நண்பர் சர்வோத்தமன் இயக்கியுள்ள
குறும்படம் இது: “இன்மையின் பாடல்”. ராவ் எனும் ஒரு முக்கியமான விஞ்ஞானி பொய் வழக்கில்
மாட்டி வேலையையும் கௌரவத்தையும் இழக்கிறார். அவர் மகன் விபத்தில் இறக்கிறான். குடும்பத்தால்
ஒதுக்கப்பட்டு தனியாய் வாழ்ந்து வருகிறார். அவரிடம் கடன் வசூலிக்க ஒரு நண்பர் ஹரி என்பவரை
அனுப்புகிறார். அதேவேளை ஹரிஹரன் எனும் ஒரு துணை ஆசிரியர் ராவை பேட்டி எடுக்க வருகிறார்.
ராவ் அவரிடம் தனக்கு நேர்ந்த துரதிர்ஷ்டம், அநீதியை கடந்து வந்து விட்டதாய், வாழ்க்கையின்
ஏற்றுத்தாழ்வுகளை ஒன்றாக பாவிக்க கற்றுக் கொண்டதாய் உணர்த்துகிறார். இவ்வேடத்தில் சி.எஸ்
ராமன் நன்றாக நடித்துள்ளார். ராவ் இந்த துணையாசிரியரை கடன் வாங்க வந்த ஆள் என குழப்பிக்
கொள்கிறார். ராவ் ஒரு தையல் கடையில் வேலை செய்கிறார். அங்குள்ளவர்கள் அவருக்கு மிகுந்த
மரியாதை அளிக்கிறார்கள். அவர் அவர்களுக்கு தன் தொப்பியை மெல்ல சரித்து மரியாதையை ஏற்கிறார்.
இவ்விடம் அழகாக உள்ளது. வீழ்ந்து விட்ட ஒரு ஆளாக அவரது பொருத்தமின்மை, அதன் அபத்தம்
படத்தில் நன்றாக வந்துள்ளது. படத்தின் இறுதியில் அவருக்கு “ஹரியும் ஹரனும் ஒன்றே” எனும்
பழைய பாடல் ஒன்று நினைவு வருகிறது. குடும்ப வாழ்விலும் வேலையிலும் ஏற்பட்ட வீழ்ச்சி
அவரை ஆன்மீக ரீதியாய் மலர வைத்திருக்கிறது. இன்னொரு கதையும் பக்கவாட்டில் செல்கிறது.
ஒரு சுவாரஸ்யமான, நம்மை சிந்திக்க தூண்டும் படைப்பு இது. கவனித்து பார்க்க வேண்டிய
படமும் கூட. படத்தை நகுலனுக்கு சமர்ப்பித்திருக்கிறார். பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை
பகிருங்கள்.
மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...
கருத்துகள்