முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெண் எழுத்தாளர்கள் போட்ட நோ பால்


பெண் எழுத்தாளர்கள்-ஜெ.மோ சர்ச்சையில் நியாயம் பெண்கள் பக்கமே என அறிவோம். ஆனாலும் இன்றைய ஊடக சூழலில் நியாயம் மட்டும் உங்கள் பக்கம் இருந்தால் போதாது – அதை சரியாய் சாதகமாய் பயன்படுத்த தெரிய வேண்டும். முன்பு போல் இருபது பேர் படிக்கிற சூழலில் அது எப்படியும் இருக்கலாம். ஆனால் முகநூலில் பல்லாயிரம் பேரும், நாளிதழ்கள் வழி லட்சக்கணக்கான பேரும் இந்த சர்ச்சையை கவனிக்கிறார்கள். அவர்களுக்கு இலக்கியமோ மார்க்ஸியமோ ஆணாதிக்கவாதமோ தெரியாது. ஒருவேளை இந்த சர்ச்சையின் போது தான் இதையெல்லாம் அறிகிறார்களாக இருக்கலாம். அதனால் இப்பிரச்சனையில் “நியாயம் யார் பக்கம்” எனத் தான் பொதுமக்கள் கேட்பார்கள்.


ஜெயமோகனை ஒரு பெண் வெறுப்பாளர் என கோருகிற பெண் எழுத்தாளர்கள் அறிக்கையை நேற்று படித்த போதே முக்கியமான தருணத்தில் கோல் அடித்து ஜெயமோகன் ஜெயித்து விடுவார் என நினைத்தேன். அப்படியே நிகழ்ந்தது. இனிமேல் இச்சண்டையை வெளியில் இருந்து பார்க்கும் பொது மக்களுக்கு இது ஜெ.மோவுக்கும் பெண் எழுத்தாளர்களுக்கும் இடையிலான ஒரு குழாயடி சண்டையாகவே தெரியும். அதுவும் ஜெ.மோ தனது இரண்டாவது மற்றும் மூன்றாம விளக்கங்களில் நிதானமாக பேசியிருப்பதால் அவர் நல்லவர் என்றும் பெண்கள் தான் நாகரிகமமில்லாமல் கத்துகிறார்கள் என்பது போன்ற ஒரு தவறான மனப்பதிவும் ஏற்படும்.

அறிக்கைகள் பொதுவாக எந்த பிரச்சனைக்கும் இறுதி ஆணி அடித்து சாம்பிராணி காட்டும். ஆனால் அறிக்கைகளை அரசியல் விளையாட்டில் ஒரு சாதுர்ய தந்திரமாகவும் பயன்படுத்தலாம். அவ்விசயத்தில் தான் இதை எழுதிய பெண் எழுத்தாளர்கள் சிலர் சொதப்பி விட்டார்கள்.

இந்த அறிக்கையை எப்படி எழுதியிருக்க வேண்டும் என்கிற கேள்வியை கேட்கும் முன் இதற்கு முன்னான ஜெ.மோ சர்ச்சைகளில் சாரு மற்றும் மனுஷ் நடந்து கொண்ட விதங்களை பாருங்கள். எப்போது சாருவுடன் மோதினாலும் ஜெ.மோ தோற்றுப் போவார். ஏனென்றால் சாரு அவரை மிக மோசமாய் பகடி பண்ணி விடுவார். ஜெ.மோவின் மோசமான வசைகளுக்கு உணர்ச்சிவசப்படாமல் சிரித்துக் கொண்டே அதை அவருக்கு எதிரான கிண்டலாக மாற்றி விடுவார். மனுஷ் ஜெ.மோவின் குற்றங்களை பட்டியலிடாமல் தன் தரப்பு நியாயங்களை தர்க்கரீதியாக பட்டியலிடுவார். இவ்விசயங்களில் ஜெ.மோ (பெண்கள் விசயத்தில் போல் அல்லாமல்) அடுத்தடுத்து விளக்கங்களும் பதிலடிகளும் தராமல் வாயை மூடிக் கொண்டார். ஏனென்றால் தான் என்ன கோல் அடிக்க முயன்றாலும் பந்து தன் கட்டுப்பாட்டில் இல்லை என அவர் அறிந்திருந்தார்.

பெண் எழுத்தாளர்கள் தம் தரப்பு நியாயங்களை பொதுவில் வைப்பதற்கான வாய்ப்பாக இதை பயன்படுத்தி இருக்க வேண்டும். அவர்களின் இலக்கிய பங்களிப்பை, அது ஏற்படுத்திய எதிர்வினைகளை பட்டியலிட்டு கடந்த இருபது வருடங்களில் இலக்கிய வளர்ச்சிக்கு அரசியல் விழிப்புணர்வுக்கும் தாம் என்னவெல்லாம் செய்தோம் என கூறியிருக்கலாம். பல பெண் கவிஞர்கள் விருதுகள் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் கவிதைகள் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் உள்ளன. பல மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளன. இருபதாண்டுகளின் முக்கியமான தமிழ் பெண் நாவல்கள், சிறுகதைகள், கவிதைகளை பட்டியலிட்டிருக்கலாம். இவற்றையெல்லாம் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கலாம். கடந்த பத்தாண்டுகளில் புதிதாய் எழுத அந்த ஆண் கவிஞர்கள் இதனோடு ஒப்பிடுகையில் சொற்பமாய் தான் சாதித்திருக்கிறார்கள் என கூறியிருக்கலாம். இந்த சர்ச்சையில் புதிதாய் பங்கேற்கும் வாசகர்களுக்கு பெண் எழுத்து குறித்து ஆர்வமும் அபிமானமும் இதனால் ஏற்பட்டிருக்கும். இவ்வளவு எழுதிய பின்னும் எங்களை மட்டம் தட்டலாமா என கேட்டிருக்கலாம். அது பொதுமக்களின் இரக்கத்தை பெண்கள் பக்கம் சாய்த்திருக்கும். ஜெயமோகன் தமிழுக்கு முக்கிய பங்களிப்பு அளித்த பெண்களை வணங்குகிறேன் என மறு அறிக்கை விட்டு ஆட்டத்தை முடித்திருப்பார். அவருக்கு வேறு வழியிருந்திருக்காது,

ஆனால் இப்போது ஜெ.மோவை ஒரு பெண் வெறுப்பாளர் என காட்ட நினைக்கும் இந்த அர்த்தமற்ற முயற்சி பெண்களை தான் மோசமான ஒளியில் காட்டுகிறது. நீ ஒரு பெயர் விளித்தால் நான் உன்னை இன்னொரு பெயரால் திட்டுவேன் என்கிற மட்டமான தந்திரமாக அது தோன்றுகிறது. மேலும் ஜெ.மோ போன்ற எழுத்தாளனை அப்படி “பெண் வெறுப்பாளன்” நீங்கள் எளிதில் முத்திரை குத்த முடியுமா? பெண் ஒடுக்குமுறையை நுணுக்கமாக சித்தரித்த அவரது சிறுகதைகளை அவரது எளிய வாசகன் கூட உங்களிடம் எடுத்த சொல்வான். இலக்கிய எழுத்தாளனுக்கும் ஆணாதிக்கமும் பெண்ணியமும் கலந்து கூட இருக்கும். இரண்டு பிரதிகளை ஒன்றுக்கொன்று முரணாய் காட்டுகிறபடி இருக்கும். புதுமைப்பித்தனை தலித் விரோதி என காட்டுவது போன்ற ஒரு தட்டையான தாக்குதலாக இது மாறி விட்டது. உங்கள் நோக்கமும் கோபமும் புரிகிறது. ஆனால் நீங்கள் எடுத்துக் கொண்ட ஆயுதம் தவறானது. எறும்பை சம்மட்டியால் அடித்தால் பள்ளம் உண்டாகும்; ஆனால் எறும்பு தப்பித்து விடும்.

இன்றைய சமூக வலைதள காலகட்டத்தில் அரசியல் என்பது ஒரு ஒற்றை நூல் பாலம். கரணம் தப்பினால் மரணம். இதோ நீங்கள் போட்ட பாலத்தில் ஜெ.மோ அடிமேல் அடிவைத்து தன்னம்பிக்கையாய் நடந்து போகிறார். உங்களை எங்கும் காணவில்லை. ஒரு பந்து ஏழு ரன்கள் என நிலைமை இருந்தது. நீங்கள் ஒரு நோபால் போட்டீர்கள். ஜெ.மோ இறங்கி சிக்ஸர் அடித்து விட்டார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...