Skip to main content

வாழ்த்துக்கள் வா.மணிகண்டன்!

Image result for வா மணிகண்டன்


வா.மணிகண்டன் சரளமான, நகைச்சுவை ததும்பும் அனுபவக் கட்டுரைகள் எழுதுவதில் சமர்த்தர். கடந்த பத்து வருடங்களில் பத்திரிகை பத்தியாளர்கள், பிளாகர்கள் கூட நாட்டு நடப்பு, அரசியல், சமூகம் என நகர்ந்து விட்டாலும் மணிகண்டன் தன்னுடைய காணி நிலத்திலேயே வீடு கட்டிக் கொண்டிருக்கிறார். தனக்கு பிடித்தமான பாணியில் எழுதுவது தான் அவர் எழுத்து புதுமையுடன் இருப்பதற்கு காரணம் என நினைக்கிறேன்.


எப்படி அவருக்கு மட்டும் தினமும் ஒரு சுவாரஸ்யமான அனுபவம் வாய்க்கிறது என நண்பர்கள் கலாய்ப்பது கேட்டிருக்கிறேன். ஆனால் அப்படியான அனுபவங்கள் எல்லாருக்கும் உள்ளது. நாம் கண்ணைத் திறந்து பார்த்தால் நம்மையே ஒரு subject ஆக மாற்றிக் கொள்ள முடியும். பிறகு நம்மை கவனித்து நம்மைப் பற்றியே நிறைய எழுத முடியும். இது ரொம்ப ரிஸ்கான எழுத்து பாணி. எழுத்தில் அடர்த்தி குறையும். திடீரென சரக்கு தீர்ந்து போகலாம். அப்போதெல்லாம் அடுத்தவர்களைப் பற்றி எழுதலாம். படித்த புத்தகம், பார்த்த படம் என எழுதலாம். இதையெல்லாம் மணிகண்டன் செய்கிறார். இத்தனை காலமாய் அவர் இவ்வகை எழுத்தின் மூலம் தன் பால் வாசகர்களை கட்டிப் போட்டிருக்கிறார் என்பதே ஒரு தனி சாதனை.

எனக்கு மணிகண்டனை ஏழு வருடங்களுக்கு முன்பிருந்து தெரியும். எனக்கு முன்பே எழுத வந்தவர். ஒரு புத்தகக் கண்காட்சியில் சேர்ந்து சுற்றினது நினைவுள்ளது. பழக இனிமையானவர். யாராவது தும்மினால் கூட தோளை வளைத்து கைகளை குவித்து வணங்கி விடுவார். கட்சிக்காரர்களிடம் மட்டும் பார்க்கக் கிடைக்கிற பணிவு. அது அவர் இயல்பாகத் தான் இருக்க வேண்டும். எல்லாரிடமும் அவர் அப்படி இருந்து தான் பார்த்திருக்கிறேன்.

MBA படித்து நிர்வாகத்தில் இருக்கும் ஒரு மேலாளர் போல மிகத் தெளிவாக திட்டமிட்டு, நிறைவேற்றுவதற்கான காலம், வழிமுறை எல்லாம் யோசித்து எழுதுவார். தமிழில் வேறு யாரிடமும் நான் இதைப் பார்த்ததில்லை. ஒருமுறை கண்காட்சியில் கவிதை நூல்களாக வாங்கித் தள்ளினார். “ஏங்க திறந்து கூட பார்க்காம வாங்குறீங்க?” எனக் கேட்டேன். பாவம், நாம வாங்காம யாருங்க வாங்குவாங்க என்பது போல் பதில் சொன்னார். ஆனால் மனிதர் அடுத்த மூன்று மாதங்கள் கவிதை மதிப்புரைகளாக எழுதித் தள்ளி விட்டார். காலச்சுவடில் அவர் மதிப்புரைகள் சிலவற்றை பார்த்த நினைவு. இப்படி திட்டமிட்டால் நடத்தி விடுவார். அவரது “நிசப்தம்” இணையதளத்தின் ஒவ்வொரு பதிவின் பின்னும் இந்த திட்டமிடல் உண்டு.
எனக்கு நள்ளிரவில் விழித்திருந்து எழுதப் பிடிக்கும். ஒருநாள் இரவு 2 மணிக்கு மணிகண்டன் சாட்டில் வந்து என்னுடைய “இன்றிரவு நிலவின் கீழ்” தொகுப்பை படித்து முடித்து விட்டதாக சொன்னார். அதைப் பற்றி எழுதப் போவதாய் சொன்னார். ரொம்ப மகிழ்ச்சி எழுதிக் கொடுங்கள் என்றேன். அடுத்த ஒரு மணிநேரத்தில் ஒரு சரளமான நல்ல விமர்சனத்தை எழுதி அனுப்பி விட்டார். எனக்கு யாராவது காலத்தை காப்சியூளாக சுருக்கி விட்டார்களோ என வியப்பாக இருந்தது. படித்தேன், எழுதப் போகிறேன், இதோ எழுதி விட்டேன்…அப்படி ஒரு வேகம். அட இவர் என்னை விட வெறி பிடித்த எழுத்தாளராக இருக்கிறாரே என அப்போது தான் தோன்றியது. இப்படி வேகமாய் சரளமாய் எழுதக் கூடியவரை ஏன் அதிகமாய் பத்திகள் பத்தி எழுத பயன்படுத்தவில்லை என அப்போது வியந்திருக்கிறேன். இதை நினைத்தது ஆறு ஏழு வருடங்களுக்கு முன். அவரது நிசப்தம் இணையதளம் ரேஸில் ஜாக்கியை உதறி விட்ட குதிரை போல தெறித்தோட ஆரம்பிக்கும் முன். அதன் பிறகு அவர் கல்கியில் ஒரு நல்ல தொடர் எழுதினார். ரோபோ பற்றி. அதை அவர் புத்தகமாக கொண்டு வர வேண்டும். அதிலும் ரோபோட்டிக்ஸை விட தனது அனுபவங்களைத் தான் சுவாரஸ்யமாய் சொல்லி இருப்பார். (வா.மணிகண்டன் நாளை ஒரு சிரமமான தேர்வெழுத போனால் கூட எந்த கேள்விக்கும் தன்னைப் பற்றி ஒரு பதில் எழுதி தப்பித்து வந்து விடுவார் எனத் தோன்றுகிறது.) இப்போது தினமணி இணையதளத்தில் ஒரு தொடர் எழுதுகிறார். நான் நடுவில் ஒரு சின்ன லெட்டர் பேட் பத்திரிகையில் வேலை பார்த்த போது முதல் வேலையாக வா.மணிகண்டனை அதில் எழுதக் கேட்டேன். ஒத்துக் கொண்டார். இரண்டு வாரங்கள் கழித்து “என்னங்க தொடரை எப்போ ஆரம்பிக்கலாம்?” என்றார். “அதான் எனக்கும் தெரியல மணி. ஏன்னா என்னை வேலையில் இருந்து அனுப்பி விட்டார்கள்” என்றேன். குங்குமம், விகடன், ஹிந்து போன்ற பத்திரிகைகளில் அவர் ஒரு ரவுண்ட் போய் வர வேண்டும் என்பது என் ஆவல்.

என்னிடம் வா.மணிகண்டனின் தாக்கம் ஒரு விதத்தில் உண்டு. நான் பொதுவாய் அதிகம் பத்திரிகைகளில் எழுதுபவன். அங்கு எழுதுவதை இங்கே என் பிளாகில் கொண்டு போடுவேன். பிளாக் எனக்கு டாக்குமெண்டுகளை சேர்த்து வைக்கும் கோப்பு போல. தினமும் எழுதி நிறைய வாசகர்களை தொடர்ந்து வரவழைக்க வேண்டும் என நினைக்க மாட்டேன். ஆனால் தினமும் வா.மணிகண்டனை படிப்பது என்னையும் தொடர்ந்து பிளாகிங் செய்ய வைத்தது. சமீபத்தில் என் பிளாகிற்காகவே நான் தனியாக சில கட்டுரைகள் எழுதியதற்கு அவரது தாக்கம் தான் காரணம்.

வா.மணிகண்டனை “நிசப்தத்திற்கு” முன், பின் என பிரித்துக் கொள்ளலாம். “முன்” காலத்தில் அவர் நல்ல கவிஞர். என் மன அவசங்களை வெளிப்படுத்தி ஆறுதல் தேட அக்காலத்தில் கவிதை எழுதினேன் என அவர் சமீபத்தில் எழுதினார். ஆனால் அது உண்மை அல்ல. பொது வாசகர்களுக்காக தன் கவிதைகளை அவரே பழிக்க வேண்டியதில்லை. பல நல்ல கவிதைகளை எழுதி இருக்கிறார். மரண வீடு பற்றின சற்றே நீளமான கவிதை ஒன்று நினைவுள்ளது. அக்காலத்தில் அவர் உயிரோசையில் எழுதினது, என்னிடம் பகிர்ந்து கொண்டவை கவனிக்கத்தக்க கவிதைகள் தாம். அசோகமித்திரனின் ஒரு கதையில் ஒருவர் பெரும் சக்திகளைப் பெறுவதற்காக வருடக்கணக்கில் தியானம் இருப்பார். ஆனால் விழிப்புணர்வு பெறுவதற்கு ஒருநாள் முன்பு பொறுக்க முடியாது தியானம் கலைந்து எழுந்து விடுவார். ஒரே ஒரு நாள் தானே பொறுத்திருக்கலாமே எனத் தோன்றும். வாழ்க்கை அந்தளவுக்கு அபத்தமானதா என நினைப்போம். எனக்கு வா.மணிகண்டன் இன்னும் சில வருடங்கள் தொடர்ந்து கவிதை எழுதி இருக்கலாம் எனத் தோன்றும். கவிதையில் அந்த ஒழுக்கு, தொடர்ச்சி முக்கியம். சட்டென சில கதவுகளைத் திறந்து கொண்டு இன்று இசை இருக்கிற இடத்துக்கு வந்திருக்கலாம். இப்போதும் ஒன்றும் குறையில்லை. அவர் தன் கவிதை எழுத்தை தொடரலாம்.

பத்து வருடங்களுக்கு முன்பு பிரபலமாய் இருந்த பிளாகர்கள் எங்கே? நின்று விட்டவர்களை மறந்து விட்டோம். நானும் வா.மணிகண்டனும் பிறரும் எழுதும் பிளாக் பதிவுகளுக்கு எதிர்காலத்தில் எந்த மதிப்பும் இல்லை. ஒரு முப்பது நாப்பது வருடமேனும் நிலைக்கிற படைப்புகளை எழுத வேண்டியதும் அவசியம் தான். ஏனென்றால் நாம் எப்போதும் இன்றிலேயே நின்று கொண்டிருக்க முடியாது. ரொம்ப ரொம்ப கஷ்டம் அது.

அவர் மீது இன்னொரு சின்ன குறை. சில பிரச்சனைகளுக்கு அவர் வேண்டுமென்றே பொது வாசகர்களின் செண்டிமெண்ட்களை ஒட்டி எதிர்வினையாற்றுகிறார். இது அவரை அவர்களுக்கு நெருங்கி உணர வைக்கிறது. ஆனால் இது அவரது உண்மையான நிலைப்பாடு அல்ல என எனக்குத் தெரியும். இலக்கிய, தீவிர அரசியல், சித்தாந்த வாசனை அற்றவர்களுக்கு தோதாக தன்னை “தகவமைக்கிறார்”. ஆனால் அப்படி தன்னை வளைத்துக் கொள்வது தேவையா என்ன? ஒருவேளை இது தான் அவரது உண்மையான ஆளுமை என்றால் “நிசப்தத்திற்கு-முன்” மணிகண்டன் பொய்யா? அவரை சங்கடத்துக்கு உள்ளாக்க இதை எழுதவில்லை. கேட்க தோன்றியது அவ்வளவு தான். அதே போல் வா.மணிகண்டனிடம் இரு மொழிகள் உள்ளன. ஒன்று அவரது மொழி. இன்னொன்று சுஜாதா பாணியிலான மொழி. இதில் எது ஒரிஜினல்? இதையும் நான் அவரை சங்கடத்துள்ளாக்க கேட்கவில்லை.

இப்படி இப்படியாப் பட்ட வா.மணிகண்டனுக்கு இன்று பிறந்த நாள். முதலில் ஒரு வாசகனாகவும் பிறகு நண்பனாகவும் இதயம் கனிந்த வாழ்த்துக்கள். 

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...