முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கார்த்திக் நேத்தாவின் திரைப்பாடல்கள்


தமிழில் நவீன கவிதை என்றும் அருகிப் போன மூலிகை போன்ற வஸ்து தான். ஆனால் அதன் வீச்சை இன்று விகடனில் வரும் கவிதைகளில் இருந்து திரைப்படப் பாடல்கள் வரை பார்க்க முடிகிறது. குறிப்பாய் சமகாலப் பாடல்களில் வரும் உவமைகளைச் சொல்லலாம். எழுபது எண்பதுகளில் கவிதையில் உருவகம் பிரதானமாய் இருந்தது. மு.மேத்தாவின் “நெம்புகோல் கவிதை” ஒரு உதாரணம். பிறகு தொண்ணூறுகளில் குறியீடு மற்றும் படிமம். “நடக்கும் இடமெங்கும் பொன்மணல்” எனும் பிரமிள் வரியைச் சொல்லலாம். இப்போது கவிதையின் அச்சாணியாக உவமை இருக்கிறது. நேரடியான, கதைகூறும் பாணியிலான எளிய கவிதை தான் இன்றைய பாணி. நேரடியான கவிதையில் உக்கிரமான உணர்ச்சியை சொல்வதற்கும், அதை எளிமையாக வைப்பதற்கும் உவமை ஏற்றது. சமீப காலத்தில் நினைக்கும் போதெல்லாம் என்னை உலுக்க வைக்கும் உவமை இது.
“வாய்க்குள் உலகத்தை
அடக்கிய கண்ணனைப் போல
உள்ளங்கைக்குள் அடக்குகிறேன்
உன் குறியை” (மனுஷி, “குட்டி இளவரசியின் ஒளிச்சொற்கள்”)

சமகால திரையிசைப் பாடல்களில் வரும் உவமைகளில் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று “காத்தோடு தூத்தல் போல போறானே” எனும் அப்பாடலின் துவக்க வரியில் வரும் உவமை. மிக வித்தியாசமான அதே வேளை படத்தின் கதையோடு பொருத்தமான உவமை இது. காற்றடிக்கும் போது தூறல் சேர்த்து போடும் போது ஒரு நூதனமான உணர்வு ஏற்படும். அது காற்றாகவும் இருக்காது, முழுமையான தூறலாகவும் இருக்காது. தூறல் ஆயிரம் ஊசிகளைப் போல முகத்தில் வீசி அறைந்தபடி கடக்கும். அதேவேளை ஈரமேறிய சில்லென்ற காற்று சுகமாகவும் இருக்கும். நம் கண்முன்னே தூறல் மெல்ல மெல்ல கரைந்து காணாமல் போவது பார்க்க துக்கமாகவும் இருக்கும். பிரிவுக்கு இதைவிட அழகான உவமை சொல்ல முடியுமா? காதலில் பிரிவிலும் கூட ஒரு சுகமான வலி உண்டு. காதலின் இழப்பை எண்ணி எண்ணி மருகும் போது தன்னை மறந்து அப்பேருணர்ச்சியில் மூழ்கும் கிளர்ச்சி தனியானது. காதல் மனதை விட்டு முழுக்க அகன்ற பிறகு ஒரு வெறுமை தோன்றும். அப்போது தான் இழப்புணர்ச்சி வெறுமைக்கு எவ்வளவு மேலானது எனப் புரியும். அதனால் தான் காதல் காயமாகி முழுக்க ஆறாமல், காந்தும் போது, மனம் வலியில் எரியும் போது காதல் துணையின் வாசனை, உடல் வெம்மை, எண்ணங்கள் அகலாமல் நம் அருகில் வெகு அருகிலேயே இருக்கும். பிரிவும் இணைதலும் இரு துருவமான ஆனால் அதே காதல் உக்கிரம் கொண்ட எதிர் உணச்சிகள். முகத்தில் அறைந்து, துன்புறுத்தி, கண்முன்னே பிரிந்து போனாலும், தற்காலிகமான ஒரு ஆறுதல் தரும் காற்றோடு அடித்துக் கொண்டு போகும் தூறலாக இங்கு பிரிவு சித்திரப்படுத்தப்படுகிறது.
இப்பாடலில் வரும் வேறு சில உவமைகளைப் பார்ப்போம்.
“மழையில் நனஞ்ச காத்தப் போல,
மனச நீயும் நனச்சுபுட்ட”
காற்று அதன் இயல்பில் ஈரமற்றது. அது மழையில் ஈரமேறி கனக்கிறது. பிறகு வெயிலடிக்க ஈரத்தை இழக்கிறது. மண்ணைப் போல் ஈரத்தை தனக்குள் ஆழத்தில் பதுக்கி வைக்க காற்றால் முடியாது. காற்று பயணித்துக் கொண்டே இருக்க வேண்டும். எதையும் சொந்தம் கொண்டாட முடியாது.
”டீ தூளு வாசம் கொண்ட மோசக்காரா”
இது மிக வித்தியாசமான ஒரு உவமை. இதுவரை தேயிலை வாசனையை பிடித்தவரின் வாசத்தோடு ஒப்பிட்டு யாரும் எழுதி நான் எங்கும் இலக்கியத்தில் கூட படித்ததில்லை. பாடலாசிரியரின் ஒரு தனிப்பட்ட ரசனை சார்ந்த அவதானிப்பாக இதைப் பார்க்கலாம். இவ்வுவமை எனக்கு பிடிக்க காரணம் டீ தூளின் மனதை கிளர்த்தும் வாசம். அடுத்த முறை அடுக்களைக்கு போனால் டீ டப்பாவை திறந்து முகர்ந்து பாருங்கள். சட்டென மனதை தூக்கி விசிறி அடிக்கும் அந்த வாசனை. ஒரு காதலனின் வாசனையும் இதைத் தானே செய்யும்!
“மூக்கணாங் கவுரப்போல உன்னெனப்பு…
அடகாக்கும் கோழி போல என் தவிப்பு”
இரண்டாவது உடமையான அடைகாக்கும் கோழியுடன் ஒப்பிடுகையில் முதல் உவமை மூக்கணாங் கயிறு சற்று எதிர்மறையானது. மாட்டின் மூக்குத்துவாரத்தை அறுத்தபடி அதைப் பிணைக்கும் கயிறு வலியுடன், ஒடுக்குமுறையுடன் சம்மந்தப்பட்டது. ஆனால் காதலும் ஒரு விதத்தில் மூக்கணாங்கயிறு தானே. அதை நம் நினைவுகளை மெல்ல மெல்ல அறுத்து அந்த வலியுடனே நம்மை பிணைக்கக் கூடியது. பிரிந்த காதலின் எண்ணங்கள் நினைக்க நினைக்க வலியை பெருக்கும். ஆனால் அதனால் அதை நினைக்காமல் இருக்க மாட்டோம். கட்டப்பட்ட கயிறை இழுத்துக் கொண்டே இருக்கும் மாட்டைப் போல் மனம் தன்னை மீண்டும் மீண்டும் வலிக்குள் ஆழ்த்திக் கொண்டிருக்கும். வலி நிரம்பிய நினைவுகளை மீண்டும் மீண்டும் எழுப்பி அதில் ருசி காணும். காதல் தோல்வி அல்லது பிரிவை அறிந்தவர் எவருக்கும் இந்த அனுபவம் இருக்கும். யோசித்துப் பார்த்தால் எவ்வளவு உக்கிரமான, அனுபவ ஆழம் கொண்ட உவமையாக இருக்கிறது இது!
 “வாகை சூடவா” படத்தில் உள்ள இப்பாடலை எழுதியவர் கார்த்திக் நேத்தா. இவர் நவீன கவிதைகள் எழுதுபவர், நவீன இலக்கியம் அறிந்தவர். குறிப்பாக இவருக்கு ஹைக்கூவில் ஈடுபாடு அதிகம். இளைய தலைமுறை பாடலாசிரியர்களில் மிக தனித்துவமும் திறமையும் கொண்டவர் நேத்தா. சேலம் மாவட்டம் சின்னனூரை சேர்ந்தவர். “தவளைக்கல் சிறுமி” இவரது கவிதைத் தொகுப்பு.

அடுத்த மாத பகுதியில் மற்றொரு பாடலாசிரியரின் வரிகளைப் பார்ப்போம்.
 நன்றி: www.inmmai.com மார்ச் 2015

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.