Skip to main content

அற்பங்களின் உலகம்



சின்ன வயதில் இருந்து நான் நடக்கும் போது அடிக்கடி விழுந்து கொண்டிருப்பேன். வீட்டுக்குள் விழுந்து காயம் ஏற்படுவதை தவிர்க்க நான் வீட்டுக்குள் சக்கர நாற்காலி பயன்படுத்த துவங்கினேன். வெளியில் நடக்கையில் என் காலில் அணிந்திருக்கும் காலிப்பரின் லாக் சரியாக பொருந்தாமல் விழுந்து விடுவேன். இதில் ஒரு விசயம் என்னவென்றால் விழும் போது அந்த அரைநொடி எனக்கு இரண்டு மூன்று நிமிடங்களாய் ஸ்லோமோஷனில் போகும். அப்போது நான் “விழுந்து காலிப்பர் ஒடியக் கூடாதே” என மனதுக்குள் கவலைப்படுவேன். கவலைப்பட்டு முடிக்குமுன் கீழே கிடப்பேன். சரியாய் கீழே விழுந்து தரையில் தொடுகிற தருணம் என் நினைவில் இருக்காது.

 இது போன்ற நேரங்களில் எனக்கு வருத்தமோ பயமோ அவமானமோ ஏற்படுவதில்லை. சீவும் போது சீப்பில் நான்கு தலைமயிர்கள் கொத்தாய் வருவதை பார்ப்பது போல் ஒரு உணர்வு. இதுவரை விழுந்து ஒருமுறை கூட எனக்கு உடம்பில் அடிபட்டதும் இல்லை. விழுந்து விழுந்து அப்படி பழகி விட்டது. ஆனால் பார்ப்பவர்கள் பயந்து விடுவார்கள். அவர்கள் ரொம்ப கவலைப்படுவார்கள். முன்பு ஒரு வேடிக்கையான சம்பவம் நடந்தது. கிண்டி இண்டஸ்டிரியல் எஸ்டேட் பகுதியில் என் வண்டியில் ஏறும் தவறி விழுந்து விட்டேன். மாலை ஏழரை இருக்கும். இருட்டான தனியான பகுதி. ஒருவர் அவ்வழியாய் வந்தார். அவரை அழைத்து என்னை தூக்கி எழுப்பி விடுமாறு கேட்டேன். அவர் என்னை ஏதோ குடித்து விட்டு கிடக்கிறவர் என நினைத்தார். எதற்கு வம்பு என என் பக்கத்தில் வரவே தயங்கினார். நான் அவரிடம் நான் போதையில் எல்லாம் விழவில்லை என விளக்கினேன். பிறகு என் வண்டியை பார்த்ததும் ஊனமுற்றவர் என நம்பிக்கை ஏற்பட்டு உதவி செய்தார். அந்த பகுதி வழியாக இப்போது போகும் போதெல்லாம் எனக்கு இதை நினைத்து சிரிப்பு வரும்.
இன்று ஒரு ஓட்டலில் சாப்பிட்டு விட்டு வெளியே வரும் போது காலிப்பர் லாக் விழாமல் நான் விழுந்து விட்டேன். விழுந்த தாக்கத்தில் காலிப்பரின் நான்கைந்து ஆணிகள் கழன்று தெறித்து விட்டன. அதை குத்துமதிப்பாய் பொருத்தி நடந்து வீட்டுக்கு வந்து விட்டேன். நாளை மறுநாள் மதுரையில் சாகித்ய அகாதெமியின் கருத்தரங்கில் பேசுகிறேன். என்னுடன் நண்பர் லஷ்மி சரவணகுமார் மற்றும் வீரபாண்டியன் (பருக்கை நாவல்) ஆகியோர் பேசுகிறார்கள். நாளை மாலை ரயிலில் புறப்பட வேண்டும். நாளைக்குள் காலிப்பரை ரிப்பேர் பண்ண முடியாவிட்டால் பயணத்தை ரத்து பண்ண வேண்டியது தான்.
 நானெல்லாம் நாய்க்கு மாதம் ஐயாயிரம் ரூபாய்க்கு மீன் வாங்கி போடுவது பற்றியோ பத்தாயிரம் ரூபாய்க்கு ரெமி மார்டின் எப்படி குடிப்பது என்றோ கவலைப்படுவதில்லை. என் பிரச்சனைகள் சாதாரணமானவை. அற்பமானவை. செருப்பு வார் அறுத்தால் அதை ஒரு தெருவோரக் கடையில் நின்று பொறுமையாய் தைத்து வாங்கி போகும் இந்த நாட்டின் லட்சக்கணக்கான பேர்களைப் போன்றவன் நான். சுதந்திரம் சமத்துவம் போன்ற உயர்ந்த லட்சியங்களை பற்றி யோசிக்கவெல்லாம் நேரம் இருப்பதில்லை. நல்ல சாப்பாடு, வலியில்லாத உடல், கொஞ்சம் ஓய்வு கிடைத்தால் பெரிய திருப்தி. வாழ்க்கை என்றால் விலையுயர்ந்த அனைத்து இன்பங்களையும் அனுபவித்து கொண்டாட வேண்டும், அதிகாரத்துக்கு எதிராய் கலகம் செய்ய வேண்டும் என சொல்பவர்களை பார்த்தால் எனக்கு அந்நியமாய் தோன்றும். என் உலகம் சின்ன சின்ன விசயங்களால் ஆனது. இதை ஒரு நண்பரிடம் சொன்னால் “ஏன் கம்யூனிஸ்டுங்க மாதிரி பேசுறீங்க?” என்கிறார்.

Comments

Unknown said…
அற்பர்க்ளின் உலகம் மிகவும் யதார்த்தம், எளிய சுவையான நடை
ஜம்புநாதன் டி.எஸ்

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...