முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வங்கதேசமும் மழை அளிக்கும் சுதந்திரமும்



வங்கதேசத்தோடான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்தியாவின் மோசமான தோல்வி நமது அசட்டையான அணுகுமுறையின் விளைவு தான். இது அனைவருக்கும் புரிந்திருக்கும். மற்றொரு காரணம் உண்டு. அது மழை.


வங்கதேசம் டாஸ் வென்று மட்டையாட தீர்மானித்ததும் அனைவரும் வியப்படைந்தனர். மழை பெய்யும் என ஊகம் இருந்ததால் DRS படி இரண்டாவதாய் இலக்கை விரட்டும் அணிக்கும் அனுகூலம் அதிகம் இருக்கும். மேலும் ஆடுதளம் தட்டையானது என்பதால், மைதானம் மழையில் ஈரமானால் ரிவர்ஸ் ஸ்விங் கூட கிடைக்காது. வங்கதேசம் வேறு நான்கு வேகவீச்சாளர்களுடன் களமிறங்கி இருந்தது. இந்தியா சிறப்பாய் விரட்டி ஆடும் அணி. இதெல்லாம் சேர்த்து வங்கதேச ஆதரவு வர்ணனையாளர்கள் துவக்கத்தில் இருந்தே புலம்பத் தொடங்கினார்கள்.
ஆனால் துவக்க ஆட்டக்காரர்களான தமீமும் சௌம்யாவும் வெறி பிடித்தாற் போல் அடித்தாட துவங்கினர். இன்றைக்கு பொதுவாய் உலகெங்கும் முதல் பத்து ஓவர்களும் மட்டையாளர்கள் பொறுமையாய் ஆடி அடித்தளம் அமைக்க முயலும் போது இவர்கள் t20 பாணியில் ஆடினர். இதற்கு காரணம் எப்போது வேண்டுமெனிலும் மழை பெய்யலாம் என்பதால் 25 ஓவர்கள் மட்டுமே ஆட வேண்டி இருக்கும் என எதிர்பார்த்து வங்கதேச மேலாண்மை மட்டையாளர்களுக்கு அடித்தாடும்படி முழு அதிகாரம் வழங்கி இருந்தது தான். ஓவருக்கு 8 ரன் விகிதம் அடித்து கொண்டிருக்கும் போது மழை பெய்யத் துவங்கியது. ஆட்டம் நின்றது.
 மழை முடிந்து வந்ததும் ஓவர்கள் குறைக்கப்படாது என்றார்கள். இது வங்கதேசத்துக்கு பாதகமானது. துவக்க வீரர்கள் அவுட் ஆனதும் அடுத்து வந்தவர்களுக்கு பொறுமையாய் ஆடும் நிலை வர அவர்கள் திணறினார்கள். வங்கதேச மட்டையாளர்களுக்கு சுதந்திரமாய் அடித்தாட வரும். ஆனால் பொறுமையாய் ஒற்றை ரெட்டை ஓட்டங்கள் எடுக்க கேட்டால் திணறுவார்கள். அதற்கான திறமையும் நிதானமும் அவர்களுக்கு இல்லை. இதனால் விக்கெட்டுகளை இழந்து ஓட்டங்களும் இல்லாமல் அவர்கள் திணறிக் கொண்டிருந்த போது மீண்டும் மழை பெய்தது. இது வங்கதேசத்துக்கு தனி உத்வேகம் அளித்தது. ஓவர்கள் சுருக்கப்படலாம், அதனால் இன்னும் பத்து ஓவர்களுக்கு மேல் ஆடத் தேவையிருக்காது எனும் எண்ணம் தோன்ற மீண்டும் வங்கதேச மட்டையாளர்களுக்கு சுதந்திரம் கிடைத்தது. ஷக்கிபும் சபிரும் t20 பாணியில் அடிக்க தொடங்கினார்கள். அதன் பிறகு மழை நின்று வெய்யில் வந்ததும் அவர்கள் மீண்டும் திணறினார்கள். ஆனால் இந்த மழை நேரத்து சாகச மட்டையாட்டம் தந்த வேகம் மற்றும் முனைப்பில் அவர்கள் 300 ஓட்டங்களை தொட்டு விட்டனர்.

பந்து வீச்சிலும் மூன்று விசயங்கள் அவர்களுக்கு உதவின. ஒன்று மாலையில் பிளட் லைட்டின் தாக்கத்தில் பந்து இயல்பாய் ஸ்விங் ஆனது.
இரண்டாவதாய், பொதுவாய் முதன்முறை தமக்கு எதிராய் ஆடும் புது வேக வீச்சாளர்களுக்கு ஐந்து விக்கெட்டுகள் கொடுக்கும் வழமை நம் மட்டையாளர்களுக்கு உள்ளது. இதனால் முஸ்தபிசூர் எனும் இடதுகை வேகவீச்சாளர் பயன்பெற்றார். போன முறை நாம் வங்கதேசத்தை உலகக்கோப்பையில் ஆடின போது தன் முதல் ஆட்டத்தை ஆடின தஸ்கின் அகமதுவுக்கும் நாம் ஐந்து விக்கெட்டுகள் வழங்கினோம். உலகின் அத்தனை வேக வீச்சாளர்களும் இந்தியாவுக்கு எதிராய் டெபியு செய்யும் பாக்கியம் அமைய பிரார்த்திக்க வேண்டும்.

மூன்றாவதாய் தவன் மற்றும் கோலி மிக மோசமான தேவையற்ற ஷாட்கள் ஆகி உடனுக்குடன் வெளியேறியது. குறிப்பாய் கோலிக்கு அவர் வந்தவுடன் ஐந்து பந்துகள் ஆப் ஸ்டம்புக்கு வெளியே வைடாய் வீசினால் தானாகவே கேட்ச் கொடுத்து வெளியேறி விடுகிறார். இதற்கு பதிலாய் இவ்வாறு யாராவது தனக்கு எதிராய் பந்து வீசுவதாய் தோன்றினால் அவர் வந்தவுடனே ரிட்டையர்ட் ஹர்ட் ஆகி விடலாம். நான்கு விக்கெட் போன பின் திரும்ப வந்து ஆடலாம். அல்லது அவர் ஐந்தாவது எண்ணில் இறங்கி 35 ஓவருக்கு பிறகு ஆட வரலாம். ஏனென்றால் உலகம் முழுக்க இந்த வியூகத்தை அவருக்கு எதிராய் வெற்றிகரமாய் நிறைவேற்றி வருகிறார்கள். ஆஸ்திரேலியாவில் மட்டுமே டெஸ்டுகளில் அவர் இதை சமாளித்து நன்றாய் ஆடினார்.

அவர்கள் நம்மை விட நல்ல கட்டுப்பாட்டுடன் சரியான நீளத்தில் பந்து வீசினர். நாம் ஆடும் போது மழை பெய்யவில்லை. ஒருவேளை பெய்து 30 ஓவர்களுக்குள் ஆட்டத்தை சுருக்கி இருந்தால் நாம் நிச்சயம் வென்றிருப்போம். இலக்கு பெரும்பாலும் 220 என்றிருந்திருக்கும்.

வங்கதேச வீச்சாளர்களிடம் விக்கெட் எடுக்கும் வெறியும் முனைப்பும் இருந்தது. தஸ்கினும் முஸ்தபீசுரும் வீசிய லைனும் நீளமும் விக்கெட் எடுக்கும் நோக்கம் கொண்டவை. மாறாக நமது புவனேஷ்வர் ஆரம்பத்தில் இருந்தே அடிபடாமல் இருக்கும் பயத்துடன் மோசமான உடல் மொழியுடன் வீசினார். உமேஷ் யாதவ் கட்டுப்படின்றி வீசினார். மோஹித் ஆஸ்திரேலியாவில் குறைநீளத்தில் வீசியது போல் வங்கதேச மெத்தன ஆடுதளத்தில் வீசும் அபத்தத்தை செய்தார். ஜடேஜா ஆரம்பத்தில் நன்றாய் வீசினாலும் போகப் போக அவரும் சரியான திட்டமின்றி ஓட்டங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் மோசமாய் வீசினார். நமது வீச்சாளர்கள் யாருமே நேர்மறையாய், ஆவேசத்துடன் ஆடும் நிலையில் இல்லை. ஒவ்வொருவரும் தம்மை பாதுகாக்கும் முனைப்பில் ஆடுகிறார்கள். அரசு ஆஸ்பத்திரியில் நான்கு குழந்தைகளை வரிசையாய் நடத்திப் போகும் அம்மாவைப் போல் இருக்கிறார் தோனி. அஷ்வின் மட்டுமே நல்ல நிலையில் இருக்கிறார். மற்ற வீச்சாளர்களுக்கு தன்னம்பிக்கை பற்றாக்குறை அல்லது மோசமான ஆட்டநிலை பிரச்சனை.


தோனியின் வித்தேத்தி தலைமையும் சிலநேரம் அவரது வீரர்களை அக்கறையின்றி ஆட அனுமதிக்கிறது. கோலி இன்னொரு புறம் டெஸ்டில் அணித்தலைவராய் இருப்பதும் வீரர்களுக்கு யாரிடம் அதிகாரம் உள்ளது, யாருக்கு முழுமையாய் பணிய வேண்டும் எனும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கலாம். உதாரணமாய் தோனியிடம் நல்ல பெயரை வாங்கும் பட்சத்திலும் ஜடேஜா, புவனேஷ்வர், மோஹித் போன்றோர் கோலியின் அணியில் இடம்பெறும் உத்தரவாதம் இல்லை. இரு அணித்தலைவர்கள் ஒரு நல்ல நடைமுறை தானோ என இப்போதே எனக்கு சந்தேகம் வந்து விட்டது. முதல் அறிகுறிகளே சரியில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.