Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

பெண்களைப் பற்றி மட்டுமான கதை (பகுதி 6)

அவள் கொஞ்ச நேரம் யோசித்து விட்டு சொன்னாள்அன்பு காட்டுவது கூட ஒரு குற்றம் தானே. ரொம்ப அன்பிருந்தால் அப்படியே அழிந்து போக வேண்டும். இல்லாவிட்டால் பாதியிலே தப்பிக்க வேண்டும். என்னைப் போல்”.

நாங்கள் காலை பதினோரு மணி வரை லும்பினி பூங்கா, பிர்லா மந்திர் என சுற்றி விட்டு ஹுசேன் சாகர் ஏரியில் படகில் போனோம். அவளுக்கு ஏற்கனவே நன்கு தெரிந்த இடங்கள். எனக்கு சுற்றுலாத் தலங்களில் ஆர்வமில்லை. ஆனால் தன்னை ஒரு சுற்றுலாப் பயணியாக கற்பனை பண்ணிக் கொண்டு அங்கு திரிய அவளுக்கு விருப்பமாக இருந்தது. படகில் இருக்கையில் ஏரியின் நடுவில் உள்ள பிரம்மாண்டமான புத்தர் சிலையின் நிழல் நீரில் அலையாடுவது பார்த்ததும் எனக்கு ஏன் மூத்திரம் முட்டிக் கொண்டு வந்தது.
நாங்கள் வீடு வந்த போது விநோத் அலுவலகம் கிளம்பி இருந்தான். சுகுணா பெங்களூரில் தம் அம்மா வீட்டுக்கு முந்தின நாள் போயிருந்தாள். கொஞ்ச நேரத்தில் அனுவும் அலுவலகம் போன பின் நான் தூங்கிப் போனேன். திடீரென்று பள்ளிப்படிக்கும் காலத்தில் நடப்பது போல கனவு வந்தது. பரீட்சை எழுதிக் கொண்டிருக்கிறேன். என்னைச் சுற்றி இருக்கும் மாணவர்க்ளை என்னை பார்த்து பார்த்து கேலியாய் சிரிக்கிறார்கள். ஏனென புரியவில்லை. பிறகு நான் விடைத்தாளை கொடுக்க எழுந்திருக்க பார்த்தால் முடியவில்லை. இடுப்புக் கீழே நான் எந்த உடையும் போடவில்லை. அசிங்கத்தில் அப்படியே குன்றிப் போகிறேன். சட்டென்று விழித்து அடச்சே என்று பிரிட்ஜில் இருந்து குளிர்நீர் குடித்துக் கொண்டிருந்த போது வாசல் மணி அடித்தது. அனு. பாதி விடுப்பெடுத்து வந்திருந்தாள்.
மதிய உணவு அவள் தான் சமைத்தாள். அட்டகாசமான சாப்பாடு. பிறகு கொஞ்சம் வெளிநாட்டு விஸ்கி. அப்படியே பேசிப் பேசிஇரவெல்லாம் அவள் என் அறையில் அமர்ந்து குடித்தும் சாப்பிட்டும் கொண்டிருந்தாள். இப்படியான சுதந்திரம் எல்லாம் ஒரு பெண்ணுக்கு திருமணத்தினால் எப்படி கிடைக்காமல் போகிறது என்று ஒரு குட்டி பிரசங்கம் நடத்தினேன்.
மறுநாள் காலையில் விழித்ததும் அவளைக் காணோம். எதிரே ஒரு நாற்காலியில் விநோத் அமர்ந்திருந்தான். நான் விழிக்க காத்திருந்தது போல் என் பொருட்களை எடுத்து பையில் திணித்து வாயில் கதவருகே கொண்டு வைத்தான். எனக்கு கொஞ்ச நேரம் ஒன்றுமே விளங்கவில்லை. பல்தேய்ந்து மூஞ்சி அலம்பி கடுப்பமாய் ஒரு காபி குடித்து விட்டதும் அவன் என்னை அழைத்து தன் அக்காவுக்கும் மாமாவுக்கும் சண்டையை கிட்டத்தட்ட சரி பண்ணி விட்டதாயும் அவர்கள் சீக்கிரமே சேர்ந்து விட வாய்ப்பிருப்பதாகவும் அதை நான் அங்கு இருந்தால் அதைக் கெடுத்து விடுவேன் என்றும் சொன்னான். சுருக்கமாக என்னை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளப் போகிறான்.
நான் கோபத்தில் நான் கட்டியிருந்த அவனது லுங்கியை அவிழ்த்து அங்கேயே அவனிடம் கொடுத்து விட்டு என் படுக்கை மீது கிடந்த ஜீன்ஸை போட்டு அவசரமாய் கிளம்பினேன். பையை தூக்கி வெளியே வந்து அவனை நோக்கி சில வசைச் சொற்களைக் கூவினேன். நடந்தே அங்கிருந்து பிரதான சாலைக்கு வந்தேன்.
பேருந்து நிலையத்தை அடைந்த போது தான் பேண்ட் இடுப்பில் லூசாக இருப்பதும் அதை நான் அடிக்கடி சரி செய்து கொண்டிருப்பதையும் உணர்ந்தேன். என்ன கண்றாவிடா இது என்று இடுப்பு பெல்டை இறுக்கப் பார்த்தால் ஏதோ வித்தியாசமாக இடுப்பே பெரிசாக இருந்தது. “அட இது என்னதில்லையே, அனுவுடையதாச்சே!”
தொலைவில் வினோத் என்னை நோக்கி கத்தியபடி அரை ஓட்டத்தில் வந்து கொண்டிருந்தான். அவன் தோளில் ஒரு ஜீன்ஸ் தொங்கியது. பயத்தில் முதலில் வந்த ஏதோ ஒரு ஊருக்கு போகிற பேருந்தில் தொத்திக் கொண்டேன்.
ரொம்ப நேரமாக படபடப்பாக இருந்தது. பேருந்தில் ஒரு தொப்பை தள்ளிய ஆசாமி என்னை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். அடிக்கடி குனிந்து யோசித்து மீண்டும் என்னை பார்த்து ஏதோ சரி பார்ப்பது போல் பார்த்தார். அவருக்கு பெரிய வழுக்கை. அதில் நீண்ட நாமம். ஜெமினி கணேசன் மீசை. அடர் சிவப்பு சட்டையை இறுக்கமாய் மாட்டி இருந்தார். என்னை நோக்கி கைகூப்பி வணக்கம் தெரிவித்தார். நான் தலையாட்டினேன். ஒரு தேசலான தலையாட்டல். என் பெயரை சொல்லி நீங்க எழுத்தாளர் தானே என்றார். மீண்டும் தயக்கமாய் தலையாட்டி உம் என்றேன். உடனே கையை பிடித்துக் கொண்டார். மகிழ்ச்சியாய் குலுக்கினார். என்னுடைய தீவிர விசிறி என்றார். பல டிவி நிகழ்ச்சிகளில் என்னை பார்த்துள்ளதாய் சொன்னார். நான் என் வாசகர்களை அழைத்துக் கொண்டு சிக்கன், தயிர்சாதம் மற்றும் பலவித மதுவகைகளையும் எடுத்துக் கொண்டு ஏதேனும் ஏரியில் பயணம் போவேன். ஆளாளுக்கு சாப்பிட்ட இடத்தை எச்சில் பண்ணி அலம்பல் பண்ணி விட்டு கடைசியில் என்னை ஏதேனும் உன்னதமாய் இலக்கியம் பற்றி பேசச் சொல்லி டார்ச்சர் பண்ணுவார்கள். நான் பேச ஆரம்பித்ததும் ஆளாளுக்கு அசந்து தூங்குவார்கள். ஆனால் அதற்கு முன் நான் பேசுவதை அவர்கள் ஆர்வமாய் உட்கார்ந்து கேட்பது போல் புகைப்படம் எடுத்துக் கொள்ள தவற மாட்டார்கள். இப்படியான என் சந்திப்புகளில் கலந்து கொள்ள அவர் ஆசைப்பட்டதாகவும் ஆனால் ஒரு போதும் நிறைவேறவில்லை என்று வருத்தம் தெரிவித்தார். ஆனால் கடவுளே இப்போது என்னை அவர் அருகில் பேருந்தில் சேர்ந்து பயணிக்க வாய்ப்பு கொடுத்துள்ளதாய் கண்நிரம்பினார். சரி போகட்டும் என விட்டு விட்டேன்.
அவரைப் பற்றி விசாரித்தேன். சொந்தமாய் ஐந்து எஸ்டேட்டுகள் ஊட்டியிலும் கர்நாடகாவிலும் உள்ளதாயும் ஹைதராபாதில் ரியல் எஸ்டேட் பண்ணுவதாயும் கூறினார். சரி, நல்லது, என் வாசகராய் இருக்க தகுதி கொண்டவர் தான். ஆனால் பயங்கர எளிமையாம். பஸ்ஸில் தான் போவாராம். நான் அதற்கு நேர்மாறானவன். முப்பது வருடங்களுக்கு பின் இப்போது தான் மீண்டும் பஸ்ஸில் போகிறேன் என்றேன். அவர் வாயில் கை வைத்து வியந்தார். பஸ்ஸில் போவது ஒரு மத்திய வர்க்க சராசரி மனநிலை, அதை ஒழிக்க வேண்டும் என்றேன். அவர் தலையாட்டினார். நான் பேட்டா ஷூவின் மத்தியவர்க்க சராசரித்தனம் பற்றி எழுதியுள்ளதை படித்துள்ளதாய் பரவசத்துடன் கூறி மீண்டும் பூம்பூம் மாடு போல் தலையாட்டினார்.
நிறுத்தாமல் பேசிக் கொண்டே வந்தார். அவர் மனைவி பயங்கர் டார்ச்சர் கேஸ். அவருக்கு கள்ள உறவுகள் உள்ளதாய் சந்தேகித்து உளைச்சல் கொடுத்துக் கொண்டே இருப்பாளாம். அவளை உளவியல் மருத்துவரிடம் காட்டினாராம். ஆனாலும் சரியாகவில்லை. விவாகரத்து பண்ணிக் கொண்டார்கள். இப்போது தனியாக ஜாலியாக இருக்கிறார். அவருடன் ரெகுலராய் உறவு கொள்ள சில திருமணமான பெண்கள் அவர்களாகவே விரும்பி வருகிறார்கள். தேவையானதுஎல்லாம்கிடைக்கிறது என கண்களை ஒருமாதிரி பண்ணி சொன்னார். எனக்கே பொறாமையாக இருந்தது. தாராள செக்ஸ் பற்றி இவ்வளவு எழுதுகிறேன். எனக்கு எல்லாம் எழுத்தில் மட்டும் தான் நடக்கிறது.

 அவருக்கு தனது தற்போதைய வாழ்க்கை பற்றி நிறைய குற்றவுணர்வு இருந்தது. இப்போது தொடர்பில் உள்ள பெண்கள் தன் மீது ஆசையில் இல்லாமல் வேறு காரணங்களுக்காக தன்னிடம் வருவதாய் குற்றச்சாட்டினார். அவர் வீட்டில் சென்று அவருடன் நான் தங்க வேண்டும் என கேட்டார். அவர் சொன்னதை வைத்துக் கேட்க கிளுகிளுப்பான அழைப்பாக இருந்தது. உம் உம் என்றேன். “சரி பெண்கள் எப்படிப்பட்டவங்க என்கிறதை பத்தி நான் இப்ப ஒரு கதை சொல்றேன், கேளுங்கஎன்று ஆரம்பித்தேன்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...