முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தியாவும் பாகிஸ்தானும்: இருவேறு அணுகுமுறைகள்



இம்முறை பாகிஸ்தான் அணியில் அஜ்மல் இல்லை. நான்கு இளம் வீச்சாளர்களுடன் இறங்கி ஆஸ்திரேலியாவை முதல் டெஸ்டில் 221 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளது. என்னை மிகவும் கவர்ந்த விசயங்கள் இரண்டு.


ஒன்று, அவர்கள் இறுக்கமாக ஒழுக்கமாக பந்து வீசி நெருக்கடியை உருவாக்குவது. மட்டையாளர்கள் இந்த அழுத்தம் தாளாமலே அவுட் ஆகி விடுவார்கள். அது போல் சாதாரணமாய் ஒரு லைன் மற்றும் லெங்தில் வீசினால் கூட, பந்து ஒன்றும் பெரிதாய் செய்யாமல் இருந்தாலும் கூட அவர்களின் பந்து வீச்சாளர்களின் உடல் மொழி ஆக்ரோசமாக ஆவேசமாக உள்ளது. மொத்த களத்தடுப்பாளர்களும் பத்து வாடகை கொலையாளிகள் பொருட்களுடன் சூழ்வது போல் மட்டையாளனை சூழ்வார்கள். இது உருவாக்கும் ஒரு அச்சமூட்டும் சூழல் முக்கியமானது. இதுவே இந்தியா என்றால் களத்தடுப்பாளர்கள் ஏதோ திருவிழாவுக்கு போன குழந்தைகள் போல் நின்று கொண்டிருப்பார்கள். ஓஜ்ஹா முதலிரவு பெண் போல் அலுங்காமல் வந்து செல்லமாக வீசுவார். விட்டால் மட்டையாளனை அணைத்து முத்தமிடுவாரோ என அச்சமாக இருக்கும். அப்படி ஒரு இட்லி வடை அணுகுமுறை நம் வீச்சாளர்களுக்கு.

இன்னொரு வித்தியாசம் லைன். பாகிஸ்தான் வீச்சாளர்கள், அனுபவமற்ற புது சுழல் வீச்சாளர்களான பாபர், யாசிர் ஷாஹ் கூட மிகச் சரியாக ஆப் ஸ்டம்பில் வீசுகிறார்கள். ஓஜஹா போல் வைடாக அல்ல. மேலும் ஒரே இடத்தில் பந்தை திரும்ப திரும்ப விழ வைக்கும் கூர்மை வியப்பேற்படுத்துகிறது. நம் ஓஜ்ஹா என்றால் பாபர் வீசுவதில் இருந்து நான்கு அங்குலமாவது வைடாக தான் வீசுவார். இது ஒரு எதிர்மறை மனநிலையில் இருந்து வருகிறது. போன முறை ஆஸ்திரேலிய பயணத்தில் அஷ்வின் நன்றாக வீசினார் என்றாலும் அவரை நம்ப முடியாது. T20யும் ஒருநாள் ஆட்டங்களும் அவரை சீர்குலைத்து விட்டன. அவர் பந்து வீசும் போது கட்டாயமாக இரண்டு பந்துகளாவது ஆப் ஸ்டம்புக்கு வெளியே குறைநீளத்தில் விழும். இன்னும் ரெண்டு லெக் ஸ்டெம்புக்கு வெளியே போகும். இப்படி ஏதோ ரெண்டு வார நாய்க்குட்டி விளையாடுவது போல் அவரது பந்துகள் விழும். மிஷ்ரா கூட கிட்டத்தட்ட இதே நிலையில் தான் இருக்கிறார். ஆனால் பாகிஸ்தானின் பகுதிநேர சுழலரான ஹபீஸ் அஷ்வினை விட நூறு மடங்கு அதிக கூர்மையுடன் கட்டுப்பாடுடன் வீசுகிறார். இந்த கட்டுப்பாடும் அவேசமான அணுகுமுறையும் தான் பாகிஸ்தானின் பலம். இந்த டெஸ்டில் ஆடுதளம் அவ்வளவு தட்டையானது. சுழலவே இல்லை. அதில் ஆஸ்திரேலியாவை முன்னூறுக்கு கீழ் சுருட்டியது ஒரு சாதனை தான். இந்தியாவுக்கு எதிரே என்றால் ஆஸ்திரேலியா நிச்சயம் 450 மேல் எடுத்திருக்கும். அதனால் தான் எந்த அணியை தோற்கடிக்கவும் நமக்கு அதிகமாய் சுழலும் ரெடிமேட் ஆடுதளங்கள் தேவைப்படுகின்றன.


இறுதியாய் என்னைக் கவர்ந்த அந்த இரண்டாவது விசயம் ஆட்டம் முடிந்ததும் பரிசளிப்பின் போது அணித்தலைவர் மிஸ்பா பேசியது. அவர் பிரதானமாய் தன் பந்து வீச்சாளர்களைத் தான் புகழ்ந்தார். இத்தனைக்கும் யூனிஸ்கான் இரு சதங்களும், ஷேஸாத் பிரமாதமாய் ஆடி ஒரு சதமும் அடித்திருந்தனர். இதுவே தோனி என்றால் ஆட்டத்தை வென்றதற்கு மட்டையாளர்கள் தாம் காரணம் என மீண்டும் மீண்டும் புகழ்ந்திருப்பார். எனக்கு பிரவீன் குமாரின் பேட்டி ஒன்றில் அவர் சொன்னது நினைவு வந்தது. உத்தர பிரதேச அணியில் குமார் ஆடும் போது அங்கே வேகப் பந்து வீச்சாளர்கள் ஒரு குழுவாக சேர்ந்து சதா பந்து வீச்சு பற்றி பேசுவது, பயிற்சி செய்வது என இருப்பார்கள். அவர் அங்கு நிறைய கற்றுக் கொள்கிறார். ஆனால் இந்திய அணிக்கு போன பின் அங்கு யாரும் பந்து வீச்சு பற்றி விவாதிப்பதோ உற்சாகமாய் தகவல் பரிமாறுவதோ இல்லை. முழுக்க சதா மட்டையாட்டம் பற்றின விவாதம் தான். அந்த சூழலில் பந்து வீச்சாளர்களுக்கு எந்த ஊக்கமும் அங்கு இல்லை என்றார் பிரவீன் குமார். எந்த நல்ல வீச்சாளர்கள் நம் அணிக்கு வந்தாலும் உடனே காயடிக்கப்படுவதன் ரகசியம் இது தான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.