முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கார்த்திக் நேத்தாவின் திரைப்பாடல்கள்


தமிழில் நவீன கவிதை என்றும் அருகிப் போன மூலிகை போன்ற வஸ்து தான். ஆனால் அதன் வீச்சை இன்று விகடனில் வரும் கவிதைகளில் இருந்து திரைப்படப் பாடல்கள் வரை பார்க்க முடிகிறது. குறிப்பாய் சமகாலப் பாடல்களில் வரும் உவமைகளைச் சொல்லலாம். எழுபது எண்பதுகளில் கவிதையில் உருவகம் பிரதானமாய் இருந்தது. மு.மேத்தாவின் “நெம்புகோல் கவிதை” ஒரு உதாரணம். பிறகு தொண்ணூறுகளில் குறியீடு மற்றும் படிமம். “நடக்கும் இடமெங்கும் பொன்மணல்” எனும் பிரமிள் வரியைச் சொல்லலாம். இப்போது கவிதையின் அச்சாணியாக உவமை இருக்கிறது. நேரடியான, கதைகூறும் பாணியிலான எளிய கவிதை தான் இன்றைய பாணி. நேரடியான கவிதையில் உக்கிரமான உணர்ச்சியை சொல்வதற்கும், அதை எளிமையாக வைப்பதற்கும் உவமை ஏற்றது. சமீப காலத்தில் நினைக்கும் போதெல்லாம் என்னை உலுக்க வைக்கும் உவமை இது.
“வாய்க்குள் உலகத்தை
அடக்கிய கண்ணனைப் போல
உள்ளங்கைக்குள் அடக்குகிறேன்
உன் குறியை” (மனுஷி, “குட்டி இளவரசியின் ஒளிச்சொற்கள்”)

சமகால திரையிசைப் பாடல்களில் வரும் உவமைகளில் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று “காத்தோடு தூத்தல் போல போறானே” எனும் அப்பாடலின் துவக்க வரியில் வரும் உவமை. மிக வித்தியாசமான அதே வேளை படத்தின் கதையோடு பொருத்தமான உவமை இது. காற்றடிக்கும் போது தூறல் சேர்த்து போடும் போது ஒரு நூதனமான உணர்வு ஏற்படும். அது காற்றாகவும் இருக்காது, முழுமையான தூறலாகவும் இருக்காது. தூறல் ஆயிரம் ஊசிகளைப் போல முகத்தில் வீசி அறைந்தபடி கடக்கும். அதேவேளை ஈரமேறிய சில்லென்ற காற்று சுகமாகவும் இருக்கும். நம் கண்முன்னே தூறல் மெல்ல மெல்ல கரைந்து காணாமல் போவது பார்க்க துக்கமாகவும் இருக்கும். பிரிவுக்கு இதைவிட அழகான உவமை சொல்ல முடியுமா? காதலில் பிரிவிலும் கூட ஒரு சுகமான வலி உண்டு. காதலின் இழப்பை எண்ணி எண்ணி மருகும் போது தன்னை மறந்து அப்பேருணர்ச்சியில் மூழ்கும் கிளர்ச்சி தனியானது. காதல் மனதை விட்டு முழுக்க அகன்ற பிறகு ஒரு வெறுமை தோன்றும். அப்போது தான் இழப்புணர்ச்சி வெறுமைக்கு எவ்வளவு மேலானது எனப் புரியும். அதனால் தான் காதல் காயமாகி முழுக்க ஆறாமல், காந்தும் போது, மனம் வலியில் எரியும் போது காதல் துணையின் வாசனை, உடல் வெம்மை, எண்ணங்கள் அகலாமல் நம் அருகில் வெகு அருகிலேயே இருக்கும். பிரிவும் இணைதலும் இரு துருவமான ஆனால் அதே காதல் உக்கிரம் கொண்ட எதிர் உணச்சிகள். முகத்தில் அறைந்து, துன்புறுத்தி, கண்முன்னே பிரிந்து போனாலும், தற்காலிகமான ஒரு ஆறுதல் தரும் காற்றோடு அடித்துக் கொண்டு போகும் தூறலாக இங்கு பிரிவு சித்திரப்படுத்தப்படுகிறது.
இப்பாடலில் வரும் வேறு சில உவமைகளைப் பார்ப்போம்.
“மழையில் நனஞ்ச காத்தப் போல,
மனச நீயும் நனச்சுபுட்ட”
காற்று அதன் இயல்பில் ஈரமற்றது. அது மழையில் ஈரமேறி கனக்கிறது. பிறகு வெயிலடிக்க ஈரத்தை இழக்கிறது. மண்ணைப் போல் ஈரத்தை தனக்குள் ஆழத்தில் பதுக்கி வைக்க காற்றால் முடியாது. காற்று பயணித்துக் கொண்டே இருக்க வேண்டும். எதையும் சொந்தம் கொண்டாட முடியாது.
”டீ தூளு வாசம் கொண்ட மோசக்காரா”
இது மிக வித்தியாசமான ஒரு உவமை. இதுவரை தேயிலை வாசனையை பிடித்தவரின் வாசத்தோடு ஒப்பிட்டு யாரும் எழுதி நான் எங்கும் இலக்கியத்தில் கூட படித்ததில்லை. பாடலாசிரியரின் ஒரு தனிப்பட்ட ரசனை சார்ந்த அவதானிப்பாக இதைப் பார்க்கலாம். இவ்வுவமை எனக்கு பிடிக்க காரணம் டீ தூளின் மனதை கிளர்த்தும் வாசம். அடுத்த முறை அடுக்களைக்கு போனால் டீ டப்பாவை திறந்து முகர்ந்து பாருங்கள். சட்டென மனதை தூக்கி விசிறி அடிக்கும் அந்த வாசனை. ஒரு காதலனின் வாசனையும் இதைத் தானே செய்யும்!
“மூக்கணாங் கவுரப்போல உன்னெனப்பு…
அடகாக்கும் கோழி போல என் தவிப்பு”
இரண்டாவது உடமையான அடைகாக்கும் கோழியுடன் ஒப்பிடுகையில் முதல் உவமை மூக்கணாங் கயிறு சற்று எதிர்மறையானது. மாட்டின் மூக்குத்துவாரத்தை அறுத்தபடி அதைப் பிணைக்கும் கயிறு வலியுடன், ஒடுக்குமுறையுடன் சம்மந்தப்பட்டது. ஆனால் காதலும் ஒரு விதத்தில் மூக்கணாங்கயிறு தானே. அதை நம் நினைவுகளை மெல்ல மெல்ல அறுத்து அந்த வலியுடனே நம்மை பிணைக்கக் கூடியது. பிரிந்த காதலின் எண்ணங்கள் நினைக்க நினைக்க வலியை பெருக்கும். ஆனால் அதனால் அதை நினைக்காமல் இருக்க மாட்டோம். கட்டப்பட்ட கயிறை இழுத்துக் கொண்டே இருக்கும் மாட்டைப் போல் மனம் தன்னை மீண்டும் மீண்டும் வலிக்குள் ஆழ்த்திக் கொண்டிருக்கும். வலி நிரம்பிய நினைவுகளை மீண்டும் மீண்டும் எழுப்பி அதில் ருசி காணும். காதல் தோல்வி அல்லது பிரிவை அறிந்தவர் எவருக்கும் இந்த அனுபவம் இருக்கும். யோசித்துப் பார்த்தால் எவ்வளவு உக்கிரமான, அனுபவ ஆழம் கொண்ட உவமையாக இருக்கிறது இது!
 “வாகை சூடவா” படத்தில் உள்ள இப்பாடலை எழுதியவர் கார்த்திக் நேத்தா. இவர் நவீன கவிதைகள் எழுதுபவர், நவீன இலக்கியம் அறிந்தவர். குறிப்பாக இவருக்கு ஹைக்கூவில் ஈடுபாடு அதிகம். இளைய தலைமுறை பாடலாசிரியர்களில் மிக தனித்துவமும் திறமையும் கொண்டவர் நேத்தா. சேலம் மாவட்டம் சின்னனூரை சேர்ந்தவர். “தவளைக்கல் சிறுமி” இவரது கவிதைத் தொகுப்பு.

அடுத்த மாத பகுதியில் மற்றொரு பாடலாசிரியரின் வரிகளைப் பார்ப்போம்.
 நன்றி: www.inmmai.com மார்ச் 2015

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...