Skip to main content

நகுலன்: நேரடிக்கவிதைக்கும் குறியீட்டு கவிதைக்கும் நடுவே


குறியீடியக்கம் தமிழ்க் கவிதையை முப்பது வருடங்களுக்கு மேலாக ஆதிக்கம் செலுத்தியது. தொண்ணூறுகளின் பிற்பகுதியில் இது மெல்ல மெல்ல தளர்ந்து வயோதிகத்தின் முதல் நோய்க்குறிகளை காண்பித்தது. மூன்று காரணங்களைச் சொல்ல்லாம். 1) பிரமிள் போன்ற குறியீட்டுக் கவிஞர்கள் இல்லாமல் போனது. 2) குறியீடு ஒரு இறுக்கமான, செயற்கையான வடிவமாக மாறியது. 3) கவிதை அகம் பற்றியது மட்டுமல்ல, புறமான, தகவல்பூர்வமான பொருண்மை உலகமும் கவிதைக்குள் பிரவேசிக்க வேண்டும் என கவிஞர்கள் நினைத்தது. குறிப்பாய், இதை சாத்தியப்படுத்திய பெண்ணிய, தலித் கவிஞர்களின் வருகை.

நேரடியான தளர்வான கவிதைகள் வாசகனை சட்டென ஈர்த்தன. குறியீட்டியக்கத்தின் உச்சகட்டத்திலும் இவ்வகை கவிதைகளை விக்கிரமாதித்யன், சுகுமாரன் போன்றோர் எழுதியிருக்கின்றனர். விக்கிரமாதித்யன் எழுதியவை கணிசமாய் தத்துவார்த்தமான நிலைத்தகவல்கள் எனலாம். இவை ஒரு புறம் நவீனத்துவ குறியீட்டு கவிதைகள் போல் ஆழ்மன சிக்கல்களை, சில வேளை வெறும் புலம்பல்களை, பேச தலைப்பட்டன. அன்றாட வாழ்க்கை பற்றிய அவரது கவிதைகள் தாம் இன்றுள்ள கவிதைகளுக்கு ஓரளவு நெருக்கமாய் வருகின்றன. நேரடிக் கவிதைகளின் முதல் தேவன் என சுகுமாரனை கூற வேண்டும். எண்பதுகளின் இறுதியில் அவர் எழுதிய நேரடியான, மனித நெருக்கடியை புற வய தகவல்கள் மூல சொல்ல தலைப்படும் கவிதைகள் கணிசமான வாசகர்களை ஈர்த்தன. எண்பதுகளின் கவி உலகில் குட்டி இளவரசனாக இருந்த கலாப்பிரியாவின் கவிதைகள் தாம் இன்றுள்ள கவிதைகளுக்கு மிக மிக நெருக்கமானவை. என்ன கூடுதலாய் (கலாப்பிரியாவிடம் இல்லாத) பகடியும், விநோதமான உவமைகளும், மறுப்புவாதமும் இன்று கலந்திருக்கின்றன. இம்மரபை வளர்த்தெடுத்து பெரும் இயக்கமாக கட்டியமைத்த்து மனுஷ்யபுத்திரன். ரெண்டாயிரத்துக்கு பிறகு மிக அதிகமான புது கவிஞர்களின் பாணியை தீர்மானித்த்து மனுஷ்யபுத்திரன் தான். இதற்கும் இரு காரணங்கள். ஒன்று அவரது கவிதைகள் எளிதாகவும், நேரடியாக நம்மிடம் பேசும் விதமாகவும், புது வாசகர்களும் சட்டென நுழையும்படியாகவும் இருந்தன. விக்கிரமாதித்யன், கல்யாண்ஜி செய்தது போல முதல்நிலை வாசகர்களிடமும் அவர் பிரபலமாக இருந்தார். அடுத்து அவர் இரு பத்திரிகைகளுக்கு ஆசிரியராக இருந்திருக்கிறார். அதாவது இரு பத்தாண்டுகளுக்கு மேலாக தமிழின் இரு முக்கிய இலக்கிய பத்திரிகைகளின் கவிதை பிரசுரத்தை தீர்மானிக்கிறவராக இருந்திருக்கிறார். தொண்ணூறுகளின் என் நண்பர்கள் காலச்சுவடில் கவிதைகளை மேய்ந்த உடன் “மனுஷ்யபுத்திரனை போல் இன்னும் நாலு பேர் கவிதை எழுதியிருக்கிறார்கள்” என்பார்கள். மனுஷ்யபுத்திரன் இறுக்கமான குறியீட்டு கவிதைகளை விட தனது பாணியிலான நேரடி கவிதைகளையே அதிகம் காலச்சுவடில் அப்போது ஊக்குவித்தார். அவர் பின்னர் உயிர்மை ஆரம்பித்த போது அதில் கவிதைக்கு அதிக முக்கியத்துவம் இருக்கவில்லை என்றாலும் அதில் பிரசுரமான கவிதைகளும் அதிகம் நேரடிக் கவிதைகள் தாம். ஆக அவர் ஒரு மரபை பத்திரிகை வழியாகவும் ஊக்கப்படுத்தினார்.
இவையெல்லாம் சேர்ந்து குறியீட்டுக் கவிதையை கொஞ்சம் பின்னுக்கு தள்ளின. ஆனால் குறியீட்டுக் கவிதை இன்னும் ஒரு பக்கம் அண்டம் காக்கை போல் நம் பக்கமாய் சிறகு ஒடுக்கி இருந்து கொண்டு தான் உள்ளது. இந்த தருணத்தில் நாம் இன்னொரு கேள்வி கேட்கலாம். குறியீட்டுக் கவிதைக்கும் நேரடி கவிதைக்கும் இடையில் ஒரு கவிதை உண்டா? உண்டெனில் இதை எப்படி எழுதுவது. இதற்கு எல்லாம் சம்மந்தமில்லதவராக அறியப்பட்ட நகுலனின் கவிதை ஒன்றை நாம் அணுகி இது குறித்து அலசலாம்.
“நான் உள்ளிருந்து
வெளி வந்து விட்டேன்
என் முன் அந்தப் பெயர்
தெரியாத – சாம்பல் – மங்கல் –
வர்ணப் – பறவைகள்
வரிசையாக அணிவகுத்த விமானப்
படைகள் போல வெளிமுற்றத்தில்
சறுக்கிக் கொண்டு வந்தன
மணி பிற்பகல் 4.15”
இந்த கவிதையை நேரடியாக படிக்கலாம். நகுலன் வெளியே வந்து முற்றத்தில் நிற்கிறார். அதாவது உள்ளே (வீட்டில்) இருந்து வெளியே (முற்றத்துக்கு) வருகிறார். அப்போது பறவைகள் பறந்து வந்து முற்றத்தில் அமர்கின்றன. அதாவது வெளியே (வானில்) இருந்து உள்ளே (முற்றத்துக்கு) வருகின்றன. வெளி அல்லது இடம் குறித்த மனிதனின் பாவனைகளை, கற்பனைகளை இக்கவிதை லேசாய் பகடி பண்ணுகிறது எனலாம். நாம் வெளியே வந்து விட்டோம் என நினைக்கும் போது நாம் இருந்ததை விட பெரிய அகண்ட வெளியான ஆகாயத்தில் இருந்து பறவைகள் நம் சிறிய முற்றத்துக்கு வருகின்றன. நமக்கு முற்றம் ஒரு அகண்ட வெளி. ஆனால் பறவைகளுக்கு முற்றத்துக்கு வருவது ஒரு சின்ன இடத்தை அடைவது தான்– அதாவது நகுலன் முற்றத்தில் இருந்து வீட்டுக்கு திரும்புவது போல பறவைகள் ஆகாயத்தில் இருந்து அங்கு வருகின்றன.
அடுத்து இந்த கவிதையின் குறியீட்டு தளம். உள்ளும் புறமும் நகுலனுக்கு வெறும் தோற்றநிலைகள் தாம். இந்த கவிதைகள் நினைவுள்ளதா?
“என்னைப் பார்க்க வந்தவர்
தன்னைப் பார்
என சொல்லிச் சென்றார்”

“‘இப்போதும்
அங்கு தான்
இருக்கிறீர்களா’
என்று
கேட்டார்
’எப்பொழுதும்
அங்கு தான் இருப்பேன்
என்றேன்’”
நகுலன் கவிதைகளில் இப்படி யாராவது அவரைத் தேடி வீட்டுக்கு வருவார்கள். ஆனால் அவர்கள் பார்ப்பது நகுலனாக இருக்காது, நகுலனைக் குறித்த தம் பிம்பத்தோடு உரையாடுவார்கள், விடை பெறுவார்கள். மனித நிலைகளில் மட்டுமல்ல மனம் சம்மந்தப்பட்ட அனைத்திலும் நாம் வெளியே பார்ப்பது நம் மனக்கண்ணாடியின் பிம்பங்களை மட்டும் தான் என்றார் அவர். இது வைதிக சிந்தனை போல் தெரியலாம். ஆனால் அப்படி அல்ல. மனித பாவனைகளுக்கு அப்பால் ஒரு உண்மை உள்ளதாய் நகுலன் நம்பவில்லை. அவருடைய பிரச்சனை அவரே தன்னை பார்க்கையில் கூட வெறும் பிரதிபிம்பம் தான் தெரிகிறது. இது நகுலனின் மனப்பதிவு மற்றும் நம்பிக்கை. இவ்விசயத்தை மேற்சொன்ன பறவைக் கவிதையில் பொருத்தி பார்கலாம்.
அகவெளியும் பொய், புறவெளியும் பொய், இரண்டும் கற்பனைத் தோற்றங்கள் என்கிறார் நகுலன். ஆகாயத்தை உண்மை என கொள்ளலாமா? பறவைகள் ஆகாயத்தை அடைந்ததும் பறப்பதை நிறுத்துவதில்லை, அவை மேலும் மேலும் உயர்ந்தோ தொலைவிலோ எதையோ தேடிப் பறந்து கொண்டே இருக்கின்றன. ஆகாயத்துக்கு அப்பால் எதுவோ உள்ளதாய் ஒரு பறவை உணர்ந்தால் ஆகாயமும் வெறும் ஒரு பொய் தோற்றம் தான்.
சரி, இந்த கவிதையை குறியீட்டு கவிதையாக தோன்ற விடாமல் இருக்க நகுலன் ஒன்று செய்கிறார். அது தான் நமக்கு முக்கியம். “மணி பிற்பகல் 4.15” எனும் குறிப்பு அது. இக்குறிப்பு அவசியமா என நீங்கள் நினைக்கலாம். கவிதை நிகழ்வது காலையா மாலையா என்பது முக்கியமல்ல தானே. குறிப்பாய் எத்தனை மணி என்பது அவசியமே அல்ல. ஆனால் இக்குறிப்புக்கு ஒரு அவசியம் உண்டு. இது தான் இக்கவிதையை நேரடியான கவிதையாக்குகிறது. இதை நீக்கினால் நிச்சயம் குறியீட்டு கவிதை தான். இக்குறிப்புடன் இது நேரடிக்கும் குறியீட்டுக்கும் இடையிலான கவிதை ஆகிறது. நகுலன் இந்த விசயத்தை மிக கவனமாக செய்திருக்கிறார் என்பதை அவரது பிற கவிதைகள் படிக்கிறவர்களுக்கு புரியும்.


Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...