முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மதுவிலக்கு: சில கேள்விகளும் தீர்வுகளும்



(ஆகஸ்டு மாத “வெற்றிவேந்தன்” பத்திரிகையில் வெளியான என் கட்டுரை)
தி.மு.க ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு கொண்டு வரப்படும் என கலைஞர் அறிவித்தார். அதை ஒட்டி காந்தியவாதி சசிபெருமாள் செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தும் போது மரணமடைய தமிழகம் எங்கும் மதுவிலக்கை கோரி பலவலான போராட்டங்கள் நடந்தன.
இந்நேரத்தில் மதுவிலக்கை பற்றி சில கேள்விகள் எழுகின்றன.

1)   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டால் அதில் வேலை செய்யும் ஆயிரக்கணக்கானோர் கதி என்ன?
2)   இதிலிருந்து வரும் கோடிக்கணக்கான வரி எனும் வருமானத்திற்கு மாற்று என்ன? அதற்கான திமுகவின் திட்டம் என்ன?
3)   பூரண மதுவிலக்கா அல்லது கேரளாவில் உள்ளது போல் நட்சத்திர ஓட்டல் பார்களில் மட்டும் மது கிடைக்கும் நிலை வருமா? அது நியாயமாக இருக்குமா?
4)   பூரண மதுவிலக்கு வந்தால் இதுவரை தினமும் குடித்து வந்த மக்கள் பொழுதுபோக்க வேறு என்ன செய்வார்கள்?
5)    அடிமையானவர்களுக்கு இலவச சிகிச்சையளிக்கும் மையங்களை அரசு திறக்குமா?
மேற்சொன்ன பிரச்சனைகளில் வரி இழப்பு தான் மிகப்பெரும் சிக்கலாக மாறும். தொழிற்சாலைகள், விவசாய உற்பத்தி பெருக்கம் என மெல்ல மெல்ல மாற்று வருமான வழிகளை உருவாக்காமல் திடுதிப்பென மதுவிலக்கு கொண்டு வருவது நடைமுறைக்கு உகந்ததா எனக்கேட்டால் இல்லை. பொதுவாக இது குறித்து சிந்தனையாளர்களும் சமூக ஆர்வலர்களும் பேசும் போது டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையும் அது செயல்படும் நேரத்தையும் குறைத்தால் போதும் என்கிறார்கள். அதுவே சிக்கலற்ற ஒரு மையப்பாதையாய் இருக்கும்.
மதுப்பழக்கம் ஒரு கலாச்சார பிரச்சனை என்பதே என் நம்பிக்கை. வேறெந்த காலத்திலும் விட இப்போது மதுப்பழக்கம் அதிகரித்துள்ளதற்கு ஒரு காரணம் மட்டுமே மலிந்துள்ள டாஸ்மாக் கடைகள். அதாவது accessibility. மற்றொரு முக்கிய காரணம் மக்களின் கடுமையான அக நெருக்கடியும் வாழ்விலுள்ள அலுப்பும். முன்பு மக்களுக்கு நண்பர்கள் மற்றும் சொந்தபந்தங்களுடன் புழங்கவும் கொண்டாடவும் விழாக்கள் நிறைய இருந்தன. வாழ்க்கை இன்னும் நிதானமாய் இருந்தது. இன்று நகர வாழ்க்கையே அனைவரின் கனவாய் மாறி உள்ளது. நகரத்தில் மக்கள் பரஸ்பரம் சந்திக்கவும் கொண்டாடவுமான ஒரே இடம் மதுக்கடை தான். இது ஒரு துரதிஷ்டமான உண்மை. ஆக மதுப்பழக்கத்தை ஒழிக்க முதலில் வேறு நிறைய சமூகமாக்கல் சாத்தியங்களை (விழாக்கள், மக்களூக்கான கலை நிகழ்ச்சிகள்) அரசும், சமூக மத அமைப்புகளும் நடத்த வேண்டும். அங்கும் மக்கள் குடிப்பார்கள். ஆனால் குடியுடன் வேறு மாற்றுகளும் உருவாகும்.
மனிதனுக்கு தன்னை மறக்க ஒரு சந்தர்ப்பம் வேண்டும். மது அதற்கான ஒரு வழி. அதனாலே மனித இனம் தோன்றியதில் இருந்தே மதுவை பயன்படுத்துகிறது. சொல்லப் போனால் மிதமான மதுப்பழக்கம் மனிதனின் ஆரோக்கியத்துக்கும் மன நிம்மதிக்கும் நல்லது தான். எப்போது அது மிதமிஞ்சுகிறது என நாம் யோசிக்க வேண்டும்.
மனிதர்களில் இருவகை. 1) சமூக ஒழுங்குக்கு கட்டுப்படுகிறவர்கள் 2) கட்டுப்படாதவர்கள். இது பிறக்கும் போது நம் இயல்புப்படி உருவாகிற வகைமை. சுயமாய் செயல்படுகிற இரண்டாம் வகையினருக்கு சீக்கிரமே எதிலும் அலுப்பு தோன்றும். பிறழ்வுகளில் ஆர்வம் ஏற்படும். ஆபத்தான விசயங்களில் இறங்குவார்கள். இவர்கள் கலை, விளையாட்டு, சாகசங்கள் ஆகியவற்றில் ஜொலிக்க முடியும்.
 முதல் வகையான அடிபணிகிறவர்கள் பள்ளி, கல்லூரிகளிலும், பின்னர் அலுவலகங்களிலும் குடும்பத்திலும் யாருக்கும் தொந்தரவில்லாமல் இருப்பார்கள். ஒருவித மந்தை மனப்பான்மை கொண்டவர்கள் இவர்கள். பிரச்சனை வந்து விட்டால் கண்ணை மூடி சமரசம் செய்வார்கள். எந்த ஆபத்தையும் தவிர்ப்பார்கள். இது கராறான வகைமை அல்ல. மக்கள் இரண்டு வகைமையிலும் கலந்தும் இருப்பார்கள். ஆனால் பொதுவாய் இரண்டாம் வகை மக்களே மதுவுக்கு அடிமையாக வாய்ப்பு அதிகம்.
இரண்டாம் வகையினரை சிறு வயதில் இருந்தே கலை, வாசிப்பு, இசை, விளையாட்டு என ஈடுபடுத்த வேண்டும். வளர்ந்தவர்களுக்கும் அது தேவையே. நம்மளவு பண்பாட்டு வறட்சி மிக்க மற்றொரு சமூகம் இருக்க முடியாது. இங்கு சினிமாவையும் குடியையும் தவிர வேறெந்த பொழுது போக்கும் இல்லை. இப்போது கூடுதலாய் பணம் சம்பாதித்து அதை அர்த்தமற்று செலவு செய்வதும் மற்றொரு பொழுதுபோக்காய் மாறி உள்ளது. இது அதிருப்தி தரும் போது மதுவை நாடுகிறோம். மாற்று பொழுதுபோக்குகளையும் பண்பாட்டு களங்களையும் தோற்றுவிப்பது மதுப்பழக்கத்துக்கு ஒரு தீர்வு. அதே போல உடல் சார்ந்த நடவடிக்கைகள் மனிதனின் உள்ளார்ந்த எரிச்சலுக்கு நல்ல வடிகாலாய் இருக்கும். நம் நகரத்தில் குழந்தைகள் சைக்கிள் ஓட்டக் கூட இடம் இல்லை. குழந்தைகள் விளையாட பெரும்பாலான பள்ளிக்கூடங்களில் மைதானம் இல்லை. தினமும் ஒரு மணிநேரமாவது விளையாடும் வாய்ப்பு பெரும்பாலானோருக்கு கிடைத்தால், அதில் ஈடுபாடு தோன்றினால், வாழ்வில் மகிழ்ச்சி அதிகமாகும். உடல் களைப்பு மதுவை நாட செய்யாது. ஆனால் மனக்களைப்பு மதுவின் மீது ஆர்வத்தை அதிகமாக்கும்.
கலை பற்றி நான் சொன்னதற்கு மற்றொரு சுவாரஸ்யமான பக்கமும் உண்டு. பொதுவாக கலைஞர்களே மதுவையும் போதை மருந்துகளையும் அதிகம் பயன்படுத்துகிறவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால் இது கலையில் வெகுதூரம் பயணிப்பவர்களின் ஆபத்து. அன்றாட வாழ்வில் எளிய கலை ஈடுபாடு கொள்வபர்கள் அதனால் பயனே அதிகமடைவார்கள்.
இது என் தனிப்பட்ட அனுபவமும் கூட. நான் இரண்டாம் வகையான ஆள். என் ஆளுமை பிறழ்வினால் ஈர்க்கப்படும் ஒன்று. நான் குடிக்க ஆரம்பித்து 13 வருடங்கள் இருக்கும். இன்னும் எனக்கு மதுவில் பிடிப்பு வரவில்லை. குடித்தால் களைப்பு தோன்றி எழுத முடியாமல் போகும் என பல நாட்கள் தவிர்த்திருக்கிறேன். மேலும் மதுவில் கிடைப்பதை விட பல மடங்கு அதிகமான போதை எனக்கு எழுத்தில் கிடைக்கிறது. எழுதும் போது நேரத்தையும் இடத்தையும் மறந்து பல மணிநேரங்கள் இருக்க முடிகிறது. முழுபோதையில் தள்ளாடும் போது கூட காலம் இடம் பற்றின பிரக்ஞை எனக்கு இருந்து கொண்டே இருக்கும். அதனால் மது எனக்கு இரண்டாம் பட்சம் தான். ஒருவேளை எழுத்தில் சுகம் இல்லாவிட்டால் நான் நிச்சயம் குடித்து அழிந்திருப்பேன். எழுத்தும், அதை ஒத்த பிற கலைகளும் என்னைப் போல் மேலும் பலரை காப்பாற்றக் கூடும்.
பரபரப்பான, நிறைவான வாழ்வுக்கும் மதுப்பழக்கத்துக்கும் ஒரு சம்மந்தம் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாய் மனுஷ்யபுத்திரன் குடிப்பதில்லை. அவர் என்னிடம் சொன்ன காரணம் இது. முன்பு அவர் மாலையில் ஓய்வாக இருப்பார். அவரை நாடி நண்பர்கள் வருவார்கள். சேர்ந்து குடிப்பார்கள். ஆனால் கடந்த சில ஆண்டுகளாய் நிறைய டிவியில் பேசுகிறார், பயணிக்கிறார், எழுதுகிறார். அது போக பதிப்பகமும் நடத்துகிறார். இதனால், ஒன்று, அவருக்கு குடிக்க நேரம் இருப்பதில்லை. இன்னொன்று குடித்தால் இந்த வேலைகள் முடங்கிப் போகும் என்பதாலும் குடிப்பதில்லை என்றார். நான் சென்னை கிறுத்துவக் கல்லூரியில் படிக்கையில் என்னுடன் விடுதியில் தங்கியிருந்த மாணவர்களில் உயர்வர்க்கத்தை சேர்ந்த பணக்கார மாணவர்களில் மதுவுக்கு மட்டுமல்ல கஞ்சாவுக்கும் அடிமையான பலர் இருந்தார்கள். மிக அதிகமாய் கஞ்சா பயன்படுத்துபவர்களுக்கு எங்கள் விடுதியில் வருட இறுதியில் Heavenly Selayurian என விருது வேறு வழங்குவார்கள். ஆனால் இவர்கள் படித்து முடித்ததும் பெற்றோர்கள் பெரிய நிறுவனங்களில் வேலை வாங்கிக் கொடுப்பார்கள். அல்லது அப்பாவின் எஸ்டேட் அல்லது நிறுவனங்களை அவர்களே நடத்துவார்கள். அப்போது போதை பழக்கத்தை பெருமளவு குறைத்துக் கொண்டு சாமான்ய வாழ்க்கைக்கு மீள்வார்கள். என்னுடன் படித்த இத்தகைய மாணவர்கள் பலரும் இன்றும் என்னுடன் தொடர்பில் இருப்பதால் இதை உறுதியாய் சொல்ல முடிகிறது. ஆனால் இவர்களைப் பார்த்து இப்பழக்கத்தை கற்றுக் கொண்ட மத்திய வர்க்க மாணவர்களோ இன்றும் மீளாமல் போதையில் மூழ்கி இருக்கிறார்கள். ஆக வாழ்க்கையில் நாம் அடையும் வெற்றி, பொருளாதார நிறைவு, சமூக அங்கீகாரம், திருப்தி ஆகியவற்றுக்கும் மதுப்பழக்கத்துக்கும் ஒரு முக்கிய தொடர்பு உள்ளது.
இன்றைய நவீன வாழ்வு தொடர்ந்து மத்திய வர்க்கத்தை நெருக்கடிக்கு உள்ளாக்குகிறது. எல்லாரும் எதிர்காலம் பற்றின பதற்றத்துடனே வாழ நேர்கிறது. இந்த எதிர்மறை எண்ணங்களுக்கு எல்லாம் வடிகாலாய் டாஸ்மாக் அமைகிறது. மத நிறுவனங்கள் மக்களை கொள்ளையடிக்க முயலாமல் அவர்களது மனநலன் மீது உண்மையான அக்கறை கொள்ளும் பட்சத்தில் நெருக்கடியில் தவிக்கும் இம்மனிதர்களை காப்பாற்ற இயலும். மதுவும் (அபினும்) மதமும் இரு போதைகள் என்றார் மார்க்ஸ். ஒரு போதைக்கு தீர்வு என்றும் மற்றொரு போதை தான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...