முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கேப்டன் குழப்பம்?


-    (ஜூன் இறுதி வார கல்கியில் வெளிவந்த கட்டுரை)

இந்திய கிரிக்கெட் வாரியம் குழப்படிகளுக்கு பெயர் போனது. சூதாட்ட ஊழலில் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் வீரர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்தன. இந்தியாவில் பல வருடங்கள் வழக்கு நடந்து பின் தண்டிக்கப்பட்ட அசருதீன் போன்றவர்கள் குற்றவாளிகள் அல்ல என நீதிமன்ற தீர்ப்பு வந்தது. அதே போல வேறெங்கும் இல்லாத அளவு நம்மூரில் தான் கிரிக்கெட் நிர்வாகிகளே சூதாட்ட குற்றச்சாட்டில் அதிகம் மாட்டுகிறார்கள். அப்படி குற்றம் சாட்டப்பட்ட ஸ்ரீனிவாசனை கிரிக்கெட் அணியின் தலைவர் தோனியில் ஆரம்பித்து பல வாரிய நிர்வாகிகள் ஆதரிக்க, உச்சநீதிமன்றம் தலையிட்டு அவரை நீக்க வேண்டி வந்தது.

 2015 உலகக்கோப்பைக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது தோனி டெஸ்ட் அணியில் இருந்து தீடீரென ஓய்வுற்று பாதியில் ஆடுவதை நிறுத்தினார். அதற்கு காரணம் அவரது விருப்பத்துக்கு எதிராக பந்து வீச்சு மற்றும் களத்தடுப்பு பயிற்சியாளர்களை நீக்கி, ரவி சாஸ்திரியை அணி இயக்குநராக வாரியம் நியமித்தது தான். ஒரு பக்கம் தோனியின் காட்பாதரான ஸ்ரீனிவாசன் கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவியை இழந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் மீதான ஊழல் குற்றச்சாட்டில் தோனியும் லேசாய் சிக்கி இருந்தார். இன்னொரு பக்கம் அணிக்குள் கோலி-சாஸ்திரி அணி வலுவாகிட தோனி திக்குமுக்காடிப் போனார். இந்த கட்டத்தில் தேர்வாளர்கள் தோனியிடம் அவர் உலகக்கோப்பை முடிந்ததும் ஒருநாள் அணியில் இருந்தும் ஓய்வு பெற வேண்டும் என்று தீர்மானமாக கூறியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அம்முடிவை தள்ளிப்போட்டபடியே வருகின்றனர். இந்தியா உலகக்கோப்பையில் சிறப்பாக ஆடி அரையிறுதி வரை வந்து தோற்றது. ஆனால் அதற்கு பின் அடுத்த உலகக்கோப்பை வரை இந்தியாவுக்கு தோனி தலைமை தாங்குவாரா என்பது தெளிவில்லை.
இந்த குழப்பங்கள் காரணமாய் சமீபமாய் நடந்து முடிந்த வங்கதேச ஒருநாள் தொடரை இந்திய அணி கேவலமாய் ஆடி இழந்தது. இதற்கு அணியின் ஒற்றுமையின்மையே காரணம் எனக் கூறப்பட்டது. கோலி ஒரு பக்கம் தோனிக்கு எதிராய் பூடகமான குற்றச்சாட்டுகளை மீடியாவில் வைத்தார். தோனியின் முன்னாள் பயிற்சியாளர் இந்திய அணிக்குள் தோனிக்கு எதிராய் குழு அரசியல் நடக்கிறது என்றார். தோனியும் அணித்தோல்விக்கு பொறுப்பேற்று தான் பதவி விலகத் தயார் என்றார். ஒரு பழைய படத்தில் என்.எஸ் கிருஷ்ணனின் வீட்டுக்கு யாரோ ஒரு குழந்தை வந்து அவரை அப்பா என்று அழைக்கும். அவர் குழம்பிக் கொண்டிருக்கையில் நிஜ அப்பா வந்து விடுவார். இருவரையும் மாறி மாறி பார்க்கும் குழந்தை சொல்லும்: “ஹை எனக்கு ரெண்டு அப்பா”. இப்போது இந்திய அணி வீரர்களும் இவ்வாறே தமக்கு யார் தான் தலைவர் எனத் தெரியாமல் குழம்புகிறார்கள். கோலியை ஆதரித்தால் டெஸ்ட் அணியில் இடம்பெறலாம். தோனி இன்னும் ஒன்றோ ரெண்டு வருடங்களோ ஒருநாள் அணியின் தலைவராய் இருப்பார் என்பதால் அவரை ஆதரித்தால் அக்காலம் வரை அணியில் இடம் உறுதி. அதனால் அவர்கள் இருவரையும் ஆதரிக்கிறார்கள். இரு குழுவிலும் இருக்கிறார்கள். ஒரு பேட்டியில் ரஹானே கோலியின் தலைமையை மிகவும் புகழ்ந்து பேசி விட்டு கூடுதலாய் “தோனியும் நல்ல கேப்டன் தான்” என்கிறார். அஷ்வின் ஒரு பேட்டியில் “நான் தோனிக்காக உயிரையும் கொடுப்பேன்” என்று விட்டு, “கோலிக்காகவும் தான் கொடுப்பேன்” என்கிறார். இப்படி இப்போது இந்திய அணி வீரர்களுக்கு ரெண்டு அப்பா.
அடுத்து நடைபெற இருக்கிற ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தின் போது ஒரு புது அணி தோனியின் தலைமையில் செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வழக்கமான குழப்படிகளின் நீட்சியாக இப்போது ரஹானே தலைவராய் அறிவிக்கப்பட்டிருக்கிறார். ரஹானேவுக்கு ஒருநாள் ஆட்டத்தில் சரியாய் மட்டையாட வருவதில்லை எனக் கூறி தோனி அவரை அணியில் இருந்து சமீபமாய் நீக்கி இருந்தார். அந்த சந்தர்பத்தில் ரஹானே தலைவராக்கப்பட மீடியா தேர்வுக்குழு தலைவர் சந்தீப் பட்டேலிடம் தொனி அவரது மட்டையாட்டத்தை பொதுவில் விமர்சித்ததை வைத்து கேள்வி கேட்டனர். அதற்கு பதிலளிக்க மறுத்த அவர் ”ரஹானேவுக்கு எங்கள் முழு ஆதரவும் உண்டு” என்று பொதுவாக கூறினார். ஆனால் என்னதான் அவர் இத்தொடரில் சிறப்பாய் ஆடினாலும் ஆறு மாதங்களுக்கு பிறகு நடக்கப்போகும் ஒருநாள் தொடரில் தோனியின் தலைமையிலான இந்திய அணியில் ரஹானே இடம் பெறுவது சிரமம் தான். அணியில் இடம் ஸ்திரமில்லாதவர் எப்படி அணித்தலைவராக உறுதியுடன் செயல்பட முடியும்?
வேறு சில அடிப்படையான கேள்விகளும் எழுகின்றன:
1)   தோனிக்கு அடுத்த ஆறு மாதங்கள் ஓய்வுள்ள சந்தர்பத்தில் அவர் இத்தொடரில் பங்கேற்றிருக்கலாமே. அவர் ஏன் ஆடவில்லை?
2)   தோனியும் கோலியும் ஓய்வு கொள்ளூம் பட்சத்தில் ரோஹித் ஷர்மாவை தலைவர் ஆக்கியிருக்கலாமே? அவர் கோலிக்கு போட்டியாக வந்து விடக்கூடாதே என்கிற பதற்றமா?
3)   ஏன் இந்திய அணிக்கு இன்னும் பயிற்சியாளர் நியமிக்கப்படவில்லை? ரவி சாஸ்திரியை பயிற்சியாளராக்குவதற்கு தோனி எதிர்ப்பு தெரிவிக்கிறாரா?
4)   ஜிம்பாப்வேவுக்கு செல்லும் இந்திய அணியில் அனுபவம் குறைந்த வீரர்கள் அதிகம் என்பதால் ஒரு பயிற்சியாளர் அவசியம் எனும் போது, ஏன் பயிற்சியாளர் இல்லாமல் அணி செல்கிறது?

5)   தேர்வு செய்யப்பட்டுள்ள மாற்று அணியின் சராசரி வயது 30. இவ்வீரர்கள் அடுத்த உலகக்கோப்பையின் போது 34 வயதை எட்டி விடுவார்கள். 35 வயதான ஹர்பஜனும் அணியில் இருக்கிறார். இந்த வயதான விரர்கள் தான் இந்தியாவின் எதிர்காலமா?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...