முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அம்மா அமளிதுமளி

Image result for jayalalithaa + aiadmk + adyar

அம்மாவின் கவர்னர் சந்திப்பை ஒட்டி சின்னமலையில் ஆரம்பித்து அடையார், கோட்டூர்புரம் வரை அமளிதுமளி தான். வட்டச்செயலாளர்களும், நிர்வாகிகளுமாய் வேன்களில் அழைத்து வரும் மக்கள், வேன் மீது கட்டப்பட்ட ஸ்பீக்கர்கள் முழங்கும் எம்.ஜி.ஆர் பாடல்கள், பேண்ட்மேளம், அங்கங்கே சிறுமேடை அமைத்து அபஸ்வரமாய் பாடும் புரட்சித்தலைவி கானங்கள், வழியெங்கும் பதாகைகள், சுவரொட்டிகள், இரட்டை இலை தோரணங்கள் இப்படி விழாக்கோலம் பூண்டிருந்தது. நேற்றிரவு அவ்வழி வீடு திரும்பும் போது நிறைய போலிசார் குவிக்கப்பட்டிருந்தது பார்த்தேன். நாளை இப்பாதையில் போக்குவரத்தை உறைய வைத்து விடுவார்கள் என எதிர்பார்த்தேன். ஆனால் போக்குவரத்து பெரும்பாலும் இயல்பாகவே இருந்தது. அதிமுகவினரும் சாலையில் நாணயங்கள் போல் இறையாமல் ஒழுக்கமாகவே நடந்து கொண்டனர். கிண்டியின் சிறு தெருக்களில் கழகத்தினர், சாதிக் கட்சியினர் கூட்டம் போட்டாலும் வாகனங்களை நடுசாலையில் நிறுத்தி, பாதையை மறித்து உயிரை வாங்குவார்கள். ஆனால் நகரத்தின் பிரதான பகுதி என்பதாலோ ஏனோ கட்சிக்காரர்கள் சுய ஒழுக்கத்துடன் நடந்து கொண்டார்கள்.


எனக்கு இந்த சூழல், அதன் குதூகலம், கொண்டாட்டம், சத்தம், வண்ணமயம் பிடித்திருந்தது. அடையார் பொதுவாக ஒரு கறுப்பு வெள்ளை, நாசூக்கான பகுதி. அங்கே ஒலி, வண்ணங்கள், அசைவுகள் மிக மெத்தனமாக மணிரத்னம் படக்காட்சிகள் போன்றே இருக்கும். மனிதர்கள் ஏதோ விண்வெளியில் இருந்து இப்போ தான் இறங்கி வந்தேன் எனும் கணக்கில் நடப்பார்கள். இன்றைய நிகழ்வுகள் இந்த எலைட் பகுதிக்குள் கீழ்மட்ட மக்களை கொண்டு வந்து ஒரு விநோத சூழலை உருவாக்கியது. இது ஒரு தற்காலிக கலாச்சார ஊடுருவல். இன்றைக்கு மட்டும் அடையாறும் கோட்டூர்புரமும் வேறு மக்களால் கைப்பற்றப்பட்டு விட்டது. அப்பகுதிகளின் குணம் தற்காலிகமாய் மாறி விட்டது. இதை நான் மிகவும் ரசித்தேன்.

இந்த கொடூரமான வெயிலில் பாதுகாப்பு பணி செய்யும் நூற்றுக்கணக்கான போலீசாரைப் பற்றியும் ஒரு நிமிடம் கருணையுடன் நினைத்துப் பார்க்க வேண்டும். போக்குவரத்தின் ஒழுங்கு குலையாமல் பாதுகாத்த போக்குவரத்து காவலர்களையும் பாராட்ட வேண்டும்.

நான் எம்.ஜி.ஆர் பாடல்களின் ரசிகன். என் சிறுவயது முழுக்க அப்பாடல்களாலே நிரம்பினது. அப்பா தினமும் குடிபோதையில் ஒருமணிநேரமாவது எம்.ஜி.ஆர் பாடல்கள் பாடுவார். பாடித் தான் என்னை குழந்தையாய் இருக்கையில் தூங்க வைப்பார். அதனாலே எம்.ஜி.ஆர் பாடல்கள் கேட்டால் சட்டென சோர்விலிருந்து மீண்டு விடுவேன். வீட்டுப்பக்கத்தில் அம்மன் பாடல்களை ஸ்பீக்கரில் இட்டு கழுத்தறுக்கும் போது எனக்கு ரத்தக் கண்ணீர் வரும். ஆனால் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் என்றால் கொண்டாட்டம் தான். காலையில் விழித்ததும் பல அற்புதமான பாடல்கள் கேட்டபடி இருக்கலாம். வெளியே போனாலும் எங்காவது ஒரு மூலையில் மேடை அமைத்து அப்பாடல்கள் ஒலிக்க வைத்திருப்பார்கள். அன்று முழுக்க ஒரு புன்னகையுடனே இருப்பேன். அதனாலே இன்று இப்பகுதியில் வீறிடும் பல்வேறு பாடல்கள் எனக்கு அந்நியமாய் தோன்றவில்லை. எட்டு வயது குழந்தையாய் அப்பா மடியில் இருந்த நினைவு தான் மேலிடுகிறது.


இறுதியாக, இதே தொண்டர்கள் தாம் ஜெயலலிதா கைது செய்யப்பட்ட போது கடைகளை அடித்து நொறுக்கி அழிவு செயல்களில் ஈடுபட்டார்கள் என்பதையும், பின்னர் அவர் விடுதலையான போது நீதி என்றால் என்னவென்பதை மறந்து விட்டு குமாரசாமியை போற்றி சுவரொட்டி ஒட்டினார்கள் என்பதையும் நாம் மறந்து விட வேண்டாம். ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்! 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.