முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வங்கதேசமும் மழை அளிக்கும் சுதந்திரமும்



வங்கதேசத்தோடான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்தியாவின் மோசமான தோல்வி நமது அசட்டையான அணுகுமுறையின் விளைவு தான். இது அனைவருக்கும் புரிந்திருக்கும். மற்றொரு காரணம் உண்டு. அது மழை.


வங்கதேசம் டாஸ் வென்று மட்டையாட தீர்மானித்ததும் அனைவரும் வியப்படைந்தனர். மழை பெய்யும் என ஊகம் இருந்ததால் DRS படி இரண்டாவதாய் இலக்கை விரட்டும் அணிக்கும் அனுகூலம் அதிகம் இருக்கும். மேலும் ஆடுதளம் தட்டையானது என்பதால், மைதானம் மழையில் ஈரமானால் ரிவர்ஸ் ஸ்விங் கூட கிடைக்காது. வங்கதேசம் வேறு நான்கு வேகவீச்சாளர்களுடன் களமிறங்கி இருந்தது. இந்தியா சிறப்பாய் விரட்டி ஆடும் அணி. இதெல்லாம் சேர்த்து வங்கதேச ஆதரவு வர்ணனையாளர்கள் துவக்கத்தில் இருந்தே புலம்பத் தொடங்கினார்கள்.
ஆனால் துவக்க ஆட்டக்காரர்களான தமீமும் சௌம்யாவும் வெறி பிடித்தாற் போல் அடித்தாட துவங்கினர். இன்றைக்கு பொதுவாய் உலகெங்கும் முதல் பத்து ஓவர்களும் மட்டையாளர்கள் பொறுமையாய் ஆடி அடித்தளம் அமைக்க முயலும் போது இவர்கள் t20 பாணியில் ஆடினர். இதற்கு காரணம் எப்போது வேண்டுமெனிலும் மழை பெய்யலாம் என்பதால் 25 ஓவர்கள் மட்டுமே ஆட வேண்டி இருக்கும் என எதிர்பார்த்து வங்கதேச மேலாண்மை மட்டையாளர்களுக்கு அடித்தாடும்படி முழு அதிகாரம் வழங்கி இருந்தது தான். ஓவருக்கு 8 ரன் விகிதம் அடித்து கொண்டிருக்கும் போது மழை பெய்யத் துவங்கியது. ஆட்டம் நின்றது.
 மழை முடிந்து வந்ததும் ஓவர்கள் குறைக்கப்படாது என்றார்கள். இது வங்கதேசத்துக்கு பாதகமானது. துவக்க வீரர்கள் அவுட் ஆனதும் அடுத்து வந்தவர்களுக்கு பொறுமையாய் ஆடும் நிலை வர அவர்கள் திணறினார்கள். வங்கதேச மட்டையாளர்களுக்கு சுதந்திரமாய் அடித்தாட வரும். ஆனால் பொறுமையாய் ஒற்றை ரெட்டை ஓட்டங்கள் எடுக்க கேட்டால் திணறுவார்கள். அதற்கான திறமையும் நிதானமும் அவர்களுக்கு இல்லை. இதனால் விக்கெட்டுகளை இழந்து ஓட்டங்களும் இல்லாமல் அவர்கள் திணறிக் கொண்டிருந்த போது மீண்டும் மழை பெய்தது. இது வங்கதேசத்துக்கு தனி உத்வேகம் அளித்தது. ஓவர்கள் சுருக்கப்படலாம், அதனால் இன்னும் பத்து ஓவர்களுக்கு மேல் ஆடத் தேவையிருக்காது எனும் எண்ணம் தோன்ற மீண்டும் வங்கதேச மட்டையாளர்களுக்கு சுதந்திரம் கிடைத்தது. ஷக்கிபும் சபிரும் t20 பாணியில் அடிக்க தொடங்கினார்கள். அதன் பிறகு மழை நின்று வெய்யில் வந்ததும் அவர்கள் மீண்டும் திணறினார்கள். ஆனால் இந்த மழை நேரத்து சாகச மட்டையாட்டம் தந்த வேகம் மற்றும் முனைப்பில் அவர்கள் 300 ஓட்டங்களை தொட்டு விட்டனர்.

பந்து வீச்சிலும் மூன்று விசயங்கள் அவர்களுக்கு உதவின. ஒன்று மாலையில் பிளட் லைட்டின் தாக்கத்தில் பந்து இயல்பாய் ஸ்விங் ஆனது.
இரண்டாவதாய், பொதுவாய் முதன்முறை தமக்கு எதிராய் ஆடும் புது வேக வீச்சாளர்களுக்கு ஐந்து விக்கெட்டுகள் கொடுக்கும் வழமை நம் மட்டையாளர்களுக்கு உள்ளது. இதனால் முஸ்தபிசூர் எனும் இடதுகை வேகவீச்சாளர் பயன்பெற்றார். போன முறை நாம் வங்கதேசத்தை உலகக்கோப்பையில் ஆடின போது தன் முதல் ஆட்டத்தை ஆடின தஸ்கின் அகமதுவுக்கும் நாம் ஐந்து விக்கெட்டுகள் வழங்கினோம். உலகின் அத்தனை வேக வீச்சாளர்களும் இந்தியாவுக்கு எதிராய் டெபியு செய்யும் பாக்கியம் அமைய பிரார்த்திக்க வேண்டும்.

மூன்றாவதாய் தவன் மற்றும் கோலி மிக மோசமான தேவையற்ற ஷாட்கள் ஆகி உடனுக்குடன் வெளியேறியது. குறிப்பாய் கோலிக்கு அவர் வந்தவுடன் ஐந்து பந்துகள் ஆப் ஸ்டம்புக்கு வெளியே வைடாய் வீசினால் தானாகவே கேட்ச் கொடுத்து வெளியேறி விடுகிறார். இதற்கு பதிலாய் இவ்வாறு யாராவது தனக்கு எதிராய் பந்து வீசுவதாய் தோன்றினால் அவர் வந்தவுடனே ரிட்டையர்ட் ஹர்ட் ஆகி விடலாம். நான்கு விக்கெட் போன பின் திரும்ப வந்து ஆடலாம். அல்லது அவர் ஐந்தாவது எண்ணில் இறங்கி 35 ஓவருக்கு பிறகு ஆட வரலாம். ஏனென்றால் உலகம் முழுக்க இந்த வியூகத்தை அவருக்கு எதிராய் வெற்றிகரமாய் நிறைவேற்றி வருகிறார்கள். ஆஸ்திரேலியாவில் மட்டுமே டெஸ்டுகளில் அவர் இதை சமாளித்து நன்றாய் ஆடினார்.

அவர்கள் நம்மை விட நல்ல கட்டுப்பாட்டுடன் சரியான நீளத்தில் பந்து வீசினர். நாம் ஆடும் போது மழை பெய்யவில்லை. ஒருவேளை பெய்து 30 ஓவர்களுக்குள் ஆட்டத்தை சுருக்கி இருந்தால் நாம் நிச்சயம் வென்றிருப்போம். இலக்கு பெரும்பாலும் 220 என்றிருந்திருக்கும்.

வங்கதேச வீச்சாளர்களிடம் விக்கெட் எடுக்கும் வெறியும் முனைப்பும் இருந்தது. தஸ்கினும் முஸ்தபீசுரும் வீசிய லைனும் நீளமும் விக்கெட் எடுக்கும் நோக்கம் கொண்டவை. மாறாக நமது புவனேஷ்வர் ஆரம்பத்தில் இருந்தே அடிபடாமல் இருக்கும் பயத்துடன் மோசமான உடல் மொழியுடன் வீசினார். உமேஷ் யாதவ் கட்டுப்படின்றி வீசினார். மோஹித் ஆஸ்திரேலியாவில் குறைநீளத்தில் வீசியது போல் வங்கதேச மெத்தன ஆடுதளத்தில் வீசும் அபத்தத்தை செய்தார். ஜடேஜா ஆரம்பத்தில் நன்றாய் வீசினாலும் போகப் போக அவரும் சரியான திட்டமின்றி ஓட்டங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் மோசமாய் வீசினார். நமது வீச்சாளர்கள் யாருமே நேர்மறையாய், ஆவேசத்துடன் ஆடும் நிலையில் இல்லை. ஒவ்வொருவரும் தம்மை பாதுகாக்கும் முனைப்பில் ஆடுகிறார்கள். அரசு ஆஸ்பத்திரியில் நான்கு குழந்தைகளை வரிசையாய் நடத்திப் போகும் அம்மாவைப் போல் இருக்கிறார் தோனி. அஷ்வின் மட்டுமே நல்ல நிலையில் இருக்கிறார். மற்ற வீச்சாளர்களுக்கு தன்னம்பிக்கை பற்றாக்குறை அல்லது மோசமான ஆட்டநிலை பிரச்சனை.


தோனியின் வித்தேத்தி தலைமையும் சிலநேரம் அவரது வீரர்களை அக்கறையின்றி ஆட அனுமதிக்கிறது. கோலி இன்னொரு புறம் டெஸ்டில் அணித்தலைவராய் இருப்பதும் வீரர்களுக்கு யாரிடம் அதிகாரம் உள்ளது, யாருக்கு முழுமையாய் பணிய வேண்டும் எனும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கலாம். உதாரணமாய் தோனியிடம் நல்ல பெயரை வாங்கும் பட்சத்திலும் ஜடேஜா, புவனேஷ்வர், மோஹித் போன்றோர் கோலியின் அணியில் இடம்பெறும் உத்தரவாதம் இல்லை. இரு அணித்தலைவர்கள் ஒரு நல்ல நடைமுறை தானோ என இப்போதே எனக்கு சந்தேகம் வந்து விட்டது. முதல் அறிகுறிகளே சரியில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...