Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

புத்தக விற்பனையும் எளிய மக்களும்

புத்தகங்களை இலவசமாக விற்கலாமா என க்ரியா ராமகிருஷ்ணன் தமிழ் ஹிந்துவில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் புத்தகங்களை தரமாக அச்சிடுவது மிக விலைபிடிப்பான காரியம் என்றும், நாம் இன்னொரு புறம் புத்தகங்களை இலவசமாக கொடுக்க கேட்கிறோம், இது நியாயமில்லை என்றும் வாதிட்டிருக்கிறார். பண்பாட்டு அறிவு இலவசமாக ஒரு சமூகத்துக்கு கொடுக்கப்படும் என கேட்பதில் தவறில்லை. ஆனால் அதே வேளை புத்தகங்களுக்கு அரசும் மையசமூகமும் மீடியாவும் எந்த ஆதரவும் அளிக்காமல் பதிப்பாளர்களை மிகுந்த நெருக்கடிக்கு தள்ளி உள்ளது. எனக்குத் தெரிந்த பதிப்பாளர் தனது பத்திரிகை விலையை பத்து ரூபாய் உயர்த்தினார். எப்படி மக்கள் வாங்குவார்கள் என கேட்ட போது “பால் விலை ஏறினால் பால் குடிக்காமல் இருக்கிறார்களா?” என திரும்பக் கேட்டார். ஆனால் உணவு அத்தியாவசியப் பொருள். அதனை ஒரு பண்பாட்டு அறிவுச்சாதனத்துடன் ஒப்பிட இயலாது. ஆனால் பதிப்பாளரை அவ்வாறு பேச வைப்பது முழுக்க கைவிடப்பட்ட நிலை தான்.


இன்னொரு புறம் நாம் மத்திய, கீழ்மத்திய, அடித்தள மக்களின் கண்ணோட்டத்தில் இருந்தும் பார்க்க வேண்டும். ஒரு உதவி இயக்குநர் நண்பரிடம் பேசும் போது தனக்கு சம்பளம் நாலாயிரம் ரூபாய் என்றார். எப்படி சமாளிக்கிறீர்கள் எனக் கேட்க “எனக்கு எந்த தேவையும் பெரிதாய் இல்லை. புத்தகம் வாங்கவும் வெளியே போக வண்டி செலவுக்கும் பணம் கிடைத்தால் போதும்” என்றார். இந்த சமூகத்தில் அவரைப் போன்றவர்கள் புத்தகங்களை வெறுமனே வேடிக்கை பார்த்து கடந்து விட வேண்டும் என நாம் கூற முடியாது. புத்தகங்கள் வாசிப்பது ஒரு அடிப்படை உரிமை. அதை இந்த அரசும் சமூகமும் தனிமனிதனுக்கு அளிக்க வேண்டும். ஆனால் காலங்காலமாக விலை காரணமாய் புத்தகங்கள் சாதாரண மக்களூக்கு ஒரு கனவாகவே உள்ளது. நான் சிறுவனாய் இருக்கையில் பதினைந்து வயதில் தான் என் அப்பாவிடம் மிகவும் கெஞ்சி ஒரு புத்தகத்தை முதன்முதலில் வாங்கினேன், பிற்பாடும் என் வாசிப்பு இரவல் நூல்கள் வழி தான் நடந்தது. இது ஒரு அவல நிலை. ஒரு நாகரிக சமூகத்தில் சமூகத்தில் எந்த மூலையிலும் நூல்கள் எளிதாக எவர் கைக்கும் எட்டும்படி இருக்க வேண்டும்.

புத்தகங்கள் இலவசமாக கொடுக்கப்படுவது ஒன்றும் தவறல்ல. பண்பாட்டு அறிவு இலவசமாக கிடைப்பது நல்லது தானே. அதற்கான செலவை அரசு பார்த்துக் கொள்ளலாம். அரசு லேப்டாப் இலவசமாக வழங்குவது போல் நிறைய நூல்களை வாங்கி மாணவர்களுக்கு அளிக்கலாம். கல்லூரி வரையிலான மாணவர்கள் பதிப்பிப்பதற்கு அரசு ஒரு இலவச பதிப்பகம் ஆரம்பிக்கலாம். அதற்கு ஒரு நல்ல எழுத்தாளர் மற்றும் பதிப்பாளரை பொறுப்பாக வைக்கலாம். பிறகு இந்த சேவையை எளிய பொது மக்களுக்கும் நீட்டிக்கலாம். அரசின் உதவியின்றி மக்களுக்கு புத்தகங்களை கொண்டு சேர்ப்பது மிக சிரமம்.

புத்தகத்தின் விலை பற்றி கிரியா ராமகிருஷ்ணன் கூறுகையில்  மேற்தட்டினரின் சல்லித்தனத்தை சாடுகிறார். அவர் மாதம் ஆறாயிரம் சம்பாதிக்கிற ஆட்களின் நிலையையும் யோசிக்க வேண்டும். அவர்களெல்லாம் வாங்கவே முடியாது. பதினைந்தாயிரம் சம்பாதிக்கிறவர்கள்  புத்தக விழாவில் பதினைந்து புத்தகங்கள் வாங்கினால் அந்த மாதம் சாப்பிட முடியாது. அதனால் பதிப்பாளர்கள் ஒரு புத்தகத்தின் 70% பிரதிகளை மலிவான தாளில் அச்சிட்டு 60% குறைவான விலையில் விற்பதையும் முயற்சித்து பார்க்கலாம். என்னிடம் சேகரத்தில் உள்ள கணிசமான நூல்கள் நடைபாதைகளில் பொறுக்கியவை. அழுக்கானவை, கிழிந்தவை. எனக்கு அவற்றை படிப்பதில் எந்த சிக்கலும் இல்லை. மிக உயர்வான தாளில் பளபள அட்டையில் தந்தாலும் ராணிமுத்து தாளில் தந்தாலும் புத்தகத்தின் உள்ளடக்கம் தான் முக்கியம். மேலும் இன்றைய காலத்தில் புத்தகங்களை வருடக்கணக்கில் பாதுகாத்து வைப்பதும் நடைமுறைக்கு ஒவ்வாத காரியம். ஒரு முறை வாசித்தால் நிலைக்கும் அளவுக்கான தரத்தில் இருந்தால் அதுவே தாராளம். ரஷ்ய மொழியாக்க நூல்கள் முன்பு ரெண்டு, மூன்று ரூபாய்க்கு மலிவாக கிடைத்தன. அது போன்ற ஒரு நிலை தமிழ் நூல்களுக்கு வர வேண்டும் என்பது என் கனவு. புத்தகங்கள் மேட்டுக்குடியினருக்கு ஆனதாக மாறி வருகிறது. அந்நிலை மாற வேண்டும்!

Comments

Unknown said…
I am surprised why the option of "Lending library" is not considered in the write-up. In my child-hood most of my reading took place thanks to lending library which could get me all sorts of books for a fixed affordable monthly subscription.

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...