Skip to main content

மைக் விழுங்கி கூட்டங்கள்



இலக்கிய கூட்டங்களை பற்றி ஒரு நண்பருடன் பேசிக் கொண்டிருந்தேன். “இப்போதுள்ள புது எழுத்தாளர்களுக்கு ஈகோ அதிகமாகி விட்டது. அவர்கள் கூட்டங்களுக்கு வருவதும் இல்லை; வந்தால் அதைப் பற்றி மூச்சு விடுவதும் இல்லை” என்றார். அவர் அதை விளக்கவும் செய்தார்.


ஒரு கூட்டத்திற்கு எழுத்தாளன் வர வேண்டுமென்றால் ஒன்று அவன் அதில் பேச வேண்டும்; அல்லது அவனுக்கு மிக இணக்கமாக சூழல் இருக்க வேண்டும். தனக்கு பிடிக்காத கூட்டம் என்றால் அவன் குறைந்த்து அது குறித்து எதிர்வினை ஆற்ற வேண்டும். ஆனால் தமிழில் கூட்டங்கள் நல்லதோ கெட்டதோ ஒரு செயற்கையான மௌனத்தை உருவாக்க மட்டுமே செய்கின்றன என்றார். முன்னர் குற்றாலம் பட்டறையில் எழுத்தாளர்கள் கலந்து கொண்டு விவாதித்தை அடுத்து ஒரு பரவலான கவனமும் சலசலப்பும் எழுத்தாளர்களிடையே எழுந்தன. பல கட்டுரைகளும் எதிர்வினைகளும் எழுதப்பட்டன என்றார். இன்று நடக்கும் கூட்டங்கள் ஏன் அப்பளம் நொறுங்கும் ஓசையை கூட உருவாக்குவதில்லை எனக் கேட்டார்.

எனக்கு சில காரணங்கள் பட்டன. ஒன்று இன்று நடக்கும் கூட்டங்கள் சுயசிந்தனை கொண்டவர்களுக்கு ஒவ்வாமையை தருகின்றன. அவை விஜய் அவார்ட்ஸ் போல் ஆகி விட்டன. மேடைக்கு மேல்-கீழ் எனு பாகுபாடு இன்னொரு புறம் எழுத்தாளர்களை எரிச்சலடைய வைக்கின்றன. நீ பேசு, நான் கேட்டு ரசிக்கிறேன் என்பது தமிழ் வணிக சூழலுக்கு மட்டும் எடுபடுகிற நுகர்வு பண்பாடு. ஆனால் இலக்கிய வட்டத்தில் அனைவரும் சமம்.

ஒருவர் பேசுவதை கேட்க இன்னொருவர் தயார் தான். ஆனால் ஒன்றரை மணிநேரம் ஒருவர் பேசிக் கொண்டே இருப்பார், மற்றவர் கைதட்ட வேண்டும் என்றால் எரிச்சலாகிறது. ஒன்றரை, ரெண்டு மணிநேரம் பேச நாம் என்ன கர்த்தரா அல்லது கீதை பகன்ற கண்ணனா? பெரும்பாலும் சேதி 10 நிமிடங்களுக்கு தான் இருக்கும். ரொம்ப விரிவாக பேச வேண்டியதென்றால் 30 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இலக்கிய கூட்ட பேச்சாளர்கள் சாலமன் பாப்பையாவின் அவதாரம் எடுத்து முழங்கிக் கொண்டே போகிறார்கள். இலக்கிய ஆர்வமற்ற பொது பார்வையாளர்கள் தவிர பிறருக்கு இது உவப்பாக இல்லை. அதனாலே இதைவிட ஜனநாயக பூர்வமான சமூக வலைதளங்களில் அவர்கள் இன்னும் உற்சாகமாக இருக்கிறார்கள். அங்கு இது போன்ற கூட்டங்களை பற்றி பேசாமல் மௌனம் சாதிப்பது ஒரு எதிர்ப்பு நிலைப்பாடாகத் தான் நான் பார்க்கிறேன்.

இன்னொரு காரணம் சூழல் விரிந்து விட்டது. முன்பு கவனம் கவரும்படியாய் எழுதுபவர்கள் பத்திருபது பேர்கள். அவர்களைப் படிக்க சில நூறு பேர். அவர்கள் படிக்க ரெண்டு மூன்று பத்திரிகைகள். இதற்குள் ஒரு கூட்டம் அதிர்வை ஏற்படுத்துவது ஒரு முகநூல் பக்கத்தில் பத்து பேர் உக்கிரமாக விவாதிப்பது போலத் தான். இணையத்தில் பேஸ்புக் மட்டுமே, அங்கும் எழுத கூடியவர்கள் பதினைந்து பேர் தான் என வையுங்கள். ஒரு சின்ன சர்ச்சை நடந்தாலும் பிரம்மாண்டமாய் தெரியும்.

முன்பு நிறப்பிரிகையில் தமிழவனை தாக்கி ரவிக்குமார் ஒரு குறிப்பு எழுதினார். அதற்கு ஆளாளுக்கு பதில் எழுதி சர்ச்சை வலுத்தது. இந்த விவாதங்களை ஒரு நாற்பது பக்கங்கள் தொகுத்து நிறப்பிரிகை நூலாக கொணர்ந்த்து. அதைப் படித்த போது இதே தரத்திலான பாணியிலான சில விவாதங்கள் முகநூலில் நிகழ்ந்துள்ளது நினைவு வந்தது. ஆனால் முகநூலில் ஆயிரக்கணக்கில் குப்பை விவாதங்கள் நடப்பதால் எல்லோருக்கும் இந்த ‘சில’ நினைவிருப்பதில்லை. இவை நூலாகவும் பிரசுரமாவதில்லை. முகநூலுக்குள் இவற்றை தேடி கண்டுபிடிப்பதும் எளிதல்ல. இது ஊரில் உள்ள அழகான பெண்கள் மாதிரி தான். கிராமத்தில் ஒன்றோ ரெண்டோ சுமார் அழகிகள் இருப்பார்கள். எல்லா ஆண்களின் மன்ங்களும் அவர்களைத் தான் மொய்க்கும். அவர்களைப் பற்றியே வாய்கள் பேசும். அப்பெண்களும் செருக்குடன் திரிவார்கள். ஆனால் இதில் ஒரு ஆண் நகரத்திற்கு வந்தால் இது போல் நூறு சுமார் அழகிகள் சாலையில் ஏனோ தானோவென திரிவதை பார்ப்பான். அவனுக்கு பின் அடச்சே என்றாகி விடும்.

யுவனை சந்தித்த போது ஒன்று சொன்னார்: “முன்பெல்லாம் ஒரு படைப்பை வெளியிடும் போது சுந்தரராமசாமி அல்லது பிரமிள் திட்டி விடுவாரோ என பயமாக இருக்கும். ஆனால் இன்றுள்ள இளைஞர்கள் யார் திட்டினாலும் கவலைப்படாமல் தம் பாட்டுக்கு எழுதிக் கொண்டு போகிறார்கள். சராசரி எழுத்துக்கும் இன்று ஒரு இடம், வாசகர்கள் உள்ளது. இது தான் இன்றுள்ள சூழல்”. இந்த சூழலில், சரியோ தவறோ, எல்லா எழுத்தாளனும் தனக்கான இட்த்தை கோருகிறான். ஜனநாயக உணர்வு முக்கியம் என நினைக்கிறான். ஒரு மூத்த எழுத்தாளன் காலடியில் வந்து உட்கார்ந்து வருடக்கணக்கில் வெற்றிலை மடித்து தர அவன் இனி தயாரில்லை. ஆக “நான் பேசுகிறேன், நீ உட்கார்ந்து படுத்தும் உருண்டும் புரண்டும் கேள்” என்கிற வகை கூட்டங்களில் அவனுக்கு இன்று ஆர்வமில்லை. அப்படியே இலக்கியம் தெரிந்து கொள்ள இப்படியான கூட்டங்களுக்கு வரும் இளைய எழுத்தாளன் சில கூட்டங்களிலேயே சலித்து, தானே ஒரு கூட்டம் நடத்த உத்தேசிக்கிறான்.

அனைவரும் ஒரு கூட்டத்தில் பேச முடியாது தான். அதனால் இனி அவர்கள் அவர்கள் தமக்கான சிறு கூட்டங்களை நடத்த வேண்டியது தான். நூற்றுக்கணக்கானோர் வருகிற “கல்யாண சமையல்” கூட்டங்களில் பாதி ஆட்கள் வாசலுக்கு வெளியே நின்று பேசிக் கொண்டிருப்பதை பார்க்கலாம். அதனால் சிறுகூட்டங்கள் தான் இனி சரி. அப்படியான கூட்டங்களிலும் சரி பாதி பார்வையாளர்களின் கருத்துக்களை சொல்லவும் விவாதிக்கவும் நேரம் அளிக்க வேண்டும். இனிமேல் அப்படியான கூட்டங்கள் தான் அதிர்வலைகள் ஏற்படுத்த முடியும்.

பார்வையாளனை பேச விட்டால் அவன் போய் தான் பேசியதைப் பற்றி எழுதுவான். அவர்களை நான்கு மணிநேரம் வாயை கட்டி வைத்தால் அவன் தன்னை பேச விடாதவர்கள் பற்றி தான் ஏன் பேசணும் என நினைப்பான். காலமும் மனநிலையும் மாறி விட்டது. நாம் அதற்கு ஏற்றாற் போல் மாற வேண்டும்.

ஒரு சிலரை புத்தகம் பற்றி சுருக்கமாய் அறிமுகப்படுத்த விட்ட பின்ன, OHP மூலம் புத்தகத்தின் சில பக்கங்களை திரையில் காட்டி அதை கூட்டத்தினர் வாசிக்க அவகாசம் அளிக்கலாம். பிறகு அதை ஒட்டி ஒருவர் பேசி, பிறரது கருத்துக்களை விவாதிக்க கேட்கலாம். நூலை வாசிக்காதவர்கள் கூட மனதளவில் பங்கேற்க இது உதவும். முடிந்தவரை புத்தகம் எழுதியவர் முன்னிலைப்படாமல் ஒருங்கிணைப்பாளரை கொண்டு நடத்த செய்யலாம். எழுதியவர் கூட்டத்துடன் இருக்கலாம்.

மைக் விழுங்கி கூட்டங்களின் காலம் முடியப் போகிறது விரைவில்...

Comments

நல்ல கட்டுரை. நீண்ட நாட்களாக என் மனதில் ஓடிக்கொண்டிருந்த விடயம் இது. நன்றியும் வாழ்த்துக்களும்.

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...