முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முபீதா நாசரின் “நாற்பத்தியொரு இரவுகள்”


முபீதா நாசரின் “நாற்பத்தியொரு இரவுகள்” சிறுகதைத் தொகுப்புக்கான விமர்சனக் கூட்டம் நேற்று எல்டாம்ஸ் சாலையில் உள்ள கிறிஸ்டியன் மீடியா செண்டரில் நடந்தது. ச.சண்முகநாதன் மற்றும் கவிஞர் நட.சிவகுமார் இணைந்து ஒருங்கிணைத்திருந்தனர். நான், எழுத்தாளர் அஜயன் பாலா உள்ளிட்ட பலர் பேசினர். முபீதா நாசரை எனக்கு அவர் புத்தகம் வாசிக்கும் போது தெரியாது. ஆனால் கூட்டம் அன்று அவரைப் பார்த்ததும் முகம் மிக பரிச்சயமாய் பட்டது. யார் இவர் என யோசித்துக் கொண்டிருந்தேன். பிறகு சட்டென தெளிவானது. அவரை நான் முன்பு பலமுறை தக்கலையில் உள்ள ஆட்டோ நிறுத்ததில் ஓட்டுநராய் பார்த்திருக்கிறேன். ஒருவேளை அவர் ஆட்டோவில் பயணித்திருக்கவும் கூடும்.

 நாசர் பல வருடங்களாய் ராணி, கல்கி போன்ற வணிக பத்திரிகைகளில் கதை எழுதி வந்தவர். இப்போது இத்தொகுப்பு மூலம் தீவிர இலக்கியம் நோக்கி நகர்ந்துள்ளார். குமரி மாவட்ட வாழ்க்கை, குறிப்பாய் இஸ்லாமிய மக்களின் நிலை, சார்ந்து பல துல்லியமான சித்திரங்க்ள் இவரது புனைவில் விரவி உள்ளன. ஒரு சிறுகதைக்குள் பல பாத்திரங்களை சட்சட்டென அவர் உருவாக்கி கைவிட்டு போவதில் சில சிக்கல்கள் உள்ளன என்றாலும், அவரது வடிவ போதத்தின் குறைகளைக் கடந்து தமிழுக்கு புதிதான பாத்திரங்களுக்காகவே இத்தொகுப்பை படித்துப் பார்க்கலாம். குமரி மாவட்ட வாழ்க்கை பரிச்சயமில்லாதவர்களுக்கு இதிலுள்ள வாழ்க்கைப்பதிவுகள் நிச்சயம் ஆர்வமூட்டும். உதாரணமாய் “குழிவெட்டுக்குருவி” எனும் கதையில் ஒரு நாவிதன் வருகிறார். அவர் வேறு ஊரில் இருந்து வந்து வீடுகளுக்கு சென்று முடிவெட்டுகிறவர். ஆனால் ஊர் ஜமாத் அங்கு செயல்படுவதற்கு வேறு ஒரு நாவிதருக்கு அனுமதி அளித்திருக்கிறது. ஆனால் பழைய ஆள் குடிகாரர். பெரும்பாலான நாட்களில் வேலை செய்ய மாட்டார். புது நாவிதன் எங்காவது சென்று வேலை பார்த்தால் பழைய ஆள் போய் கலாட்டா செய்து பணத்தை பிடுங்கிக் கொள்வார். அவரது தோற்றமும் ஒரு திணுசானது. கையில் பைக்கு பதில் ஒரு சூட்கேஸ் வைத்திருப்பார். அதனுள் அவரது கத்தி, கத்திர்க்கோல் ஆகிய பொருட்கள் இருக்கும்.
இத்தொகுப்பில் என்னை மிகவும் கவர்ந்த கதை “நாயர் ஓட்டல்”. அவனது விடிகாலை துவங்கி இரவு வரையிலான பல வேலைகள், இரவு மீதமாகும் உணவை வீட்டில் எடுத்துப் போவதற்காக காலையில் வரும் போதே ஒரு அலுமினிய வாளியை ஏந்தியவாறு கர்நாடக சங்கீதம் முனகியபடி வரும் ஓட்டல் முதலாளியின் சித்தரிப்பு என இக்கதையில் அங்கு வேலை பார்க்கிற கதைசொல்லியின் பார்வையில் இருந்து நுணுக்கமான விபரங்கள் பல வருகின்றன. கதைசொல்லி ஒரு எழுத்தாளன். அவனுக்கு முதலில் தன் கூட பள்ளியில் படித்தவர்கள் கண்ணில் பட்டுவிடக் கூடாதே என கவலை ஏற்படுகிறது. அவர்கள் கல்லூரிக்கு போகும் பேருந்து அவ்வழி போகும் போது ஓட்டலுக்குள் ஓடி ஒளிகிறான். அடுத்து அவனது கதைகள் பிரசுரமாக துவங்க ஓட்டல் எச்சிலை வாளியில் சுமந்து நடப்பது சங்கடமாகிறது. அவன் எங்கு சிறு வேலைக்கு போனாலும் அவனது எழுத்தாள தகுதியை சுட்டிக்காட்டி நிராகரித்து விடுகிறார்கள். அதாவது எழுத்தாளனாய் இருப்பது சமூகத்தில் உயர் அங்கீகாரம் உள்ள சங்கதி என்றாலும் வேலையிடத்தில் உயரதிகாரிகள், முதலாளிகளுக்கு அது எரிச்சலூட்டக் கூடியதாக இருக்கும். கீழ்நிலை வேலை செய்யும் எழுத்தாளன் சமூகத்துக்கு உள்ளும் இல்லாமல் வெளியிலும் இல்லாமல் தவிக்க நேர்கிறது. எனக்கும் இத்தகைய அனுபவம் நேர்ந்துள்ளது. நான் எழுதுவது, என் முகம் டி.வியில் தோன்றுவது என் உயரதிகாரியை கடுமையாய் எரிச்சல்படுத்த மறைமுகமாய் நிறைய தொநதரவுகள் தர ஆரம்பித்தார். என்னை அவமானப்படுத்துவதில் தனி கிளர்ச்சி கொண்டார். இனிமேல் வேலைக்கு போகும் இடத்தில் என் எழுத்தாள முகத்தை மறைத்துக் கொள்வது என முடிவெடுத்துள்ளேன். அதாவது நீங்கள் பணக்காரராகவோ, சொந்த தொழில் செய்பவராகவோ, உயர்பதவியில், அரசு வேலையில் உள்ளவராகவோ இருந்தால் எழுத்தாள அந்தஸ்தின் தாக்கம் நேர்மறையாய் இருக்கும். இல்லாவிட்டால் அது உட்காருகிற இடத்தில் குத்திய வேல் தான்.

”நாற்பத்தியொரு இரவுகள்” தொகுப்பை கீற்று வெளியீட்டகம் பதிப்புத்துள்ள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...