Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

கார்த்திக் நேத்தாவின் திரைப்பாடல்கள்


தமிழில் நவீன கவிதை என்றும் அருகிப் போன மூலிகை போன்ற வஸ்து தான். ஆனால் அதன் வீச்சை இன்று விகடனில் வரும் கவிதைகளில் இருந்து திரைப்படப் பாடல்கள் வரை பார்க்க முடிகிறது. குறிப்பாய் சமகாலப் பாடல்களில் வரும் உவமைகளைச் சொல்லலாம். எழுபது எண்பதுகளில் கவிதையில் உருவகம் பிரதானமாய் இருந்தது. மு.மேத்தாவின் “நெம்புகோல் கவிதை” ஒரு உதாரணம். பிறகு தொண்ணூறுகளில் குறியீடு மற்றும் படிமம். “நடக்கும் இடமெங்கும் பொன்மணல்” எனும் பிரமிள் வரியைச் சொல்லலாம். இப்போது கவிதையின் அச்சாணியாக உவமை இருக்கிறது. நேரடியான, கதைகூறும் பாணியிலான எளிய கவிதை தான் இன்றைய பாணி. நேரடியான கவிதையில் உக்கிரமான உணர்ச்சியை சொல்வதற்கும், அதை எளிமையாக வைப்பதற்கும் உவமை ஏற்றது. சமீப காலத்தில் நினைக்கும் போதெல்லாம் என்னை உலுக்க வைக்கும் உவமை இது.
“வாய்க்குள் உலகத்தை
அடக்கிய கண்ணனைப் போல
உள்ளங்கைக்குள் அடக்குகிறேன்
உன் குறியை” (மனுஷி, “குட்டி இளவரசியின் ஒளிச்சொற்கள்”)

சமகால திரையிசைப் பாடல்களில் வரும் உவமைகளில் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று “காத்தோடு தூத்தல் போல போறானே” எனும் அப்பாடலின் துவக்க வரியில் வரும் உவமை. மிக வித்தியாசமான அதே வேளை படத்தின் கதையோடு பொருத்தமான உவமை இது. காற்றடிக்கும் போது தூறல் சேர்த்து போடும் போது ஒரு நூதனமான உணர்வு ஏற்படும். அது காற்றாகவும் இருக்காது, முழுமையான தூறலாகவும் இருக்காது. தூறல் ஆயிரம் ஊசிகளைப் போல முகத்தில் வீசி அறைந்தபடி கடக்கும். அதேவேளை ஈரமேறிய சில்லென்ற காற்று சுகமாகவும் இருக்கும். நம் கண்முன்னே தூறல் மெல்ல மெல்ல கரைந்து காணாமல் போவது பார்க்க துக்கமாகவும் இருக்கும். பிரிவுக்கு இதைவிட அழகான உவமை சொல்ல முடியுமா? காதலில் பிரிவிலும் கூட ஒரு சுகமான வலி உண்டு. காதலின் இழப்பை எண்ணி எண்ணி மருகும் போது தன்னை மறந்து அப்பேருணர்ச்சியில் மூழ்கும் கிளர்ச்சி தனியானது. காதல் மனதை விட்டு முழுக்க அகன்ற பிறகு ஒரு வெறுமை தோன்றும். அப்போது தான் இழப்புணர்ச்சி வெறுமைக்கு எவ்வளவு மேலானது எனப் புரியும். அதனால் தான் காதல் காயமாகி முழுக்க ஆறாமல், காந்தும் போது, மனம் வலியில் எரியும் போது காதல் துணையின் வாசனை, உடல் வெம்மை, எண்ணங்கள் அகலாமல் நம் அருகில் வெகு அருகிலேயே இருக்கும். பிரிவும் இணைதலும் இரு துருவமான ஆனால் அதே காதல் உக்கிரம் கொண்ட எதிர் உணச்சிகள். முகத்தில் அறைந்து, துன்புறுத்தி, கண்முன்னே பிரிந்து போனாலும், தற்காலிகமான ஒரு ஆறுதல் தரும் காற்றோடு அடித்துக் கொண்டு போகும் தூறலாக இங்கு பிரிவு சித்திரப்படுத்தப்படுகிறது.
இப்பாடலில் வரும் வேறு சில உவமைகளைப் பார்ப்போம்.
“மழையில் நனஞ்ச காத்தப் போல,
மனச நீயும் நனச்சுபுட்ட”
காற்று அதன் இயல்பில் ஈரமற்றது. அது மழையில் ஈரமேறி கனக்கிறது. பிறகு வெயிலடிக்க ஈரத்தை இழக்கிறது. மண்ணைப் போல் ஈரத்தை தனக்குள் ஆழத்தில் பதுக்கி வைக்க காற்றால் முடியாது. காற்று பயணித்துக் கொண்டே இருக்க வேண்டும். எதையும் சொந்தம் கொண்டாட முடியாது.
”டீ தூளு வாசம் கொண்ட மோசக்காரா”
இது மிக வித்தியாசமான ஒரு உவமை. இதுவரை தேயிலை வாசனையை பிடித்தவரின் வாசத்தோடு ஒப்பிட்டு யாரும் எழுதி நான் எங்கும் இலக்கியத்தில் கூட படித்ததில்லை. பாடலாசிரியரின் ஒரு தனிப்பட்ட ரசனை சார்ந்த அவதானிப்பாக இதைப் பார்க்கலாம். இவ்வுவமை எனக்கு பிடிக்க காரணம் டீ தூளின் மனதை கிளர்த்தும் வாசம். அடுத்த முறை அடுக்களைக்கு போனால் டீ டப்பாவை திறந்து முகர்ந்து பாருங்கள். சட்டென மனதை தூக்கி விசிறி அடிக்கும் அந்த வாசனை. ஒரு காதலனின் வாசனையும் இதைத் தானே செய்யும்!
“மூக்கணாங் கவுரப்போல உன்னெனப்பு…
அடகாக்கும் கோழி போல என் தவிப்பு”
இரண்டாவது உடமையான அடைகாக்கும் கோழியுடன் ஒப்பிடுகையில் முதல் உவமை மூக்கணாங் கயிறு சற்று எதிர்மறையானது. மாட்டின் மூக்குத்துவாரத்தை அறுத்தபடி அதைப் பிணைக்கும் கயிறு வலியுடன், ஒடுக்குமுறையுடன் சம்மந்தப்பட்டது. ஆனால் காதலும் ஒரு விதத்தில் மூக்கணாங்கயிறு தானே. அதை நம் நினைவுகளை மெல்ல மெல்ல அறுத்து அந்த வலியுடனே நம்மை பிணைக்கக் கூடியது. பிரிந்த காதலின் எண்ணங்கள் நினைக்க நினைக்க வலியை பெருக்கும். ஆனால் அதனால் அதை நினைக்காமல் இருக்க மாட்டோம். கட்டப்பட்ட கயிறை இழுத்துக் கொண்டே இருக்கும் மாட்டைப் போல் மனம் தன்னை மீண்டும் மீண்டும் வலிக்குள் ஆழ்த்திக் கொண்டிருக்கும். வலி நிரம்பிய நினைவுகளை மீண்டும் மீண்டும் எழுப்பி அதில் ருசி காணும். காதல் தோல்வி அல்லது பிரிவை அறிந்தவர் எவருக்கும் இந்த அனுபவம் இருக்கும். யோசித்துப் பார்த்தால் எவ்வளவு உக்கிரமான, அனுபவ ஆழம் கொண்ட உவமையாக இருக்கிறது இது!
 “வாகை சூடவா” படத்தில் உள்ள இப்பாடலை எழுதியவர் கார்த்திக் நேத்தா. இவர் நவீன கவிதைகள் எழுதுபவர், நவீன இலக்கியம் அறிந்தவர். குறிப்பாக இவருக்கு ஹைக்கூவில் ஈடுபாடு அதிகம். இளைய தலைமுறை பாடலாசிரியர்களில் மிக தனித்துவமும் திறமையும் கொண்டவர் நேத்தா. சேலம் மாவட்டம் சின்னனூரை சேர்ந்தவர். “தவளைக்கல் சிறுமி” இவரது கவிதைத் தொகுப்பு.

அடுத்த மாத பகுதியில் மற்றொரு பாடலாசிரியரின் வரிகளைப் பார்ப்போம்.
 நன்றி: www.inmmai.com மார்ச் 2015

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...