Skip to main content

முபீதா நாசரின் “நாற்பத்தியொரு இரவுகள்”


முபீதா நாசரின் “நாற்பத்தியொரு இரவுகள்” சிறுகதைத் தொகுப்புக்கான விமர்சனக் கூட்டம் நேற்று எல்டாம்ஸ் சாலையில் உள்ள கிறிஸ்டியன் மீடியா செண்டரில் நடந்தது. ச.சண்முகநாதன் மற்றும் கவிஞர் நட.சிவகுமார் இணைந்து ஒருங்கிணைத்திருந்தனர். நான், எழுத்தாளர் அஜயன் பாலா உள்ளிட்ட பலர் பேசினர். முபீதா நாசரை எனக்கு அவர் புத்தகம் வாசிக்கும் போது தெரியாது. ஆனால் கூட்டம் அன்று அவரைப் பார்த்ததும் முகம் மிக பரிச்சயமாய் பட்டது. யார் இவர் என யோசித்துக் கொண்டிருந்தேன். பிறகு சட்டென தெளிவானது. அவரை நான் முன்பு பலமுறை தக்கலையில் உள்ள ஆட்டோ நிறுத்ததில் ஓட்டுநராய் பார்த்திருக்கிறேன். ஒருவேளை அவர் ஆட்டோவில் பயணித்திருக்கவும் கூடும்.

 நாசர் பல வருடங்களாய் ராணி, கல்கி போன்ற வணிக பத்திரிகைகளில் கதை எழுதி வந்தவர். இப்போது இத்தொகுப்பு மூலம் தீவிர இலக்கியம் நோக்கி நகர்ந்துள்ளார். குமரி மாவட்ட வாழ்க்கை, குறிப்பாய் இஸ்லாமிய மக்களின் நிலை, சார்ந்து பல துல்லியமான சித்திரங்க்ள் இவரது புனைவில் விரவி உள்ளன. ஒரு சிறுகதைக்குள் பல பாத்திரங்களை சட்சட்டென அவர் உருவாக்கி கைவிட்டு போவதில் சில சிக்கல்கள் உள்ளன என்றாலும், அவரது வடிவ போதத்தின் குறைகளைக் கடந்து தமிழுக்கு புதிதான பாத்திரங்களுக்காகவே இத்தொகுப்பை படித்துப் பார்க்கலாம். குமரி மாவட்ட வாழ்க்கை பரிச்சயமில்லாதவர்களுக்கு இதிலுள்ள வாழ்க்கைப்பதிவுகள் நிச்சயம் ஆர்வமூட்டும். உதாரணமாய் “குழிவெட்டுக்குருவி” எனும் கதையில் ஒரு நாவிதன் வருகிறார். அவர் வேறு ஊரில் இருந்து வந்து வீடுகளுக்கு சென்று முடிவெட்டுகிறவர். ஆனால் ஊர் ஜமாத் அங்கு செயல்படுவதற்கு வேறு ஒரு நாவிதருக்கு அனுமதி அளித்திருக்கிறது. ஆனால் பழைய ஆள் குடிகாரர். பெரும்பாலான நாட்களில் வேலை செய்ய மாட்டார். புது நாவிதன் எங்காவது சென்று வேலை பார்த்தால் பழைய ஆள் போய் கலாட்டா செய்து பணத்தை பிடுங்கிக் கொள்வார். அவரது தோற்றமும் ஒரு திணுசானது. கையில் பைக்கு பதில் ஒரு சூட்கேஸ் வைத்திருப்பார். அதனுள் அவரது கத்தி, கத்திர்க்கோல் ஆகிய பொருட்கள் இருக்கும்.
இத்தொகுப்பில் என்னை மிகவும் கவர்ந்த கதை “நாயர் ஓட்டல்”. அவனது விடிகாலை துவங்கி இரவு வரையிலான பல வேலைகள், இரவு மீதமாகும் உணவை வீட்டில் எடுத்துப் போவதற்காக காலையில் வரும் போதே ஒரு அலுமினிய வாளியை ஏந்தியவாறு கர்நாடக சங்கீதம் முனகியபடி வரும் ஓட்டல் முதலாளியின் சித்தரிப்பு என இக்கதையில் அங்கு வேலை பார்க்கிற கதைசொல்லியின் பார்வையில் இருந்து நுணுக்கமான விபரங்கள் பல வருகின்றன. கதைசொல்லி ஒரு எழுத்தாளன். அவனுக்கு முதலில் தன் கூட பள்ளியில் படித்தவர்கள் கண்ணில் பட்டுவிடக் கூடாதே என கவலை ஏற்படுகிறது. அவர்கள் கல்லூரிக்கு போகும் பேருந்து அவ்வழி போகும் போது ஓட்டலுக்குள் ஓடி ஒளிகிறான். அடுத்து அவனது கதைகள் பிரசுரமாக துவங்க ஓட்டல் எச்சிலை வாளியில் சுமந்து நடப்பது சங்கடமாகிறது. அவன் எங்கு சிறு வேலைக்கு போனாலும் அவனது எழுத்தாள தகுதியை சுட்டிக்காட்டி நிராகரித்து விடுகிறார்கள். அதாவது எழுத்தாளனாய் இருப்பது சமூகத்தில் உயர் அங்கீகாரம் உள்ள சங்கதி என்றாலும் வேலையிடத்தில் உயரதிகாரிகள், முதலாளிகளுக்கு அது எரிச்சலூட்டக் கூடியதாக இருக்கும். கீழ்நிலை வேலை செய்யும் எழுத்தாளன் சமூகத்துக்கு உள்ளும் இல்லாமல் வெளியிலும் இல்லாமல் தவிக்க நேர்கிறது. எனக்கும் இத்தகைய அனுபவம் நேர்ந்துள்ளது. நான் எழுதுவது, என் முகம் டி.வியில் தோன்றுவது என் உயரதிகாரியை கடுமையாய் எரிச்சல்படுத்த மறைமுகமாய் நிறைய தொநதரவுகள் தர ஆரம்பித்தார். என்னை அவமானப்படுத்துவதில் தனி கிளர்ச்சி கொண்டார். இனிமேல் வேலைக்கு போகும் இடத்தில் என் எழுத்தாள முகத்தை மறைத்துக் கொள்வது என முடிவெடுத்துள்ளேன். அதாவது நீங்கள் பணக்காரராகவோ, சொந்த தொழில் செய்பவராகவோ, உயர்பதவியில், அரசு வேலையில் உள்ளவராகவோ இருந்தால் எழுத்தாள அந்தஸ்தின் தாக்கம் நேர்மறையாய் இருக்கும். இல்லாவிட்டால் அது உட்காருகிற இடத்தில் குத்திய வேல் தான்.

”நாற்பத்தியொரு இரவுகள்” தொகுப்பை கீற்று வெளியீட்டகம் பதிப்புத்துள்ள்ளது.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...