நண்பர் சர்வோத்தமன் இயக்கியுள்ள
குறும்படம் இது: “இன்மையின் பாடல்”. ராவ் எனும் ஒரு முக்கியமான விஞ்ஞானி பொய் வழக்கில்
மாட்டி வேலையையும் கௌரவத்தையும் இழக்கிறார். அவர் மகன் விபத்தில் இறக்கிறான். குடும்பத்தால்
ஒதுக்கப்பட்டு தனியாய் வாழ்ந்து வருகிறார். அவரிடம் கடன் வசூலிக்க ஒரு நண்பர் ஹரி என்பவரை
அனுப்புகிறார். அதேவேளை ஹரிஹரன் எனும் ஒரு துணை ஆசிரியர் ராவை பேட்டி எடுக்க வருகிறார்.
ராவ் அவரிடம் தனக்கு நேர்ந்த துரதிர்ஷ்டம், அநீதியை கடந்து வந்து விட்டதாய், வாழ்க்கையின்
ஏற்றுத்தாழ்வுகளை ஒன்றாக பாவிக்க கற்றுக் கொண்டதாய் உணர்த்துகிறார். இவ்வேடத்தில் சி.எஸ்
ராமன் நன்றாக நடித்துள்ளார். ராவ் இந்த துணையாசிரியரை கடன் வாங்க வந்த ஆள் என குழப்பிக்
கொள்கிறார். ராவ் ஒரு தையல் கடையில் வேலை செய்கிறார். அங்குள்ளவர்கள் அவருக்கு மிகுந்த
மரியாதை அளிக்கிறார்கள். அவர் அவர்களுக்கு தன் தொப்பியை மெல்ல சரித்து மரியாதையை ஏற்கிறார்.
இவ்விடம் அழகாக உள்ளது. வீழ்ந்து விட்ட ஒரு ஆளாக அவரது பொருத்தமின்மை, அதன் அபத்தம்
படத்தில் நன்றாக வந்துள்ளது. படத்தின் இறுதியில் அவருக்கு “ஹரியும் ஹரனும் ஒன்றே” எனும்
பழைய பாடல் ஒன்று நினைவு வருகிறது. குடும்ப வாழ்விலும் வேலையிலும் ஏற்பட்ட வீழ்ச்சி
அவரை ஆன்மீக ரீதியாய் மலர வைத்திருக்கிறது. இன்னொரு கதையும் பக்கவாட்டில் செல்கிறது.
ஒரு சுவாரஸ்யமான, நம்மை சிந்திக்க தூண்டும் படைப்பு இது. கவனித்து பார்க்க வேண்டிய
படமும் கூட. படத்தை நகுலனுக்கு சமர்ப்பித்திருக்கிறார். பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை
பகிருங்கள்.
புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share