முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெண்களைப் பற்றி மட்டுமான கதை (பகுதி 5)

ஒருமுறை அவருக்கு உடம்பு முடியாமல் போய் படுத்த படுக்கையானார். நான் அப்போது உள்ளூர அவர் இறந்து போவதை விரும்பினேன். அவருக்காக ஓடியாடி கவனித்து பார்த்துக் கொண்டிருந்தாலும் உள்ளூர இதயம் அவரது மரணத்தை எதிர்பார்ப்பதை உணர்ந்தேன். அதை எப்படி விளக்குவது என்று தெரியவில்லை. ரொம்ப கொடுமையான விசயம் இது. ஒருவரை ரொம்ப நேசிக்கிறோம், மதிக்கிறோம், ஆனால் அவர் செத்துப் போக வேண்டும் என உள்ளூர ஆசைப்படுகிறோம். இந்த எண்ணம் தோன்றிய பின் அவரை பழைய படி அணுக உறவு கொள்ள என்னால் சுத்தமாக இயலவில்லை. இயல்பாக ஒரு பார்வை பார்க்கும் போதே இதயத்தில் சுருக்கென்று வலி தோன்றும்.”

கொஞ்ச நாட்கள் போனதும் எனக்கு வேறொன்று தோன்றியது. எனக்கு என் வயதாகி வரும் உடல் மீதுள்ள ஆற்றாமையை அவர் மீது வெறுப்பாக காட்டுகிறேனோ என்று. எப்படியோ அவர் மீது முன்னெப்போதையும் விட அப்படி கசப்பை கொட்ட துவங்கினேன். அவர் மீது கோபப்பட எனக்கு ஆயிரம் சந்தர்பங்கள் காரணங்கள் கிடைத்தன. அவரும் போகப் போன என்னிடம் ஆத்திரம் கொள்ளவும் என்னை அடித்து துன்புறுத்தவும் தொடங்கினார். எங்களிடையேயான உறவு அப்படியே ஒட்டுமொத்தமாய் மாறிப் போனது. ஒருநாள் நான் அவர் அழைக்க அழைக்க கேட்காமல் வரவேற்பறையில் அமர்ந்து நகம் வெட்டிக் கொண்டிருந்தேன். தண்ணீரை கொதிக்க கொதிக்க என் காலில் கொண்டு வந்து கொட்டினார்.”
அப்போது தான் அவளது இடது முழங்கால் முழுக்க கரும் தடம் இருந்ததை கவனித்தேன். இத்தனை நாள் எப்படி பார்க்காமல் விட்டேன்? ஒருவேளை இன்றெனக்கு காட்டுவதற்காக முக்கால் பேண்ட் போட்டு வந்திருக்கிறாளோ?
அவர் அப்படியெல்லாம் செய்யக் கூடியவரல்ல. ஆனால் என்னுடைய கசப்பு தாங்காமல் அவரையும் மெல்ல மெல்ல அப்படி மாற்றியிருந்தேன். அல்லது அவருக்கும் என் மீதுள்ள வெறுப்பு ஒருநாள் பட்டென்று பொறி தட்டினாற் போல் புரிய வந்திருக்கும், எனக்கு நேர்ந்தது போல. எப்படியோ, அந்த சம்பவத்தோடு வீட்டை விட்டு போட்ட துணியோடு இங்கே தம்பி வீட்டு வந்து விட்டேன்.”
உங்களுக்குத் தெரியுமா, என் கணவருடன் சண்டைகள் உச்சத்தில் இருந்த போது அலுவலகத்தில் என சில கள்ள உறவுகள் கூட ஏற்பட்டன. அது கூட ஆசைக்காக அல்ல. என்னையே நான் சிதைத்துக் கொள்ள, அழுக்குப் படுத்திக் கொள்ளும் பொருட்டு. நமக்கு பயங்கரமாய் கோபம் வரும் போது இப்படி தேடித் தேடி நம்மையே காயப்படுத்துகிறோம் இல்லையே. அதை விடுங்கள், இந்த உறவுகளில் எதுவும் திருப்தி தரவில்லை. எதிலும் இச்சையோ அன்போ ஆதரவோ துளியும் தரத் தோன்றவில்லை, எதிர்பார்க்கவும் இல்லை. பிறகு அவற்றையும் ஒவ்வொன்றாய் துண்டித்தேன். இதையெல்லாம் ஏன் உங்களிடம் சொல்கிறேன் தெரியுமா?”
ம்ஹும்
நீங்கள் அந்த பெண்ணிடம் நடந்து கொண்டதில் ஒரு நேர்மை இருந்தது. அது தகாததாய் அறமற்றதாய் இருந்தாலும் கூட. இப்போது உங்கள் இடத்தில் நான் இருந்தால் அப்படித் தான் நடந்து கொண்டுருப்பேன் எனத் தோணுகிறது. ஏன் எனத் தெரியவில்லை. ஆனால் அப்படித் தான் தோணுகிறது
ஹா ஹா அதனால் தான் என் வாசகர்கள் என்னை…”
வேண்டாம் திரும்பவும் ஆரம்பிக்காதீர்கள். உங்களுக்கு வாகர்கள் இருக்கிறார்களா அல்லது அதெல்லாம் சுத்தமாக உங்கள் கற்பனை மட்டுமா என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது
எனக்கு எவ்வளவு தான் கோபம் வந்தாலும் …. அடக்கிக் கொண்டேன்.
ஆனால் ஒன்று. என்னதான் பெரிய பிரச்சனைகள் மாற்றங்கள் வந்தாலும் பெண்கள் சுலபமாக வெளிவந்து விடுகிறீர்கள். உன் கணவன் இந்நேரம் மறுகி மறுகி செத்து சுண்ணாம்பாகிக் கொண்டிருப்பார். நீங்கள் ஜாலியாக ஊர் சுற்றுவது, சாப்பிடுவது, ஷாப்பிங் என கொண்டாடுகிறீர்கள்.”
எதற்கு உட்கார்ந்து அழ வேண்டும்? இப்போது இன்னும் நிம்மதியாக இருக்கிறேன். இத்தனைக் காலம் உள்ளுக்குள் புழுங்கியதற்கு காரணம் நான் அவரை வெறுக்கிறேன் என்று அறியாதது தான். இப்போது பாருங்கள், என் வாழ்க்கையின் இரண்டாம் டீனேஜ் பருவம் துவங்கி விட்டதாகவே உணர்கிறேன். முதன்முதலாக என் மொத்த வாழ்க்கைக்கும் நானே இனி பொறுப்பு. கார் ஓட்டுவதில் இருந்து பணத்தை இன்வெஸ்ட் செய்வது வரை நானே பார்த்து பார்த்து சொந்தமாக செய்கிறேன். நானே தப்பு செய்து அதன் பலனையும் அனுபவிக்கிறேன். ஆம் ஸோ ஹேப்பி எபௌட் இட். ஸோ ரிலீவ்ட் இன் பாக்ட். ஒரு குழந்தையை தத்தெடுக்க போகிறேன். கல்யாணத்தின் போதென்றால் அவர் ஒத்துக்கவே மாட்டார். இனி யார் தயவும் தேவையில்லை
சரி அதை விடு. நான் வேறு ஒரு கதை சொல்றேன். பெண்கள் எவ்வளவு சுயநலவாதிகள்னு உனக்கு அதைக் கேட்டாலே புரியும்
உம்
குணசேகர்னு ஒரு ரெண்டு பேர் இருந்தாங்க.”
வாட் ஒரே பேரில ரெண்டு பேரா?”
ஆமா ஒருத்தன் பேரு குணா. இன்னொருத்தன் சேகர். ஒரே வேலையை ரெண்டா பகிர்ந்து போட்டு பண்ணுவாங்க. இவன் தோசை வார்த்தா அவன் சட்னி அரைப்பான், இவன் துணி துவைச்சா அவன் காய போடுவான். இவன் படுக்கை விரிச்சா அவன் தூங்குவான். அவன் நகம் வளர்த்தா இவன் வெட்டி விடுவான். ரெண்டு பேரும் பேராசிரியர்கள்.வகுப்புக்கும் சேர்ந்து தான் போவாங்க. இவன் நோட்ஸை வச்சு அவன் வகுப்பில பேசுவான். திடீர்னு பேச்சை நிப்பாட்டினா விட்ட இடத்துல இருந்து அவன் பேசுவான்.. எங்கப் போனாலும் சேர்ந்தே சுத்துவாங்க, எதையும் சேர்ந்தே செய்வாங்க. கடைசியில ரெண்டு பேரும் ஒரே பெண்ணை காதலிச்சாங்க.”
அவள் பேரு சுகுணா. இவளோடு ரெட்டை பேராசிரியர்கள் சேர்ந்து வாழத் தொடங்கினாங்க.”
பிறகு ரெண்டு பேருக்குள்ளும் மனஸ்தாபம் வந்து அவளுக்காக சண்டை போட்டாங்களா?”
அதான் இல்லை. மூணு பேரும் சுமூகமா ரொம்ப வருடங்கள் சேர்ந்தே வாழ்ந்தாங்க. ஒரு குழந்தையும் பிறந்திச்சு, அது தன்னோட குழந்தைன்னு குணா சொல்லிக்கிட்டான். சேகரும் மறுக்கவில்லை. ஆனால் பிற்பாடு ஒரு ஒருநாள் சுகுணா சேகரோட சேர்ந்து தனியா வேறு ஊருக்கு வேலை வாங்கி போய் விட்டாள்
அப்போ குணா?”
அங்கே தான் ட்விஸ்டு. குணாவை அவங்க சேர்த்துக்கல. அவன் தொடர்ந்து சண்டை போட்ட போது அவங்க அவனுக்கு எதிரா வழக்கு தொடுத்தாங்க. அதாவது அவனுக்கும் தங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை, அவனுக்கு மனநலம் இல்லை, பைத்தியம் அப்படீன்னு வழக்கில சொல்லி இருந்தாங்க, இப்போ குணாவுக்கு தான் சுகுணாவோட கணவன்னு நிரூபிக்கவோ தான் அவங்களோட தான் இத்தனை ஆண்டுகளா இருந்தேன்னு காட்டவோ எந்த ஆதாரமும் இல்லை. அவனுக்கு ஒருநாள் தன்னந்தனியா நடுக்காட்டில கொண்டு வந்து விட்ட மாதிரி ஆயிடுச்சு. என்ன பண்றதுன்னே தெரியல. அவன் அவங்க கூட தான் இருந்தான்கிறதுக்கு ஒரே ஒரு சின்ன ஆதாரம் கிடைச்சா போதும்னு தேடினான். அப்படித் தான் ஒருநாள் என்னைத் தேடி வந்தான்.”
நான் அப்போது ஒரு நிறுவனத்தில் சில மாதங்களா வேலை பார்த்து வந்தேன். நான் வாழ்க்கையில பார்த்த ஒரே வேலையும் அது தான். அந்த நிறுவனம் ஒரு பெரிய நவீன தமிழ் மாநாடு நடத்தியது. அதில குணா, சேகர், ரெண்டு பேரும் பங்கெடுக்க வந்திருந்தாங்க. சுகுணாவும் கூட வந்திருந்தா. எங்க பத்திரிகை நிர்வாகம் தான் அவங்களுக்கு தங்கிறதுக்கு ஓட்டல் அறை ஏற்பாடு செய்தது. அந்த ஓட்டல் அறைக்கு கட்டணம் செலுத்தின ரசீது கிடைக்குமா எனக் கேட்கத் தான் என்னைத் தேடி அன்னைக்கு குணா வந்திருந்தான். அந்த ரசீதை வச்சு நீதிமன்றத்தில குழந்தை தன்னோடதுன்னு நிரூபிக்க முடியும்னு அவன் நம்பினான். ஆனால் கேஸ் தோத்துப் போச்சு. அது வேற விசயம். அவன் நெலைமை பார்க்கவே ரொம்ப மோசமா இருந்துது. குளிச்சு வாரங்கள் இருக்கும். அழுக்குத் தாடி, அழுக்கு வேட்டி, குழி விழிந்த கண்கள், சாப்பாடே இல்லாமல் வெறும் சாராயத்தில் ஓடும் தேகம். அவனை உரசிக் கொளுத்தி விட்டால் பற்றிக் கொள்ளும், அப்படி உடமெல்லாம் ரத்தத்துக்கு பதில் வெறும் ஸ்பிரிட் தான். பேச்சு ஒரே குழறலாக இருந்தது. அவனை முன்பு முற்றிலும் வேறொருவனாக பார்த்திருக்கிறேன். அன்று சீரழிந்து குற்றுயிராக இருந்தான். அவன் உயிரோடு இருந்ததே அந்த ரசீதுக்காகத் தான் போலிருந்தது.

பிறகு நான் அவனைப் பார்க்கவே இல்லை. அவன் என்ன குற்றம் செய்தான் சொல்? குடும்பம், குழந்தை எல்லாவற்றையும் இழந்து நிராதரவாய் நிற்பதற்கு.”

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...