Skip to main content

ஜெயமோகனும் பெண் கவிஞர்களும்


ஜெயமோகன் பெண் கவிஞர்களை பற்றி சொன்னது அவரது தனிப்பட்ட மதிப்பீடு. அது போல் அவர் பாரதியாரை பற்றிக் கூட மதிப்பீடு கொண்டிருந்தாரே எனவும், அதற்கு அவருக்கு முழு உரிமை உண்டென்றும் அவரது ஆதரவாளர்கள் இப்போது நியாயப்படுத்தி வருகிறார்கள். ஆனால் இது உண்மையா? இல்லை ஜெயமோகன் கூறுவது மதிப்பீடோ அவதானிப்போ அல்ல - பெரும்பாலும் முன்னெண்ணங்கள்.
பெண் கவிஞர்கள் தங்கள் உடலை காட்டித் தான் பிரசுர வாய்ப்புகள் பெற்றார்கள் என்று அவர் வாக்கியத்தை எளிமைப்படுத்தினால் வரும். இது உண்மையா என பார்ப்போம்: குட்டிரேவதி, சுகிர்தராணி, சல்மா போன்றோர் புதுவகையான பாய்ச்சலை தமிழ் நவீன கவிதையில் நிகழ்த்தினார்கள். அது வாசகர்களுக்கு புதுசாக வியப்பாக இருந்தது.


 கவிதை எப்போதும் புதுவாசல்களை திறக்கும் போது அப்படியான கவனம் கிடைக்கும். கவனிக்கப்பட நீங்கள் முழுமை பொருந்திய உன்னத கவிதைகள் எழுத அவசியம் இல்லை. யவனிகா ஸ்ரீராம் எனும் ஆண் கவிஞர் அப்படியான ஒரு புது உலகை கவிதைக்குள் கொண்டு வருகிறவர் தான். முகுந்த் நாகராஜன்? அவர் எழுதியவை மட்டும் உன்னத கவிதைகளா? நீங்கள் அவரை எலியட்டுடனோ டெட் ஹியூக்ஸுடனோ ஒப்பிட முடியுமா? அல்லது தமிழில் பிரமிள், தேவதச்சன், தேவதேவனுடன்? ம்ஹும். முகுந்த் சிதறி விடுவார்.

ஆனாலும் முகுந்த் கவனம் பெற்றார். விரும்பி வாசிக்கப்பட்டார். ஏன்? அவரது கவிதைகள் மனிதர்களுக்குள் உள்ள குழந்தைகளை பற்றியும் குழந்தைகளுக்குள் உள்ள வளர்ந்தவர்களை பற்றியும் புது பார்வையுடன் சித்தரித்தன. இது தமிழில் யாரும் இதற்கு முன் செய்யாதது. வெறுமை, கசப்பு, அவசம் என எழுதிக் கொண்டிருந்த கவிதைப்பரப்பில் ஒருவர் இப்படி புது சித்தரிப்புகளுடன் வரும் போது பரவலாக கவனம் பெற்றார்.
அதற்காக அவரை குழந்தைகளை காட்டி கவனம் பெற்றவர் என கூறலாமா? குழந்தைகளை வைத்து சர்க்கஸ் பண்ணுகிறார் என கூறலாமா? அவரால் பிரமிள் போல் ஆன்மீக உச்சங்களை தொட முடியுமா, தேவதேவன் போல் இறைநிலையின் உன்மத்த கிளர்ச்சியை படிமங்களுடன் காட்ட முடியுமா என கேட்கலாமா? முகுந்த் வெளியிட்டதில் இறுதி தொகுப்பு அப்படியாக தன்னை பிரமிள், சி.மணி சட்டகத்தில் பொருத்தும் முயற்சியாக இருந்து தோல்வி உற்றது.

பேசுபொருள் புதிதாக இருக்கும் போது மொழி புதிதாகிறது. வாசகன் ஆர்வமுறுகிறான். பெண்கள் என்றில்லை, ஆண் கவிஞன் கூட புதிதாய் ஒரு “சரக்கை” சந்தைக்கு கொண்டு வந்தால் கவனம் பெறுகிறான். அடையாளம் ஸ்தாபிக்கிறான். முகுந்துக்கும், யவனிகாவுக்கும் நடந்தது; இப்போது சபரிநாதன்,  நீலகண்டன், கோசின்ரா, ஏ.ஏ.பைசால், லஷ்மி சரவணகுமாருக்கும் அது நடக்கிறது. இவர்கள் வெற்றி பெற்றது உன்னத படிமங்கள், குறியீடுகளை செதுக்கி அல்ல. மொழி நாம் எழுதும் விசயத்தினால் தீர்மானமாகிறது. பெண் கவிஞர்கள் தங்கள் உடல் சார்ந்த உலகை சித்தரித்தார்கள். அதுவரை தமிழ் கவிதை மிக அரூபமாக இருந்ததால் பருண்மையான சித்தரிப்புகளால் சட்டென கவனம் பெற்றார்கள். இது தவிர பல அழகான உருவகங்களை, பதியப்படாத மனநிலைகளை கவிதைக்குள் கொணர்ந்தார்கள். சல்மாவின் இந்த கவிதையை பாருங்கள்:

வன்மம்
***********
வஞ்சம் படர்ந்த
நகரத்தின் தெருக்களில்
வெப்பம் மிதந்தலையும்
பேருந்தில்
வியர்த்து வழியும் உடல்களினூடே
எங்கோ துளிர்த்து பெருகிய வன்மமென
என்மீது நீளும்
ஓர் ஆண்குறி

இக்கவிதை ஒரு அன்றாட பாலியல் அத்துமீறலின் சித்திரத்தை அளிக்கிறது. பொது இடங்களில் பெண்கள் மீது தம் உடலையோ பாலுறப்பையோ உரசும் ஆணின் செயலை காட்டுகிறது. ஆனால் இக்கவிதை அது மட்டும் அல்ல. வன்மம் எங்கிருந்து பிறப்பெடுக்கிறது என்கிற கேள்வியை இக்கவிதை கேட்கிறது. நகரம் பொதுவாக “வஞ்சம் படர்ந்ததாக” உள்ளது. இயல்பிலேயே அங்கு மக்கள் தனிமைப்பட்டவர்களாக, அடையாளம் இழந்தவர்களாக அந்நியப்பட்டு இருக்கிறார்கள். பரஸ்பரம் வெறுப்பு நொதிக்க திரிகிறார்கள். ஆனால் தம் வன்மத்தை வெளிப்படுத்த வாய்ப்பில்லாததால் கண்ணியமாக தோன்றுகிறார்கள். அடுத்து வெக்கை. உடலில் வியர்வை வழிந்து கொதிக்கும் போது நமக்கு யாரையாவது பளாரென்று அறையத் தோன்றும். ஆனால் அறைய முடியாது. அதுவும் பேருந்து போன்ற நெரிசலான இடங்களில் மனிதனுக்கு சகமனிதனை மிதித்து கூழாக்கவே தோன்றும். ஆனால் மிதிக்க முடியாது. ஆனால் ஒரு பெண் அப்பிராணியாக எங்கோ மாட்டுகிறாள். அவளை நோக்கி தன் ஆண்குறியை வெளிப்படுத்தி உரசுகிறான். அதில் அவனுக்கு செக்ஸ் கிளர்ச்சி கிடைப்பதற்கு இணையாய் வன்ம வெளிப்பாடும் அமைகிறது. இது மட்டுமல்ல மனைவி, காதலி, விபச்சாரி என பெண்களிடம் உடலுறவு கொள்ளும் போது கிடைக்கும் விடுபடல் வன்மம் வெளிப்படும் போது கிடைக்கும் விடுபடல் தான். புணரும் உடல்களின் வன்முறையை கவனித்தால் புரியும். இது எவ்வளவு முக்கியமான அவதானிப்பு. இது தமிழ்க் கவிதையில் நிகழும் ஒரு கண்டுபிடிப்பு. வேறெந்த ஆண் கவிஞன் இதற்கு முன் இது போன்ற ஒரு அவதானிப்பை தந்திருக்கிறான். இப்போது சொல்லுங்கள்: பெண் கவிஞர்கள் தம் உடலைக் காட்டித் தான் (ஜெ.மோ மொழியில் பெண்களாக இருப்பதனால் தான்) ஊடக, வாசக கவனம் பெற்றார்களா?

மேலும் இந்த வாசகம் ஒரு பொதுப்புத்தியை கொண்டுள்ளது. அலுவலகங்களில் ஒரு பெண் பதவி உயர்வு பெற்றால் உடலைக் காட்டி வாங்கி விட்டாள் என்பார்கள். ஆனால் உண்மையில் உழைப்பும் திறமையும் இன்றி யாரும் முன்னேற முடியாது. உலகம் அவ்வளவு எளிதானது அல்ல. நீங்கள் ஒருவேளை உடலையோ சாதியையோ அனுகூலமாய் கொண்டு சில அடிகள் முன்னேறினாலும் தேங்கி அங்கேயே நின்று விடுவீர்கள். வெறும் செக்ஸ் சித்தரிப்புகளை எழுதியிருந்தால் “கன்னித்தீவு” அளவு தான் மதித்திருப்பார்கள். வாசகனை முட்டாளாக்க முடியாது. எனக்குத் தெரிந்த நவீன கவிதை தெரிந்த கணிசமான வாசகர்கள் பெண் கவிஞர்களை வாசித்திருக்கிறார்கள். ஆனால் கடந்த பத்தாண்டுகளின் பல ஆண்கவிஞர்களை அவர்களுக்கு தெரியாது. இது ஏன்? வெறும் ஊடக கவனத்தினாலா? அல்ல. ஒரு கவிதையை வாசித்தால் இது உண்மை என மனசுக்கு உறைத்தால் தான் வாசகன் ஏற்றுக் கொள்வான். பெண் கவிஞர்களின் வரிகளில் நாம் பார்க்க உண்மையின் கீற்றுகள் உள்ளன. அது உடலும், பெண்ணிய அரசியலும் சார்ந்ததாக இருக்கலாம். புதுவகையான உடல்சார்ந்த காதல் கவிதைகளால் இருக்கலாம். அவ்வரிகளை ஆண்களால் அதுவரை எழுத முடிந்ததில்லை என்பது தான் உண்மை. சரி, அதனால் மட்டுமே ஒரு கவிதை உயர்ந்த்தாகி விடுமா என யோசித்தால் உங்கள் மதிப்பீட்டு முறையில் தவறுள்ளது.

எழுத்துக்கும் வாசகனுக்குமான உறவு எளிய தர்க்கத்தில் அடங்குவது அல்ல. அதனால் தான் விமர்சகனுக்கு பிடிக்கிறதோ இல்லியோ சில படைப்பாளிகளை வாசகன் தேடி படித்துக் கொண்டே இருக்கிறான். ரசிக்கிறவனுக்கு அதில் உள்ள உண்மை தான் முக்கியம், அது உன்னதமா, அது கலைரீதியாய் முழுமை பெறுகிறதா என கவலைப்பட மாட்டான். தன்னிறைவு கொண்ட எந்த எழுத்தாளனும் தன் படைப்பு வாசகனுடன் உரையாடுகிறதா என தான் அக்கறைப்படுவான். அது சிறந்த கலைப்படைப்பு என ஒருவர் பத்திரம் அளிப்பது அவனுக்கு தேவையில்லை. பெண் கவிதைகள் அப்படி உரையாடினதால் தான் வெற்றி பெற்றன.

பெண் கவிதைகளை நாம் மதிப்பிடலாம். அவற்றின் குறைகளை அலசலாம். ஆனால் அது நியாயமான முறையில் நிகழ வேண்டும். ஆங்கிலத்தில் எடுத்துக் கொண்டால் நவீன பெண்ணெழுத்து துவங்கி நூறு ஆண்டுகள் ஆகின்றன. ஒரு புது எழுத்து பாணி உருவாகி நிலைப்பெற வேண்டும். தமிழ் ஆண் நவீன கவிதைக்கு 60 வயது தாண்டி விட்டது. ஆனால் நவீன பெண் கவிதை ஆரம்பித்து பத்தாண்டுகள் தான் ஆகிறது. ஆக தமிழ் பெண் கவிதை தன் குறுகிய ஆயுசில் சிறப்பான வேலைகளை செய்துள்ளது. இன்னும் ஒரு ஐம்பது வருடங்கள் அளித்தால் நீங்கள் எதிர்பார்க்கும் உன்னத கவிஞர்கள் அவர்களிடத்தும் தோன்றுவார்கள்.

இறுதியாக ஒன்று. இது ஜெயமோகனின் கருத்து மட்டுமல்ல. கடந்த பத்தாண்டுகளில் புதிய வகை கவிதைகளை ஆண்கள் அதிகம் எழுதவில்லை. புதிதாக எழுத வந்தவர்களில் கணிசமானோர் அதே எழுபதுகளின் கவிதையை திரும்ப திரும்ப படியெடுக்கிறார்கள். தொண்ணூறுகளில் கோலோச்சிய ஆண்கவிஞர்களில் பெரும்பாலானோர் ரெண்டாயிரத்து பின் அலுப்பூட்ட துவங்கினார்கள். அதனால் பெண் கவிஞர்கள் அவர்களை மீறி எளிதில் சென்றார்கள். இது ஆண் கவிஞர்களுக்கு எரிச்சலை, பொறாமையை கோபத்தை ஏற்படுத்தியது. ஜெயமோகனின் இதே வாக்கியத்தை பல வழிகளில் ஆண் கவிஞர்கள் முணுமுணுத்து நான் கேட்டிருக்கிறேன். ஒரு மூத்த ஆண் கவிஞர் கூட “பெண்கள் தேவைக்கதிகமாகவே ஊடக இடம் பெறுகிறார்கள், இதனால் ஆண் கவிஞர்களுக்கு வாய்ப்பில்லாமல் போகிறது” என எழுதியதை வாசித்த ஞாபகம்.

நண்பர்களே, கடந்த பத்தாண்டுகளின் பெண் கவிதையை மதிப்பிடும் போது ஏன் ஆண் கவிதை ஆஸ்துமா வந்த்து போல் இருமுகிறது என்ற கேள்வியை கேட்க வேண்டும்.
”அமைதியின் மீது
ஓரிடம் விடாமல் காயங்கள்
அதன் கதறலில் துவண்டு போனது
என் இதயம்”

போன்ற “ஐயோ அம்மா வலிக்குதே” வகை கவிதைகள் ஆண்கள் இன்னும் எத்தனைக் காலம் எழுதப் போகிறார்கள் என நாம் கேட்க வேண்டும். ஒப்பாரி வைத்து வைத்தே தமிழ் நவீன கவிதையை கொன்று விட்டீர்கள். இனியாவது ஒப்பாரி வைப்பதையும் பெண்களைப் பார்த்து பொறாமைப்படுவதையும் நிறுத்துங்கள். 

Comments

Vijaysabarivasu said…
Nandri...en manathilum oru mattram erpaduthiyatharku...eluthu vatharku palinam oru thadaya enna.., pooramai padupavarkal oru puram irukattum, namaku porpu nera ya ullathu en eluthalar sakotharikalaa..
வலிமையான வாதம் இது . ஆண் கவிஞர்கள் புதிய தளத்துக்கு தமிழ் கவிதை யைக் கொண்டு போகவில்லை என்பது உண்மையே .
அபிலாஷ்,

நீங்கள் எழுதும் போது பெண் கவிஞர்கள் என்றுதான் குறிப்பிட்டியிருக்கிறீர்கள்.ஏன், பெண் எழுத்தாளர்கள் என்று சொல்லவில்லை.பெண்கள் சிறப்பாகவே கவிதைகள் எழுதுவதாகவே இருக்கட்டும்.ஒரு எழுத்தாளர் என்பவன் தொடர்ச்சியான வாசிப்பும் , குழப்பமும், தனிப்பட்ட வாழ்க்கையில் தன் கருத்தியல்களை வைத்துக்கொண்டு தடுமாறி , உலகம் இப்படி இல்லையே என்று புலம்பி கண்ணீருடன் உண்மையை பின்தொடர்பவன்.அவன் தான் எழுத்தாளன்.அம்பையின் கறுப்பு குதிரைச் சதுக்கம் முக்கியமான சிறுகதை.அதில் உண்மையை நோக்கிய ஒரு பயணம் இருக்கிறது.இங்கே இன்று எழுதும் பெண்கள் பலரில் அத்தகைய எண்ணங்கள் இருக்கிறதா.அவர்கள் என்ன வாசிக்கிறார்கள்.என்ன புதிதாக எழுதியிருக்கிறார்கள்.பெண்கள் என்பதால் எதற்காக சலுகை அளிக்கப்பட வேண்டும்.சரி, காம்யூ பற்றி, சார்த்தர் பற்றி, தஸ்தாவெய்ஸ்கி பற்றி, மார்க்வெஸ் பற்றி, டால்ஸ்டாய் பற்றி இவர்கள் எழுத வேண்டாம்,பத்து நிமிடம் ஒரு கருத்தரங்கில் இன்று பெண் எழுத்தாளர்கள் என்று தங்களை சொல்லிக்கொள்பவர்களில் எத்தனை பேரால் நிஜமாகவே பேச முடியும்.
கவிஞர்கள் என்றால் வாசிக்க தேவையில்லையா?

சர்வோத்தமன்.
சர்வோத்தமன் - ஷாஜியின் இசைக்கட்டுரைகளை எடுங்கள். அவை உன்னதமான படைப்புகள் அல்ல. ஆனால் ஒரு புது மொழியை தடத்தை உருவாக்குகின்றன. அது ரொம்ப சிரமமான காரியம். அப்பாதையில் மேலும் பலர் செல்லும் போது தான் ஆக சிறப்பான படைப்புகள் தோன்றும். அதற்கு பல வருடங்கள் ஆகும்.

பெண்கள் சிறப்பான பல கவிதைகளை எழுதியிருப்பதாகவே கருதுகிறேன். அவர்களுக்கு மிகுதியான புகழ் கிடைப்பதாய் ஜெ.மோ கூறுகிறார். ஆனால் அதை எப்படி அளக்க? என்னிடம் கேட்டால் நாஞ்சில், குரூஸ் போன்றோரை இலக்கிய தரமற்றவர்கள் என்பேன். அவர்களுக்கு அகாதெமி விருதி கொடுத்திருக்க கூடாது என்பேன். ஆனால் பலர் அப்படி அல்ல என நினைக்கலாம். இதை எப்படி நிறுவ முடியும்? பெண் கவிஞர்களின் அங்கீகாரத்தின் அளவுகோலும் அப்படியானதே. ஒரேயடியாய் மட்டம் தட்டுவதும் நியாயம் அல்ல. அவர்கள் கவிதை கோரும் மரியாதையை அளிக்க வேண்டும்; அக்கறையாய் கவனமாய் வாசிக்க வேண்டும் என்றே கோருகிறேன்.

வாசிப்பு விசயம்: அதிகம் வாசிக்காமல் சிறந்த கவிதை எழுதியுள்ளவர்களை எனக்கு தெரியும். அது அவர்கள் தேர்வு. நாம் போய் நீ ஏன் வாசிக்கவில்லை, விமர்சனம் எழுதவில்லை என கேட்கலாமா? அப்படியென்றால் ஜொ டி குரூஸ் தஸ்தாவஸ்கி, நீட்சே பற்றி எழுதியிருக்கிறாரா? நாஞ்சில் மார்க்வெஸ் பற்றி, கீர்க்ககாட் பற்றி எழுதி இருக்கிறாரா? நாம் இதை ஒரு குற்றச்சாட்டாய் வைப்பது நியாயமாய் இருக்காது!
Manushi said…
மிகத் தாமதமாக வாசிக்க நேர்ந்தது இக்கட்டுரையை. மிகத் தெளிவான, ஆழமான வாதங்களை முன்வைத்து எழுதப்பட்டுள்ளது. மகிழ்ச்சி.

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...