Skip to main content

இரு ஐ.பி.எல் அணிகள் மீதான தடையும் அரசியலும்

-    Image result for chennai super kings



ஐ.பி.எல் சூதாட்டம் சம்மந்தமாக விசாரிக்க உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட லோதா கமிஷன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸின் குற்றத்தை உறுதி செய்து இரு அணிகளையும் இரு வருடங்களுக்கு தடை செய்துள்ளது. சூப்பர் கிங்ஸின் உரிமையாளரான ஸ்ரீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸின் உரிமையாளர் ராஜ் குந்தெரா இருவரையும் ஐ.பி.எல்லில் இருந்து நிரந்தரமாய் தடை செய்துள்ளது. இத்தண்டனையை இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்று நிறைவேற்றுமா?


ஸ்ரீனிவாசன் அணித்தலைவராய் இருந்த போது இத்தகைய தீர்ப்பு வந்திருந்தால் நிச்சயம் அது குப்பைக்கூடைக்கு சென்றிருக்கும். வாரியம் எதிர்த்து முறையீடு செய்திருக்கும். ஆனால் இப்போது ஸ்ரீனிவாசனின் எதிர்முகாம் வாரியத்தை தலைமை தாங்குவதால் சென்னை அணி முடக்கப்பட வாய்ப்பு அதிகம். ராஜஸ்தான் அணி சென்னையுடன் ஒப்பிடுகையில் எளிய முதலீடு கொண்ட இடைநிலை அணி. அவ்வணிக்கு என்று நிரந்தரமான வீரர்களோ தனி முகமோ இல்லை. எளிதில் அந்த அணியை கலைத்து விட்டு வேறொரு புது அணியை அவ்விடத்தில் உருவாக்க இயலும். ஆனால் சென்னை ஐ.பி.எல்லின் உச்ச நட்சத்திர அணி. இந்தியாவில் மிக அதிகமாய் ரசிகர்கள் கொண்ட அணி. அதனால் சென்னையை கலைப்பது மிக சிக்கலானது. சென்னை இன்றி ஒரு ஐ.பி.எல் நடத்துவது மணப்பெண்ணை முழுக்க அலங்கரித்து தலையை மட்டும் மொட்டையடிப்பது போல் இருக்கும்.
ஒருவேளை சென்னை அணி தடை செய்யப்படுமானால் தோனியின் எதிர்காலம் என்னவாகும்? 34 வயதான அவர் இன்னும் இரண்டோ மூன்றோ வருடங்கள் தொடர்ந்து ஆடலாம். அதனால் இந்த இருவருடத் தடை நிலுவையில் வருமானால் தோனி மற்றொரு ஐ.பி.எல் அணிக்கு செல்வதை விட வேறுவழியில்லை. வயது காரணமாய் தோனியின் ஆட்டத்திறன் மழுங்கி வருகிறது. மட்டையாளராகவோ கீப்பராகவோ மட்டும் அவர் ஒரு அணியில் இடம் பிடிப்பது இனி சற்றே சிரமம். அணித்தலைவராகத் தான் தோனி இனி ஐ.பி.எல் பேரங்களில் விலை பேசப்படுவார். சென்னை இல்லாத இடத்தில் ஒரு புது அணி தோன்றி அதற்கு தோனி தலைவராகக் கூடுமா?
எட்டாண்டுகளுக்கு மேலாக தோனி இந்திய அணியின் தலைவராகவும் இருந்தது, சென்னை அணி உரிமையாளர் ஸ்ரீனிவாசன் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகவும் இருந்தது ஆகிய காரணங்களால் சென்னை அணி அதிகாரங்கள் குவிகிற மையமாக விளங்கியது. இரண்டு அனுகூலங்களை அந்த அணி அனுபவித்தது.
1)   ஐ.பி.எல்லில் வேறு அணிகள் தொடர்ந்து தம் வீரர்களை பேரத்திற்கு உள்ளாக்கி வெளி அணிகளுக்கு விட்டுத்தர நிர்பந்தம் இருந்தது. ஆனால் சென்னை மட்டும் நீண்ட காலம் ஒரே வீரர்களுடன் ஆடியது. சென்னையை விட்டுப் போவதற்கு வீரர்கள் தயங்கி இருக்கலாம். அல்லது தன் அணி வீரர்களை வெளியே விற்பதற்கு ஸ்ரீனிவாசனை கேட்க பிறர் தயங்கியிருக்கலாம்.
2)    தொடர்ந்து சென்னை அணியில் ஆடுவது இந்திய அணித் தேர்வுக்கான ஒத்திகையாக மாறியது. மோஹித் ஷர்மா, கோனி, பாலாஜி ஆகிய பந்துவீச்சாளர்கள் சென்னைக்காய் தோனியின் கீழ் ஆடிய பின்னரே இந்திய அணிக்கு தேர்வாகினர். அஷ்வின், ரெய்னா ஆகியோரும் கூட இவ்வாறு தோனியா கவனிக்கப்பட்ட பின்னரே இந்திய அணியில் இடம்பெற்றனர். பின்னர் தோனி ஜடேஜாவை சென்னைக்கு கொண்டு வந்ததும் பாதி இந்திய அணி சென்னைக்கு ஆடும் நிலை ஏற்பட்டது. இப்படித் தான் சென்னைக்கு இந்திய அணியின் நட்சத்திர அந்தஸ்து கிடைத்தது. தோனி முக்கிய பங்குதாரராக உள்ள ரிட்ஸ் எனும் வீரர்களின் விளம்பர வாய்ப்புகளை நிர்வகிக்கும் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக ஜடேஜா, ரெய்னா ஆகியோர் இருப்பதும் தோனி தன் சொந்த நிறுவனத்துக்காக சில குறிப்பிட்ட வீரர்களை இந்திய மற்றும் சென்னை அணிகளில் ஆட வைக்கிறார் எனும் சந்தேகத்தை வலுவாக்கியது. ஏனென்றால் எவ்வளவு மோசமாய் ஆடினாலும் ஜடேஜா இந்திய அணியில் இருந்து நீக்கப்படவில்லை. ரெய்னா தகுதிக்கும் மீறி அடிக்கடி இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்று வந்தார்.
ஆக இந்த தடை நடைமுறைப்படுத்தப்பட்டால் ஸ்ரீனிவாசன், தோனி மற்றும் சென்னை அணி வீரர்கள் இணைந்து கட்டின அதிகார சீட்டுக்கட்டு கோபுரம் முற்றிலுமாய் சரியக் கூடும்.
குருநாத் மெய்யப்பனின் தவறுக்காய் மொத்த அணியையும் தடை செய்வது நியாயமா?
மெய்யப்பன் மட்டுமல்ல வேறு சில வீரர்களும் சூதாட்டத்தில் சம்மந்தப்பட்டிருப்பதாய் ஐயங்கள் உள்ளன. உதாரணமாய் முன்னாள் ஐ.பி.எல் தலைவர் லலித் மோடி சமீபமாய் சென்னை அணியின் ரெய்னா, பிராவோ மற்றும் ஜடேஜா ஒரு சூதாட்டக்காரருடன் தொடர்பு கொண்டிருந்ததாகவும், அவர் அவர்களுக்கு மும்பையில் பலகோடி மதிப்பிலான வீடு மற்றும் பரிசுகள் அளித்ததாய் ட்வீட் செய்தார். இப்புகாரை விசாரிக்கும்படி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்திய வாரியத்திடம் கேட்க வாரியமோ அதை குப்பைக்கூடைக்கு அனுப்பியது. ஆனால் ராஜஸ்தான் அணியின் சவான், சந்திலா, ஸ்ரீசாந்த் ஆகியோர் பற்றி புகார் எழுந்த போது உடனடியாய் விசாரிக்கப்பட்டு விசாரணை முடியுமுன்னரே மூவரும் தடை செய்யப்பட்டனர். கைதும் ஆயினர். ஆனால் சென்னை அணிக்கு எதிராய் அதாரங்களை திரட்டின ஒரு காவல்துறை ஆய்வாளர் பின்னர் சூதாட்டத்தை விசாரித்து வந்து மும்பை காவல்துறையினரிடம் அவற்றை அளிக்காமல் மறைத்தார். ஆக சென்னை அணி வீரர்கள் அனைவரும் தூய ஆவிகள் அல்ல. நீதிமன்றம் சரியான ஆதாரமில்லாமல் வீரர்கள் பெயர்களை வெளியிடக் கூடாதென்பதில் கவனம் காட்டுவதால் பொதுவாய் சென்னை அணியை மட்டுமே தடை செய்துள்ளதாய் புரிந்து கொள்ளலாம்.
முதன்முதலில் மெய்யப்பனுக்கு எதிராய் குற்றச்சாட்டு கிளம்பிய போது ஸ்ரீனிவாசன் உடனடியாய் தவறை ஒத்துக் கொண்டு தன் மருமகனை வெளிப்படையாய் குற்றம்சாட்டி விலக்கி வைத்திருக்க வேண்டும். அவருக்கு எதிராய் நேர்மையான விசாரணை நடக்கவும் வழிவகை செய்திருக்க வேண்டும். ஆனால் நேர்மாறாக நடந்தது. அவர் தன் அணியையும் மருமகனையும் காப்பாற்ற இறுதி வரை பிரயத்தனித்தார். விளைவாக அணியையும் இழந்து மருமகனும் ஆயுட்காலமும் தடைசெய்யப்பட்டு இப்போது பெரும் இழப்பு அவருகே! உப்பு தின்றால் வேறு வழி?
ராஜஸ்தான் அணி குறைந்த முதலீட்டில் உருவானது. அதிலிருந்து பெரும் லாபமும் உரிமையாளருக்கு கிடையாது. ஆனால் தொடர்ந்து இந்த அணியை குந்தரே நடத்திக் கொண்டு போனது சூதாட்டம் மூலம் சம்பாதிக்கத் தானோ எனும் ஐயம் எழுகிறது.
இதோடு முடிந்து விடவில்லை. பங்களுர் போன்ற பிற அணிகள், கிரிக்கெட் வாரியத்தின் சில நிர்வாகிகள் ஆகியோர் மீதும் சந்தேகத்தின் நிழல் விழுகிறது. பெரும்புள்ளிகள் சம்மந்தப்பட்டிருப்பதால் கிரிக்கெட் வாரியம் கராறான நடவடிக்கை எடுக்காமம் சதா பூசி மெழுகி வந்தது. இப்போது உச்சநீதிமன்றமே தலையிட்டு தடை செய்துள்ளது வாரியத்தின் முகத்தில் பூசப்பட்டு கரியும் தான்.

(ஜூலை மாத கல்கியில் வெளியான கட்டுரை)

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...