முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பா.ஜ.கவின் மலைப்பாம்பு அரசியல்


மலைப்பாம்பு இரையை மெல்ல நெருங்கி தன் உடலால் சுற்றி வளைத்து இறுக்கும். நெருக்கி எலும்புகளை கூழாக்கும். இரை செயலிழந்த பின் அதை முழுதுமாய் முழுங்கி விட்டு ஜீரணமாகும் வரை பல மணிநேரங்கள் அசையாது படுத்துக் கிடக்கும். மெதுவான வலிமிகுந்த மரணம். இதற்கு இரை மீது பாய்ந்து கழுத்தைக் கடித்து உயிரெடுக்கும் சிங்கம், புலிகள் மேல். பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பின் இந்த மலைப்பாம்பை போலத் தான் நடந்து கொள்கிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அது தில்லி மற்றும் உ.பியில் அடிவாங்கியது. உ.பி தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன் அங்கு நிகழ்ந்த சில கற்பழிப்பு வழக்குகளை பெரிதுபடுத்தி மீடியா மூலமாய் அகிலேஷ் யாதவை தாக்கியது. அதே போல் அங்கு மதக் கலவரங்களையும் விளைவிக்க முயன்றது. அதாவது மத உணர்வுகளை ஒரு புறம் தூண்டி, ஆளுங்கட்சியின் சட்டம் ஒழுங்கு பற்றி மோசமான சித்திரத்தை உருவாக்கி தேர்தலில் வெல்ல முயன்றது. ஆனால் இம்முயற்சி மண்ணைக் கவ்வியது.

பா.ஜ.க அடுத்து வங்காளத்தை குறி வைத்தது. ஏற்கனவே ஊழலில் ஊறிப் போயிருந்த மம்தா அரசை ஷாரதா ஊழல் வழக்கு மூலம் சிக்க வைத்தது. சி.பி.ஐ விசாரணை மூலம் சுற்றி வளைத்து நெருக்கு எலும்புகளை நொறுக்கும் நிலை வரை கொண்டு வந்தது. ஆனால் வங்காளத்தில் இடதுசாரிகள் பலவீனமாய் இருந்தாலும் இந்த ஊழல் குற்றச்சாட்டையும் கடந்து அடுத்த தேர்தலில் வெல்லும் சாத்தியங்களுடன் தான் மம்தா இருக்கிறார் என ஒரு வங்காள நண்பர் என்னிடம் கூறினார். இதனால் பா.ஜ.க இப்போது மம்தாவுடன் கூட்டணி அமைக்கும் வகையில் காய் நகர்த்துகிறது. ஊழல் வழக்கின் வேகத்தை குறைத்து அதை சாகடிப்பதன் மூலம் மம்தாவுடன் பேரம் பேசுகிறது. வங்கதேச பயணத்தில் மோடியுடன் மம்தாவுடன் சேர்ந்து பயணித்துள்ளது இதன் அறிகுறி தான்.
 இதே அரசியலைத் தான் பா.ஜ.க தமிழகத்தில் ஜெயலலிதவுக்கு வழக்கில் இருந்து விடுதலைப் பெற்றுத் தந்து செய்கிறது. சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட பா.ஜ.கவை நம்பியே இருக்கிறார். கூட்டணியில் எத்தனை இடங்கள் என பேரம் பேசுவதில் இப்போது பா.ஜ.கவின் கரம் தமிழகத்திலும் வங்காளத்திலும் வலுத்துள்ளது. அப்படி கூட்டணி சேர்ந்து மட்டுமே அவர்களால் சில இடங்களாவது வெல்ல முடியும்.

தில்லி தேர்தலில் கடும் தோல்வி அடைவோம் என பா.ஜ.க நிச்சயம் எதிர்பார்த்திருக்கவில்லை. ஏனென்றால் ஆம் ஆத்மியின் நிலை பரிதாபமாகவே அதுவரை இருந்தது. சட்டென தேர்தலுக்கு முன் அவர்களுக்கு சாதகமாய் அலை கிளம்பியது. இந்த ஏமாற்றத்தின் கசப்பை பா.ஜ.க தொடர்ந்து அற்ப அரசியல் மூலமாய் தில்லியில் வெளிப்படுத்தி வருகிறது. தில்லியில் ஆளுங்கட்சிக்கு ஆட்சி அதிகாரம் மிக மிக குறைவு. அது மத்தியின் கையில் ஒரு பொம்மை அரசாகவே இருக்க இயலும். இந்த சட்டரீதியான அனுகூலத்தை பயன்படுத்தி பா.ஜ.க தொடர்ந்து ஆம் ஆத்மிக்கு தலைவலி அளிப்பதில் கவனம் செலுத்துகிறது. ஊழல் வழக்கில் மாட்டும் காவல் அதிகாரிகளை கைது செய்வதற்கு உள்ள உரிமை சம்மந்தமாய் ஆளுநருக்கும் கேஜ்ரிவாலுக்கும் இடையில் ஏற்பட்ட இழுபறி, நீதிமன்ற வழக்கு என தில்லியில் ஆம் ஆத்மிக்கு நிம்மதியாய் ஆட்சி செய்ய அவகாசம் வழங்கக் கூடாது என்பதில் பா.ஜ.க தெளிவாய் உள்ளது. இப்போது அங்குள்ள குப்பை அள்ளும் தொழிலாளர்களுக்கு இருமாதமாய் சம்பளம் வழங்காததால் அவர்கள் 15 டன் குப்பையை சாலையில் கொட்டி தில்லியை நாறடித்து விட்டார்கள். சம்பளத்துக்கான பணத்தை மத்திய அரசு கொடுக்கவில்லை என ஆம் ஆத்மியும், நாங்கள் கொடுத்து விட்டோம் என பா.ஜ.கவும் பரஸ்பரம் குற்றம் சாட்டுகிறது. இதனால் அங்கு பொதுமக்கள் கடும் சிரமங்களுக்கும், உடல்நலக் கேட்டுக்கும் உள்ளாகிறார்கள். இதை மத்திய அரசு நன்றாய் அறியும். அதேவேளை இதை மாநில அரசின் பெரும் குற்றமாய் மக்கள் பார்க்கப் போவதும் இல்லை. ஆனால் பா.ஜ.க இங்கு வேறு ஒரு சேதியை தில்லி மக்களுக்கு தெரிவிக்க விரும்புகிறது: “மத்தியில் எங்கள் ஆதரவு இன்றி தில்லியில் சரியாக ஆட்சி நடக்காது. மக்களும் நிம்மதியாய் வாழ இயலாது. எங்களை தேர்தலில் தோற்கடித்த நீங்கள் அவஸ்தைப்படுங்கள். இனிமேலாவது இந்த தப்பை செய்யாதீர்கள்.” மாநில தேர்தலில் தம்மை தோற்கடித்ததற்காக பா.ஜ.க மக்களுக்கு வழங்கும் சாட்டையடி தண்டனை இது.

இது ஒருவித தந்தைவழி சமூக மனப்பான்மை. மோடி மக்களை ஒரு சர்வாதிகார தந்தையை போல் நடத்துகிறார். என்னைப் பணிந்தால் உங்களை அன்போடு நடத்துவேன். எதிர்த்தால் செருப்பால் அடிப்பேன் என்கிறார். சுதந்திரத்துக்கு பிறகு மக்களை இப்படி நேரடியாய் பழிவாங்கும் ஒரு மத்திய அரசு அமைந்ததில்லை. இதுவரை காஷ்மீரிலும், வடகிழக்கிலும் மத்திய அரசுகள் செய்து வந்ததை மோடி அரசு தில்லியிலே செய்து காட்டி உள்ளது: எந்த ஆதரவும் இன்றி கொஞ்ச கொஞ்சமாய் கழுத்தை நெரித்துக் கொல்வது தான் இது. நல்ல வேளை தமிழகம் மோடியின் கையெட்டும் தொலைவில் இல்லை.
இந்திரா காந்தி முதற்கொண்டு இவ்வாறு மாநிலங்களின் பிரதான அரசியல் கட்சிக்குள் ஊடுருவி கட்டுப்படுத்தும் போக்கை காங்கிரசும் கடைபிடித்து வந்துள்ளது. ஆனால் இவ்வளவு தீவிரமாய் திட்டமிட்டு பா.ஜ.கவை போல் செய்ததில்லை. அதற்கு ஒரு காரணம் தான். காங்கிரஸ் ஆட்சியில் உள்ள போது பெரும்பாலான மாநிலங்களில் அதற்கு வலுவான ஆதரவும், அதிகாரமும் இருந்தது. ஆனால் பெரும் வெற்றியை பெற்று ஆட்சி அமைத்த நிலையிலும் பா.ஜ.கவிற்கு அது இல்லை. மேலும் மோடியின் வசீகரமும் வளர்ச்சி பிரச்சாரமும் அவர் ஆட்சி அமைத்த சில மாதங்களிலேயே ஒளி மங்கி விட்டது. இது அடுத்து வந்த மாநில தேர்தல் முடிவுகளில் தெரிந்தது. அதனால் மோடி எப்படியாவது அடுத்த பத்து வருட காலத்தில் மாநிலங்களில் தன் கட்சியின் பிடியை இறுக்க முயல்கிறார். இந்தியா வளர்ச்சிப் பாதையில் போகிறதோ பாதாளத்துக்கு போகிறதோ மோடியின் கவனம் முழுக்க இப்படி மலைப்பாம்பு அரசியல் செய்து தன் கட்சியின் அதிகார பரப்பை மாநிலங்களில் பெருக்குவது தான்.


 ஆனால் இந்த எதிர்மறை அரசியல் மக்களிடம் அவருக்கு கெட்டபெயரையே பெற்றுத் தரும் என அவர் உணர்வதாய் தெரியவில்லை. மக்களுக்கும் அவருக்குமான தூரம் அதிகரித்துக் கொண்டே போகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...