முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தீபாவளியும் அமேசானும்


தீபாவளி தள்ளுபடி விற்பனையை ஒட்டி தன்னால் கையாள முடியவில்லை என பிளிப்கார்ட் வாடிக்கையாளர்களிடம் மின்னஞ்சலில் மன்னிப்பு கேட்டது. ஆனால் ஆர்டர் செய்தவர்களுக்கு பொருளை ஒழுங்காக நேரத்தை அனுப்பியது. உண்மையில் அவர்களை விட மோசமாய் சொதப்பியது அமேசான் தான். தீபாவளியை ஒட்டி வந்த ஏகப்பட்ட ஆர்டர்களை அவர்களால் சரியாக கொரியர் பண்ண முடியவில்லை. அமேசானின் பேஸ்புக் பக்கம் புகார்களால் நிரம்பி வழிகிறது. தீபாவளியினால் பணியாளர்கள் விடுமுறையில் போவதும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் அதை விட அமேசானுக்கு தனது கொரியர் நிறுவனம் எப்படி எந்நேரம் பொருட்களை கொண்டு சேர்க்கிறது என்பது பற்றி போதுமான தகவல் இல்லை என்பது தான் சிக்கல். கொரியர் ஆட்கள் வாடிக்கையாளர்களுக்கு சரியான தகவல் தருவதோ தொடர்பில் இருப்பதோ இல்லை. வாடிக்கையாளர் சேவை தொடர்பாளரை அழைத்தால் உடனே மன்னிப்பு கேட்டு உறுதி அளிப்பார்கள். தினமும் கூப்பிட்டாலும் இதோ புலி வரும் புலி வரும் என்பார்கள். ஆனால் வராது.

இந்த கண்ணாமூச்சி விளையாட்டினால் அமேசானின் பெயர் ரொம்பவே கெட்டுவிட்டது. தீபாவளி முடிந்து தான் பலருக்கும் பொருட்கள் வந்து சேரும் போல. தீபாவளிக்கு பரிசு ஆர்டர் பண்ணினவர்கள் தாம் பாவம். நானும் அமேசானில் ஆர்டர் பண்ணின ஒரு பொருள் வந்து சேரவில்லை. அமேசானிடம் புகார் அளித்து, வாடிக்கையாளர் சேவை தொடர்பாளர்களிடம் பேசு பேசி அலுத்து விட்டது. நம்மூரில் ஒரு மழை பெய்தால் டிரான்ஸ்பார்மர் வெடிக்கிறது. சாலைகளில் மக்கள் காலை வைத்தால் உள்ளிழுத்துக் கொள்கிறது. வீடுகளுக்குள் சேற்று வெள்ளம் ஓடுகிறது. வண்டிகளுக்குள் நீர் புகுந்து நின்று போகின்றன. மின்சாரத்தை நிறுத்தி வைக்கிறார்கள். எங்கள் வீட்டில் மின் இணைப்புகள் பழையன என்பதால் அடிக்கடி ஏதாவது ஒரு விளக்கோ ஒயரோ நமுத்த பட்டாசு போல் வெடிக்கிறது. நாளை மாலை தீபாவளிக்காக ஏராளமான மக்கள் சென்னையை காலி பண்ணப் போவதால் போக்குவரத்துக்கு மலச்சிக்கல் வந்து யாரும் நகர முடியதபடி ஆகும் என்கிறார்கள். அதனால் நாளை சீக்கிரமாக வீட்டுவருவது நல்லது என அறிவுரை சொல்கிறார்கள். உண்மையில் ஒரு பண்டிகை விழா என்றால் கொண்டாட்ட மனநிலை வர வேண்டும். மழை என்றால் சிலாகிக்க வேண்டும். ஆனால் இங்கு நாம் என்ன ஆபத்தெல்லாம் சந்திக்க போகிறோமோ என கவலைப்பட வேண்டி இருக்கிறது. இங்கு கொண்டாட்ட தினங்களில் ஒரு பதற்ற நிலை தான் ஏற்படுகிறது. அவசரமாய் எப்படியாவது மகிழ்ச்சியை, உற்சாகத்தை ஒரு கவளை முழுங்கி ஒரு வாய் தண்ணீர் குடித்து விடுவோம் என பதறுகிறோம். பண்டிகை தினங்களில் உருவாகும் மிகப்பெரும் மக்கள் இடப்பெயர்வை சமாளிக்கும் கட்டமைப்பு திறன் நம் நாட்டுக்கு இல்லை. இத்தினங்களில் பயணிக்கிறவர்கள் உண்மையில் ரொம்ப பாவம். நாளைய தினம் எத்தனை பேர் கோயம்பேட்டி மூச்சுத்திணறப் போகிறார்களோ!


பண்டிகை என்றால் எந்த சேவையும் இயங்காது. அமேசானை மட்டும் குற்றம் சொல்லி என்ன ஆகப் போகிறது. பழகிப் போச்சு. எல்லா இடர்களையும் மறந்து கொண்டாட கற்றுக் கொண்டு விட்டோம். மழையும், பண்டிகையும், பந்தும், கொண்டாட்டங்களும், விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களும் இல்லாத போது தான் நம் ஊர் இயல்பாக சரியாக இருக்கிறது. தீபாவளிக்கு பட்டாசு வெடித்தால் நாய்கள் எங்காவது போய் ஒரு வாரத்துக்கு ஒளிந்து கொள்ளும். நாமும் ஒளிந்து கொள்ள வேண்டியது தான். ஒளிந்திருந்தபடி கொண்டாட வேண்டியது தான். 

கருத்துகள்

krish இவ்வாறு கூறியுள்ளார்…
அழகாக சொல்லிவிட்டீர்கள்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...