Skip to main content

“மாதொரு பாகன்” சர்ச்சை: புனைவும் நிஜமும்



நேற்று நான் பங்கேற்ற சன் நியூஸ் விவாத மேடையில் பேசின டான் அசோக்கிடமும் இன்னும் சிலரிடமும் “மாதொரு பாகன்” அபுனைவு என்கிற மாதிரியான குழப்பத்தை பார்க்க முடிந்தது. அது திருச்செங்கோட்டின் பெயரை பயன்படுத்துகிறது. அப்பகுதியில் உள்ள ஒரு நம்பிக்கையை, சடங்கை பற்றினது என நாவலின் முன்னுரையில் கொடுக்கப்பட்டுள்ளது. சமூகவியல் ஆய்வை நாவலாக எழுதுவதற்காய் நிதி வாங்கி உருவாக்கப்பட்டது என்பது, ஆகையால் அது அபுனைவு, கட்டுரை நூலில் பெண்களை ஆதாரமின்றி இழிவுபடுத்திவிட்டார் இவர்களின் வாதங்கள்
.
 இறுதியான கருத்து பற்றி முதலில் ஒரு விசயம். நிதி வாங்கி எழுதினால் அது ஏதோ நம் ஊரை வேற்றாளுக்கு காசு வாங்கி காட்டிக் கொடுக்கிற காரியம் என்பதாக பார்க்கப்படுகிறது. இது சுத்த அபத்தம். எழுத்தில் காட்டிக் கொடுப்பது, துரோகம் என்றெல்லாம் இல்லை. அது உணர்வுகளை புண்படுத்துகிறதா, உங்களுக்கு தடவித் தருகிறதா என்பதும் முக்கியமில்லை. இரண்டே தகுதிகள் தான் ஒரு படைப்புக்கு இருக்க வேண்டும்.
1)   உண்மையை பேச வேண்டும். ஒவ்வொரு படைப்புக்கும் ஒரு உண்மை கோணம் இருக்கலாம். அதை நம்பும்படியாய் ஆழமாய் முன்வைக்க வேண்டும்.
2)   Story of O போன்ற நாவல்கள் செய்வது போல் மனிதனை கொச்சைப்படுத்த, இழிவுபடுத்தக் கூடாது. இழிவை அப்படியே காட்டலாம். ஆனால் இல்லாத இழிவை உருவாக்கக் கூடாது. மாற்று ஆணின் மூலமாய் குழந்தைபேறு இழிவு என நீங்கள் கருதினால் அது உங்கள் பிரச்சனை. அந்த வழக்கத்தை ஒரு புனைவு மீள்கட்டமைக்கலாம். அதன் மூலம் மனித செயல்பாடு பற்றி ஆய்வு செய்யலாம். ஒரு பெண் அவ்வாறு செய்வதில் எந்த குற்றமும் இல்லை. அவளுக்கு அதில் பரிபூரண உரிமை உள்ளது. சொல்லப் போனால் இது ஒரு குடும்ப அமைப்பு மீறல். அதனால் தான் இவ்விசயத்தில் ஆண்களுக்கு இவ்வளவு கோபம் வருகிறது. இது குறித்து போகன் சங்கர் முகநூலில் எழுதியது போல, நாவல் பெண்களை இழிவு படுத்தவில்லை. ஆனால் குடும்ப அமைப்பை மீறும் வழமை நமது கடந்த காலத்திலும் இருந்துள்ளதை சொல்கிறது. அதைத் தான் நம்மால் தாங்க முடியவில்லை. குடும்பம் தமிழர்களின் புனிதப் பசு.

சரி பிரதான விசயத்துக்கு வருகிறேன். புனைவா அபுனைவா?
நாவல் என்றாலே புனைவு தான். நிதி பெற்றாலும் இல்லாவிட்டாலும். புனைவு ஒரு செய்தியின் மேல் ஏற்றி வைக்கப்பட்ட கற்பனை. அத்துடன் அச்செய்தி அதன் நம்பகத்தன்மையை நடைமுறையில் இழக்கும். பிறகு அதன் நம்பகத்தன்மை கற்பனையில் வாசகனுக்குள் மட்டுமே இருக்கும். வெளியே நடப்பில் அதற்கு மதிப்பில்லை.
உதாரணமாய், “பொன்னியின் செல்வன்” நாவல் வரலாற்று சம்பவங்களை அடிப்படையாக கொண்டு சோழர் வரலாற்றை பேசுகிறது. அதனால் அது வரலாற்று நூல் என கூற முடியாது. புனைவு தான். நாவலில் ஆதித்த கரிகாலனுக்கு அவனது சகோதரியான நந்தினி மேல் காம இச்சை இருந்ததாய் சித்தரிக்கப்படுகிறது. கரிகாலன் அவ்வாறு உறவை விரும்பினார் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? பார்ப்பனரான கல்கி தமிழர்களை கேவலப்படுத்த அவ்வாறு எழுதினார் எனக் கூறி நாம் “பொன்னியின் செல்வனை” எரிக்கலாமா? கூடாது. ஏனென்றால் அது உண்மை என நம்பினால் கல்கியே அதை கட்டுரையாக எழுதி இருப்பார். அவர் நாவலாக எழுதும் போதே வாழ்க்கையில் நடந்ததை அல்ல நடக்க சாத்தியமுள்ளதை பேசத் தான் முயல்கிறார் என ஆகிறது.
அந்த இடத்தில் கரிகாலனை வைத்துப் பார்க்க வேண்டியதில்லை. அம்மா, மகன், சகோதர சகோதரிகளுக்கிடையே இச்சை ஏற்படுவது பிறழ்வு என்றாலும் அது உண்மை தான். நம் மனதின் அடியாழத்தில் இந்த இச்சைகள் தூங்குகின்றன. இது குறித்த விரிவான ஆய்வுகள் நடந்துள்ளன. இந்த இச்சை நம்மை அறியாது வெளிப்படுமானால் என்ன ஆகும் என பரிசோதிக்க கல்கி விரும்புகிறார். நாவலில் அது ஆழகாக சித்தரிக்கப்படவில்லை என்றாலும் தொட்டுக் காட்டி இருக்கிறார்.
கல்கி எழுதுவது நடப்பியல் உண்மையா என்றால் இல்லை. ஆனால் உண்மைக்கான சாத்தியமா என்றால் ஆமாம். உண்மையின் ஒரே நிரூபணமான தரப்பை அபுனைவு முன்வைக்கிறது. புனைவு நிரூபிக்க முடியாத உண்மையின் எண்ணற்ற தரப்புகளை காட்டுகிறது. புனைவை கண்டு உண்மை என குழப்பிக் கொண்டவர்கள் தான் எம்.ஜி.ஆரையும் ரஜினியையும் முதல்வராகவும் சூப்பர் ஸ்டாராகவும் ஆக்கினார்கள். அவர்களே தான் சுஜாதா முதல் ரசூல், மனுஷ்யபுத்திரன், பெருமாள் முருகன் வரை வேட்டையாடினார்கள்.
கயிறைப் பார்த்து பாம்பென்று பயந்து கூவினால் அது பாம்பின் தவறல்ல. நீங்கள் இருட்டில் இருப்பது தான் தவறு. வெளிச்சத்திற்கு வாருங்கள். அப்போது தரவு சார் உண்மையும், உண்மை போல் தோற்றமளிப்பதும் வேறுவேறு என புரியும். ஒன்று நடப்பியல் வாழ்வுக்கானது, இன்னொரு தத்துவ, உளவியல், கலாச்சார ஆய்வுக்கானது.
இறுதியாய் ஒரு கேள்வி. ஏன் நாம் புனைவைக் கண்டு இவ்வளவு கோபப்படுகிறோம். இந்த சாமி பிள்ளை விவகாரத்தை பற்றி ஆய்வுபூர்வமான கட்டுரை நூல்கள் முப்பது வருடங்களுக்கு மேலாக எழுதப்பட்டு வந்துள்ளனவே. அவற்றை ஏன் பொருட்படுத்தாமல் புனைவை மட்டும் பொருட்படுத்துகிறோம்? பிரபாகரன் பற்றின விமர்சன கட்டுரைகளை விட புலி ஆதரவாளர்களுக்கு ஏன் ஷோபா சக்தியின் கதைகள் இவ்வளவு எரிச்சலை கோபத்தை உண்டு பண்ணுகின்றன?

உண்மையை விட புனைவு ஏன் இவ்வளவு உண்மையானதாக தோன்றுகிறது? இதற்கான விடையை உங்களிடமே விட்டு விடுகிறேன்.

Comments

Unknown said…
கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்டுவிட்டது என்று கூப்பாடு போடும் அனைத்து எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் இதற்கு பதில் சொல்லட்டும் :

கற்பனைக்கதை என்றால் நாவல் முழுக்க கற்பனையாக இருக்கவேண்டும். ஆனால், ஒரு ஊர், கோவில், அங்கு இன்றுவரை நடைபெற்று வரும் திருவிழா பற்றிய நிஜமான செய்திகளை எழுதிவிட்டு, கூடவே அங்கு நடைபெறாத (பெண்களை இழிவுபடுத்தும்) செயல்களை நேரில் கண்டதுபோல் எழுதியது மட்டும் கற்பனை என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம்? இதைப் படிக்கும் மற்ற ஊர்க்காரர்களுக்கு திருச்செங்கோடு பற்றி மனதில் என்ன தோன்றும் ?

12.01.2015 தேதியிட்ட ‘தி இந்து’- ஆங்கில நாளிதழில் திரு. கோலப்பன் அவர்களது பேட்டியில் இது பற்றி விளக்கம் கேட்டபோது, பெருமாள் முருகன் இதற்கு சரித்திர சான்றுகள் இல்லை என்றும் செவி வழியாக கேள்விப்பட்டது என்று மழுப்பலாக பதிலளித்துள்ளர். முதலில் ‘கற்பனை’ பின்னர் ‘ஆதாரமில்லா செவிவழி செய்தி’ – இது சரியா ?

இவர், இதேபோல் வேறு ஊரைப் பற்றி – உதாரணத்திற்கு ஸ்ரீரங்கம், மதுரை, திருநெல்வேலி, திருவாரூர், வேளாங்கண்ணி, நாகூர் – இங்கு நடக்கும் கோவில் திருவிழாக்கள் பற்றி கொச்சைப்படுத்தி எழுதியிருந்தால் அந்த ஊர் மக்களோ அல்லது சமூகத்தினரோ வாயை மூடிக்கொண்டு சும்மா இருப்பார்களா?

இந்தப் பிரச்சினை திருச்செங்கோடு, கோவில் திருவிழா மற்றும் அங்கு வாழும் அனைத்து சமுதாய மக்களின் உணர்வுகள் சம்மந்தப்பட்டது. இதில் எங்கே அரசியல், சாதி, சமயம் நுழைந்தது?

பெருமாள் முருகனை ஆதரிக்கும் அறிவு ஜீவிகள் முதலில் இதற்கு விடையளித்துவிட்டு பின்னர் திருச்செங்கோடு மக்களையோ அல்லது அரசையோ விமர்சனம் செய்யலாம்.

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...