அணியில் இருந்து நீக்கியதும் அவர் மூன்று முச்சதங்களை அடித்தார். ரவீந்திர ஜடேஜா கூட அவரே கூச்சப்படும்படியாய் அதே சாதனையை செய்தார். ஆனால் காயிப் கடந்த 9 வருடங்களில் எந்த ரஞ்சி தொடரிலும் ஒருமுறை கூட ஆயிரம் ஓட்டங்களை அடையவில்லை. இதற்கு ஒரு காரணம் நத்தை போல் ஒடுங்கும் அவரது ஆட்ட முறை. ரொம்ப தடுப்பாட்டத்தில் மூழ்கி விடுவார். 120 பந்துகளை சந்தித்து 30 ஓட்டங்களை எடுப்பார். அப்பாடா என நினைக்கும் போது அவுட்டாகி விடுவார். அவரது உள்ளூர் ஆட்ட சராசரி 40%. அவரை விட சுமாரானவர்கள் 50% மேல் வைத்திருக்கிறார்கள். சதங்களின் எண்ணிக்கையும் சராசரி வீர்ர்களுடன் ஒப்பிடுகையில் குறைவு – 18. ஆனால் ஒரு வீரரின் திறமையை தரத்தை வெறும் எண்களைக் கொண்டு அளவிடக் கூடாது தான்.
வெற்றியடைய திறமை, உழைப்பை கடந்து வேறேதோ ஒன்று தேவைப்படுகிறது. இல்லாவிட்டால் 32 வயது வரை வெறும் மிதவேக வீச்சாளராக இருந்து மும்பை அணிக்குள் கூட இடம் தரப்படாமல் அதற்கு மேல் கால்சுழல் பந்து வீச ஆரம்பித்து 42 வயதில் ஐ.பி.எல்லில் கலக்கிக் கொண்டிருக்கும் பிரவீன் தாம்பேவை எப்படி புரிந்து கொள்ள?
காயிப் இப்போது நடக்கும் தேர்தலில் உத்தரபிரதேசத்தில் போட்டியிடுகிறார். இரண்டாம் இன்னிங்ஸில் என்னாகிறார் பார்ப்போம்!

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...