முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தியாவும் பாகிஸ்தானும்: இருவேறு அணுகுமுறைகள்



இம்முறை பாகிஸ்தான் அணியில் அஜ்மல் இல்லை. நான்கு இளம் வீச்சாளர்களுடன் இறங்கி ஆஸ்திரேலியாவை முதல் டெஸ்டில் 221 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளது. என்னை மிகவும் கவர்ந்த விசயங்கள் இரண்டு.


ஒன்று, அவர்கள் இறுக்கமாக ஒழுக்கமாக பந்து வீசி நெருக்கடியை உருவாக்குவது. மட்டையாளர்கள் இந்த அழுத்தம் தாளாமலே அவுட் ஆகி விடுவார்கள். அது போல் சாதாரணமாய் ஒரு லைன் மற்றும் லெங்தில் வீசினால் கூட, பந்து ஒன்றும் பெரிதாய் செய்யாமல் இருந்தாலும் கூட அவர்களின் பந்து வீச்சாளர்களின் உடல் மொழி ஆக்ரோசமாக ஆவேசமாக உள்ளது. மொத்த களத்தடுப்பாளர்களும் பத்து வாடகை கொலையாளிகள் பொருட்களுடன் சூழ்வது போல் மட்டையாளனை சூழ்வார்கள். இது உருவாக்கும் ஒரு அச்சமூட்டும் சூழல் முக்கியமானது. இதுவே இந்தியா என்றால் களத்தடுப்பாளர்கள் ஏதோ திருவிழாவுக்கு போன குழந்தைகள் போல் நின்று கொண்டிருப்பார்கள். ஓஜ்ஹா முதலிரவு பெண் போல் அலுங்காமல் வந்து செல்லமாக வீசுவார். விட்டால் மட்டையாளனை அணைத்து முத்தமிடுவாரோ என அச்சமாக இருக்கும். அப்படி ஒரு இட்லி வடை அணுகுமுறை நம் வீச்சாளர்களுக்கு.

இன்னொரு வித்தியாசம் லைன். பாகிஸ்தான் வீச்சாளர்கள், அனுபவமற்ற புது சுழல் வீச்சாளர்களான பாபர், யாசிர் ஷாஹ் கூட மிகச் சரியாக ஆப் ஸ்டம்பில் வீசுகிறார்கள். ஓஜஹா போல் வைடாக அல்ல. மேலும் ஒரே இடத்தில் பந்தை திரும்ப திரும்ப விழ வைக்கும் கூர்மை வியப்பேற்படுத்துகிறது. நம் ஓஜ்ஹா என்றால் பாபர் வீசுவதில் இருந்து நான்கு அங்குலமாவது வைடாக தான் வீசுவார். இது ஒரு எதிர்மறை மனநிலையில் இருந்து வருகிறது. போன முறை ஆஸ்திரேலிய பயணத்தில் அஷ்வின் நன்றாக வீசினார் என்றாலும் அவரை நம்ப முடியாது. T20யும் ஒருநாள் ஆட்டங்களும் அவரை சீர்குலைத்து விட்டன. அவர் பந்து வீசும் போது கட்டாயமாக இரண்டு பந்துகளாவது ஆப் ஸ்டம்புக்கு வெளியே குறைநீளத்தில் விழும். இன்னும் ரெண்டு லெக் ஸ்டெம்புக்கு வெளியே போகும். இப்படி ஏதோ ரெண்டு வார நாய்க்குட்டி விளையாடுவது போல் அவரது பந்துகள் விழும். மிஷ்ரா கூட கிட்டத்தட்ட இதே நிலையில் தான் இருக்கிறார். ஆனால் பாகிஸ்தானின் பகுதிநேர சுழலரான ஹபீஸ் அஷ்வினை விட நூறு மடங்கு அதிக கூர்மையுடன் கட்டுப்பாடுடன் வீசுகிறார். இந்த கட்டுப்பாடும் அவேசமான அணுகுமுறையும் தான் பாகிஸ்தானின் பலம். இந்த டெஸ்டில் ஆடுதளம் அவ்வளவு தட்டையானது. சுழலவே இல்லை. அதில் ஆஸ்திரேலியாவை முன்னூறுக்கு கீழ் சுருட்டியது ஒரு சாதனை தான். இந்தியாவுக்கு எதிரே என்றால் ஆஸ்திரேலியா நிச்சயம் 450 மேல் எடுத்திருக்கும். அதனால் தான் எந்த அணியை தோற்கடிக்கவும் நமக்கு அதிகமாய் சுழலும் ரெடிமேட் ஆடுதளங்கள் தேவைப்படுகின்றன.


இறுதியாய் என்னைக் கவர்ந்த அந்த இரண்டாவது விசயம் ஆட்டம் முடிந்ததும் பரிசளிப்பின் போது அணித்தலைவர் மிஸ்பா பேசியது. அவர் பிரதானமாய் தன் பந்து வீச்சாளர்களைத் தான் புகழ்ந்தார். இத்தனைக்கும் யூனிஸ்கான் இரு சதங்களும், ஷேஸாத் பிரமாதமாய் ஆடி ஒரு சதமும் அடித்திருந்தனர். இதுவே தோனி என்றால் ஆட்டத்தை வென்றதற்கு மட்டையாளர்கள் தாம் காரணம் என மீண்டும் மீண்டும் புகழ்ந்திருப்பார். எனக்கு பிரவீன் குமாரின் பேட்டி ஒன்றில் அவர் சொன்னது நினைவு வந்தது. உத்தர பிரதேச அணியில் குமார் ஆடும் போது அங்கே வேகப் பந்து வீச்சாளர்கள் ஒரு குழுவாக சேர்ந்து சதா பந்து வீச்சு பற்றி பேசுவது, பயிற்சி செய்வது என இருப்பார்கள். அவர் அங்கு நிறைய கற்றுக் கொள்கிறார். ஆனால் இந்திய அணிக்கு போன பின் அங்கு யாரும் பந்து வீச்சு பற்றி விவாதிப்பதோ உற்சாகமாய் தகவல் பரிமாறுவதோ இல்லை. முழுக்க சதா மட்டையாட்டம் பற்றின விவாதம் தான். அந்த சூழலில் பந்து வீச்சாளர்களுக்கு எந்த ஊக்கமும் அங்கு இல்லை என்றார் பிரவீன் குமார். எந்த நல்ல வீச்சாளர்கள் நம் அணிக்கு வந்தாலும் உடனே காயடிக்கப்படுவதன் ரகசியம் இது தான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...