முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முபீதா நாசரின் “நாற்பத்தியொரு இரவுகள்”


முபீதா நாசரின் “நாற்பத்தியொரு இரவுகள்” சிறுகதைத் தொகுப்புக்கான விமர்சனக் கூட்டம் நேற்று எல்டாம்ஸ் சாலையில் உள்ள கிறிஸ்டியன் மீடியா செண்டரில் நடந்தது. ச.சண்முகநாதன் மற்றும் கவிஞர் நட.சிவகுமார் இணைந்து ஒருங்கிணைத்திருந்தனர். நான், எழுத்தாளர் அஜயன் பாலா உள்ளிட்ட பலர் பேசினர். முபீதா நாசரை எனக்கு அவர் புத்தகம் வாசிக்கும் போது தெரியாது. ஆனால் கூட்டம் அன்று அவரைப் பார்த்ததும் முகம் மிக பரிச்சயமாய் பட்டது. யார் இவர் என யோசித்துக் கொண்டிருந்தேன். பிறகு சட்டென தெளிவானது. அவரை நான் முன்பு பலமுறை தக்கலையில் உள்ள ஆட்டோ நிறுத்ததில் ஓட்டுநராய் பார்த்திருக்கிறேன். ஒருவேளை அவர் ஆட்டோவில் பயணித்திருக்கவும் கூடும்.

 நாசர் பல வருடங்களாய் ராணி, கல்கி போன்ற வணிக பத்திரிகைகளில் கதை எழுதி வந்தவர். இப்போது இத்தொகுப்பு மூலம் தீவிர இலக்கியம் நோக்கி நகர்ந்துள்ளார். குமரி மாவட்ட வாழ்க்கை, குறிப்பாய் இஸ்லாமிய மக்களின் நிலை, சார்ந்து பல துல்லியமான சித்திரங்க்ள் இவரது புனைவில் விரவி உள்ளன. ஒரு சிறுகதைக்குள் பல பாத்திரங்களை சட்சட்டென அவர் உருவாக்கி கைவிட்டு போவதில் சில சிக்கல்கள் உள்ளன என்றாலும், அவரது வடிவ போதத்தின் குறைகளைக் கடந்து தமிழுக்கு புதிதான பாத்திரங்களுக்காகவே இத்தொகுப்பை படித்துப் பார்க்கலாம். குமரி மாவட்ட வாழ்க்கை பரிச்சயமில்லாதவர்களுக்கு இதிலுள்ள வாழ்க்கைப்பதிவுகள் நிச்சயம் ஆர்வமூட்டும். உதாரணமாய் “குழிவெட்டுக்குருவி” எனும் கதையில் ஒரு நாவிதன் வருகிறார். அவர் வேறு ஊரில் இருந்து வந்து வீடுகளுக்கு சென்று முடிவெட்டுகிறவர். ஆனால் ஊர் ஜமாத் அங்கு செயல்படுவதற்கு வேறு ஒரு நாவிதருக்கு அனுமதி அளித்திருக்கிறது. ஆனால் பழைய ஆள் குடிகாரர். பெரும்பாலான நாட்களில் வேலை செய்ய மாட்டார். புது நாவிதன் எங்காவது சென்று வேலை பார்த்தால் பழைய ஆள் போய் கலாட்டா செய்து பணத்தை பிடுங்கிக் கொள்வார். அவரது தோற்றமும் ஒரு திணுசானது. கையில் பைக்கு பதில் ஒரு சூட்கேஸ் வைத்திருப்பார். அதனுள் அவரது கத்தி, கத்திர்க்கோல் ஆகிய பொருட்கள் இருக்கும்.
இத்தொகுப்பில் என்னை மிகவும் கவர்ந்த கதை “நாயர் ஓட்டல்”. அவனது விடிகாலை துவங்கி இரவு வரையிலான பல வேலைகள், இரவு மீதமாகும் உணவை வீட்டில் எடுத்துப் போவதற்காக காலையில் வரும் போதே ஒரு அலுமினிய வாளியை ஏந்தியவாறு கர்நாடக சங்கீதம் முனகியபடி வரும் ஓட்டல் முதலாளியின் சித்தரிப்பு என இக்கதையில் அங்கு வேலை பார்க்கிற கதைசொல்லியின் பார்வையில் இருந்து நுணுக்கமான விபரங்கள் பல வருகின்றன. கதைசொல்லி ஒரு எழுத்தாளன். அவனுக்கு முதலில் தன் கூட பள்ளியில் படித்தவர்கள் கண்ணில் பட்டுவிடக் கூடாதே என கவலை ஏற்படுகிறது. அவர்கள் கல்லூரிக்கு போகும் பேருந்து அவ்வழி போகும் போது ஓட்டலுக்குள் ஓடி ஒளிகிறான். அடுத்து அவனது கதைகள் பிரசுரமாக துவங்க ஓட்டல் எச்சிலை வாளியில் சுமந்து நடப்பது சங்கடமாகிறது. அவன் எங்கு சிறு வேலைக்கு போனாலும் அவனது எழுத்தாள தகுதியை சுட்டிக்காட்டி நிராகரித்து விடுகிறார்கள். அதாவது எழுத்தாளனாய் இருப்பது சமூகத்தில் உயர் அங்கீகாரம் உள்ள சங்கதி என்றாலும் வேலையிடத்தில் உயரதிகாரிகள், முதலாளிகளுக்கு அது எரிச்சலூட்டக் கூடியதாக இருக்கும். கீழ்நிலை வேலை செய்யும் எழுத்தாளன் சமூகத்துக்கு உள்ளும் இல்லாமல் வெளியிலும் இல்லாமல் தவிக்க நேர்கிறது. எனக்கும் இத்தகைய அனுபவம் நேர்ந்துள்ளது. நான் எழுதுவது, என் முகம் டி.வியில் தோன்றுவது என் உயரதிகாரியை கடுமையாய் எரிச்சல்படுத்த மறைமுகமாய் நிறைய தொநதரவுகள் தர ஆரம்பித்தார். என்னை அவமானப்படுத்துவதில் தனி கிளர்ச்சி கொண்டார். இனிமேல் வேலைக்கு போகும் இடத்தில் என் எழுத்தாள முகத்தை மறைத்துக் கொள்வது என முடிவெடுத்துள்ளேன். அதாவது நீங்கள் பணக்காரராகவோ, சொந்த தொழில் செய்பவராகவோ, உயர்பதவியில், அரசு வேலையில் உள்ளவராகவோ இருந்தால் எழுத்தாள அந்தஸ்தின் தாக்கம் நேர்மறையாய் இருக்கும். இல்லாவிட்டால் அது உட்காருகிற இடத்தில் குத்திய வேல் தான்.

”நாற்பத்தியொரு இரவுகள்” தொகுப்பை கீற்று வெளியீட்டகம் பதிப்புத்துள்ள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.