Skip to main content

கேப்டன் குழப்பம்?


-    (ஜூன் இறுதி வார கல்கியில் வெளிவந்த கட்டுரை)

இந்திய கிரிக்கெட் வாரியம் குழப்படிகளுக்கு பெயர் போனது. சூதாட்ட ஊழலில் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் வீரர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்தன. இந்தியாவில் பல வருடங்கள் வழக்கு நடந்து பின் தண்டிக்கப்பட்ட அசருதீன் போன்றவர்கள் குற்றவாளிகள் அல்ல என நீதிமன்ற தீர்ப்பு வந்தது. அதே போல வேறெங்கும் இல்லாத அளவு நம்மூரில் தான் கிரிக்கெட் நிர்வாகிகளே சூதாட்ட குற்றச்சாட்டில் அதிகம் மாட்டுகிறார்கள். அப்படி குற்றம் சாட்டப்பட்ட ஸ்ரீனிவாசனை கிரிக்கெட் அணியின் தலைவர் தோனியில் ஆரம்பித்து பல வாரிய நிர்வாகிகள் ஆதரிக்க, உச்சநீதிமன்றம் தலையிட்டு அவரை நீக்க வேண்டி வந்தது.

 2015 உலகக்கோப்பைக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது தோனி டெஸ்ட் அணியில் இருந்து தீடீரென ஓய்வுற்று பாதியில் ஆடுவதை நிறுத்தினார். அதற்கு காரணம் அவரது விருப்பத்துக்கு எதிராக பந்து வீச்சு மற்றும் களத்தடுப்பு பயிற்சியாளர்களை நீக்கி, ரவி சாஸ்திரியை அணி இயக்குநராக வாரியம் நியமித்தது தான். ஒரு பக்கம் தோனியின் காட்பாதரான ஸ்ரீனிவாசன் கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவியை இழந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் மீதான ஊழல் குற்றச்சாட்டில் தோனியும் லேசாய் சிக்கி இருந்தார். இன்னொரு பக்கம் அணிக்குள் கோலி-சாஸ்திரி அணி வலுவாகிட தோனி திக்குமுக்காடிப் போனார். இந்த கட்டத்தில் தேர்வாளர்கள் தோனியிடம் அவர் உலகக்கோப்பை முடிந்ததும் ஒருநாள் அணியில் இருந்தும் ஓய்வு பெற வேண்டும் என்று தீர்மானமாக கூறியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அம்முடிவை தள்ளிப்போட்டபடியே வருகின்றனர். இந்தியா உலகக்கோப்பையில் சிறப்பாக ஆடி அரையிறுதி வரை வந்து தோற்றது. ஆனால் அதற்கு பின் அடுத்த உலகக்கோப்பை வரை இந்தியாவுக்கு தோனி தலைமை தாங்குவாரா என்பது தெளிவில்லை.
இந்த குழப்பங்கள் காரணமாய் சமீபமாய் நடந்து முடிந்த வங்கதேச ஒருநாள் தொடரை இந்திய அணி கேவலமாய் ஆடி இழந்தது. இதற்கு அணியின் ஒற்றுமையின்மையே காரணம் எனக் கூறப்பட்டது. கோலி ஒரு பக்கம் தோனிக்கு எதிராய் பூடகமான குற்றச்சாட்டுகளை மீடியாவில் வைத்தார். தோனியின் முன்னாள் பயிற்சியாளர் இந்திய அணிக்குள் தோனிக்கு எதிராய் குழு அரசியல் நடக்கிறது என்றார். தோனியும் அணித்தோல்விக்கு பொறுப்பேற்று தான் பதவி விலகத் தயார் என்றார். ஒரு பழைய படத்தில் என்.எஸ் கிருஷ்ணனின் வீட்டுக்கு யாரோ ஒரு குழந்தை வந்து அவரை அப்பா என்று அழைக்கும். அவர் குழம்பிக் கொண்டிருக்கையில் நிஜ அப்பா வந்து விடுவார். இருவரையும் மாறி மாறி பார்க்கும் குழந்தை சொல்லும்: “ஹை எனக்கு ரெண்டு அப்பா”. இப்போது இந்திய அணி வீரர்களும் இவ்வாறே தமக்கு யார் தான் தலைவர் எனத் தெரியாமல் குழம்புகிறார்கள். கோலியை ஆதரித்தால் டெஸ்ட் அணியில் இடம்பெறலாம். தோனி இன்னும் ஒன்றோ ரெண்டு வருடங்களோ ஒருநாள் அணியின் தலைவராய் இருப்பார் என்பதால் அவரை ஆதரித்தால் அக்காலம் வரை அணியில் இடம் உறுதி. அதனால் அவர்கள் இருவரையும் ஆதரிக்கிறார்கள். இரு குழுவிலும் இருக்கிறார்கள். ஒரு பேட்டியில் ரஹானே கோலியின் தலைமையை மிகவும் புகழ்ந்து பேசி விட்டு கூடுதலாய் “தோனியும் நல்ல கேப்டன் தான்” என்கிறார். அஷ்வின் ஒரு பேட்டியில் “நான் தோனிக்காக உயிரையும் கொடுப்பேன்” என்று விட்டு, “கோலிக்காகவும் தான் கொடுப்பேன்” என்கிறார். இப்படி இப்போது இந்திய அணி வீரர்களுக்கு ரெண்டு அப்பா.
அடுத்து நடைபெற இருக்கிற ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தின் போது ஒரு புது அணி தோனியின் தலைமையில் செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வழக்கமான குழப்படிகளின் நீட்சியாக இப்போது ரஹானே தலைவராய் அறிவிக்கப்பட்டிருக்கிறார். ரஹானேவுக்கு ஒருநாள் ஆட்டத்தில் சரியாய் மட்டையாட வருவதில்லை எனக் கூறி தோனி அவரை அணியில் இருந்து சமீபமாய் நீக்கி இருந்தார். அந்த சந்தர்பத்தில் ரஹானே தலைவராக்கப்பட மீடியா தேர்வுக்குழு தலைவர் சந்தீப் பட்டேலிடம் தொனி அவரது மட்டையாட்டத்தை பொதுவில் விமர்சித்ததை வைத்து கேள்வி கேட்டனர். அதற்கு பதிலளிக்க மறுத்த அவர் ”ரஹானேவுக்கு எங்கள் முழு ஆதரவும் உண்டு” என்று பொதுவாக கூறினார். ஆனால் என்னதான் அவர் இத்தொடரில் சிறப்பாய் ஆடினாலும் ஆறு மாதங்களுக்கு பிறகு நடக்கப்போகும் ஒருநாள் தொடரில் தோனியின் தலைமையிலான இந்திய அணியில் ரஹானே இடம் பெறுவது சிரமம் தான். அணியில் இடம் ஸ்திரமில்லாதவர் எப்படி அணித்தலைவராக உறுதியுடன் செயல்பட முடியும்?
வேறு சில அடிப்படையான கேள்விகளும் எழுகின்றன:
1)   தோனிக்கு அடுத்த ஆறு மாதங்கள் ஓய்வுள்ள சந்தர்பத்தில் அவர் இத்தொடரில் பங்கேற்றிருக்கலாமே. அவர் ஏன் ஆடவில்லை?
2)   தோனியும் கோலியும் ஓய்வு கொள்ளூம் பட்சத்தில் ரோஹித் ஷர்மாவை தலைவர் ஆக்கியிருக்கலாமே? அவர் கோலிக்கு போட்டியாக வந்து விடக்கூடாதே என்கிற பதற்றமா?
3)   ஏன் இந்திய அணிக்கு இன்னும் பயிற்சியாளர் நியமிக்கப்படவில்லை? ரவி சாஸ்திரியை பயிற்சியாளராக்குவதற்கு தோனி எதிர்ப்பு தெரிவிக்கிறாரா?
4)   ஜிம்பாப்வேவுக்கு செல்லும் இந்திய அணியில் அனுபவம் குறைந்த வீரர்கள் அதிகம் என்பதால் ஒரு பயிற்சியாளர் அவசியம் எனும் போது, ஏன் பயிற்சியாளர் இல்லாமல் அணி செல்கிறது?

5)   தேர்வு செய்யப்பட்டுள்ள மாற்று அணியின் சராசரி வயது 30. இவ்வீரர்கள் அடுத்த உலகக்கோப்பையின் போது 34 வயதை எட்டி விடுவார்கள். 35 வயதான ஹர்பஜனும் அணியில் இருக்கிறார். இந்த வயதான விரர்கள் தான் இந்தியாவின் எதிர்காலமா?

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...