முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ரெய்னா, ஜடேஜா மற்றும் பிராவோ மீதான குற்றச்சாட்டு


அண்மையில் லலித் மோடி மீதான சர்ச்சை தீய்ந்த எண்ணெய் சட்டி போல் புகைந்து கொண்டிருந்த போது அவர் பிறர் மீது ஒவ்வொரு பிடி மண்ணாய் தூவும் விதம் சில ஆவணங்களை, புகைப்படங்களை வெளியிட்டுக் கொண்டிருந்தார். அதில் ஒன்று மூன்று சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் – ரெய்னா, ஜடேஜா மற்றும் பிராவோ – ஒரு சூதாட்டம் நடத்துபவரோடு நட்பு கொண்டிருந்ததாகவும், அவர் இவர்களுக்கு பல கோடி பணம் மற்றும் மும்பை, தில்லியின் பிரதான பகுதிகளில் வீடு வாங்கித் தந்திருப்பதாகவும் லலித் மோடி ஐ.சி.சியின் சூதாட்ட விசாரணைப் பிரிவுக்கு எழுதிய மின்னஞ்சலின் பிரதி. இதை அவர் முதலில் எழுதியது 2013இல். அப்போது ஐ.சி.சி இந்த மின்னஞ்சலை இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு அனுப்பியது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவரும் சென்னை சூப்பர் கிங்ஸின் முதலாளியுமான ஸ்ரீனிவாசன் இம்மின்னஞ்சலை குப்பைக்கூடைக்கு அனுப்பி இருக்கக் கூடும். ஏனென்றால் இது பற்றி இரு தரப்புமே விசாரணை பண்ணவோ தகவலை வெளியே விடவோ இல்லை.

 தற்போது இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராய் உள்ள தாகுர் ஸ்ரீனிவாசனின் எதிர்தரப்பு. அவர் சென்னை அணி வீரர்களை பாதுகாக்க அவசியம் இல்லை. அதனால் அவர் நியாயமான நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அவர் செய்ய வேண்டியதெல்லாம் ஒரு விசாரணைக்குழு அமைத்து காவல்துறை உதவியுடன் விசாரிப்பது தான். உண்மை வெளிப்பட்டால் அது வாரியம், ரசிகர்கள் அல்லது வீரர்கள் என ஏதோ ஒரு தரப்புக்கு ஆசுவாசம் ஆகுமே!
ஆனால் இப்போதைய வாரியத்தின் தலைவரும் இக்குற்றச்சாட்டை சோற்றுக்குள் மூடி மறைக்கவே எத்தனிக்கிறார். இது குறித்து எந்த விசாரணையும் தேவையில்லை என்றவர் அதற்கு சொல்லியுள்ள காரணம் விநோதமானது. “இவர்கள் மூவரும் சர்வதேச வீரர்கள். அதனால் இவர்களை விசாரிக்க வேண்டியது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் பணி. இந்திய கிரிக்கெட் வாரியம் ஒன்றும் செய்வதற்கில்லை.” சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களாக இருக்கும் போது மூவரும் செய்ததாய் சொல்லப்படும் குற்றத்திற்கு எப்படி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விசாரணை செய்ய முடியும்? ஐ.பி.எல் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆட்டத்தொடர் அல்லவா? என்ன ஒரு அபத்தமான விளக்கம்!


தாகுரின் நிலைப்பாட்டை இப்படி புரிந்து கொள்கிறேன். இம்மூன்று வீரர்களுக்கும் எதிராய் விசாரணை செய்வது மீடியாவில் பரபரப்பை உருவாக்கும். ஒருவிதத்தில் குற்றத்தின் தீவிரத்தை வாரியம் ஏற்பதாய் ஆகி விடும். இந்திய அணிக்கும் ஒருவித ஸ்திரமற்ற உணர்வு வரும். இந்திய அணி மற்றும் ஐ.பி.எல்லின் பிம்பம் அடிபடும். இதைத் தவிர்க்க சிறந்த வழி இதை காணாதது போல் விட்டு விடுவது என்பது தாகுரின் முடிவு. ஆனால் சட்டையில் கறை படிந்தால் அதை மறைப்பது அல்ல கழுவி சுத்தம் செய்வது தான் சிறந்த தீர்வு. ஏற்கனவே மக்களுக்கு ஐ.பி.எல் மீதுள்ள நம்பிக்கை புரையோடி விட்டது. போன ஐ.பி.எல்லின் ஒவ்வொரு ஆட்டமும் பிக்ஸ் செய்யப்பட்டது என என்னிடமே நிறைய பேர் கூறினார்கள். ஆனாலும் மக்கள் ஐ.பி.எல் பார்க்கிறார்கள். அவநம்பிக்கையை தாண்டியும் ஐ.பி.எல் ரசிக்கப்படும் எனும் அற்ப நம்பிக்கையை கொண்டு தான் தாகுர் போன்றவர்கள் குற்றச்சாட்டுகளை மூடி மறைக்கிறார்கள். மேலும் இந்த ஊழலில் ஐ.பி.எல் அணி அதிபர்கள், வாரிய உறுப்பினர்கள் என பலரும் சம்மந்தப்பட்டிருப்பதால் ஒருவரது முகமூடியை கிழித்தால் பலரும் கதறியடித்து வெளியே வரக் கூடும். முழுநிர்வாணமான ஒருவர் உடம்பில் உள்ள ஒரே கோவணத்தை உருவி முகத்தை மறைப்பது போன்ற செயல் இது. இந்திய கிரிக்கெட் வாரியம் தற்சமயம் தன் முகத்தை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் தான். அதற்காக?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...