Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

வாத்தின் கால்களும் கொக்கின் கால்களும் - அபிலாஷ் சந்திரனின் ‘கால்கள்’ நாவல் குறித்து – ஸ்ரீபதி பத்மநாபா



ன்றைய நாவல்களில், ஆண்பெண், மேல்வர்க்கம்ஒடுக்கப்பட்ட வர்க்கம் என்று பல எதிர்நிலைகளுக்கிடயேயான உணர்வுப் போராட்டங்கள், எதிர்நிலைகளுக்கிடையான சமூக அரசியல் ஆகியவற்றை நாம் வாசித்துக் கொண்டிருக்கிறோம். சமீபத்தில் வாசித்த அபிலாஷ் சந்திரனின்கால்கள்நாவல் இவற்றிலிருந்தெல்லாம் விலகி, அல்லது இவற்றோடு சேர்த்து, ஆரோக்கியமான உடல்உபாதையுள்ள உடல் என்ற எதிர்நிலைகளுக்கிடையேயான சமூக அரசியலைப் பேசுகிறது.


மது என்கிற இளம்பெண் தன் வீட்டில் இளம்பிள்ளை வாதத்துக்கான சிகிச்சை மேற்கொள்ளும் காட்சியில் இந்த நாவல் துவங்குகிறது. அவள் அறிந்த அவளைச் சுற்றிலும் இருப்பவர்கள், தந்தை, தாய், வைத்தியர், பக்கத்து வீட்டுக்காரர்கள், தெரு வாசிகள், அவளின் நண்பர்கள், கல்லூரித் தோழிகள், ஊரார் எல்லோருமே பெரும்பாலும் உடற்குறைபாடுகள் ஏதும் இல்லாதவர்கள். அவளோ சிறு வயது முதல் உடற்குறைபாடுடன் போராடிக்கொண்டிருப்பவள். அவளுடைய வளைந்து சூம்பிய கால்களை நிமிர்த்தி நேராக்கியே தீர்வது என்று அவளைச் சூழ்ந்த சமூகம் மிகவும் அக்கறை கொண்டிருக்கிறது. அவளையும் அக்கறை கொள்ள வைக்கிறது.

எப்போதேனும் வருகிற உபாதையைப் போன்றதல்ல இது. இந்த உடல் எப்போதுமே ஒரு உபாதையைச் சுமந்துகொண்டிருக்கும்போது, அந்த உபாதையைப் பற்றிய உணர்வு பல சமயங்களில் அனிச்சையாய் மரத்துப் போய் விடுகிறது. இது ஒரு தனிப்பட்ட மனித உடலுக்கும் ஒட்டு மொத்த சமூகத்தின் உணர்வுக்கும் இடையிலான போராட்டமாகவே இருக்கிறது. ஒருத்திக்கும் உலகத்துக்குமான போராட்டம் அல்லது கொடுக்கல் வாங்கல்.

மதுவின் தந்தை அவள் மேல் பெரும் பாசம் வைத்திருப்பவர். அவளுடைய கால்களை எப்படியேனும் சரி செய்து விடுவது என்ற நோக்கத்தில் மத்தியதரக் குடும்பத்தின் தலைவனால் செய்ய முடிந்த அளவில், நாட்டு வைத்தியர்களின் எண்ணெய்த் தைலங்களிலேயே நம்பிக்கை வைத்திருப்பவர். எம்ஜியாரின் தீவிரமான ரசிகர். மகளுடைய உபாதையைத் தீர்க்கமுடியாத கையறு நிலை அவரை தினமும் குடித்துவிட்டு உளறும் குடிகாரனாகவும் கோபக்காரனாகவும் மாற்றியிருக்கிறது. அல்லது அதுதான் காரணம் என்று மற்றவர்கள் எண்ணும்படியாக ஒரு தோற்றத்தை உருவாக்கியிருக்கிறார்.

மது பருவமடைந்த பெண்ணாக இருந்தாலும் அவளுடைய உடல் குறைபாடு காரணமாக சிறு பெண்ணாகவே பார்க்கப்படுகிறாள்; பாவிக்கப்படுகிறாள். அந்த வீட்டுக்கு திடீரென யார் வருகை தந்தாலும் மது தொடைகளுக்கு மேல் பாவாடையை ஏற்றி விட்டு கால்களை நீட்டி எண்ணெய் தடவிக் கொண்டிருப்பதைக் காண முடியும். அவள் சட்டென்று எழ வேண்டிய அவசியமே இல்லை. அந்த நிலையிலேயே அவள் தொடர்ந்து இருந்தால் போதுமானது. யாரும் அதை வித்தியாசமாகப் பார்ப்பதில்லை. அவளுடைய அறையின் ஜன்னல்களுக்கும் திரை இல்லை. அவள் உடை மாற்றுவதற்கான தனிமை கூட அவளின் குறைபாடு காரணமாக அவளுக்கு நிராகரிக்கப்பட்டிருக்கிறது. ஆண் நண்பர்கள் வீட்டுக்கு வருவதற்கோ அவளிடம் ஒட்டி அமர்ந்து பேசுவதற்கோ எந்தத் தடையும் இல்லை. அவளுக்கு ஸ்கூட்டர் ஓட்டப் பழக்கிவிடும் நண்பன் கார்த்திக் அவளுடைய வீட்டில் ஒருவனாகவே தினமும் வந்து போகிறான். அவன் அவளுடைய கன்னத்தையோ இடுப்பையோ கிள்ளினாற்கூட அதைப் பார்த்து அப்பா தப்பாக நினைத்துக்கொள்ளமாட்டார் என்கிறாள் அவள். ஏனென்றால் அவளுடன் பழகுபவர்கள் எல்லோருமே கல்மிஷமில்லாதவர்கள். ஆனால் ஊரில் உள்ள அவளது சம வயது பெண்கள் அவளிடமிருந்து கொஞ்சம் விலகியே இருந்தார்கள். அதே சமயம் கல்லூரியில் அவளுடைய தோழிகள் நெருங்கிப் பழகுகிறார்கள். இந்த விநோதம் அவள் நண்பனுக்குப் புரிவதேயில்லை. இது எந்த விதமான பாலியல் அரசியல் என்று கேட்கிறான் அவன்.

சிறு வயதிலிருந்தே காலில் காலிப்பர் பொருத்தித்தான் அவள் நடக்கிறாள். காலிப்பர் அவளுக்குப் பிடிக்காத ஒன்று. காலிப்பர் இல்லாமலேயே நடக்க முடியும் என்று பிடிவாதமாய் நடந்து அடிக்கடி விழுந்து விடுகிறாள். அதை மாட்டும்போது உணரும் வலியும் அவ்வப்போது காலிப்பரை சரி செய்வதற்காக நகரத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு செல்வதும் பெரும் வாதையாய் இருந்தன அவளுக்கு. நிஜமான நடையின்றி, தலையில் அடிவாங்கிய தவளைக் குஞ்சைப் போல நடக்கும் இந்த வாழ்வின் நிதர்சனத்தை எப்படி மாற்ற முடியும்? “நான் நடந்துதான் என்ன செய்யப் போகிறேன்?” என்று அப்பாவிடம் கேட்கிறாள் அவள்; அவர் அவளுடைய கன்னத்தில் ஓங்கி அறைகிறார்.

அவர் பழைமைவாதியாகவே இருக்கிறார். அவளுக்கு தொளதொள சட்டையும் நிறம் மங்கிய பாவாடையும் மட்டுமே போதும் என்று நினைக்கிறார். அவரிடமிருந்து சுடிதார் வாங்குவதற்கான பணத்தைப் பெற அவள் மன்றாட வேண்டியிருக்கிறது. ஆனால் அவளை எப்படியாவது நடக்கவும் ஸ்கூட்டர் ஓட்டவும் வைத்துவிட வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார்.

மாற்றுத் திறனாளிகளுக்கான ஸ்கூட்டர் என்பதும் ஒரு அரசியலாகவே இருக்கிறது. அது கருணை காட்டுகிற அரசியல்; அல்லது கருணை காட்டுவதன் மூலமாக தங்களின் வலிமையை நிரூபித்துக் கொள்ளும் சமூகத்தின் அரசியல். அவள் ஓட்டும் ஸ்கூட்டருக்கு லைசன்ஸ் அவசியமில்லை. அல்லது அவசியமா என்பதே அதிகாரிகளுக்குத் தெரியவில்லை. லைசன்ஸை காண்பிக்குமாறு யாரும் அவளை நடுரோட்டில் தடுத்து நிறுத்தப் போவதில்லை. ஆனால் விபத்து ஏற்படுத்திவிட்டால் அவள் தண்டனை பெற்றுத்தான் ஆகவேண்டும். லைசன்ஸ் வழங்குவது என்றால் எந்த அடிப்படையில் வழங்குவது? இரண்டு சக்கர வாகனம் என்றா, மூன்று சக்கர வாகனம் என்றா? அதனாலேயே அவளுக்கு லைசன்ஸ் தரத் தயங்குகிறார்கள் அதிகாரிகள். ஆனால் அவளுக்கு அந்தக் கருணையும் பச்சாதாபமும் தேவையில்லை. லைசன்ஸ் பெற்றுத்தான் வண்டி ஓட்டுவேன் என்கிறாள் அவள். பெரியவர்களுக்குத்தான் இந்த சந்தேகங்களும் கட்டுப்பாடுகளும் இருக்கின்றன. அவள் வண்டி ஓட்டி போகும் பாதையில் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்கள் அதை எளிமையாகநாலு கால் வண்டிஎன்று பெயரிட்டு பின்னாலேயே ஓடி வருகிறார்கள்.

மதுவைச் சூழ்ந்து இருக்கும் உலகம் எப்போதும் ஒரு ஒழுங்குடன் இயங்கிகொண்டிருக்கிறது. வெளியில் இருந்து பார்க்கும்போது எல்லோரும் பலவிதமான ஒழுக்கங்களுடன் வாழ்ந்து வருகிறார்கள். உடல் ரீதியான ஒழுங்கு ; உணர்ச்சி ரீதியான ஒழுங்கு ; அறிவு ரீதியான ஒழுங்கு என்று பல வகைப்பட்ட ஒழுக்கங்களால் ஆகியிருக்கிறது புற உலகம். அவளுக்கு இந்த எல்லா வகையான ஒழுங்குகளும் அன்னியமானவையாகவே இருக்கின்றன. தான் நினைத்தபடி உடல் ரீதியாக நடக்கவோ ஓடவோ முடியாது. தான் நினைத்தபடி உணர்ச்சி ரீதியாக காதலிக்கவோ கலவி கொள்ளவோ முடியாது. ’இவளுக்கு பெரிதாய் என்ன தெரிந்துவிடப் போகிறதுஎன்று அறிவுபூர்வமான விவாதங்களும் அவளிடமிருந்து விலக்கியே வைக்கப்பட்டிருக்கின்றன. இதன் வேறொரு படிநிலையாக அவள் நண்பனுடனான உரையாடல்களில் அவள் வயதுள்ள பெண்கள் பேசத் தயங்கும் பல விஷயங்களையும் தயக்கமில்லாமல் அவளால் பேச முடிகிறது. அவனுக்கும் அவ்வாறே. நல்ல ஆரோக்கியமான அழகான பெண்ணிடம் இந்த விஷயங்களை நிச்சயமாக அவனால் பேசியிருக்க முடியாது.

தன் உடல் குறித்து அவளுக்கு இயல்பிலேயே இருக்கக்கூடிய குற்ற உணர்வை அல்லது தாழ்வு உணர்வை அவள் மெல்ல மெல்லக் கடந்து வருகிறாள். குற்ற உணர்வு என்பது தன் இயல்பு அல்ல. கருணை காட்டுவதன் மூலமாக மற்றவர்கள் ஏற்படுத்துவதுதான் அந்த குற்ற உணர்வு என்பதை அவள் புரிந்து கொள்கிறாள். பிடிவாதமாய் இருந்து ஸ்கூட்டருக்கு லைசென்ஸ் பெறுவதன் மூலம் அந்த கருணையை அவள் மறுதலிக்கிறாள். நிதர்சனமான வலியுடனே தன் வாழ்க்கையைத் தொடர்கிறாள்.

கால்கள்என்னும் இந்த நாவலை வாசிக்கும்போது ஒரு கதையாடலாக இல்லாமல் மனித மனங்களின் உணர்வுகளின் கலவையாகத்தான் எனக்குள் இடம்பிடித்துக் கொண்டது. தாவோயிசத்தின் பிதாமகனான லாவோத்சுவின் சீடர் சாங் சு சொல்கிறார்: ”வாத்தின் கால்கள் நீளம் குறைந்தவை என்றாலும் அதற்கு வலி ஏற்படுத்தாமல் அதன் கால்களை நாம் இழுத்து நீட்ட முடியாது. கொக்கின் கால்கள் நீளம் அதிகமானவை என்றாலும் அதற்கு வலி ஏற்படுத்தாமல் அதன் கால்களை நாம் குறுக்கிவிடவும் முடியாது.”

சமூகம் மதுவின் கால்களை வாத்தின் கால்களாகப் பார்க்கிறது. மது தன் கால்களை கொக்கின் கால்களாகப் பார்க்கிறாள். ஆனால் உலகில் மாயையெல்லாம் கிடையாது. அது நிதர்சனமானது. உடலும் வலியும் ஒன்றுதான் என்ற நிதர்சனம். உடல் உள்ளவரை வலி இருந்தே தீரும் என்ற நிதர்சனம்.

நான் சமீபத்தில் வாசித்த தமிழ் நாவல்களில் முக்கியமான நாவலாககால்கள்நாவலைப் பார்க்கிறேன். யதார்த்தவாதத்தின் கொடிகள் எப்போதுமே தாழப் பறப்பதில்லை என்ற உண்மையை இந்த நாவலும் நிரூபிக்கிறது. எந்த வித மாயாஜால வேடிக்கைகளும் இன்றி ஆங்காங்கு தெறிக்கும் மெல்லிய அங்கதத்துடனும் கவித்துவ மொழியுடனும் நல்ல வாசிப்பனுபவத்தைத் தரும் இந்த நாவல் சென்ற ஆண்டுக்கான சாகித்ய அகாதமியின் யுவ புரஸ்கார் விருதைப் பெற்றுள்ளது. மிகவும் தகுதியான நாவலுக்கு இந்த விருது அளிக்கப்பட்டிருப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். நாவலாசிரியர் அபிலாஷ் சந்திரனுக்கு என் வாழ்த்துகளும் அன்பும்.


Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...