Skip to main content

பேஸ்புக்: நம் மனதின் ஸ்விட்ச் யார் வசம்?


\
இதுக்கெல்லாம் போய் கோவப்படலாமா என அடிக்கடி நினைப்பேன். அது பெரும்பாலும் முகநூலில் என் நடவடிக்கை சம்மந்தப்பட்டதாக இருக்கும். ஒரு விசயம் பார்த்து கொந்தளித்து மாங்கு மாங்கென்று எழுதி விட்டு கொஞ்ச நேரம் கழித்து இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை என தோன்றும். ஒரு அற்ப விசயம் எப்படி எனக்கு முக்கிய பிரச்சனையாக தோன்றியது?

1) ஏனென்றால் முகநூல் சில செய்திகளை நாம் தவிர்க்கவே முடியாதபடி நம் முகத்தில் அறைகிறது. அல்லது தட்டில் வைத்து நீட்டுகிறது. பரிந்துரைக்கிறது. எப்படியோ பார்க்க வைக்கிறது. நாம் டென்ஷனாகிறோம். அதாவது நமக்கு பிடிக்காத ஒருவர் நமக்கு பிடிக்காத ஒன்றை மின்னஞ்சலில் எழுதியிருக்கிறார். நாம் அதை திறந்து பார்க்காமலே அழிக்கலாம். ஏனென்றால் சைன் இன் செய்தவுடன் மின்னஞ்சல் பேச்சில் இப்படி ஒரு மின்னஞ்சல் வந்திருக்கிறது என்கிற மேலோட்ட தகவலை தான் தரும். மின்னஞ்சலை மொத்தமாய் உங்கள் முகத்துக்கு நீட்டாது. நீங்கள் அதை படிக்க வேண்டுமா என யோசிக்கும் நேரத்தை அவகாசத்தை தரும். ஆனால் பேஸ்புக் அந்த பத்து நொடிகளை உங்களுக்கு வழங்காது. நீங்கள் உள்ளே நுழைந்த அடுத்த நொடி நீங்கள் நேற்று படித்தவரின் நிலைத்தகவலை மொத்தமாய் உங்கள் முன் காட்டும். அதற்கு என்ன நிலைப்பாடு எடுப்பது என முடிவெடுக்கும் முன் சில நூறு பேர் அதற்கு தெரிவிக்கிற கருத்துக்களை, விருப்பக்குறிகளை காட்டும். நீங்கள் பிடிக்காத உணவை வலுக்கட்டாயமாய் ஊட்டப்படும் பத்துமாத குழந்தை போல் விக்கித்து போவீர்கள். மனிதனின் ஒரு அடிப்படை குணம் பக்கத்தில் இருப்பவரின் முகபாவத்தை போல செய்வது. பக்கத்தில் இருப்பவர் கொட்டாவி விட்டால் உங்களுக்கும் கொட்டாவி வரும். திடீரென்று சம்மந்தமில்லாத ஒருவர் கேவி கேவி அழுதால் உங்களுக்கும் வயிறு கலங்கும். பேஸ்புக்கில் பின்னூட்டங்கள் உங்களை இது போல் போல செய்ய வைக்கிறது. பத்து பேர் ஒன்றை திட்டி பின்னூட்டமிட்டால் உங்களுக்கும் கோபம் வந்து திட்ட தோன்றும். நிலைத்தகவல் பார்த்து உங்களுக்கு கோபம் வரவில்லை என்றாலும் கூட கொட்டாவி வந்தாலும் கூட பின்னூட்டங்களை கவனித்தால் சற்று நேரத்தில் தாண்டவமூர்த்தி ஆகி விடுவீர்கள்.
2) அது போல் பேஸ்புக்கில் நாம் கால் விநாடிக்கு மேல் எதற்கும் நேரம் ஒதுக்குவதில்லை என்பதால் பார்த்ததும் கோபப்பட்டு/சிரித்து பழகி விட்டோம். கால்நொடி உணர்ச்சிக்கு உடனடியாய் கருத்தெழுத பேஸ்புக் தூண்டுகிறது. அதற்கும் சில விநாடிகள் தாம் அவகாசம். இதற்கும் யோசிக்க எங்கே நேரம்? எனக்கு இதை நினைக்கையில் முன்னர் நள்ளிரவில் கலைஞரை கைது பண்ணின அதிர்ச்சியில் யாரோ ஒரு தொண்டர் இறந்து போனது நினைவு வரும். ஏனென்றால் கலைஞர் அந்த அற்ப சம்பவத்தை தாண்டி ரொம்ப ஆண்டுகள் வந்து விட்டார். இன்னும் ஜம்மென்று இருக்கிறார். ஆனால் அன்றிரவு அதிர்ச்சி அடைந்தவர் தான் பாவம் உயிருடன் இல்லை.
யோசித்து பார்த்தால் பேஸ்புக் மட்டும் இணையத்தில் இருந்து சற்று விடுபட்டு இயங்குவது விளங்கும். இணையத்தில் விளம்பரங்கள் உண்டு. ஆனால் அவை உங்களை தொந்தரவு பண்ணாமல் இருக்கவும் வழி வகையும் உண்டு. ஜிமெயிலிலும் நாம் படிக்கிற மின்னஞ்சலை பொறுத்து உடனடி அல்காரிதம் வைத்து விளம்பரம் வருகிறது. அதாவது நீங்கள் யாருக்கோ குழந்தை பிறந்தது பற்றி சேதி படித்தால் வலப்பக்கம் குழந்தை வளர்ப்புக்கான சாதனங்களின் விளம்பரங்கள் வரும். ஆனால் நம் மனதின் ஒரு சிறப்பு இது போன்ற குப்பைகளை கவனிக்காமலே தவிர்ப்பது. மிக சரியாக கண்கள் மின்னஞ்சலை படித்து விட்டு மூடி விடும். ஆனால் பேஸ்புக்கில் ஒருவர் பணம் செலுத்தினால் அவரது பதிவு (விளம்பரம்) நீங்கள் வழக்கமாய் படிக்கிற ஸ்டிரீமிலேயே நடுவில் உங்கள் பார்வையால் தவிர்க்க முடியாத படி வரும்.
இணையம் என்பது நாம் விரும்புகிறதை தேவையான நேரத்தில் சுதந்திரத்துடன் படிக்கிற பார்க்கிற இடம். ஆனால் பேஸ்புக் நேர்மாறாக டி.வி போல் இயங்குகிறது. அதில் காட்டுவதை தான் நீங்கள் பார்க்க முடியும். உதாரணமாய் நித்தியானந்தாவின் படுக்கையறை காட்சியை திரும்ப திரும்ப ஒரு சேனல் காட்டிக் கொண்டிருந்தால் தமிழகமே அதைப் பற்றித் தான் பேசும். பேச வேண்டும். வேறு வழியில்லை. இப்படி மனிதனின் உணர்ச்சியை, பார்க்கும் உரிமையை கட்டுப்படுத்துவது தான் ஊடகங்களின் உண்மையான அதிகாரம். பேஸ்புக் இதையே தான் பயனர்களின் உதவியுடன் செய்கிறது. அதிகம் பேசப்படுகிற பதிவுகள் எப்படியோ அனைவர் கண்ணிலும் பட்டு ஒரு பரபரப்பு தோன்றுகிறது. அது தீயாக பற்றி எரிகிறது. இதன் வழி நாம் எதற்கு எப்படி எந்நேரத்தில் எதிர்வினையாற்ற வேண்டும் என ஒரு ஊடகம் தீர்மானிக்கிறது. பேஸ்புக்கில் எதற்கும் நேரம் குறைவா, நாம் உடனுக்குடன் கோபப்பட்டு எதையாவது சொல்லி யாரையாவது கோபப்படுத்தி ஒரு இணைய கலவரத்துக்கு தீக்கொளுத்தி போட வேண்டும், தெரிந்தோ தெரியாமலோ.
இது நாம் உணர்ச்சிவசப்படுகிற பாணியை மெல்ல மாற்றி அமைக்கிறது. ஒரு பிரச்சனை முக்கியமா என யோசிக்க தவறுகிறோம். ஒரு பிரச்சனையின் பல்வேறு பரிமாணங்களை பார்க்காமல் கோபப்படுகிறோம். பேஸ்புக்கின் உண்மைத்தன்மை போன்ற தோற்றமும் இதற்கு ஒரு காரணம். இன்று மெல்ல மெல்ல நாம் டி.வி செய்திகள் மேல் அவநம்பிக்கை கொள்ள துவங்கி இருக்கிறோம். ஆனால் அதே சேதியை யாராவது பேஸ்புக்கில் பேசும் போது அது இன்னும் உண்மையாக நெருக்கமாக படுகிறது. அதனால் தான் ஒரு சாதாரண பின்னூட்டத்துக்கு கூட மதிப்பளித்து கடுமையாய் மோதிக் கொள்கிறோம்.
பேஸ்புக் இல்லாத காலத்தில் நாஞ்சில் நாடனின் பட்டியல் இவ்வளவு குழப்பங்களை வெறுப்பான உரையாடல்களை உருவாக்கியிருக்குமா? ஒருவேளை பிளாகுகளில் சில பேர் அதுவும் பின்னூட்டங்களில் அரட்டையடித்து மோதிக் கொண்டிருப்பார்கள். ஆனால் பேஸ்புக் காலத்தில் நாஞ்சிலின் பட்டியலல்ல அது பற்றி பிறர் எழுதும் கருத்துக்கள் தான் அதிகம் சர்ச்சைகளை உருவாக்கியது. இவரை ஏன் சொல்லவில்லை என்று அவர் கேட்டால் அவர் எப்படி இவரை இப்படி சொல்லலாம் என இன்னொருவர் யோசித்தால் ஆயிரம் கற்பனை குடிசைகள் எரியும். யோசித்து பாருங்கள் இந்த சர்ச்சையின் போது நாம் ஏதாவது ஒரு உருப்படியான விவாதத்தை உருவாக்கினோமா? கருத்துக்களை கண்டுபிடித்தோமா? அவதானித்தோமா? இல்லை. முடிவில் வெறும் சாம்பலே எஞ்சியது.
பேஸ்புக் தருகிற வெளிப்பாட்டு சுதந்திரம் அபாரமானது, பாராட்டத்தக்கது. ஆனால் அது நம் உளவியலை கட்டுப்படுத்துவது, உணர்ச்சி தூண்டுதலை தீர்மானிப்பது வருத்தத்துக்கு உரியது. அதை விட சிக்கல் அது உணர்ச்சிகளை மட்டுமே தூண்டுகிறது என்பது. அதுவும் சொடக்கு போடுகிற வேகத்தில். உதாரணமாய் ஒரு நண்பர் உங்களுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்புகிறார். அதில் உங்களுக்கு பிடித்த இளையராஜாவை திட்டுகிறார். நீங்கள் கொந்தளித்து திரும்ப குறுஞ்செய்தி அனுப்ப மாட்டீர்கள். ஏன் இப்படி எழுதுகிறான் என யோசிப்பீர்கள். உங்கள் பதிலை அனுப்புவீர்கள். அல்லது கூப்பிட்டு பேசுவீர்கள். ஆனால் அதற்காக நீங்கள் தெருவில் புரண்டு அடிக்க மாட்டீர்கள். காரணம் உணர்ச்சிகளை ஆறப் போட்டு யோசிக்கும் நேரத்தை குறுஞ்செய்தியின் வடிவம் அளிக்கிறது. பேஸ்புக்கில் போல் டக்கென அடிக்க முடியாது. இலவசமும் கிடையாது. அது போல் இது அந்தரங்கமான உரையாடல் எனும் உணர்வு கூட உங்களை கண்ணியமாய் யோசிக்க செய்யும். ஆனால் பேஸ்புக்கில் நீங்கள் உடனடியாய் எளிதாய் செலவின்றி பதில் அடிக்கலாம். அதை ஊர் உலகமே பார்க்கும். அது ஒரு பெரிய பிரச்சனை போல் தெரியும். ஒரு படத்தையும் இணைத்து விட்டால் உங்கள் நிலைத்தகவல் ஒரு பத்திரிகை தலைப்பு சேதியை போன்றே தோன்றும். சொல்லப்போனால் அதை விட முக்கியமாய் தோன்றும்.
ஆனால் இவை எதுவுமே பத்து நிமிஷம் ஆறப் போட்டால் உங்களுக்கே சரியாய் வேகாத வெண்டைக்காய் பொரியல் போல தோன்றும். என் நண்பர் ஒருவர் பிரபல முகநூல் பதிவர். ஒரு நிலைத்தகவலை போட்டு பத்து நிமிடம் பார்ப்பார். அதற்கு போதுமான விருப்பக்குறிகள் விழாவிட்டால் அழித்து விடுவார். பார்த்த அடுத்த நொடியில் உணர்ச்சிவசப்பட வைக்காவிட்டால் அது முக்கியமல்ல. இந்தளவுக்கு அற்பமாய் அபத்தமாய் போய்க் கொண்டிருக்கிறது நாம் கோபப்படுகிற பாணி.
சரி குறைந்தது நாம் தானே இச்செய்திகளை உருவாக்கி பரபரப்புகளை கட்டுப்படுத்துகிறோம். நாம் அழித்து விட்டால் முடிந்து போய் விட்டது என நினைக்கலாம். ஆனால் அப்படி அல்ல.
பேஸ்புக்கில் அத்தனை பதிவுகளும் உங்கள் முகப்பில் தோன்றாது. நீங்கள் வழக்கமாய் படிப்பவர்களிடம் இருந்து சில பதிவுகள் (எப்படியோ) தேர்ந்தெடுக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்படும். சமீபமாக அமெரிக்காவில் ஒரு பலகலைக்கழகத்தில் ஒரு ஆய்வு நடந்தது. பேஸ்புக்கில் சில பயனர்களுக்கு சில குறிப்பிட்ட நிலைத்தகவல்களும், பதிவுகளும் அவர்களுக்கு தெரியாமல் அவர்களது ஸ்டிரீமில் அளிக்கப்பட்டது. அதற்கு அவர்கள் எப்படி உணர்ச்சிவசப்பட்டு எழுதுகிறாரகள், இது அவர்களின் மனநிலையை எப்படி பாதித்தது, அவர்களை தொடர்வோர் எப்படியெல்லாம் எதிர்வினை செய்தார்கள் என பேஸ்புக்கே தரவுகளை வழங்க அதைக் கொண்டு ஆய்வு நடந்தது.
எனக்கொரு சந்தேகம். ஒருவருடைய ஸ்டிரீமில் இப்படி எவையெவை முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்பது இந்த ஆய்வுக்காக தனியாய் நடந்ததா அல்லது பொதுவாகவே பேஸ்புக் இதை செய்கிறதா? இல்லை என்றால் பேஸ்புக் இதை செய்ய துவங்கும் காலம் அருகாமையில் உள்ளதா? உதாரணமாய் பெட்ரோல் விலை உயர்வை எடுங்கள். அது பற்றி கோபமாய் எழுதப்படும் நிலைத்தகவல் மற்றும் பின்னூட்டங்களை மட்டும் அனைவர் முகப்புகளிலும் அதிகம் தெரியும்படி பண்ணி பேஸ்புக்கால செயற்கையாய் ஒரு கலவரச் சூழலை, போலி பதற்றத்தை ஏற்படுத்த முடியாதா? இப்போதே நாம் மேற்கொள்ளும் உரையாடல்களை கண்காணித்து அதைக் கொண்டு தோதான விளம்பரங்களை தரும் பேஸ்புக் ஒருவிதத்தில் நம் அந்தரங்களை வெளியே விற்று காசு பண்ணுகிறது. அடுத்த கட்டமாக ஒரு படம் அல்லது பொருளின் விற்பனைக்காக ஒரு செயற்கை பரபரப்பை அது ஏன் ஏற்படுத்தாது? பேஸ்புக் செய்ய வேண்டியதெல்லாம் நம் முகப்பிலும், டிக்கரிலும் எது அதிகமாய் தோன்ற வேண்டும் என தீர்மானிப்பது தான். ஒரு மென்பொருளின் துணையுடன் லட்சக்கணக்கானோரை அது இவ்வாறு கட்டுப்படுத்தினால் இன்று மாலை ஆறு மணியில் இருந்து ஆறு பத்துக்குள் இத்தனை லட்சம் பேரின் ரத்தக்கொதிப்பை உயர வைக்க வேண்டும் என இலக்கை தீர்மானித்து செயல்படுத்த முடியும். இந்த நாள் மாலை முழுக்க இப்படம் பற்றியே லட்சக்கணக்கான பேரின் பேச்சிருக்க வேண்டும் என நம் மனநிலையை முழுக்க ஆட்ரா ராமா ஆடு என பண்ண முடியும். இது நடக்கப் போகிறதா அல்லது ஏற்கனவே நடந்து கொண்டிருக்கிறதா?
இப்படி எந்த பிரச்சனை என்றாலும் நொடியில் உணர்ச்சிவசப்படும் போது நாம் அதன் ஆழத்தை அறிய தவறுகிறோம். அது போல் சில முக்கியமான விசயங்களுக்கும் சிலரிடம் ஒரு அற்பமான/மேலோட்டமான மனவெளிப்பாடு மட்டுமே இருக்கலாம். எல்லாராலும் சரியாக சிந்திக்க முடியாது தான். அதை நாம் நன்கு உணர்ந்தே இருக்கிறோம். ஒரு அரசியல் தலைவர் பற்றி நமக்கு மிகுந்த அபிமானம் இருக்கலாம். அதேவேளை அவர் மீது எல்லாருக்கும் மரியாதை இருக்க வேண்டியதில்லை எனவும் அறிவோம். அதை ஏற்று இவர்களின் கருத்து முக்கியமில்லை என நினைத்து நம் பாதையில் பயணிக்கிறோம். ஆனால் பேஸ்புக்கில் ஒருவர் பிரபாகரனின் படத்தை போட்டு கீழே ஆபாசமாய் எழுதுகிறார் என வைப்போம். நீங்கள் ஒரு ஈழப்போராட்ட அபிமானி. உங்களுக்கு அதைப் பார்த்ததும் ரத்தம் கொதிக்கும். ஆனால் ஏன் கொதிக்க வேண்டும்? பொதுக்கழிப்பறையில் இருக்கையில் அல்லது தெருமுனையில் யாரோ ஒருவர் இதே போல் அவமானகரமாய் பேசினால் நின்று சண்டை போடுவீர்களா? அலுவலக கேண்டீனில் பக்கத்து மேஜை உரையாடலில் ஒருவர் இன்னொருவரிடம் பிரபாகரனை திட்டி பேசினால் தலையிட்டு அவரது கழுத்தை பிடிப்பீர்களா? நீங்கள் வீட்டுக்கு வருகிற வழியில் பத்து பேர் அங்கங்கே நின்று இப்படி பேசுவதை கேட்டு அவர்களிடம் தர்க்கித்தால் நீங்கள் இரவு பன்னிரெண்டுக்கு கூட வீட்டுக்கு வந்து சேர முடியாது. முட்டாள்கள் பேசுகிறார்கள் என நினைத்து விட்டு வந்து விடுவோம். ஆனால் பேஸ்புக்கில் மட்டும் ஏன் உடனடியாய் கோபித்து சண்டை போடுகிறோம்? அது பொதுவெளி என்றா? தெருமுனை கூட பொதுவெளி தானே? எழுதப்படுவதால் அது மதிப்புக்குரியது என்றா? இணையத்தில் ஆபாசக்கதைகளூம் கிசுகிசுக்களும் கூடத் தானே எழுதப்படுகிறது? எழுதப்படுவதால் ஒன்று மதிப்புக்குரியது என்றால் கழிப்பறையிலும் கூடத்தான் ஏகப்பட்ட வாக்கியங்கள் எழுதப்படுகின்றன. அதற்கெல்லாம் ஒரு கரிக்கட்டி எடுத்து பின்னூட்டம் சுவரிலேயே எழுதுகிறோமா?
நீங்கள் சற்றும் பொருட்படுத்தாத மாறுபட்ட கருத்துக்களை கொண்டிருப்போரை பொதுவெளியில் எளிதில் கடந்து போகிற நீங்கள் பேஸ்புக்கில் மட்டும் அவர்களை இவ்வளவு பொருட்படுத்தி பேசுகிறீர்கள்? அவர்கள் போடும் ஒரு சிறுசொல்லுக்கு ஏன் இவ்வளவு கொந்தளிக்கிறீர்கள்? உங்கள் மனம் என்பது யார் கல் வீசினாலும் அலைகளை உருவாக்கும் நீர்ப்பரப்பை போன்றதா? ஒரே ஆள் எப்படி ரெண்டு விதமாய் இருக்கிறீர்கள்? நம் மனதின் ஸ்விட்ச் யார் வசம் இருக்கிறது?

நன்றி: அமிர்தா ஆகஸ்டு 2014

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...