முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மிஷ்கினின் மன உலகம்



மிஷ்கினுடன் தனிப்பட்ட முறையில் பேசுகையில் மீடியாவில் உள்ள பிம்பத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்ட மனிதர் என்பதை கவனித்தேன். முதிர்ச்சியானவர். ஆழமான பார்வை உள்ளவர். மிக மிக குறைவாய் பேசுகிறார். நிறைய கவனிக்க விரும்புகிறார். சினிமாவை கோட்பாட்டு ரீதியாய் விளக்குவதில் அவருக்கு நம்பிக்கை இல்லை. எந்த ஒரு படைப்பையும் பார்க்கும் போது அல்லது வாசிக்கும் போது அதனை உள்வாங்கி தன் கற்பனை மூலம் உருமாற்றி மற்றொன்றாக்க நினைக்கிறார். நம்மூர் புத்திஜீவிகள் சிலர் இதை திருட்டு என தவறாய் புரிந்து கொள்கிறார்கள்.
அதனால் அவர் பல புத்தகங்களை முதல் சில அத்தியாயங்கள் படிப்பதோடு நிறுத்திக் கொள்கிறார். அவருக்கு அதில் கிடைக்கும் ஐடியாக்கள், மன ஊக்கம், நிறங்கள், வாசனைகள் போதும். சினிமாவையும் அப்படித்தான் பார்க்கிறார்.  
ஏதாவது ஒரு படத்தின் காட்சியை கவனித்து தன் படைப்புலகின் பகுதியாக்கும் ஒரு ஆவல், குழந்தைத்தனமான வேட்கை அவரிடம் உள்ளது. ஒரு வாசகராக, பார்வையாளராக இலக்கியத்தையோ சினிமாவையோ அவர் பார்ப்பதில்லை. படைப்பாளியாக தன் கதையை உருவாக்கும் முனைப்புடனே பார்க்கிறார். தர்க்கரீதியாய் சிந்திப்பதற்கு முற்றிலும் எதிரானவர். உணர்வுரீதியாய் தான் கவனித்தவற்றை ஆழமாய் நம்புகிறார். அதுவே அவர் உலகம்.

உணர்வுரீதியாய் அவரிடம் தாக்கம் செலுத்திய ஒரு ஷாட் அல்லது காட்சி படிமம் அல்லது ஒரு வரி அவருடையதே என நம்பி விடுவார். இதில் போலித்தனம் இல்லை. அவரது மன அமைப்பு அது. ஒருமுறை மட்டுமே அவரிடம் உரையாட வாய்ப்பு கிடைத்தது. அவரது படங்களில் நவீன நாடகங்களின் தாக்கம் உள்ளதென சொன்னேன். அவர் அதை மறுத்து சினிமாவில் அப்படியான பார்வையே தவறு என என்னிடம் விளக்கினார். எதையொன்றும் தனித்தனியாய் பிரித்து பார்க்கக் கூடாது என நினைக்கிறார். வகுக்க முடியாத ஒரு ஒட்டுமொத்த உண்மை என வாழ்க்கையையும் படைப்புலகையும் சினிமாவையும் பார்க்கிறார். அன்று முழுக்க இந்த பார்வையை ஒட்டி அவரிடம் மோதிக் கொண்டு இருந்தேன்.

சில படைப்பாளிகளிடம் மன அலைகழிப்பையும் உக்கிரத்தையும் தன்முனைப்பையும் மிகுதியாக பார்த்திருக்கிறேன். ஆனால் மிஷ்கினிடம் ஒரு புரிதலையும் முதிர்ச்சியின் மென்மையையும் கண்டேன்.

அதே போல புத்தகம் வாசிப்பவர்கள் மீது அவர் கொள்ளும் வியப்பும் மரியாதையும் அச்சரியமானது. நான் எழுத்தாளர்களிடம் கூட வெறும் அகந்தையை தான் பார்த்திருக்கிறேன். மிஷ்கினின் தர்க்கத்துக்கு எதிரான பார்வை அவரது ஜென் ஆர்வத்தினால் தோன்றியதாக இருக்க வேண்டும். ஏனென்றால் தன் பார்வையை வலியுறுத்த அவர் வாதிடுவதில்லை.ஒரு அனுபவத்தை முன்வைக்கிறார். அவ்வளவே!

அறைமுழுக்க புத்தகங்களை அடுக்கி வைத்திருந்தார். புத்தகங்களோடு இருப்பதும் அவற்றை பார்ப்பதும் தொடுவதும் கூட அவருக்கும் போதும். ஏற்கனவே நான் சொன்னது போல் அவர் ஒரு வாசகராக புத்தக உலகினுள் நுழைவதில்லை. புத்தகங்கள் அவருக்கு அவர் படங்களில் வரும் prop போல. ஏனென்றால் ஜென்னும் நம்மை வாசிப்பதை குறைத்து உணர்வு ரீதியாய் உலககை கவனிக்கவே கேட்கிறது.

வரும் சனிக்கிழமை மாலை கோகலே ஹாலில் அவர் சினிமா பற்றி பேச இருக்கிறார். அது பொதுவாக சினிமா பற்றியதாக அல்லாமல், தன் கலைப்பார்வை மற்றும் படைப்புலகத்தின் உருவாக்கத்திற்கு உலக சினிமாவை எப்படி பயன்பட்டது என்பதாக இருக்கும் என ஊகிக்கிறேன். முடிவில் நாம் சினிமாவை விட அவரைப் பற்றியே அதிகம் தெரிந்து கொள்வோம். அதுவும் ஒரு நல்ல பாடம் தான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...