முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உட்கார்ந்து விளையாடு பாப்பா!

1.22 பில்லியன் மக்கள் உள்ள ஒரு நாட்டில் ஏன் ஒலிம்பிக்கில் பதக்கங்களை அள்ளி வருவதற்காக வீரர்கள் இல்லாமல் போயிற்று என்பது நாம் அடிக்கடி வீராவேசமாக கேட்கும் கேள்வி. ஆனால் நமக்கு ஒரு விளையாட்டு கலாச்சாரம் ஏன் இல்லை என நாம் யோசிக்க தலைப்படுவதில்லை. ஒரு ஓய்வு நாளில் நாம் கடற்கரையிலோ பூங்காவிலோ நண்பர்களுடனோ குடும்பமாகவோ சென்று விளையாடுவதுண்டா?

 ஆனால் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியுசிலாந்தில் அத்தகைய கலாச்சாரம் உள்ளது. கோவா, கோவளம் கடற்கரைகளில் வரும் வெள்ளைக்காரர்கள் தம் சிறுகுழந்தைகளைக் கூட அலைச்சறுக்கு பலகையில் ஏற்றி விட்டு விளையாட பழக்குகிறார்கள்.
நம் சீதோஷ்ண நிலை காரணமாகவோ அரிசி, சைவ உணவு காரணமாகவோ உடலை வருத்தி சுறுசுறுப்பாய் இருப்பதில் ஆர்வமற்றவர்களாக இருக்கிறோம். இன்று நகரங்களில் மட்டுமல்ல கணிசமான கிராமங்களில் கூட நம்முடைய ஒரு முழுநாள் என்பது உடலை வருத்தாமல், வெயிலில் வாடாமல் கழிகிறது. அவ்வாறு இருப்பது தான் மேற்தட்டினரின் நிலை என நாம் உள்ளார நம்புகிறோம். நம் பிள்ளைகள் புழுதியில் விளையாடினால், வியர்த்து களைத்து வந்தால் அவர்களின் அந்தஸ்து தாழ்வதாக நம்புகிறோம். நம்முடைய விளையாட்டு அணுகுமுறைக்கு பின்னால் ஒரு நுணுக்கமான சாதிய மனப்பான்மை உள்ளது.
 நீண்ட தூரம் நடப்பது, விளையாடுவது, வீட்டு வேலைகளை தாமே செய்வது, மலை ஏறுவது போன்ற உடலுழைப்பு சார்ந்த விசயங்கள் ஐரோப்பாவில் உயர்வர்க்கத்தினர் இடையிலும் வாழ்க்கையின் ஒரு முக்கிய பகுதியாக உள்ளது. ஆனால் இந்தியாவில் உடலை வருத்துவது, வியர்ப்பது என்பது தாழ்ந்த சாதியினரின் அடையாளமாக உள்ளது. அதனாலே கணிசமான இந்தியர்கள் அதை தவிர்க்க விரும்புகிறார்கள். விளைவாக விளையாட்டு என்பதே வாழ்வில் இருந்து கிட்டத்தட்ட காணாமல் போய் விட்டது. இந்தியாவின் ஒரே பிரபல விளையாட்டான கிரிக்கெட்டிலும் கூட பந்து வீச்சிலும் நாம் காலகாலமாக மிக பலவீனமாக இருப்பது இந்த தீட்டு மனோபாவத்தால் தான். யாரோ ஒருவர் வேர்க்க விறுவிறுக்க ஓடி வந்து பந்தை வீச நின்ற நிலையில் அதை ஸ்டைலாக அடிப்பது நமக்கு பிடித்திருக்கிறது. கிரிக்கெட் ஆடுபவர்களில் இங்கு கணிசமானோர் மட்டையாளர்களாகவே விரும்புகிறார்கள். பந்து வீச்சாளனை நாம் நம் வீடுகளை சுத்தமாகி, நம் சாக்கடைகளை அள்ளும் கூலிக்காரர்களாக பார்க்கிறோம். 

இத்தனை கோடி பேரில் ஒரு சின்ன சதவீதம் தான் கிரிக்கெட் ஆடுகிறார்கள். அதிலும் மிக மிக சிறுபான்மையினர் தான் பிற விளையாட்டுகளை முயன்று பார்க்கிறார்கள். நமக்குத் தேவை விளையாட்டு அமைப்புகள், உள்கட்டமைப்புகளோ மட்டுமல்ல. மூளையுழைப்புக்கு நிகராக உடலுழைப்பையும் கருதும் ஒரு அணுகுமுறை மாற்றம் தான்.

நம்முடைய பல வீரவிளையாட்டுகள் காணாமல் போனது பற்றி யோசித்ததுண்டா? மற்போர், சிலம்பம், தொடுவர்மம், நாட்டுச்சண்டைக்கலை ஆகியவற்றில் இன்றும் பயில்பவர்கள் மிகச் சிலர் தான். ஆனால் நாம் இங்கு மிக பரவலாக கற்கும் கராத்தே இங்கிருந்து சீனா சென்று குங் பூவாகி, அங்கிருந்து ஜப்பானுக்கு உலகப்போரின் போது பயணித்து புது வடிவம் பெற்ற ஒரு பாரம்பரியக் கலை வடிவமே. சீனர்களால் ஆயிரக்கணக்கான வருடங்கள் பழைய ஒரு கலை வடிவை தக்க வைத்து உலகம் பூரா பரப்ப முடிகையில் நம்மால் நம் சிலம்பம், அடிமுறைகளை ஏன் உள்ளூரில் கூட பாதுகாக்க இயலவில்லை? 

சீனாவில் பெற்றோர்கள் தம் பிள்ளைகள் குங் பூ சிறுவயதில் இருந்து பயில்வது ஒரு முக்கியமான ஒழுக்க கல்வியாக நினைத்து அதை ஊக்குவித்தனர் என்கிறார் புரூஸ் லீ. அதனால் அங்கு காலை வேளையில் பொதுவிடங்களில் எங்கு பார்த்தாலும் யாராவது சிறுகுழுவாக நின்று சண்டைக்கலை பயின்று கொண்டிருப்பார்கள் என்கிறார் அவர். இதனால் அக்கலை மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிப் போயிருந்தது. ஆனால் இந்தியாவில் பொதுவிடங்களில் உட்கார்ந்து வம்பு பேசுவோம். நமக்குத் தெரிந்த ஒரே உடற்பயிற்சி நாவை போட்டு அடிப்பது தான்.

நம்முடைய பிள்ளைகளை அந்தஸ்தை கருதி கர்நாடக சங்கீதம் கற்க அனுப்புகிறோம். ஆனால் அதை தக்க வைப்பதில்லை. சில உயர்தட்டு பள்ளிகளில் சிறுவயதில் இருந்தே குதிரையேற்றம் எல்லாம் சொல்லிக் கொடுக்கிறார்கள். ஆனால் அக்குழந்தை அதை சென்னையில் எங்கே விளையாடப் போகிறது என எனக்கு புரியவில்லை. இப்படி நாம் விளையாட்டை பழக்கினாலும் நிதர்சனத்துக்கு பொருந்தாத மேற்தட்டு மோஸ்தர்களை தான் திணிக்க நினைக்கிறோம்.

விளையாட்டு என்பது சர்வதேச அரங்கில் பதக்கம், கோப்பைகள் வெல்வதற்காக மட்டுமல்ல. அதன் முக்கிய நோக்கம் வாழ்வில் ஒரு சமநிலை அளிப்பது. விளையாட்டு பயிற்சி ஒரு இயல்பான உடல் சார்ந்த தன்னம்பிக்கையை அளிக்கிறது. மனதை நிதானமாக்குகிறது. மனம் நிதானமற்று போகும் போது தான் குடி போதை, மிதமிஞ்சிய கேளிக்கைகளை நோக்கி செல்கிறோம். இன்றைய ஒரு தலைமுறை முழுக்க சுய அழிவு கலாசாரம் நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதற்கு, குடித்தும், போதை மருந்துகளில் சிக்கியும், பாலியல் குற்றங்களில் மாட்டியும் அழிவதற்கு இந்த சமநிலையின்மை தான் காரணம். மனம் ஒரு காற்றாடி என்றால் அதன் நூல் நம் உடல். உடல் அறுந்தால் மனதை பிடிக்க முடியாது.
நன்றி: கல்கி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.