முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ் திரைப்படப் பாடல்களில் கவித்துவம் (3)



 பெண் இல்லாத ஊரிலே அடி ஆண் பூக்கேட்பதில்லை
பெண் இல்லாத ஊரிலே கொடிதான் பூப்பூப்பதில்லை
உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூப்பூத்தது
இது கம்பன் பாடாத சிந்தனை உந்தன் காதோடு யார் சொன்னது?
வைரமுத்துவின் “புது வெள்ளை மழை” என ஆரம்பிக்கும் ரோஜாப் பட பாடலில் வரும் பத்தி இது. பூ மெல்ல மெல்ல காதலின், இச்சையின் உருவகமாய் ஆரம்பித்து மொத்த பெண்ணுடலாய் சட்டென உருவெடுக்கும் ஆச்சரியத்தை இவ்வரிகளில் காணலாம்.

பூ தொடர்ந்து கவிதையில் பாடு பொருள் ஆவதற்கு அதன் மிருதுத்தன்மையும், வாசமும் மட்டுமல்ல காரணம், அதன் வடிவமும் தான். பூ குவிந்து விரிந்த வடிவிலானது. அது பனித்துளிகளையும் மழைத்துளிகளையும் தன்னுள் வாங்கி ஏந்தி குலுங்குவது. உள்வாங்கி பூரிக்கும் அதன் தன்மை நமக்கு பெண்ணின் அல்குலை நினைவுபடுத்துகிறது. அதனால் தான் பூ மிக மிக செறிவான ஒரு காமக் குறியீடாக இருக்கிறது.
தாமரையின் இவ்வரிகளைப் பாருங்கள்:
நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை (வாரணம் ஆயிரம்)
உமாதேவியின் இவ்வரிகளை கவனியுங்கள்:
தாபப்பூவும் நான் தானே
பூவின் தாகம் நீ தானே (மெட்ராஸ்)
தாமரையின் பூ சித்தரிப்பில் ஒரு விநோதம் அது ஆண் பாடுவதாய் உள்ளது தான். ஆனால் நீரில் மூழ்கும் தாமரை எனும் குறிப்பு நிறைந்து மெல்ல கசியும் ஒரு பெண் குறியை தான் அது நம் மனதுக்கு கொண்டு வருகிறது. “பூவின் தாகம் நீ” என காதலனை பெண் அழைக்கும் வரி கூட ஒரு மெல்லிய காம ஏக்கம் தொனிப்பது தான்.
இனி வைரமுத்துவின் பாடலுக்கு திரும்புவோம். அவன் பெண்கள் இல்லாத ஊரில் பூவுக்கு தேவையில்லை என்கிறான். அவள் அவ்வூரில் பூவே பூப்பதில்லை என்கிறாள். இவ்வரியில் பூத்தல் பூப்படைதலாக, இச்சை நிறைவேறும் போது பெண் உடல் கொள்ளும் பூரிப்பாக மாறுகிறது. அடுத்த வரி தான் முக்கியம்.
உன் புடவை முந்தானை சாய்ந்ததில்/
 இந்த பூமி/
 பூப்பூத்தது
அப்பெண் எதேச்சையாய் தன் மாராப்பை நழுவ விட அவளது அப்போது மார்புகள் புலப்பட, அதைக் கண்ட கிளர்ச்சியில் பூரிப்பில் தூண்டுதலில் மொத்த பூமியும் பூவாக மலர்ந்ததாய் கூறுகிறார். அந்த பூக்களாய் பூரித்த பூமி என்பது அந்த ஆணின் மனம் தான். முழுக்க முழுக்க பூக்களால் நிரம்பிய பூமி உருளையை நினைத்துப் பாருங்கள். அது மயிர்க்கூச்செறிந்த மனித உடலை நினைவுபடுத்துகிறதா? கிளர்ச்சியில் உடல் முழுக்க மயிர்க்கூச்செறிந்த ஆணைப் போல் பூமி மாறுவதாய் கூட இவ்வரிகளை புரிந்து கொள்ளலாம். படிக்க படிக்க கேட்க கேட்க மிகுந்த மன எழுச்சி தருகிற வரிகள் இவை.
அதே பாடலில் வரும் இவ்வரிகள் பெண்ணுடல் பற்றி மற்றொரு புரிதலைத் தருகின்றன. பெண்ணுடல் கலவியின் போது மெல்ல மெல்லத் தான் சூடேறும். ஆனால் உச்சம் அடையும் நொடியில் இருந்து அது நீண்ட நேரம் இச்சையை இழக்காது சாம்பலுக்குள் மறைந்த கனல்துண்டைப் போல் இருக்கும். தொடர்ந்த தழுவலையும் தீண்டலையும் முத்தங்களையும் அன்பையும் ஆதரவையும் பெண்ணுடல் கோரியபடி இருக்கும். ஆண் தன் உச்சத்தை விரைவில் எட்டி விரைவில் இழந்த பின் அவளை விட்டு நீங்க எத்தனிப்பான். அப்போது அவள் எவ்வாறு வேதனைப்படுவாள் என்பதை இவ்வரிகள் காட்டுகின்றன.
நீ அணைக்கின்ற வேளையில் உயிர்ப் பூ திடுக்கென்று மலரும்
நீ வெடுக்கென்று ஒடினால் உயிர்ப் பூ சருகாக உலரும்
நன்றி: www.inmmai.com 
                                                         (தொடரும்)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.