Skip to main content

உலகம் பூச்சிகளுக்கானது



தேவ்தத் பட்நாயக் இந்திய தொன்மங்களில் ஆய்வு செய்யும் ஒரு அறிஞர், எழுத்தாளர் மற்றும் ஓவியர். அவருடைய மகாபாரத நூல் “ஜெயா” உலகம் முழுவதிலும் உள்ள பலவகை வாய்மொழி மற்றும் எழுத்துவடிவ மாகாபாரத கதைகளை தொகுத்து எளிமையான சுவாரஸ்யமான வடிவில் கூறுகிறது. இதிலுள்ள கோட்டோவியங்கள் அட்டகாசமானவை. கோட்டோவியங்களுக்காக மட்டுமே இந்நூலை தனியாக ஒருமுறை வாசிக்கலாம். பாண்டவர்கள், குறிப்பாக அர்ஜுனன், யுதிர்ஷ்டிரன், கண்ணன், த்ரௌபதி ஆகியோர் பற்றி முற்றிலும் வேறுபட்ட, ஆழமான தத்துவார்த்த புரிதலை இந்நூல் எனக்கு அளித்தது.

“சீதா” இவரது மற்றொரு நூல். இது ராமாயணக் கதையை கோட்டோவியங்களுடன், வாய்மொழிக் கதைத் தரவுகளுடன் பேசுகிறது. எனக்கு பொதுவாக ராமாயணம் என்றால் அலுப்பான ஒரு ஹீரோயிசக் கதை, ராமன் ஒரு தட்டையான நீதிவான் எனும் எண்ணம் இருந்தது. இந்நூல் அவ்வெண்ணத்தை மாற்றியமைத்தது. ராமனின் உன்னதமான ஒரு ஆன்மீகப் பக்கத்தை காட்டியது. ராமாயணம் மீளமீள நம் மரபில் கூறப்பட்டதன் நோக்கத்தை புரிய வைத்தது.
 புராணங்கள் ஒருவிதத்தில் வாய்மொழிக் கதைகளின் தொகுப்பு தான். அதனாலே அவற்றில் நிறைய முரண்கள் இருக்கும். இம்முரண்களை நியாயப்படுத்த பின்னாட்களில் பல புது கதைகள் புனைந்து சேர்க்கப்படும். உதாரணமாய், த்ரௌபதி துகிலிரியப்பட்ட கதை மகாபாரதத்தில் ஆரம்பத்தில் இல்லை. வெகுபின்னாளில் தமிழக நிகழ்த்துக்கலைஞர்கள் தாம் இக்கதையை ஒரு நாடகீய முத்தாய்ப்புக்காக சேர்க்கிறார்கள். அல்லாவிட்டால் பாண்டவர்கள் அந்தளவு வஞ்சத்துடன், கடுஞ்சினத்துடன் கௌரவர்களை கொன்றொழித்ததற்கு நியாயம் இல்லாமல் போகலாம் என அவர்கள் கருதி இருக்கலாம். அதே போன்று குந்திக்கு நான்கு வேற்று ஆண்கள் வழி குழந்தைகள் பிறப்பதை நியாயப்படுத்தி, அதற்கு தெய்வீக முலாம் பூசி உருவான கதைகள் மற்றொரு உதாரணம்.

“ராமாயணத்தில்” ராமன் ஒரு பக்கம் நீதி, அறத்தின் வடிவமாகவே வருகிறான். ஆனால் அவனே அறம் பிழைக்கிற இடங்களும் வருகின்றன. ஒரு பக்கம் அவன் எந்த லௌகீக உடைமைகள், அதிகாரங்களிலும் ஆர்வமற்ற ஒரு மேன்மையான மனிதனாக வருகிறான். தன் மனைவி தன் உடைமை அல்ல. அவள் தனி உரிமைகள் கொண்ட ஒரு பெண். “அவளை நான் நேசிக்கிறேன் என்பது மட்டும் தான் அவள் மீது எனக்குள்ள பந்தம்” என அனுமனிடம் பேசுகிறான். “அதனால் சீதையை ராவணன் கடத்தும் போது எனக்கு எந்த இழுக்கும் உண்டாவதில்லை. சீதை என் உடைமை அல்ல. என்னை புண்படுத்த சீதையை கடத்துவது ஒரு அபத்தம். இது ராவணனின் தவறான புரிதலினால் விளைந்த செயல். அவன் இந்த உலகையே தான் வென்றடக்க வேண்டிய பொருளாக பார்க்கிறான். அதனால் தன் மதிப்பும் அதிகாரமும் வலுக்கும் என நினைக்கிறான். ஆனால் உண்மையான மதிப்பு என்பது உள்ளே இருந்து வர வேண்டும். நம் மனதை ஆட்சி செய்ய கற்க வேண்டும். உலகை ஆள்வதால் நாம் உலகுக்கு அடிமையாகத் தான் ஆக முடியும். உண்மையான ஆட்சியாளன் தன் ஆன்மாவை அடிபணிய செய்கிறான். ராவணனுக்கு இது புரியாமல் அவன் சீதையை கடத்தி என்னை பழிவாங்க பார்க்கிறான். ஆனால் எனக்கு அவன் மீது கோபமில்லை. நான் சீதையை விடுவிக்க நினைப்பது அவள் எனக்கு சொந்தமானவள் என்ற எண்ணத்தினால் அல்ல. அவளது தனிப்பட்ட சுதந்திரத்தை மீட்டு அளிப்பதற்காகத் தான்” என விளக்குகிறான். இது ஒரு ராமன். பின்னால் மற்றொரு ராமன் வருகிறான். அதாவது ராமனின் முரண்பட்ட மற்றொரு பக்கம்.
இலங்கையை கண்டறிந்து, அங்கு தன் மனைவி உள்ளாளா என அறிய ராமன் சுக்ரீவனிடம் போகிறான். அதற்கு முதலில் சுக்ரீவனை மன்னனாக்க வேண்டும். வாலியை கொல்ல அவனுக்கு உதவுவதாய் ராமன் கூறுகிறான். அதன்படி சுக்ரீவன் வாலியிடம் மோதும் போது பின்னிருந்து தாக்கி கொல்கிறான். பேசாமல் நேரடியாக வாலிடமே மோதி கொன்றிருக்கலாமே? ஆனால் இதற்கு சுக்ரீவன் ஒத்துக் கொள்ளவில்லை. அப்படி ராமன் வாலியை கொன்றால் அவனே வானரப்படைக்கு மன்னனாக நேரடும்; தன் பதவி பறி போகும் என அஞ்சுகிறான். அதனால் தான் வாலியுடன் மோத ராமன் தனக்கு அவனை கொல்ல உதவினால் போதும் என்கிறான். வாலி ராமனின் அம்பில் வீழ்கிறான். அவன் ராமனிடம் கேட்கிறான்: “நான் ராவணனை விட வலிமையில் சிறந்தவன். ஒருமுறை நான் அவனை என் வாலில் கட்டி கிஷ்கிந்தாவில் சிறை வைத்தேன். நீ சுக்ரீவனிடம் போனதற்கு பதில் என்னிடம் உதவி நாடி வந்திருந்தால் நான் உடனடியாய் ராவணனை உனக்காய் கட்டி இழுத்து கொண்டு வந்திருப்பேனே?”. இக்கேள்விக்கு ராமன் பதிலளிப்பதில்லை. இது நியாயமான கேள்வி தானே. வாலியிடம் உதவி நாடியிருந்தால் அது நடைமுறையில் ராமனுக்கு சீதையை மீட்க இன்னும் சுலபமாய் இருந்திருக்குமே?
இதற்கான விடை பின்னால் அனுமன் அசோகவனம் சென்று சீதையை சந்திக்கையில் வருகிறது. அனுமன் அவளிடம் “நானே உன்னை என் முதுகில் சுமந்து ராமனிடம் கொண்டு சேர்க்கிறேன்” என்கிறான். சீதை மறுக்கிறாள். ராமனே வந்து என்னை மீட்பது தான் அவருக்கு பெருமை என்கிறாள். பட்நாயக்கின் “சீதாவில்” சீதை ஒரு சுய-சிந்தனையும், சுய-சார்பும் கொண்ட பெண்ணாக ஒரு புறம் தோன்றினாலும் அவள் தன்னை ராமனின் உடைமையாகவும் தான் இன்னொரு புறம் கருதுகிறாள். வாலி அவளை மீட்டிருந்தாள் அவள் வாலியின் உடைமையாக மாறி இருப்பாள். அதே போல் அனுமன் மீட்டிருந்தாலும் அவள் அனுமனுக்கு கடன்பட்டிருப்பாள். ராமனுக்கு தேவை சீதையை பற்றி தகவல் அறியவும், போர் செய்யவுமான ஒரு படை. அதன் மூலம் அவன் தானே சீதையை மீட்க வேண்டும் என நினைக்கிறான். அதற்கு தன் முன் பணிந்து செயல்படும் பலவீனமான ஒரு ஆள் அவனுக்கு தேவைப்படுகிறது. அதனாலே அவன் சுக்ரீவனை தேர்கிறான். பிரித்தானியர் இந்தியாவுக்கு படையெடுத்து வந்த போதும் அவர்கள் பலவீனமான மன்னர்களுடன் நட்பு பாராட்டத் தான் விரும்பினார்கள். ராமாயணமும், மகாபாரதமும் நமக்கு ஒன்றைச் சொல்கிறது. பலவீனமானவர்கள் சுலபத்தில் சுகங்களையும் அதிகாரத்தையும் பெற்று பிரச்சனையில்லாமல் வாழ்கிறார்கள். ஆனால் பலம் மிகுந்தவர்கள் தொடர்ந்து பொறாமை, அதிகார போட்டியில் மாட்டி தன் அடிப்படை உரிமைகளை இழந்து நாடோடிகளாக திரிகிறார்கள். வேட்டையாடப்பட்டு மரிக்கிறார்கள். இரண்டு காப்பியங்களிலும் ராமனோ பாண்டவர்களோ நிம்மதியாக ஆண்டு வாழ்வதில்லை. வாழ்வின் பெரும்பகுதியை வனாந்தரத்தில் கடும் நெருக்கடியில் கழிக்கிறார்கள். பிறகும் அவர்கள் அவமானப்பட்டு சொந்தபந்தங்களை இழந்து அல்லோலப்படுகிறார்கள். பீமனிடம் வீழ்ந்த பின் துரியோதனன் இதைத் தான் அறைகூவுகிறான் “நாங்கள் எங்கள் வாழ்க்கையை முழுக்க அரண்மனையில் சுகமாய் கழித்தோம். இப்போது நீங்கள் எங்களை வீழ்த்திய பிறகும் எதையும் ஆளப் போவதில்லை. உங்கள் சொந்தங்களும் பிள்ளைகளும் இறந்து விட்டனர். இனிமேல் நீங்கள் ஆட்சி செய்வதில் அர்த்தமில்லை. இந்த போரில் உண்மையான வெற்றி உங்களுக்கு இல்லை”. பாண்டவர்கள் செய்த ஒரே குற்றம் கௌரவர்களை விட திறமையானவர்களாக தோன்றி, அதனால் கௌரவர்களுக்கு ஒரு பாதுகாப்பின்மை உணர்வு, பொறாமையை தோற்றுவித்தது தான். இதனால் அவர்கள் வாழ்க்கையின் பெரும்பான்மை காலம் சுகபோகங்களும் நிம்மதியும் அற்று அலைய நேர்கிறது.
இக்காலத்தில் கூட வேலையிடத்தில், சமூகத்தில், குடும்பத்துக்குள் எங்கும் திறமையானவர்கள், வலுவான ஆளுமை கொண்டவர்களைக் கண்டு பிறர் அஞ்சுகிறார்கள். அவர்களை ஒரு பக்கம் விரும்பினாலும் இன்னொரு பக்கம் ஒடுக்கி, வளர விடாமல் முடக்கி வைக்க தலைப்படுகிறார்கள். எங்கு போனாலும் அவர்களுக்கு பிரச்சனைகள் அதிகம் இருக்கும். சதா தன்னை தற்காத்து முன்னெடுத்து நிறுவிக் கொள்ள அவர்கள் போராட வேண்டி வரும். இந்த உலகம் சிறந்தவர்களை கொண்டாடுகிறது என நாம் நினைக்கிறோம். ஆனால் அது உண்மையல்ல. சிறந்தவர்கள் தாம் மிக அதிகமாய் அவமானத்துக்கும், ஒதுக்குதலுக்கும் உள்ளாகிறார்கள். அவர்கள் எறும்புக் கூட்டத்தின் நடுவே வெல்லக்கட்டி போல் இருக்கிறார்கள். அரிக்கப்பட்டு சிறுக சிறுக காணாமல் ஆகிறார்கள். இதுவரை நீங்கள் சந்தித்து வந்த மனிதர்களைப் பற்றி மனதில் ஓட்டிப் பாருங்கள். பள்ளியில், கல்லூரியில் நீங்கள் பார்த்த மிகத்திறமையான ஆட்கள் யாருமே இன்று சிறந்த நிலையில் அநேகமாய் இருக்க மாட்டார்கள். வேலையிடத்தில் அதிகாரிகளாக, முதலாளிகளாக, அதிக பணமும், அதிகாரமும் வாய்த்தவர்களாக் திறமை குறைந்தவர்கள் தாம் இருப்பார்கள். அனைவரிடமும் பணிந்து போகும், திறமை குறைவானவர்களுக்கே எளிதில் பதவி உயர்வுகள் கிடைக்கும். வேலையிடத்தில் பேச்சிலோ செயலிலோ நீங்கள் உங்கள் உயரதிகாரியை விட சற்று உயர்வாக் இருந்தால் அவர் உங்களை கடுமையாக வெறுப்பார். வேலையில் இருந்து உங்களை நீக்க ஆவன செய்வார். வெற்றி பெற அனைவரும் உழைக்க வேண்டும். ஆனால் திறமையானவர்கள் இரட்டிப்பு உழைக்க வேண்டும். அவர்களுக்கு சோதனைகள் மிகக்கடுமையாக இருக்கும்.
இதை சுஜாதா ஒரு சிறுகதையில் அருமையாக சித்தரித்திருப்பார். இரண்டு நண்பர்கள். ஒருவன் சோம்பேறி. கல்லூரியில் பிட் அடித்து மாட்டிக் கொண்டு வெளியேற்றப்படுவான். இன்னொருவன் கடுமையாய் உழைத்து முதல் மதிப்பெண்கள் எப்போதும் வாங்குவான். பிற்பாடு ரொம்ப வருடங்கள் கழித்து இருவரும் சந்திக்கும் போது சோம்பேறி நண்பன் உயரதிகாரியாகவும், உழைப்பாளி நண்பன் அவனுக்கு கீழ் எளிய ஊழியனாகவும் இருப்பான். அவன் இவனிடம் சொல்வான் “வாழ்க்கையில் முன்னேற உன்னைப் போல் கடுமையாக உழைத்து படித்து ரொம்ப சின்சியராக இருக்க வேண்டியதில்லை. நான் ஒன்றுமே செய்வதில்லை. எல்லாரையும் சந்தோசமாய் வைத்துக் கொள்கிறேன். யாரிடமும் முகம் சுளிப்பதில்லை. என்னிடம் ஏதோ முக்கியத்துவம் உள்ளதாய் காட்டிக் கொள்கிறேன். எங்கு போனாலும் என்னை ஏற்றுக் கொண்டு முக்கிய பொறுப்புகளை அளிக்கிறார்கள். வாழ்க்கை ரொம்ப சிம்பிள்”. வாலியாய் இருப்பதை விட சுக்ரீவனாய் இருப்பது ரொம்ப ரொம்ப வசதியானது; சிக்கலில்லாலது; ஆபத்தில்லாதது. உங்களை நாலுபேர் மண்டையில் குட்டுவார்கள்; கிண்டலடிப்பார்கள். அதை சற்று பொறுத்துக் கொண்டால் வாய்ப்பு, வசதி, அமைதி என வாழ்க்கை அமையும். டினோசர்கள் அழிந்தாலும் இந்த உலகில் கரப்பான்பூச்சிகள் என்றும் வாழும். உலகம் பூச்சிகளுக்கானது.

Comments

Chitra said…
Wow! Great. Superb. உண்மை்

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...