முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ரெய்னா, ஜடேஜா மற்றும் பிராவோ மீதான குற்றச்சாட்டு


அண்மையில் லலித் மோடி மீதான சர்ச்சை தீய்ந்த எண்ணெய் சட்டி போல் புகைந்து கொண்டிருந்த போது அவர் பிறர் மீது ஒவ்வொரு பிடி மண்ணாய் தூவும் விதம் சில ஆவணங்களை, புகைப்படங்களை வெளியிட்டுக் கொண்டிருந்தார். அதில் ஒன்று மூன்று சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் – ரெய்னா, ஜடேஜா மற்றும் பிராவோ – ஒரு சூதாட்டம் நடத்துபவரோடு நட்பு கொண்டிருந்ததாகவும், அவர் இவர்களுக்கு பல கோடி பணம் மற்றும் மும்பை, தில்லியின் பிரதான பகுதிகளில் வீடு வாங்கித் தந்திருப்பதாகவும் லலித் மோடி ஐ.சி.சியின் சூதாட்ட விசாரணைப் பிரிவுக்கு எழுதிய மின்னஞ்சலின் பிரதி. இதை அவர் முதலில் எழுதியது 2013இல். அப்போது ஐ.சி.சி இந்த மின்னஞ்சலை இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு அனுப்பியது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவரும் சென்னை சூப்பர் கிங்ஸின் முதலாளியுமான ஸ்ரீனிவாசன் இம்மின்னஞ்சலை குப்பைக்கூடைக்கு அனுப்பி இருக்கக் கூடும். ஏனென்றால் இது பற்றி இரு தரப்புமே விசாரணை பண்ணவோ தகவலை வெளியே விடவோ இல்லை.

 தற்போது இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராய் உள்ள தாகுர் ஸ்ரீனிவாசனின் எதிர்தரப்பு. அவர் சென்னை அணி வீரர்களை பாதுகாக்க அவசியம் இல்லை. அதனால் அவர் நியாயமான நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அவர் செய்ய வேண்டியதெல்லாம் ஒரு விசாரணைக்குழு அமைத்து காவல்துறை உதவியுடன் விசாரிப்பது தான். உண்மை வெளிப்பட்டால் அது வாரியம், ரசிகர்கள் அல்லது வீரர்கள் என ஏதோ ஒரு தரப்புக்கு ஆசுவாசம் ஆகுமே!
ஆனால் இப்போதைய வாரியத்தின் தலைவரும் இக்குற்றச்சாட்டை சோற்றுக்குள் மூடி மறைக்கவே எத்தனிக்கிறார். இது குறித்து எந்த விசாரணையும் தேவையில்லை என்றவர் அதற்கு சொல்லியுள்ள காரணம் விநோதமானது. “இவர்கள் மூவரும் சர்வதேச வீரர்கள். அதனால் இவர்களை விசாரிக்க வேண்டியது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் பணி. இந்திய கிரிக்கெட் வாரியம் ஒன்றும் செய்வதற்கில்லை.” சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களாக இருக்கும் போது மூவரும் செய்ததாய் சொல்லப்படும் குற்றத்திற்கு எப்படி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விசாரணை செய்ய முடியும்? ஐ.பி.எல் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆட்டத்தொடர் அல்லவா? என்ன ஒரு அபத்தமான விளக்கம்!


தாகுரின் நிலைப்பாட்டை இப்படி புரிந்து கொள்கிறேன். இம்மூன்று வீரர்களுக்கும் எதிராய் விசாரணை செய்வது மீடியாவில் பரபரப்பை உருவாக்கும். ஒருவிதத்தில் குற்றத்தின் தீவிரத்தை வாரியம் ஏற்பதாய் ஆகி விடும். இந்திய அணிக்கும் ஒருவித ஸ்திரமற்ற உணர்வு வரும். இந்திய அணி மற்றும் ஐ.பி.எல்லின் பிம்பம் அடிபடும். இதைத் தவிர்க்க சிறந்த வழி இதை காணாதது போல் விட்டு விடுவது என்பது தாகுரின் முடிவு. ஆனால் சட்டையில் கறை படிந்தால் அதை மறைப்பது அல்ல கழுவி சுத்தம் செய்வது தான் சிறந்த தீர்வு. ஏற்கனவே மக்களுக்கு ஐ.பி.எல் மீதுள்ள நம்பிக்கை புரையோடி விட்டது. போன ஐ.பி.எல்லின் ஒவ்வொரு ஆட்டமும் பிக்ஸ் செய்யப்பட்டது என என்னிடமே நிறைய பேர் கூறினார்கள். ஆனாலும் மக்கள் ஐ.பி.எல் பார்க்கிறார்கள். அவநம்பிக்கையை தாண்டியும் ஐ.பி.எல் ரசிக்கப்படும் எனும் அற்ப நம்பிக்கையை கொண்டு தான் தாகுர் போன்றவர்கள் குற்றச்சாட்டுகளை மூடி மறைக்கிறார்கள். மேலும் இந்த ஊழலில் ஐ.பி.எல் அணி அதிபர்கள், வாரிய உறுப்பினர்கள் என பலரும் சம்மந்தப்பட்டிருப்பதால் ஒருவரது முகமூடியை கிழித்தால் பலரும் கதறியடித்து வெளியே வரக் கூடும். முழுநிர்வாணமான ஒருவர் உடம்பில் உள்ள ஒரே கோவணத்தை உருவி முகத்தை மறைப்பது போன்ற செயல் இது. இந்திய கிரிக்கெட் வாரியம் தற்சமயம் தன் முகத்தை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் தான். அதற்காக?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...