முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ் திரைப்படப் பாடல்களில் கவித்துவம் (3)



 பெண் இல்லாத ஊரிலே அடி ஆண் பூக்கேட்பதில்லை
பெண் இல்லாத ஊரிலே கொடிதான் பூப்பூப்பதில்லை
உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூப்பூத்தது
இது கம்பன் பாடாத சிந்தனை உந்தன் காதோடு யார் சொன்னது?
வைரமுத்துவின் “புது வெள்ளை மழை” என ஆரம்பிக்கும் ரோஜாப் பட பாடலில் வரும் பத்தி இது. பூ மெல்ல மெல்ல காதலின், இச்சையின் உருவகமாய் ஆரம்பித்து மொத்த பெண்ணுடலாய் சட்டென உருவெடுக்கும் ஆச்சரியத்தை இவ்வரிகளில் காணலாம்.

பூ தொடர்ந்து கவிதையில் பாடு பொருள் ஆவதற்கு அதன் மிருதுத்தன்மையும், வாசமும் மட்டுமல்ல காரணம், அதன் வடிவமும் தான். பூ குவிந்து விரிந்த வடிவிலானது. அது பனித்துளிகளையும் மழைத்துளிகளையும் தன்னுள் வாங்கி ஏந்தி குலுங்குவது. உள்வாங்கி பூரிக்கும் அதன் தன்மை நமக்கு பெண்ணின் அல்குலை நினைவுபடுத்துகிறது. அதனால் தான் பூ மிக மிக செறிவான ஒரு காமக் குறியீடாக இருக்கிறது.
தாமரையின் இவ்வரிகளைப் பாருங்கள்:
நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை (வாரணம் ஆயிரம்)
உமாதேவியின் இவ்வரிகளை கவனியுங்கள்:
தாபப்பூவும் நான் தானே
பூவின் தாகம் நீ தானே (மெட்ராஸ்)
தாமரையின் பூ சித்தரிப்பில் ஒரு விநோதம் அது ஆண் பாடுவதாய் உள்ளது தான். ஆனால் நீரில் மூழ்கும் தாமரை எனும் குறிப்பு நிறைந்து மெல்ல கசியும் ஒரு பெண் குறியை தான் அது நம் மனதுக்கு கொண்டு வருகிறது. “பூவின் தாகம் நீ” என காதலனை பெண் அழைக்கும் வரி கூட ஒரு மெல்லிய காம ஏக்கம் தொனிப்பது தான்.
இனி வைரமுத்துவின் பாடலுக்கு திரும்புவோம். அவன் பெண்கள் இல்லாத ஊரில் பூவுக்கு தேவையில்லை என்கிறான். அவள் அவ்வூரில் பூவே பூப்பதில்லை என்கிறாள். இவ்வரியில் பூத்தல் பூப்படைதலாக, இச்சை நிறைவேறும் போது பெண் உடல் கொள்ளும் பூரிப்பாக மாறுகிறது. அடுத்த வரி தான் முக்கியம்.
உன் புடவை முந்தானை சாய்ந்ததில்/
 இந்த பூமி/
 பூப்பூத்தது
அப்பெண் எதேச்சையாய் தன் மாராப்பை நழுவ விட அவளது அப்போது மார்புகள் புலப்பட, அதைக் கண்ட கிளர்ச்சியில் பூரிப்பில் தூண்டுதலில் மொத்த பூமியும் பூவாக மலர்ந்ததாய் கூறுகிறார். அந்த பூக்களாய் பூரித்த பூமி என்பது அந்த ஆணின் மனம் தான். முழுக்க முழுக்க பூக்களால் நிரம்பிய பூமி உருளையை நினைத்துப் பாருங்கள். அது மயிர்க்கூச்செறிந்த மனித உடலை நினைவுபடுத்துகிறதா? கிளர்ச்சியில் உடல் முழுக்க மயிர்க்கூச்செறிந்த ஆணைப் போல் பூமி மாறுவதாய் கூட இவ்வரிகளை புரிந்து கொள்ளலாம். படிக்க படிக்க கேட்க கேட்க மிகுந்த மன எழுச்சி தருகிற வரிகள் இவை.
அதே பாடலில் வரும் இவ்வரிகள் பெண்ணுடல் பற்றி மற்றொரு புரிதலைத் தருகின்றன. பெண்ணுடல் கலவியின் போது மெல்ல மெல்லத் தான் சூடேறும். ஆனால் உச்சம் அடையும் நொடியில் இருந்து அது நீண்ட நேரம் இச்சையை இழக்காது சாம்பலுக்குள் மறைந்த கனல்துண்டைப் போல் இருக்கும். தொடர்ந்த தழுவலையும் தீண்டலையும் முத்தங்களையும் அன்பையும் ஆதரவையும் பெண்ணுடல் கோரியபடி இருக்கும். ஆண் தன் உச்சத்தை விரைவில் எட்டி விரைவில் இழந்த பின் அவளை விட்டு நீங்க எத்தனிப்பான். அப்போது அவள் எவ்வாறு வேதனைப்படுவாள் என்பதை இவ்வரிகள் காட்டுகின்றன.
நீ அணைக்கின்ற வேளையில் உயிர்ப் பூ திடுக்கென்று மலரும்
நீ வெடுக்கென்று ஒடினால் உயிர்ப் பூ சருகாக உலரும்
நன்றி: www.inmmai.com 
                                                         (தொடரும்)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...