Skip to main content

ரெய்னா, ஜடேஜா மற்றும் பிராவோ மீதான குற்றச்சாட்டு


அண்மையில் லலித் மோடி மீதான சர்ச்சை தீய்ந்த எண்ணெய் சட்டி போல் புகைந்து கொண்டிருந்த போது அவர் பிறர் மீது ஒவ்வொரு பிடி மண்ணாய் தூவும் விதம் சில ஆவணங்களை, புகைப்படங்களை வெளியிட்டுக் கொண்டிருந்தார். அதில் ஒன்று மூன்று சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் – ரெய்னா, ஜடேஜா மற்றும் பிராவோ – ஒரு சூதாட்டம் நடத்துபவரோடு நட்பு கொண்டிருந்ததாகவும், அவர் இவர்களுக்கு பல கோடி பணம் மற்றும் மும்பை, தில்லியின் பிரதான பகுதிகளில் வீடு வாங்கித் தந்திருப்பதாகவும் லலித் மோடி ஐ.சி.சியின் சூதாட்ட விசாரணைப் பிரிவுக்கு எழுதிய மின்னஞ்சலின் பிரதி. இதை அவர் முதலில் எழுதியது 2013இல். அப்போது ஐ.சி.சி இந்த மின்னஞ்சலை இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு அனுப்பியது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவரும் சென்னை சூப்பர் கிங்ஸின் முதலாளியுமான ஸ்ரீனிவாசன் இம்மின்னஞ்சலை குப்பைக்கூடைக்கு அனுப்பி இருக்கக் கூடும். ஏனென்றால் இது பற்றி இரு தரப்புமே விசாரணை பண்ணவோ தகவலை வெளியே விடவோ இல்லை.

 தற்போது இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராய் உள்ள தாகுர் ஸ்ரீனிவாசனின் எதிர்தரப்பு. அவர் சென்னை அணி வீரர்களை பாதுகாக்க அவசியம் இல்லை. அதனால் அவர் நியாயமான நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அவர் செய்ய வேண்டியதெல்லாம் ஒரு விசாரணைக்குழு அமைத்து காவல்துறை உதவியுடன் விசாரிப்பது தான். உண்மை வெளிப்பட்டால் அது வாரியம், ரசிகர்கள் அல்லது வீரர்கள் என ஏதோ ஒரு தரப்புக்கு ஆசுவாசம் ஆகுமே!
ஆனால் இப்போதைய வாரியத்தின் தலைவரும் இக்குற்றச்சாட்டை சோற்றுக்குள் மூடி மறைக்கவே எத்தனிக்கிறார். இது குறித்து எந்த விசாரணையும் தேவையில்லை என்றவர் அதற்கு சொல்லியுள்ள காரணம் விநோதமானது. “இவர்கள் மூவரும் சர்வதேச வீரர்கள். அதனால் இவர்களை விசாரிக்க வேண்டியது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் பணி. இந்திய கிரிக்கெட் வாரியம் ஒன்றும் செய்வதற்கில்லை.” சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களாக இருக்கும் போது மூவரும் செய்ததாய் சொல்லப்படும் குற்றத்திற்கு எப்படி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விசாரணை செய்ய முடியும்? ஐ.பி.எல் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆட்டத்தொடர் அல்லவா? என்ன ஒரு அபத்தமான விளக்கம்!


தாகுரின் நிலைப்பாட்டை இப்படி புரிந்து கொள்கிறேன். இம்மூன்று வீரர்களுக்கும் எதிராய் விசாரணை செய்வது மீடியாவில் பரபரப்பை உருவாக்கும். ஒருவிதத்தில் குற்றத்தின் தீவிரத்தை வாரியம் ஏற்பதாய் ஆகி விடும். இந்திய அணிக்கும் ஒருவித ஸ்திரமற்ற உணர்வு வரும். இந்திய அணி மற்றும் ஐ.பி.எல்லின் பிம்பம் அடிபடும். இதைத் தவிர்க்க சிறந்த வழி இதை காணாதது போல் விட்டு விடுவது என்பது தாகுரின் முடிவு. ஆனால் சட்டையில் கறை படிந்தால் அதை மறைப்பது அல்ல கழுவி சுத்தம் செய்வது தான் சிறந்த தீர்வு. ஏற்கனவே மக்களுக்கு ஐ.பி.எல் மீதுள்ள நம்பிக்கை புரையோடி விட்டது. போன ஐ.பி.எல்லின் ஒவ்வொரு ஆட்டமும் பிக்ஸ் செய்யப்பட்டது என என்னிடமே நிறைய பேர் கூறினார்கள். ஆனாலும் மக்கள் ஐ.பி.எல் பார்க்கிறார்கள். அவநம்பிக்கையை தாண்டியும் ஐ.பி.எல் ரசிக்கப்படும் எனும் அற்ப நம்பிக்கையை கொண்டு தான் தாகுர் போன்றவர்கள் குற்றச்சாட்டுகளை மூடி மறைக்கிறார்கள். மேலும் இந்த ஊழலில் ஐ.பி.எல் அணி அதிபர்கள், வாரிய உறுப்பினர்கள் என பலரும் சம்மந்தப்பட்டிருப்பதால் ஒருவரது முகமூடியை கிழித்தால் பலரும் கதறியடித்து வெளியே வரக் கூடும். முழுநிர்வாணமான ஒருவர் உடம்பில் உள்ள ஒரே கோவணத்தை உருவி முகத்தை மறைப்பது போன்ற செயல் இது. இந்திய கிரிக்கெட் வாரியம் தற்சமயம் தன் முகத்தை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் தான். அதற்காக?

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...