Skip to main content

கதை வாசிப்பு: ஜெயமோகன் மற்றும் சு.ரா

Image result for ஜெயமோகன்

பல்கலைக்கழகத்தில் பகல் முழுக்க ஆய்வு சார்ந்த பணிகளும் யோசனைகளுமாய் ஆங்கில இலக்கியம் சார்ந்து ஓடும். ஆறு மணிக்கு மேல் நாங்கள் மூன்று நான்கு பேர் சேர்ந்து நவீன தமிழ் சிறுகதைகளை வாசிக்க துவங்குவோம். பெரும்பாலும் எங்கள் நெறியாளரின் அறை தான் இடம். வாசிப்பு உள்ளதென்று சொன்னால் வீட்டுக்கு கிளம்புகிற நண்பர்கள் சிலரும் எங்களுடன் சேர்ந்து கொள்வார்கள். போன வாரம் ஜெயமோகன் மற்றும் சு.ராவின் கதைகளை வாசித்தோம். ஜெயமோகனின் நாகம், ஒன்றுமில்லை, பாடலிபுத்திரம், ஆயிரங்கால் மண்டபம், ஜகன்மித்யை ஆகிய கதைகளையும் சு.ராவின் வாழ்வும் வசந்தமும் கதையையும் வாசித்தோம்.


 கடலூரை சேர்ந்த நண்பர் ஒருவர் ”நாகம்” வாசித்தார். அவர் சத்தமாய் படிக்க நாங்கள் கேட்டோம். மொபைலில் பதிவும் பண்ணினோம். அவருக்கு குமரி மாவட்ட வழக்கு தெரியவில்லை என்பதால் தன் ஊர் வழக்கிலேயே படித்தார். அது கேட்க விநோதமாய் இருந்தாலும் இன்னொரு புறம் ஒரு கேள்வியை எனக்குள் தூண்டியது. அதிக பரிச்சயமற்ற வட்டார வழக்கு வாசகர்களால் இப்படித் தான் படிக்கப்படுகிறதா? சொற்களின் அர்த்தம் புரிவது போகட்டும். வட்டார வழக்கின் தொனி தெரியாதவர்கள் கதையின் மனநிலையை தவற விடவும் வாய்ப்புண்டு.

 “நாகம்” ஜெயமோகனின் முக்கியமான கதைகளில் ஒன்று. புள்ளுவன் பாட்டிசைக்கும் குமரி மற்றும் கேரளப்பகுதியை சேர்ந்த, நாகதெய்வத்துடன் இணக்கமான உறவு கொண்ட ஒரு சாதியை சேர்ந்த கன்னிப்பெண் ஒரு நாகத்துடன் உடலுறவு கொள்வது தான் கதை. இச்சாதியினரில் நாகதெய்வத்துடன் கன்னி கூடுவது பற்றி தொன்மக்கதை உள்ளதால் இதை அவ்வகையிலும் படிக்கலாம். Sexual fantasy கதையாகவும் படிக்கலாம். உடலுறவின் போது மனித மனம் ஒரேசமயம் கொள்ளும் எழுச்சியும் அருவருப்பும், விருப்பமும் வெறுப்பும் தான் கதையின் கரு. ஒரு அற்புதமான கிளர்ச்சியை, மன எழுச்சியை தரும் நாகம் பிறகு சாதாரண புழுவாக மாறி சேற்றில் ஊர்ந்து சென்று மறையும் காட்சியும் அதேபோல அபாரமானது. உடலுறவுக்கு பின் வியர்வையில் ஊறிக் கிடந்து பக்கத்தில் உள்ள உடலைப் பார்த்து “இதனுடனா இவ்வளவு இச்சையுடன் முயங்கினோம்?” என வியந்துள்ளோருக்கு இக்கதையின் நிறைய முடிச்சுகள் அவிழ்ந்து கொள்ளும்.

“ஒன்றுமில்லை” ஜெயமோகனின் கதைகளில் அதன் வடிவம் மற்றும் மொழியளவில் வித்தியாசமானது. பொதுவாய் அடர்த்தியான கவித்துவமான கதைமொழியை தொண்ணூறுகளில் ஜெயமோகன் பயன்படுத்தினார். கதாபாத்திரங்களின் உளவியலை நாடகீயமாய் உணர்ச்சிகரமாய் காட்ட முயல்வார். ஆனால் இக்கதையில் வித்தியாசமாய் அவர் ஒரு அடங்கலான நகைமுரண் மிக்க மொழியை பயன்படுத்தி இருப்பார். ஒரு கையில் அசோகமித்திரனும் இன்னொரு கையில் சு.ராவும் அமர்ந்து ”அருள் புரிய” எழுதின கதை போலத் தோன்றும். ஒரு சாதாரண கொழுப்புக்கட்டியை அகற்றுவதற்காய் ஆஸ்பத்திரி செல்லும் ஒரு குடும்பப் பெண், அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட கோளாறினால் தொற்று பரவி, ஜுரம் வந்து, உடல் வில்லென வளைந்து கொடூரமாய் இறந்து போவதை சொல்லும் கதை இது. அப்பெண் ஆஸ்பத்திரிக்கு போவதில் துவங்கி இறுதியில் அவள் சாவது வரை வெவ்வேறு மருத்துவர்கள் அவளுக்கு ஒன்றுமில்லை, விரைவில் குணமாகி விடும் என ஆறுதல் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். ஒவ்வொரு முறையும் அந்த “ஒன்றுமில்லையின்” பொருளும் தொனியும் மாறிக் கொண்டு வரும். இன்றைய மருத்துவம் எப்படி நம் உடலை ஒரு பரிசோதனை வஸ்துவாக எடுத்தாள்கிறது, எப்படி நம்மை அறியாமலே நாம் நமது உடல் மீதான உரிமையை இழக்கிறோம் போன்ற விசயங்களை அதிர்ச்சிகரமாய் தொட்டுக் காட்டும் கதை இது. சில வருடங்களுக்கு முன்பு நான் என் மனைவிக்கு இக்கதையை படித்துக் காட்டினேன். அவளை இக்கதை மிகவும் கவர்ந்தது. அதன் பின் அடிக்கடி ஜெயமோகன் பற்றி பேச்சு வரும் போதெல்லாம் “ஒன்றுமில்லையை” குறிப்பிடுவாள். அவளைப் போல் ஆங்கிலத்தில் அதிகம் வாசிப்பவர்களுக்கும் ஏற்ற கதை இது.

”பாடலிபுத்திரம்” கதையை கல்லூரியில் படிக்கும் போது முதலில் வாசித்தேன். அந்தபுரத்தில் புணர்ச்சியில் ஈடுபட்டிருக்கும் போது கைது செய்யப்படும் மன்னன் நிர்வாணமாய் சிறைக்கு அழைத்து செல்லப்படுவது, நடக்கும் போது அவன் குறி விரைப்பை இழக்காது அசைவது, குளிந்த தரையில் பாதம் பதிகையில் அவன் உணரும் தனிமை, தனக்கு என்ன நேர்கிறது எனப் புரியாத அவனது திகைப்பு ஆகியவற்றை சொல்லும் ஆரம்ப காட்சி என்னை பல வருடங்களுக்கு முன் மயிர்க்கூச்சிட வைத்தது போல் இப்போதும் செய்தது. நண்பர்களும் இப்பகுதியை ரசித்தார்கள். அச்சமும் வன்மமும் அதிகார இச்சையையும் எப்படி ஒரு சுழலாக மாறி அந்நகரத்தையும் அதன் மன்னர்களையும் ஒரே விதிக்கு ஆட்படுத்தி அலைகழிக்கிறது என பேசும் இக்கதையின் மறுபகுதி இட்டாலோ கால்வினோவின் பாணியில் எழுதப்பட்டது.

”ஆயிரங்கால் மண்டபம்” ஜெயமோகனின் கதைகளில் மிகவும் காட்சிபூர்வமானது. ஆசிரியரின் கருத்து முழக்கம் வெளிப்படாதது. தன் உறவு முறை அக்காவின் திருமணம் அன்று ஆயிரங்கால் மண்டபத்து சிலைகளை வேடிக்கை பார்த்து அவற்றுடன் பேசும் செண்பகக்குழல்வாய் மொழி எனும் சுட்டியான, அசட்டு தைரியமும் கற்பனையும் கொண்ட சிறுமி இக்கதையின் ஒரு மறக்க முடியாத பாத்திரம். கதையை வெகுவாக ரசித்த நண்பர் அருள் தனக்கு மகள் பிறந்தால் செண்பகக்குழல்வாய் மொழி எனப் பெயரிடப் போவதாய் சொன்னார். கதையில் அச்சிறுமி பேசிக் கொண்டிருக்கையில் மண்டபத்தில் உள்ள குதிரை வீரர்களும் கின்னரர்களும் உயிர்பெறுகிறார்கள். அவர்கள் போய் கல்யாணப்பெண்ணை தூக்கிப் போய் விடுவார்கள் என அவள் அஞ்சுகிறாள். பிறகு அவர்கள் தனக்கு பிடிக்காத தன் அத்தைகளை போய் அச்சுறுத்த வேண்டும் என ஆசைப்படுகிறாள். கதையின் இறுதியில் மணப்பெண் கிணற்றில் போய் குதிக்கிறாள் என உணர்த்தப்படுகிறது. அவளுக்கு கடுமையான வயிற்றுவலி என செண்பகக்குழல்வாய் மொழி நினைக்கிறாள். அது வயிற்றுவலியா பிடிக்காத வாழ்க்கை திணிக்கப்படும் போது அப்பெண் உணரும் துக்கமா? அக்குழந்தைக்கும் மணப்பெண்ணுக்குமான உறவு தான் கதையில் ரொம்ப முக்கியம். பெண்ணின் வெளிப்படுத்த முடியாத கசப்பும், அச்சமும் கதையின் மையக்கரு. இந்த உணர்வுகளை எப்படியோ தன் ஆழ்மனதில் அச்சிறுமி அறிந்து கொள்கிறாள். தானும் இப்பெண்ணின் தவிப்பை, அடக்குமுறையை அனுபவிக்கப் போகிறவளே என அவளுக்கு. புரிகிறது ஆயிரங்கால் மண்டபத்து சிலைகள் உறைந்து நெகிழ்ந்து உயிர்கொண்டு, மீண்டும் ஏதோ ஒரு பொறியில் கால்மாட்டின விலங்கைப் போல் நகர முடியாது உறைகின்றன. இது ஒரு குறியீடாய் தத்ரூபமாய் கதையில் உருப்பெறுகிறது. இந்த உறைந்த சிலைகள் கொண்ட ஆயிரங்கால் மண்டபம் இப்பெண்களின் அக உலகம் தான். காற்றின் உறைந்த குதிரைக்கால்கள் அவர்களின் தப்பிக்க முடியாத ஆசைகள் தாம். இதே போன்ற உறைநிலை குறியீடு கொண்ட மற்றொரு கதை “நைனிட்டால்”. அதில் மனம் கசந்து போல் கோடைவாசஸ்தலத்திற்கு செல்லும் திருமண ஜோடி வருவார்கள். ஏரியில் படகில் போவார்கள். ஏரியில் மேல்மட்டம் கடந்து உள்ளே உறைந்து போயுள்ள நீர் பற்றின விவரணைகள் வரும். அது அவர்களின் நெகிழ்ச்சியற்ற மனத்திற்கான குறீயீடாக இருக்கும்.

”ஜகன்மித்யை” ஜெயமோகனுக்கே உரித்த அறிவார்ந்த நக்கலும், கூர்மையான வசனங்களும், நிறைய தகவல்களும், அறிவார்ந்த உரையாடல்களும், உக்கிரமான உணர்ச்சிகரமான மனநிலை சித்தரிப்பும் கொண்ட கதை. இக்கதையை நண்பர்கள் வெகுவாய் ரசித்தார்கள். நண்பர் அருள் ஒவ்வொரு வசனத்துக்கும் அதிர்ந்து சிரித்தது ஒலிநாடாவில் பதிவாகி இருக்கும். கதைவாசிப்பு என்பது கதையை மனதுக்குள் வாசிப்பதில் இருந்து இப்படித் தான் வேறுபடுகிறது. அது ஒரு நிகழ்த்து அனுபவமாகிறது. எப்படி சினிமாவில் சுற்றிலுமுள்ள பார்வையாளர்களின் எதிர்வினை நம் ரசனையனுபவத்தையும் தீர்மானிக்கிறதோ அது போல் சத்தமாய் கூட்டாய் வாசிக்கும் போதும் பிறரது சிரிப்பு, பெருமூச்சு, முனகல்கள் நம் மனநிலையை சட்டென உக்கிரமாக்கி விடுகிறது.

 நீட்சேயின் சாஸ்வத சுழற்சி தத்துவத்தைக் கொண்டு உலகின் எச்சம்பவம் எப்போது நிகழும் என கணிப்பதற்காய் ஒரு புது கோட்பாட்டை உருவாக்கும் ஒரு நம்பூதிரியை பற்றின கதை இது. பொதுவாக கதைகளில் துறைசார்ந்த தகவல்களை சரியாக அளிப்பதற்காய் ஜெயமோகன் நிறைய மெனக்கெடுவார். “ஒன்றுமில்லையில்” என்ன மருத்துவ பிரச்சனை, அறுவை சிகிச்சையில் என்ன பிழை என்றெல்லாம் விவரிப்பார். ”ஜெகன்மித்யையில்” நம்பூதிரியின் கணித சூத்திரங்களைக் கூட நிறையத் தருகிறார். இவை ஒரு வியப்பை ஏற்படுத்தினாலும் கதைக்கு அவசியப்படுவதில்லை. ஜெயமோகன் ஒரு பயில்வானைப் போல் தன் தசைகளை பெருக்கிக் காட்டுவதற்கு மட்டுமே இவை பயன்படுகின்றன. இதைப் படிக்கும் போதே அசோகமித்திரன் இதே கதையை எழுதினால் நம்பூதிரியின் அறிவார்ந்த விவாதங்களை இரண்டே பத்தியில் அழகாய் சுருக்கி இருப்பார் எனத் தோன்றியது. உண்மையில் அவ்வளவு போதும். புத்திசாலியான நம்பூதிரி ஒரு சிந்தனைப்பிழை காரணமாய், மிகையான தன்னம்பிக்கையுடன் பேசுகிறார் என கதை துவக்கத்திலேயே நமக்கு புரிகிறது. இதைக் கடந்து ஒரு தாவல் கதைக்கு தேவைப்பட ஜெயமோகன் சற்று நாடகீயமாய் நம்பூதிரியின் அவலச்சாவுடன் முடித்து விடுகிறார். ஆனாலும் பாத்திர அமைப்பு, வசனங்கள், வித்தியாசமான உலகம் என்ற அடிப்படையில் மிக முக்கியமான கதையே.

Image result for சுந்தர ராமசாமி

இம்மூன்று கதைகளையும் மிக அழகாய் வாசித்த நண்பர் டேவிட் தான் சு.ராவின் “வாழ்வும் வசந்தமும்” கதையையும் வாசித்தார். எங்களை மிக அதிகமாய் சிரிக்க வைத்த கதை இது. தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடித்தமான கதையும் கூட. ஒரு அலுவலகம். அங்குள்ள ஆண்கள். அவ்வழி கடந்து போகும் ஒரு பெண்ணை வேடிக்கை பார்க்கும் சிலர். பிறகு அவர்களின் வாழ்வில் வரும் மாற்றம். இது தான் கதை. ”கோயில் காளையும் உழவு மாடும்” போல வாழ்க்கை பற்றின ஒரு ஒட்டுமொத்தமான தத்துவார்த்த சித்தரிப்பை நுணுக்கமாய் அளிக்கும் சு.ராவின் அரிய கதைகளில் ஒன்று இது. தலைப்பே அழகானது. வாழ்க்கை என்பது காலமாற்றம் போல் உள்ளது. மழைக்காலம் முடிந்து கோடை வந்து பிறகு மீண்டும் பனிக்காலம் போல வாழ்க்கையிலும் ஒவ்வொரு கட்டம் மாற நாமும் அதற்கு ஏற்றபடி நம் நடவடிக்கைகளை நம்பிக்கைகளை ஏற்படுத்துகிறோம். தன்னை ஒரு மன்மதனாய் கருதி வந்த ஒரு ஆண் ஒருநாள் திருமணமாகி சாப்பாட்டு வாளியுடன் அலுவலகத்துக்கு வந்து குமாஸ்தா மாமா எனும் புது அடையாளம் பெற்றவுடன் அவன் பெண்களிடம் நடந்து கொள்ளும் பாணியும் மிக சுலபமாய் மாறுகிறது. இதிலுள்ள பாசாங்கும் அவலமும் முரணும் இக்கதையில் அழகாய் பதிவாகிறது. இது மனிதனின் குற்றமல்ல, வாழ்க்கை எனும் சுழலில் மாட்டிக் கொள்ளும் போது தன் மனநிலையை தீர்மானிக்கும் ஆற்றல் அவனுக்கு இல்லாது ஆகிறது, அவன் வெறும் தோல்பாவையாய் மாறுகிறான் என சு.ரா காட்டுகிறார். இதில் அலுவலக ஊழியர்கள் சாலையில் நடந்து போகும் பெண்ணை ரசிக்கையில் “பார்க்க பார்க்க அவள் அழகின் வட்டி கூடிக் கொண்டே போனது” எனும் வரியை என் நண்பர்கள் புளிப்பு மிட்டாயைப் போல் வாயில் அதக்கி சிலாகித்தார்கள்.

அடுத்த முறை சந்தர்ப்பம் வாய்க்கும் போது மௌனியை வாசிக்கலாம் என இருக்கிறோம்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...