Skip to main content

இரண்டு வகை வாசிப்பு மற்றும் எழுத்து


வாசிப்பை செயலூக்கமுள்ளது (active) மற்றும் செயலற்றது (passive) என பிரிக்கலாம். இன்று மீடியா ஆதிக்கம் காரணமாய் செயலற்ற வாசிப்பு அதிகரித்துள்ளது. அல்லது இப்படியும் பார்க்கலாம். புதிதாய் இணையம் மற்றும் பத்திரிகை மூலமாய் வாசிக்க துவங்கி உள்ளவர்களின் வாசிப்பு செயலற்றதாய் உள்ளது.


ஐ.டியில் பணிபுரிந்து பின்னர் ஒரு முக்கிய சினிமாவில் வில்லனாய் நடித்த ஒரு இளைஞரை சந்தித்தேன். அவர் தான் இயக்குநராக விரும்புவதாய் தெரிவித்தார். எப்படி அதற்காய் தயாரிக்கிறீர்கள் எனக் கேட்டேன். அவர் சொன்னார் “நான் யாரிடமும் உதவி இயக்குநராய் பணி புரியவில்லை. நானாகவே கற்றுக் கொள்கிறேன்”
“எப்படி? சினிமா பற்றின புத்தகங்கள் படிக்கிறீர்களா?”
“நான் புத்தகங்கள் அதிகம் படிக்க மாட்டேன். ஆனால் இணையத்தில் நிறைய வாசிக்கிறேன்”

இணைய வாசகர்கள் சிலரிடம் உரையாடும் போதும் அவர்களின் வாசிப்பும் முகநூல், இணையதளம் என்றே குறுகி இருப்பதை அறிந்தேன். சினிமா பற்றின இணையதளங்கள், வலைப்பூக்கள் மட்டுமே படிப்பவர்கள், தமக்குப் பிடித்த பொதுவான பிளாகர்களை தொடர்பவர்கள், இலக்கிய இணையதளங்கள், சாரு, ஜெ.மோ, எஸ்.ராவை மட்டும் படிப்பவர்கள் என பலவகையினர் இருக்கிறார்கள். ஒரு நண்பர் தான் முகநூலில் மட்டுமே படிப்பதாய் கூறினார். அதற்கு அவர் சொன்ன காரணம் வியப்பூட்டியது. முகநூல் வழி தமிழுடனான தொடர்பை தக்க வைப்பதாய் சொன்னார். அதற்கு தந்தி படித்தாலே போதுமே? இல்லை இணையம் வேறொரு மாயம் செய்கிறது.

நீங்கள் இலக்கியவாதிகளை அவர்களது இணையதளம், முகநூல் பக்கம் ஆகியவை மூலம் பின் தொடர்ந்து படிக்கும் போது இலக்கிய போக்குகள், முக்கியமான கருத்துக்களுடன் பரிச்சயம் கிடைப்பதாய் நம்பத் துவங்குவீர்கள். உதாரணமாய் தினமும் ஒரு இலக்கியவாதியின் தளத்தை திறந்து படிப்பவர்கள் அவரது ஒரு நாவலையோ முக்கியமான கட்டுரை நூலையோ ஜென்மத்தில் வாசிக்காமல் இருப்பார்கள். அவர்கள் அந்த எழுத்தாளனின் ஒரு குறுப்பிட்ட பரிமாணத்தை மட்டுமே பார்க்க விரும்புவார்கள். இதில் வசதி என்னவென்றால் பெரிய பிரயத்தனம் இல்லாமலே தாம் இலக்கிய வாசகர் எனும் சின்ன ஒளிவட்டமும் அவர்களுக்கு கிடைத்து விடும்.

இதை விட மோசம் முகநூல் நிலைத்தகவல்களை மட்டும் படிப்பவர்கள். இவர்கள் அதைத் தாண்டி அக்கருத்தின் நீள அகலத்தை அறிய முயல மாட்டார்கள். நீங்கள் ஒரு இலக்கிய பத்திரிகையை இது போல் மேம்போக்காய் படிக்க இயலாது. இணையதளங்கள் மெல்ல இலக்கிய பத்திரிகைகளின் இடத்தை ஆக்கிரமிப்பதன் ஆபத்து இது தான்.
இப்போது இரண்டு வகை வாசிப்புகளின் வித்தியாசத்தைப் பார்ப்போம். செயலூக்கமான வாசிப்பு வாசகனின் பங்களிப்பை கோருகிறது. அதிலுள்ள கருத்துக்களோடு நீங்கள் மோதி அது சரியா, ஏன் சரி என கேட்க வேண்டும். அவ்வாசிப்பு உங்களுக்கு எதுவும் கரண்டியில் ஊட்டாது. அது ஜிம்மில் போய் எடை தூக்குவது போன்ற பயிற்சி. இவ்வகை வாசிப்பு உங்கள் மூளைத்திறனை, தர்க்கத்தை வளர்க்கும். புது சொற்களைத் தரும். ஒரு புனைவை உங்கள் கற்பனை கொண்டு விரித்து படிக்கும் போது எழுத்தாளனின் கற்பனையுடன் பங்கு கொள்கிறீர்கள். அது உங்கள் மூளையின் கற்பனை நரம்பு திசுக்களை வலுப்படுத்துகிறது.
செயலற்ற வாசிப்பு உங்களை மயக்கம் தந்து அறுவைசிகிச்சை மேஜையில் கிடத்தப்பட்டவரைப் போல் வைக்கும். அது உங்களுக்கு தகவல்களையும் உணர்ச்சிகளையும் ஊட்டும். சோடா உப்பிட்ட சோற்றைப் போல வயிறு நிரம்பின உணர்வைத் தரும். ஆனால் அதுவெறும் வாயு தான்.

இணையத்தில் வாசிப்பதற்கு நிறைய கொட்டிக் கிடக்கின்றன. மிக கவனமாய் இலக்கிய புனைவுகள், தத்துவ கட்டுரைகள் என தேடி வாசித்தால் ஒழிய செயலற்ற வாசிப்பில் சென்று விழுவதற்கான சாத்தியம் இங்கு அதிகம். மணிக்கணக்காய் முகநூல் பதிவுகளையும் அதன் வழி கிடைக்கும் தொடுப்புகளை கிளிக்கி பல செய்திக் கட்டுரைகளையும் வாசித்துக் கொண்டிருப்பவர்களை பார்த்திருக்கிறேன். வாசிப்பின் முடிவில் அவர்களுக்கு ஒரு எளிய கிளர்ச்சியும் நிறைய களைப்புமே காத்திருக்கும். அதில் கிடைத்த கொஞ்சம் தகவல்களை பிறருடனான அரட்டையில் பயன்படுத்துவார்கள். நான் தனிப்பட்ட முறையில் செய்திக்கட்டுரைகளின் ரசிகன். விட்டால் மணிக்கணக்காய் இக்கட்டுரைகளில் மேய்வேன். நானாகவே முனைந்து என்னை கட்டுப்படுத்துவேன். ஏனென்றால் வாசிப்பின் முடிவில் எஞ்சுவது வெறுமை மட்டும் தான்.

ஏன் சிரமப்பட்டு வாசிக்க வேண்டும் என சிலர் கேட்பார்கள். உலகில் எல்லா சிறந்த விசயங்களும் ஆரம்ப கட்ட சிரமத்துடன் தான் கிடைக்கும். காதல், வேலை, கலை, வியாபாரத்தில் வெற்றி, புது மொழியை, பண்பாட்டை கற்பது, ஒரு விளையாட்டை பரிச்சயம் கொள்வது என. ஒரு பெண்ணுடனான உடல் நெருக்கம் சில நிமிடங்கள் போதுமென்றால் மிக எளிதான வழிகள் உள்ளன. ஆனால் இருந்தும் கூட வருடக்கணக்காய் பின் தொடர்ந்து ஏன் போராடி ஒரு பெண்ணை நெருங்கி பல பிரச்சனைகளைக் கடந்து அவளை அடைகிறோம். அதன் வழி நமக்குக் கிடைக்கும் அனுபவம் ஆயிரம் மடங்கு அதிக ஆழமுள்ளது, கிளர்ச்சியானது என்பதால் தான். செயலூக்கமான சிரமமான வாசிப்பும் அப்படித் தான்.

நான் நிறைய சுயமுன்னேற்ற நூல்களை படித்திருக்கிறேன். அவை எதுவும் தராத தீர்வுகளை எனக்கு தத்துவ, உளவியல் நூல்கள் தந்துள்ளன. சட்டென என்னைச் சூழ்ந்துள்ள இருள் விலகி விடும். சமீபமாய் மிகவும் கசப்பில் இருந்த போது சார்த்தரின் Existentialism and Human Emotions எனும் நூலைப் படித்தேன். மிகச்சின்ன நூல். 50 பக்கங்களே. அங்கங்கே சொன்னதையே திரும்ப சொல்லுகிறார் என்றாலும் சிக்கலான விசயங்களை மிக எளிதாய் புரிய வைக்கிற மொழி சார்த்தருடையது. ஒரு கட்டத்தில் அவர் சொன்ன ஒரு கருத்து நான் அதுவரை வாழ்க்கையை தப்பாய் புரிந்து கொண்டிருக்கிறேன் என விளங்க வைத்தது. கண்ணைக் கட்டியிருந்த ஒரு கருந்துணியை யாரோ அவிழ்த்தது போல் இருந்தது. உண்மையில் இதை ஒரு மாற்றுக்கருத்து செய்ய முடியாது. 

சுயமுன்னேற்ற நூல்கள் நம்மை மாற்றி யோசிக்க வைக்க தூண்டும். ஆனால் சார்த்தர் போன்றவர்கள் கருத்தின் பின்னுள்ள தர்க்க வலையை கலைப்பார்கள். நம் யோசனையின் கட்டமைப்பை புரிந்து கொள்ள உதவுவார்கள். மொத்த தர்க்க முறையையும் திரும்ப கட்டியெழுப்புவார்கள். அன்றாட வாழ்வின் குழப்பஙக்ள், அறச்சிக்கல்களில் இருந்து விடுவிக்க இது உதவும். இதை ஒரு பத்திரிகைக்கட்டுரையோ இணையக்கட்டுரையோ ஒருபோதும் செய்யாது. எத்தனை நூறு பத்திரிகைக் கட்டுரைகள் படித்தாலும் அவை மேலோட்டமான பிரச்சனைகளுக்கு மட்டுமே விடை தரும். உள்ளார்ந்த சிக்கல்கள் அப்படியே இருக்கும்.
தொண்ணூறுகளின் துவக்கத்தில் வந்த இலக்கிய பத்திரிகை கட்டுரைகளுக்கும் இன்றுள்ளவைகளூக்குமே பெரிய வித்தியாசமொன்று உள்ளது. அன்று எழுத்தாளர்கள் பலதுறைகள் சார்ந்து படித்து வித்தியாசமான பார்வையில் எழுத முயன்றார்கள். புது சிந்தனையாளர்களை அறிமுகப்படுத்த எத்தனித்தார்கள். இன்றைய கட்டுரைகள் நான்கைந்து வகையறாக்களுக்குள் அடங்குபவை மட்டுமே. அம்மாதத்தில் வெளியான இரண்டு படங்களை முக்கியமான கலைமுயற்சிகளாய் நிறுவுபவை மற்றும் அம்மாத அரசியல் சமூக சர்ச்சைகளைப் பற்றின தகவல் தொகுப்புகள். காலச்சுவடு, தீராநதி போன்ற முழுதீவிர பத்திரிகைகளில் கூடுதலாய் ஆய்வுக்கட்டுரைகள் மற்றும் விமர்சனங்கள் வருகின்றன. ஆனால் எல்லா பத்திரிகைகளிலும் ஒரு எந்திரத்தன்மை அதிகரித்து விட்டது. எதிர்பாராத விசயங்கள் எதுவும் இல்லை. புது சிந்தனைகளின் வரவு நின்று விட்டது.

 இதற்கு இணையமும் டிவியும் இன்றைய இலக்கிய, நடுநிலை பத்திரிகைகள் மீது செலுத்தும் தாக்கமும், தகவல்களுக்கு நாம் கொடுக்கும் கூடுதலான முக்கியத்துவமும் ஒரு காரணமாய் இருக்கலாம். பழைய “நிறப்பிரிகையின்” பிரதிகளை இன்று எடுத்து சும்மா புரட்டினாலே பிரமிப்பு ஏற்படும். அவ்வளவு புது அறிமுகங்கள், மாற்று கண்ணோட்டங்கள். தொண்ணூறுகளில் வந்த காலச்சுவடில் தூக்குத்தண்டனையை ஒட்டி வந்த விவாதக்கட்டுரைகள் எப்படி ஒரு அலையை கிளப்பின! இன்று நீங்கள் ஒரு பிரச்சனையை ஒட்டி அத்தகைய கட்டுரைகளை வரவழைக்க பார்த்தாலும் கூட எல்லாரும் ஏற்கனவே தெரிந்த கருத்துக்கள், தகவல்களை திரட்டி கட்டுரையாய் தந்து விக்கிபீடியா வேலை செய்வதுடன் முடித்துக் கொள்வார்கள்.


இப்போதெல்லாம் முகநூலில் ஒரு நாவலோ கதையோ நன்றாக இருக்கிறது என எழுதினால் அதற்கு லிங்க் கொடுங்கள் என்கிறார்கள். அதைத் தேடி புத்தகமாய் வாசித்தால் தான் என்ன? 

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...