Skip to main content

”கால்களும்” எம்.பில் பட்ட ஆய்வும்



சுயதம்பட்டத்துக்காக அல்ல. சும்மா ஒரு தகவலுக்காய் சொல்கிறேன். என்னுடைய “கால்கள்” நாவலை நாகர்கோயிலில் உள்ள மூன்று கல்லூரிகளில் (ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரி, முஸ்லீம் ஆர்ட்ஸ் கல்லூரி மற்றும் லஷ்மிபுரம் கலைக்கல்லூரி) மூவர் எம்.பில் படிப்பு ஆய்வுக்காய் எடுத்துக் கொண்டுள்ளனர். மூவரும் பெண்கள். மூவருக்கும் கிட்டத்தட்ட ஒரே குரல், ஒரே வட்டார வழக்கு தொனி. போனில் மூவரும் என்னிடம் அடுத்தடுத்து பேசிய போது ஒருவேளை நம்மிடம் விளையாடுவதற்காய் யாரோ ஒரே ஆள் பல்வேறு பெயர்களில் பேசுகிறாரோ என எனக்கு சந்தேகம் தோன்றியது. ஆனால் வெவ்வேறு பெண்கள் தாம். 


ஊரில் ஆய்வு என்றால் எழுத்தாளனை பேட்டி எடுப்பது ஒரு வழக்கம். சென்னை பக்கமுள்ள கல்லூரிகளில் அந்த வழக்கமில்லை. மூவரும் என்னிடம் சில கேள்விகளைக் கேட்டார்கள். பெரும்பாலும் ஒரே மாதிரியான கேள்விகள்.
“ஏன் நாவலை எழுதினீர்கள்?”, “விருது கிடைத்ததும் என்ன மாதிரி உணர்ந்தீர்கள்?”, “உங்கள் நாவல் சமூகத்தில் எப்படியான மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது?”
வழக்கம் போல் நான் அவர்களுக்கு திருப்தியான பதில் அளிக்கவில்லை. விருது கிடைத்தது என்னை நிம்மதியற்றவனாக ஆக்கியது என்ற போது ஒரு பெண் இதென்ன அபத்தம் என்கிற மாதிரி எதிர்வினை செய்தார். நான் அவருக்கு விளக்கினேன். ஒரு எழுத்தாளனுக்கு அவன் படைப்பு மூலம் கவனம் கிடைப்பதே நல்லது. படைப்பு மூலம் மட்டுமே அவனை பிறர் அறிவது ஆரோக்கியமானது. வேறு எந்த வழியில் வருகிற வெளிச்சமும் செயற்கையானது, அது அவனுக்கு மகிழ்ச்சி அளிக்காது என்றேன்.
மூவரில் லஷ்மிபுரம் கல்லூரி மாணவி நாவலை அங்குலம் அங்குலமாய் வாசித்திருந்தார். நாவலில் உள்ள சில தகவல் பிழைகளை சுட்டிக் காட்டினார். பிரதான பாத்திரமான மது ஒரு கல்லூரி மாணவி. வகுப்பில் அவள் முதலாவதாய் வருவாள் என ஓரிடத்தில் வரும். பிறகு சண்முகம் எனும் ஒரு பாத்திரத்தை ஒரே ஒரு வரியில் குறிப்பிடுவேன். அப்போது அங்கு அவன் தான் வகுப்பில் முதலாவதாய் வரும் மாணவன் என்பேன். அதெப்படி இரண்டு பேர் முதல் மதிப்பெண் வாங்க முடியும் எனக் கேட்டார். உண்மையில் இந்த மதுவும் சண்முகமும் ஒரே ஆள் தான். அதாவது நான் தான் அது. என்னுடைய இரண்டு பக்கங்கள் இருவரும். அதனால் ரெண்டு பேர் பற்றியும் எழுதும் போது என்னையறியாமல் ஒரே மாதிரி வர்ணித்து விட்டேன். இதை இவர் சரியாக கண்டுபிடித்து விட்டார். நாவலில் வருகிற பல உப பாத்திரங்கள் ஊரில் உள்ள நிஜ மனிதர்கள். எழுதும் போது சரளத்துக்காய் நிஜ பெயர்களை பயன்படுத்தினேன். ஆனால் பின்னர் மாற்றி விட்டேன். அப்போதும் ஒரே ஒருவர் பெயரை மாற்ற மறந்து விட்டேன். அதையும் இவர் கண்டுபிடித்து விட்டார். நான் அவரிடம் அப்போது நாவலை கச்சிதமாய் எடிட் செய்ய அவகாசம் கிடைக்கவில்லை என்றேன். “ரசிகன்” நாவலை எட்டு முறையாவது படித்து திருத்தினேன். திருத்துவதில் இமையமும் உதவினார். அந்த சந்தர்ப்பம் “கால்களில்” அமையவில்லை. மேலும் ’உலக பிரசித்தமான’ பொன்னியின் செல்வனில் இல்லாத பிழையா? அதில் ஓரிடத்தில் ஒரு குகைக்குள் சிலர் தீவட்டியை ஏந்திக் கொண்டு முன்னே செல்வார்கள். ஆனால் பின்னால் வந்து கதைசொல்லுகிற ஆளுக்கு தீவட்டி வெளிச்சம் பட சாத்தியமில்லாத இருட்டான பகுதியில் நடப்பதெல்லாம் தெரியும். சுந்தரராமசாமியின் “புளிய மரத்தின் கதை” நாவலை ஆங்கிலத்தில் மொழியாக்கி ஒரு பிரசித்தமான பதிப்பகம் மூலம் வெளியிட்டார்கள். அதில் கோயில் கொடையை umbrella என அபத்தமாய் மொழியாக்கி இருந்தார்கள். இமையத்தின் “பெத்தவன்” நாவலை ஆங்கிலத்தில் மொழியாக்கி ஆக்ஸ்பர்ட் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறார்கள். அதில் உள்ள பிழைகளைப் பார்த்தால் சிரிப்பு வரும். பொம்பளைங்க என்பதை girls என மொழியாக்கி இருப்பார். பம்புசெட்டை garage என போட்டிருப்பார். இப்படி மாதம் லட்சங்களில் சம்பளம் வாங்கும் எடிட்டர்கள் கொண்ட பெரும்பதிப்பகங்களே பிழைகளை செய்யும் போது தமிழில் ஒரு நாவலில் சில பிழைகள் வருவது தவிர்க்க இயலாதது தான். ஏனென்றால் இங்கு காப்பி எடிட்டர் என்று ஒருவர் நாவலில் வேலை செய்ய இருப்பதில்லை. போன முறை உயிர்மையின் சில நாவல்களை இமையத்தின் உதவியுடன் செம்மைப்படுத்தினார்கள். அது ஒரு நல்ல துவக்கம்.
அந்த மாணவி என்னிடம் என் நாவலில் எத்தனை ஊனமுற்றவர்கள் வருகிறார்கள் எனக் கேட்டார். நான் ஒரு நிமிடம் குழம்பிப் போனேன். இரண்டு பேர் என்றேன். அவர் இல்லை முப்பத்தைந்துக்கு மேல் ஊனமுற்றவர்கள் வருகிறார்கள் என்றார். என்னால் நம்ப இயலவில்லை. அவர் தான் கராறாய் குறிப்பெடுத்து உறுதிப்படுத்தியதாய் சொன்னார். அவரிடம் பேச ஆரம்பித்து கொஞ்ச நேரத்தில் எனக்கு பதற்றமாகி விட்டது. முப்பத்தைந்து ஊனமுற்றவர்கள் இருந்தால் என் நாவல் எப்படி இருக்கும் என்றே என்னால் கற்பனை பண்ண முடியவில்லை. ஆனால் அவர் சின்ன பாத்திரங்களின் சில எளிய உடல் குறைபாடுகளை அவ்வாறு மொத்தமாய் குறிப்பிடுகிறார் என ஊகித்துக் கொண்டேன். எப்படியோ நாவலை மிகவும் கவனித்து படித்திருக்கிறாரே என மகிழ்ச்சியாய் இருந்தது. ”கால்கள்” நாவலில் ஒரு பரீட்சை வைத்தால் அவர் ஜெயித்து விடுவார். நான் தோற்று விடுவேன்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...