Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

ஜெயகாந்தனின் மறுகட்டமைப்பும் தீவிர இலக்கியவாதிகளும்

Image result for ஜெயகாந்தன்
(மே 2015 அம்ருதாவில் வெளியான கட்டுரை)

ஜெயகாந்தனின் மறைவை ஒட்டி எழுதிக் குவிக்கப்படும் புகழஞ்சலிகளும் பேசப்படும் மிகையான பேச்சுகளுக்கும் அவர் நிச்சயம் தகுதியானவர் தான். தமிழின் இறுதி பொது ”அறிவுஜீவி” அவர். அறிவுஜீவியை மேற்கோட்குறிகளுக்குள் போடக் காரணம் எந்த அறிவுத்துறையிலும் பயிற்சியற்ற இயல்பறிவு ஜீவி (common sense intellectual) அவர் என்பது.


 ஜெயகாந்தனின் விவாதங்களில் அவர் முன்வைக்கும் தர்க்கம் பெரும்பாலும் பிழையானதாக, மேம்போக்கானதாக இருக்கும். ஆனால் அதை அவர் மிக ஆவேசமாய், தோள்களை தூக்கி நெஞ்சு நிமிர்த்தி சொல்வதால் சரியானது போன்ற தோற்றம் ஏற்படும். உதாரணமாய் ஒரு மேடையில் அவர் சாதி பற்றி பேசுகிறார். சாதி பிரிவினை தேவை தான் என ஆரம்பிக்கிறார். ஆனால் சாதி அமைப்பை தமிழர்கள் வேறுவிதமாய் கொண்டிருந்தார்கள் என்று விட்டு திருக்குறள் மற்றும் கம்பராமாயணத்தில் இருந்து உதாரணங்கள் வழங்குகிறார். இதன் மூலம் பண்டைய காலத்தில் நம் விவசாயிகள் சாதி அடுக்கில் அனைத்து சாதியினருக்கும் மேலாக இருந்தார்கள் என்கிறார். உடனே நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் மொழிப் பெருமிதத்திலும் சாதிய குற்றவுணர்வு காரணமாகவும் கைதட்டுகிறார்கள். ஆனால் இது உண்மையா? அல்ல.

 பழந்தமிழகத்தில் மன்னராட்சி ஏற்பட்டு நகரங்கள் தோன்றத் துவங்கின போதே சாதிய அமைப்பு ஏற்பட்டு விட்டது. அவ்வமைப்பில் பிராமணர்கள், பிறகு சத்திரியர்கள், பிறகு அடுத்த கட்ட இடைநிலை சாதியினர் என்று தான் படிநிலை இருந்தது. வைதிக மதம் இங்கு வேரூன்றிய சூழலில் தான் கம்பராமாயணமே எழுதப்பட்டது. சிலப்பதிகாரத்திலும் பிராமணிய சடங்குகள் பற்றி குறிப்புள்ளது. பாரதிதாசன் பின்னர் பிராமணர்களை அகற்றிய ஒரு புது சிலப்பதிகாரம் எழுதிப் பார்த்தார். வள்ளுவரும் கம்பனும் உழவனை மேலாக வைத்து பாராட்டுவது என்பது ஒரு லட்சியவாத அறிவித்தல் மட்டும் தானே தவிர அது சமூக நிதர்சனம் அல்ல. வள்ளுவர் புலால் உண்ணாமை பற்றி எழுதி இருக்கிறார் என்றால் சைவ உணவுப்பழக்கமே தமிழனின் ஆதிப்பண்பாடு என கூறலாமா? இல்லை அது சமணர்களின் கொண்டு வந்த பழக்கம். தமிழ் சமூகம் புலால் உண்ணும் சமூகம் தான். சமூகவியல் பயிற்சி கொண்ட ஒருவர் ஒரு லட்சியவாத கவிதை வரியை வரலாற்று உண்மையாக கோரி மேலோட்டமாய் வாதிட மாட்டார். ஆனால் ஜெயகாந்தன் செய்வார். அதை ஒரு அறிவுஜீவித்தனத்தின் தோற்றத்திலேயே செய்வார்.

 எதை எங்கு சொன்னால் கைதட்டு கிடைக்கும் என அவருக்குத் தெரியும். எதை எங்கு சொன்னால் பிரச்சனை சலசலப்பு ஏற்படும் என்பதும் அவருக்குத் தெரியும். தமிழர்களின் செண்டிமெண்டை ஒட்டியும், சில புனிதங்களை உடைத்தும் அவர் பேசும் போதும் கூட அவர் தமிழர்களை கடுமையாய் தொந்தரவு செய்யக் கூடிய சாதிய, மதவாத ஒடுக்குமுறைகளைப் பற்றி பேசுவதைத் தவிர்த்தார். தமிழர்கள் அடிப்படையில் முற்போக்கானவர்கள். மிக நேரடியாக வெளிப்படையாக பல புனிதங்கள் கேள்விக்குள்ளாவதை அவர்கள் ஏற்பார்கள். கற்பையும் உற்பட்டு தான். ஏனென்றால் கற்பை ஆதித்தமிழன் பார்த்த விதம் இதே போல் முற்போக்கானது தான். பெரியாரை சாமி சிலையை உடைக்கவும் பல முற்போக்கான கருத்துக்களை பேசி செயல்படுத்தவும் இம்மக்கள் நிச்சயம் அனுமதித்தனர். ஜெயகாந்தனை பெரியாருடன் ஒப்பிடுகையில் சாதி அமைப்பு, குடும்ப அமைப்பு, மத நம்பிக்கைகள் போன்ற புனிதங்களை அவர் அளவுக்கு ஜெயகாந்தனால் சீண்டக் கூட முடியவில்லை எனக் காணலாம். ஹிப்பி கலாச்சாரத்தை மேலோட்டமாய் ஜெயகாந்தன் முன்னெடுக்க முயன்ற போதும் சாதி அமைப்பை தக்க வைக்க முயல்வதன் மூலம் அவர் குடும்பம் உள்ளிட்ட அனைத்து உள் அமைப்புகளையும் தான் பாதுகாத்து முயன்றார்.

ரவி சுப்பிரமணியன் ஜெயகாந்தனை தன் ஆவணப்படத்துக்காய் பேட்டி காணும் போது ஒரு கேள்வி கேட்கிறார்: “நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு மது, கஞ்சா போன்ற போதைப்பழக்கங்களை ஏற்படுத்துவதாய் ஒரு குற்றச்சாட்டு உள்ளதே?”. அதற்கு பதிலளிக்கும் ஜெயகாந்தன் “என்னை சமூகம் கெடுத்தது. ஆக நான் என்னை சுற்றி உள்ளவர்களை கெடுக்கத் தான் வேண்டும். வேறு வழியில்லை. நான் இதற்கு பொறுப்பல்ல” என்கிறார். இந்த பதிலை குறிப்பிட்டு என்னிடம் பேசிய தமிழவன் ஜெயகாந்தன் ஒரு சிந்தனையாளர் அல்ல என்பதற்கு இதுவே உதாரணம் என்கிறார். “கெடுத்தது” எனும் போது அவர் தன் பழக்கங்களை ”கெட்டவை” என்று தானே ஒத்துக் கொள்கிறார். அப்படி ஒத்துக் கொள்ளும் போது அவர் குடிப்பதிலும் கஞ்சா புகைப்பதிலும் என்ன கலகம் உள்ளது? அறிந்து எதிர்ப்பரசியலுக்காக செய்வது தானே கலகம். பிறழ்வு என்றும் கலகம் அல்ல.

 அடுத்து, சமூகம் தன்னை கெடுத்ததாக கூறுவதே ஒரு தப்பித்தல் நடவடிக்கை தானே. ஒரு சிந்தனையாளன் தன் செயல்களுக்கான காரணத்தை தனக்குள்ளும், சமூகவியல், சமூக உளவியல், அரசியல் சூழல் மற்றும் பொருளாதாரத்திலும் தேடி அலசி அறிவான். ஜெயகாந்தன் பதில் எப்படி பட்டது தெரியுமா? என் அப்பாவிடம் ஏன் இப்படி மொடக்குடிகாரனாக இருக்கிறீர்கள் என்றால் “என் மகனுக்கு உடல் நலமில்லை. அதை நினைத்து துக்கத்தில் குடிக்கிறேன்” என்பார். அடுத்த நாள் போய்க் கேட்டால் “என்னை சின்ன வயதில் சரியாக வளர்க்கவில்லை. தவறான சேர்க்கையால் குடிப்பழக்கம் தொற்றிக் கொண்டது” என்பார். சில மணிநேரங்கள் கழித்து கேட்டால் “இறந்துபோன எம்.ஜி.ஆர் நினைவு வந்து விட்டது. என்னால் தாங்க முடியவில்லை” என்பார். இவையெல்லாம் காரணங்கள் அல்ல. நியாயப்படுத்தல்கள். காரணம் என்பது ஒரு செயலுக்கு ஆதாரமாக உள்ள உண்மை. ஜெயகாந்தனின் பதில் ஒரு சிந்தனையாளனின், எழுத்தாளனின் தீர யோசித்து கூறின பதில் அல்ல. அது போகிற போக்கில் உதிர்க்கிற அர்த்தமற்ற சாக்குபோக்கு. நம் மக்களின் பொது உளவியலை அறிவுஜீவி மேதாவித்தனத்துடன் வெளிப்படுத்தியது தான் ஜெயகாந்தன் பெற்ற சமூக அங்கீகாரத்துக்கு முக்கிய காரணம்.
 இதனால் தான் ஜெயகாந்தன் ஒரு பொது மக்கள் பண்பாட்டை ஒட்டிய இயல்பறிவு ஜீவியாக செயல்பட்டார் என்றேன். பெரியாரைப் போன்றே அவர் மக்களிடம் அவர்களின் மொழியில் பேசினார். ஆனால் பெரியாரின் முற்போக்கு பார்வையும், தெளிவான விரிவான சமூக நோக்கும், அரசியல் தீவிரமும் தொலைநோக்கு பார்வையும் அவருக்கு இருக்கவில்லை.

இங்கு நாம் ஜெயகாந்தனின் ஆரம்ப கால கம்யூனிச ஈடுபாடு மற்றும் பிறகு அவர் கொண்டிருந்த கம்யூனிச மற்றும் திராவிட இயக்க வெறுப்பு ஆகியவை பற்றியும், வைதிக இந்துத்துவா சார்பு பற்றியும் பேச வேண்டும். இதை ஜெயகாந்தனின் தனித்துவமான ஆளுமையின், சுதந்திரமான வாழ்க்கைப்பார்வையின் வெளிப்பாடாக சிலர் கருதுகிறார்கள். ஆனால் இந்த நிலைப்பாடுக்கு ஒரு சாதிய பின்னணியும் உள்ளது. தமிழகத்தில் வைணவத்தை பிராமணர்கள் முன்னெடுத்தார்கள் என்றால் சாதியடுக்கில் அவர்களுக்கு அடுத்துள்ள வேளாளர்கள் சைவத்தை முன்னெடுத்தார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டு மற்றும் இருபதாம் நூற்றாண்டின் துவக்கம் வரை பிராமணர்கள் நகரங்களுக்கு இடம் பெயர்ந்து காலனிய ஆட்சியின் பல வசதி வாய்ப்புகளை அனுபவித்து முன்னேறினர். மேற்கத்திய கல்வி பெற்று குமாஸ்தா, சட்டவல்லுர் இடங்களை நிரப்பினர். இக்காலகட்டத்தில் வேளாளர்களுக்கு பிராமணர்கள் மேல் கடுமையான துவேசம் ஏற்பட அவர்கள் வைதிக பண்பாட்டுக்கு எதிராக சைவ மத இலக்கியத்தை முன்னெடுத்து ஒரு புது அலையை உருவாக்கினர். பல சைவ இலக்கிய நூல்களை தொகுத்து பிரசுரித்து பிரச்சாரம் செய்தனர். ஆனால் பின்னர் திராவிட இயக்கம் தோன்றி பிராமணர்களை கடுமையாக தாக்கிய போது அடுத்த கட்ட “பிராமணர்களான” வேளாளர்களும் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகினர். வேளாளர்கள் இடையே ஒரு கடுமையான திராவிட இயக்க கசப்பு தோன்றியதற்கு இதுவும் ஒரு காரணம். தீவிர எழுத்தாளர்களிடையே க.நா.சு, வெங்கட் சாமிநாதன் போன்ற பிராமணர்களுக்கும் சில மாறுபட்ட காரணங்களால் தீராவிட இயக்க வெறுப்பு இருந்தது. பிற்பாடு நாஞ்சில் நாடன், விக்கிரமாதித்யன் போன்ற வேளாளர்களும் தம் திராவிட இயக்க வெறுப்பை வெளிப்படையாக எழுத்தில் கொண்டு வந்தனர். இவ்வாறு திராவிட இயக்க எதிர்ப்பில் பிராமணர்களும் வேளாளர்களும் இணையும் ஒரு வரலாற்று சூழல் உருவானது. (இதைப் பற்றி ராஜ் கௌதமன் தனது “தலித் விமர்சனக் கட்டுரைகள்” நூலில் விரிவாக எழுதுகிறார்).

 இந்த திராவிட எதிர்ப்பு போக்கிற்கு வெகுஜன பரப்பில் ஏற்பட்ட எதிரொலி தான் ஜெயகாந்தன். அவர் ஒரு வெகுமக்கள் பிரபலம் என்பதால் அவரது எதிர்ப்புக்கு உடனடியாய் ஒரு கவனம் கிடைத்தது. வேளாள எழுத்தாளர்களில் கலாப்ரியா மட்டும் தான் விதிவிலக்காக அண்ணா மீது காதலும் திராவிட இயக்கம் மீது அக்கறையும் கொண்டவராக இன்னும் இருக்கிறார். இங்கு மற்றொன்றையும் குறிப்பிட வேண்டும். எழுத்தாளர்கள் இடையே திராவிட இயக்கம் மீது ஒவ்வாமை ஏற்பட அவ்வியக்கம் ஒரு மேலோட்டமான சினிமா கலாச்சாரத்தை முன்னெடுத்து மக்களை சீரழித்ததாக அவர்கள் நம்பியதும் ஒரு காரணம்.

அடுத்து ஜெயகாந்தனின் கம்யூனிச ஈடுபாடு மற்றும் எதிர்ப்பை பார்ப்போம். பொதுவாக இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வேளாள சமூகத்தை ஈர்த்த மற்றொரு விசயம் கம்யூனிசம். எங்கள் ஊரில் கம்யூனிச இயக்கத்தில் வேளாளர்கள் தாம் கணிசமாய் முன்னிலையில் இயங்கினார்கள். பொதுவாக இச்சமூகம் இருபதாம் நூற்றாண்டில் சந்தித்த  பொருளாதார பின்னடைவு, சமூக அந்தஸ்தில் வீழ்ச்சி ஆகியவை ஒருவித பதற்றத்தை அவர்களூக்கு உண்டு பண்ணியிருக்கலாம். பெரும்பாலும் நிலத்தை ஒட்டி வாழ்ந்த அச்சமூகம் நிலத்தை இழந்து வேறு வேலைகளில் புழங்க நேர்ந்தது கம்யூனிசம் அவர்களை ஈர்த்ததற்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் அச்சமூகம் கராறான மதச்சடங்குகளை பின்பற்றுகிற சைவ சமூகமும் தான். இந்து மத எதிர்ப்பு என்பது அவர்களுக்கு பண்பாட்டு அளவில் சிக்கலான ஒன்று. ஆக மதத்தை எதிர்க்கும் கடவுளை மறுக்கும் கம்யூனிசத்தின் நாத்திகத் தன்மை அச்சமூக மக்களுக்கு ஏற்பதற்கு சற்று சிக்கலான ஒன்றே. ஜெயகாந்தன் மார்க்ஸியம் இச்சமூகத்தில் செயல்படுத்தப்படுவதில் உள்ள பொருளாதார நடப்பியல் சிக்கல்களை காரணங்காட்டி விலகவில்லை. கம்யூனிஸம் பண்பாட்டளவில் இந்தியர்களுக்கு (இந்திய இந்துக்களுக்கு) அந்நியமாக இருந்ததே அவரது பிரச்சனையாக இருந்தது. அதாவது கம்யூனிசத்தின் பொருளாதாரம் அல்ல பண்பாடு தான் அவரது சிக்கல். கம்யூனிசத்தை கைவிடும் மறுநொடி அவர் மிக எளிதாக வைதிக, இந்துத்துவ அரசியலுக்கு இடம்பெயர்வது இவ்வாறு தான் நடக்கிறது. ஜெயகாந்தனுக்கு நம் பக்தி மற்றும் பண்டைய இலக்கியத்தில் உள்ள ஆர்வத்தை, மரபிலக்கிய வரிகளை தம் படைப்புகளில், பேச்சில் எடுத்தாள்வதில் உள்ள லயிப்பை நாம் இந்த பக்கம் தீவிர இலக்கியர்களில் விக்கிரமாதித்யன், நாஞ்சில் நாடன் ஆகியோர்களிடமும் காண்கிறோம். இது எதேச்சையானதா என்றால் எதேச்சை தான். எதேச்சை இல்லையென்றால் அதுவும் தான்.  
ஜெயகாந்தன் ஒரு தனித்துவமான தாக்கத்தை அவர் வாழ்ந்த காலத்தில் மத்திய வர்க்க இளைஞர்களிடம் செலுத்தினார். அவர்களால் அப்போது கற்பனை செய்ய முடியாத பல கலாச்சார அதிர்ச்சிகளை தந்தார். விகடனில் தொடர்ந்து எழுதி அவர்களிடம் நேரடியாக தன் கதைகள் மூலம் ஒரு மேலோட்டமான “எதிர்ப்பரசியலை” பிரச்சாரம் செய்தார். இந்த எதிர்ப்பு என்பது கற்பு, சம்பிரதாய செயல்பாடுகள் என ஒழுக்க விழுமியங்கள் சம்மந்தப்பட்டதாக, அதேநேரம் சாதி, மதம் போன்ற அடிப்படை நம்பிக்கைகளை கேள்வி கேட்காததாக அமைந்தது. இது அக்காலத்தைய மத்திய, மேல் மத்திய, ஆங்கிலம் பேசும் மேல்தட்டு தலைப்பிரட்டை புரட்சிகர இளைஞர்களை வசீகரித்ததில் எந்த வியப்பும் இல்லை. ஆனால் நாற்பது வருடங்களுக்கு பிறகு இன்று பெரியாரும் எம்.ஆர் ராதாவும் உயிர்ப்புடன் இருக்கிறார்கள். அவர்களின் சொற்கள் இன்றும் இளைஞர்களிடத்தில் செல்வாக்குடன் இருக்க ஜெயகாந்தனின் புரட்சி சாயம் வெளுத்து சாதாரணமாகி விட்டது. “அக்னி பிரவேசத்தை” இன்று படிக்கும் எந்த இளைஞனுக்கும் அது அதிர்ச்சிகரமாகவோ ஆழமானதாகவோ புதுமையாகவோ படாது. “சிலநேரங்களில் சில மனிதர்கள்”, “கங்கை எங்கே போகிறாள்” போன்ற நாவல்களை படிக்கும் பெண்களுக்கு ஒரு பெண் பேச வேண்டிய இடத்தில் ஏன் ஜெயகாந்தனின் கரகர குரல் இவ்வளவு உரத்து கேட்கிறது என தோன்றும். முழுக்க முழுக்க ஆண் மொழியில் எழுதிய கதையை ஒரு பெண் சொல்லுவதாய் ஏன் கோருகிறார் இவர் என கேட்பார்கள்.
 ஜெயகாந்தனின் முக்கியத்துவம் வரலாற்றுபூர்வமானது. பெல்பாட்டம் பேண்ட் அணிந்து, பங்கு தலைமுடி வைத்திருந்த இளைஞர்களின் கறுப்புவெள்ளை பட காலத்துடன் ஜெயகாந்தனின் வரலாற்றுக் காலமும் முடிந்து விட்டது. ஆனால் ஜெயகாந்தன் காலத்தில் அவரளவு ஆர்ப்பாட்டமும் பிரபலமும் இன்றி எழுதின புதுமைப்பித்தனும் மௌனியும் இன்றும் நம் காலத்துக்கு பொருத்தமானவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் எழுத்து முடிந்து போகவில்லை. ஆனால் ஜெயகாந்தனின் வெகுமக்கள் எழுத்து அவர் மறைவுக்கு 30 வருடங்களுக்கு முன்னரே மரித்து விட்டது. அவர் தன் எழுத்து காலாவதி ஆனதை கால்நூற்றாண்டு கண்ட பின் தான் மறைந்தார். இது ஒரு பக்கம் தமிழ் உரைநடை எவ்வளவு வேகமாய் வளர்ந்துள்ளது என்பதையும் தான் காட்டுகிறது என்கிறார் தமிழவன்.

ஆனால் ஒரு மக்கள் கலைஞனை, தன் காலம் முடிந்து நீர்த்து விட்ட மக்கள் கலைஞனைக் கூட, கொண்டாடுவது தேவை தான். ஆனால் அதை யார் செய்வது என்பது தான் பிரதானமான கேள்வி. வெகுமக்கள் மீடியாவும், அதனுடன் தொடர்புள்ள வாசகர்களும் பிறரும் ஜெயகாந்தனின் நினைவை கொண்டாடுவது தான் நியாயம். ஜெயகாந்தன் வெறும் சினிமாத்தனமான பிரச்சார எழுத்தாளர், தட்டையான சிறுகதையாளர் என கடுமையாய் அவரை ஒரு காலத்தில் விமர்சித்த சிறுபத்திரிகையாளர்களும் தீவிர எழுத்தாளர்களும் இன்று என்ன செய்ய வேண்டும்? தம்முடைய உண்மையான நிலைப்பாட்டில் நிற்க வேண்டும். ஆனால் அவர்களும் போட்டி போட்டு ஜெயகாந்தனை “இலக்கிய பிதாமகர்” எனக் கொண்டாடுவது தான் வேடிக்கை. ஜெயகாந்தன் இலக்கிய பிதாமகர் என்றால் புதுமைப்பித்தன், மௌனி, நகுலன், அசோகமித்திரன், சுந்தர ராமசாமி இவர்கள் எல்லாம் யார்? இன்று ஜெயகாந்தனை மிகையாக பாராட்டி பெருமூச்செறியும் இந்த தீவிர படைப்பாளிகள் தனிப்பட்ட முறையில் அவரை மதிக்கவில்லை என்றாலும் இந்த பஜனை கோஷ்டியில் இவர்களும் இணைவதன் காரணம் என்ன என நாம் சிந்திக்க வேண்டும்.

ஆளுமைகள், பிரபலங்கள், குருபீடங்கள், தலைவர்கள், ரத்தசாட்சிகள் ஆகியோரை உருவாக்குவதன் மூலமே மீடியா மற்றும் அரசியல்வாதிகள் நிலைக்க முடியும். தேவையுள்ள போது அவர்கள் திடீரென ஒரு பழைய ஆளுமையை புதுமையாக அடையாளம் கொடுத்து கட்டமைப்பார்கள். சர்தார் வல்லபாய் பட்டேலை பா.ஜ.க சமீபமாக தமது தலைவராக, லட்சிய முகமாக மறு உருவாக்கம் செய்யப் பார்ப்பது ஒரு நல்ல உதாரணம். பண்பாட்டுத் தளத்தில் எடுத்துக் கொண்டால் சினிமா மொழியே தெரியாத சிலரை “நாளைய இயக்குநர்” கண்டுபிடித்து சந்தையில் இறக்கி விடுவது; சுருதிசுத்தமாய் பாட வராத ஆட்களை தொடர்ந்து உற்பத்தி செய்து சூப்பர் சிங்கர்களாக ஊர் ஊராக போய் பாட வைப்பது; பேஸ்புக் ஒரு பக்கம் எழுத்து பிரபலங்களையும், டாக்‌ஷோக்கள், விவாத மேடைகள் பல புது அறிவுஜீவிகளையும் உற்பத்தி செய்வது ஆகியவற்றை உதாரணமாய் சொல்லலாம். இந்த உற்பத்தி செய்யப்பட்ட கலைஞர்கள் மற்றும் ஆளுமைகளுக்கும் ஒரிஜினலான ஆட்களுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் உள்ளது. மீடியா உற்பத்தி செய்யும் ஆளுமைகளுக்கு தாம் சார்ந்த துறையில் ஒரு நீண்ட கால பரிச்சயம், ஈடுபாடு, செயல்பாடு இருக்காது. “தெரியாத தொழிலில் ஈடுபட்டால் தான் பெரிய ஆளாக முடியும்” என வடிவேலு ஒரு படத்தில் சொல்வதை தீவிரமாக பின்பற்றுகிறவர்கள் இவர்கள்.


ரெண்டாயிரத்துக்கு பிறகு இந்த போக்கை பின்பற்றி இலக்கிய எழுத்துலகிலும் வெகுமக்கள் பரப்பை சார்ந்த பிரபலங்கள் இலக்கிய முலாம் பூசப்பட்டு சந்தைக்கு மீள் அறிமுகம் செய்வது துவங்கியது. அதன் நீட்சியாகத் தான் இப்போது ஜெயகாந்தன் ஒரு உன்னத இலக்கிய எழுத்தாளராக ஜெயமோகன், எஸ்.ரா, சு.ரா, மௌனி, நகுலன், புதுமைப்பித்தன் அனைவருக்கும் முன்னோடியாக புது வடிவத்தில் version 2.0ஆக கொண்டு வரப் படுகிறார். பொது மீடியாவில் செயல்படும் ஒரு இலக்கிய எழுத்தாளன் கூட இன்று அதிக கைத்தட்டல்கள், அங்கீகாரங்கள், பேஸ்புக் லைக்குகல் மற்றும் பகிர்வுகள் பெற வேண்டுமென்றால் ஜெயகாந்தனை புகழ்வது தான் ஒரே வழி. ஜெயகாந்தனை முன்புபோல் கராறாக விமர்சித்தால் இப்போது அடிக்கும் உணர்ச்சிப் புயலில் அவர்கள் கரையொதுங்கி தனிமைப்பட நேரிடும். ஜெயகாந்தனை இலக்கிய பிதாமகனாக மறுகட்டமைப்பு செய்யும் போது அவரது அதே எழுத்து வகைமையை சேர்ந்தவர்களாகத் தான் தீவிர எழுத்தாளர்கள் தம்மையும் மறைமுகமாக கோருவதாக ஆகிறது. ஜெயகாந்தன் “நான் எழுதுவதை நிறுத்திய கட்டத்தில் சரியாக என்னிடத்தில் வந்து எழுத ஆரம்பித்தவர் ஜெயமோகன்” என கூறியதாக ஜெயமோகன் பெருமையாக ஓரிடத்தில் எழுதினார். அது உண்மையென்றால், ஜெயகாந்தன் ஜெயமோகனை தனக்கு முன்னோடியாக கருதுகிறார் என்றால் ஜெயமோகனுக்கு அதைப் போன்ற ஒரு பெரும் இழுக்கு வேறு இருக்க முடியாது. ஏனென்றால் ஒரு கலைஞனாக ஜெயகாந்தனை விட பல மடங்கு மேலானவர் ஜெயமோகன். இதை ஜெயமோகன் நன்கு அறிவார். 

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...