முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மார்த்தாண்ட வர்மாவும் ஐ.ஐ.டியும்



நேற்று ஐ.ஐ.டியில் வரலாற்று ஆய்வாளர் அனன்யா வாஜ்பய் உரை நிகழ்த்தினார். நானும் சில நண்பர்களும் பார்வையாளர்களாய் கலந்து கொண்டோம். சூத்திரரான சிவாஜி எவ்வாறு பிராமணர்களின் உதவியுடன் தன்னை சத்திரியராய் உருமாற்றி, அதை உறுதிப்படுத்துவதற்கான சடங்குகள் நடத்தி, தன் குடும்ப வரலாறு பற்றி ஒரு பொய்யாத தகவலை உருவாக்கினார் என்பது பற்றி அனன்யா பேசினார்.
 அவர் பேச்சு முடிந்ததும் கலந்துரையாடல். நான் சில கேள்விகள் கேட்டேன். வர்ணாசிரமம் சார்ந்து மட்டுமே நாம் சாதி அமைப்பை புரிந்து கொள்ள இயலாது. தமிழகத்தில் எவ்வாறு பௌத்தம் ஒடுக்கப்பட்டு அழிக்கப்பட்ட பின் ஏற்கனவே பௌத்தர்களாய் இருந்தவர்கள் தீண்டத்தகாத சாதிகளாய் இந்துக்களால் மாற்றப்பட்டார்கள் என அயோத்திதாசர் விரிவான தகவல்கள் மற்றும் சான்றுகளுடன் பேசியுள்ளதை குறிப்பிட்டேன். ஒரு தாழ்த்தப்பட்ட சாதியானது வர்ணாசிரம அமைப்பினால் மட்டுமல்ல ஒரு மதப் போரின் பின்விளைவாகவும் உருவாகக் கூடும் என்றேன். அதன் பிறகு திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் அனிழம் திருநாள் மார்த்தாண்டவர்மா ஆண்ட போது நடந்த ஒரு சம்பவத்தை பேசத் தொடங்கினேன். அப்போது மொத்த அரங்கிலும் சிரிப்பலைகள் பரவின. எனக்கு சில நொடிகள் ஒன்றுமே விளங்கவில்லை. நான் எவ்வாறு தமிழகத்தின் பகுதியான திருவிதாங்கூரை முன்னர் மார்த்தாண்ட வர்மா ஆண்டார் என்ற போது மீண்டும் சிரித்தார்கள். நான் எதாவது தவறாய் சொல்லி விட்டேனா அல்லது அவர்களுக்கு பைத்தியமா என எனக்கு விளங்கவில்லை. திருவிதாங்கூர் முன்பு மலையாள மன்னர்களின் ஆட்சியின் பகுதியாய் இருந்த சமஸ்தானம். அது பின்னர் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது என்றதும் தான் சிரிப்பலை ஓய்ந்தது.

பின்னர் நான் இந்த கூட்டத்தின் விநோத எதிர்வினை பற்றி ஒரு பேராசிரியரிடம் விசாரித்தேன். அவர் சொன்னேன் “மாணவர்களில் கணிசமானவர்கள் மலையாளிகள். அதனால் தான்”. அவர்கள் மனதில் மார்த்தாண்ட வர்மா ஒரு மலையாள மன்னர் என பதிந்திருக்க வேண்டும். திருவிதாங்கூர் என்பதும் ஒரு மலையாள பிரதேசம் என அவர்கள் நினைத்திருக்கலாம். இன்றும் பத்மநாபபுரம் அரண்மனை கேரள அரசின் ஆட்சியின் கீழே உள்ளது. இந்த பத்மநாபபுரம் 1729இல் இருந்து 1795 வரை திருவிதாங்கூரின் தலைநகராக இருந்தது. கேரளாவை ஆண்ட திருவிதாங்கூர் மன்னர்கள் பதினாறாம் நூற்றாண்டில் துவங்கி இருபதாம் நூற்றாண்டில் இந்தியா சுதந்திரம் பெறும் வரை தமிழகப் பகுதியான திருவிதாங்கூரை மையமிட்டு தான் ஆட்சி நடத்தினர். மார்த்தாண்ட வர்மாவின் கீழ் திருவிதாங்கூர் குமரி துவங்கி கொச்சின் வரை விரிந்து கிடந்தது. இந்த வரலாறு அம்மாணவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம். அல்லது தெரிந்தும் திருவிதாங்கூரை ஒரு கேரளப் பகுதி என்றும் பின்னர் தமிழகம் பிடுங்கிக் கொண்டது என்றும் நினைத்திருக்கலாம். எப்படியோ இப்போது தமிழக மண்ணாக உள்ள ஒரு பகுதியை தம் மலையாள மன்னர் ஆண்டார் எனும் வாக்கியம் அவர்களுக்கு பெரிய ஜோக்காகி விட்டது.
இது ஒரு விதத்தில் குமரிப் பகுதியின் தமிழர்கள் தம் அடையாளம் சார்ந்து உணரும் ஒரு வேடிக்கையான முரண் நிலையையும் காட்டுகிறது. செல் சேவிஸ் என்று ஒரு குமரி மாவட்ட கவிஞர் இருக்கிறார். அவர் விளவங்கோடு என்ற பகுதியை சேர்ந்தவர். அப்பகுதியின் விசேடத் தமிழில் கவிதை எழுதும் ஒரே கவிஞர் அவர் தான். விளவங்கோட்டு தமிழின் சாயலை சற்றே ஜெயமோகனின் வட்டார வழக்கிலும் காணலாம். செல் சேவிஸ் ஒரு முறை சொன்னார். குமரி மாவட்டம் 1956இல் கேரளப் பகுதியில் இருந்து தமிழகத்தின் மாவட்டமாய் இணைந்த விசயம் அவரது பெற்றோர்களுக்கு நீண்ட காலம் தெரியாமல் இருந்ததாம். அவர்களூம் வேறும் சிலரும் அப்போதும் தாம் கேரள மாநிலத்தவர் என்றே நம்பி வந்தனர். இன்றும் குமரி மாவட்டத்தினர் தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் நடுவில் தான் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். மலையாளம் கலந்த தமிழ் பேசுகிறார்கள். இரண்டு மொழிகளையும் பேசுகிறார்கள். அடிக்கடி கேரளாவுக்கு பயணப்படுகிறார்கள். இரண்டு மாநில கலாச்சாரமும் கலந்த ஒரு தனி அடையாளம் அவர்களுக்கு உள்ளது. விளைவாக தமிழர்கள் அவர்களை மலையாளி என்றும் மலையாளிகள் அவர்கள் பாண்டி என்றும் அழைப்பார்கள். ஒரு முக்கியமான மலையாள மன்னர் தமிழகப் பகுதியை ஆண்டார் என்ற வாக்கியம் மலையாளிகளை இவ்வளவு குஷியாக சிரிக்க தூண்டுகிறது என்பது இன்றும் அப்பகுதி யாருடையது எனும் குழப்பம் தீரவில்லை என்று காட்டுகிறது.
மற்றொரு செய்தியையும் நான் புரிந்து கொண்டேன். தமிழகத்தில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியில் பேசுகிறோம் என்பதாலே அது பொதுவான வழக்கமான இடம் என நாம் நம்பி விடக் கூடாது. இதையே நான் ஒரு இலக்கிய கூட்டத்தில் சொன்னால் முன்னெண்ணம் இன்றி கவனிப்பார்கள். ஆனால் மலையாளிகள் மிகுந்த இடத்தில் சொன்னால் அவர்களுக்கு எளிதில் உள்வாங்க இயலாது. வட இந்தியாவுக்கு போய் மோடியை எளிதில் விமர்சித்து ஒரு கூட்டத்தில் பேசவோ இந்த்துவாவை கண்டிக்கவோ முடியாது. இங்கு கைதட்டுவார்கள். அங்குள்ள கூட்டத்தின் எதிர்வினை வேறொன்றாக இருக்கும்.
 என் நண்பர் ஜெய்சங்கர் மற்றொரு கேள்வி கேட்டார். பிராமணர்கள் தோன்றுவதற்கு முன்பான இந்திய சமூகத்தில் சாதி எப்படி இருந்தது என்பதற்கு பதிவு உண்டா? இதற்கு பதிலளித்த அனன்யா ரிக் வேதம் தாம் இருப்பதிலேயே தொன்மமான பதிவு என்றும், அது சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்டது என்பதால் பிராமணர்களுக்கு முன்பான இந்தியாவை கட்டமைப்பது இயலாது என்றார். மேலும் ஆரியர்கள் சைபர் கணவாய் வழி வந்தார்கள் எனும் கருத்தாக்கத்தை தான் ஏற்பதில்லை என்றார். இது
பற்றி பின்னர் எங்கள் பேராசிரியர் அழகரசனிடம் பேசும் போது வேறொரு விளக்கத்தை தந்தார். வட இந்தியர்களுக்கு பிராமணர்கள் இல்லாத வரலாறு இல்லை. ஆனால் தமிழர்களுக்கு அவ்வாறான பிராமணர்களுக்கு முந்தின வரலாறு உண்டு. நம் தொல்காப்பியம் ஒரு சான்று. சங்கப் பாடல்களில் உள்ள அந்தணர்கள் உண்மையில் பிராமணர்கள் அல்ல என அயோத்திதாசர் சொல்வதை அவர் குறிப்பிட்டார். ஆக பிராமணர்களைக் கடந்த ஒரு சாதிய அமைப்பை பற்றி பேசுவது நமக்கு இயல்பாகவும் சாத்தியமானதாகவும் உள்ளது. மேலும் நாம் சைபர் கணவாய் ஆரியர் படையெடுப்பு வாதத்தை கேட்டு கேட்டு பழகியிருக்கிறோம். இது போன்ற பின்னணி இல்லாத தில்லியை சேர்ந்த அனன்யாவுக்கு பிராமணர்களுக்கு முன்பான இந்தியா எனும் வாதமே விசித்திரமாய் தோன்றும். அவ்வாறு அத்தகைய ஒரு காலகட்டம் பற்றி ஆய்வதற்கு அவரிடம் சான்றுகள் இல்லை. ஆனால் நம்மிடம் அத்தகைய வரலாற்றை கட்டமைப்பதற்கு சான்றுகள் உள்ளது. ஆக சாதி பற்றி விவாதிக்கும் போதே நீங்கள் எந்த பிராந்தியத்தை சேர்ந்தவர் என்பது தான் உங்கள் நிலைப்பாட்டையும் நம்பிக்கையும் தீர்மானிக்கும். ஒரு ஆய்வு முடிவு எல்லா பிராந்தியத்துக்கும் பொருந்த அவசியமில்லை.
என்ன தான் ஒருமித்த இந்தியா என பேசினாலும் பக்கத்தில் மலையாளிகள், தொலைவில் வடக்கில் இந்திக்காரர்கள் நடுவே நாம் எவ்வளவு தனிமையாய் இருக்கிறோம் என இது எனக்கு உணர்த்தியது.

கருத்துகள்

சாம் கிதியோன் கற்றல் கற்பித்தல் இவ்வாறு கூறியுள்ளார்…
குமார செல்வா ஒரு விளவங்கோட்டு எழுத்தாளராக தொன்னூறுகளிலிருந்து செயல்பட்டு வருகிறார். பரவலாக இலக்கிய உலகில் கவனம்பெற்றவர். விளவங்கோட்டு வட்டார வழக்கினைத் தன் நடையாக வரித்து எழுதிய அவருடைய கொய்தமுள் கவிதைத் தொகுதி, உக்கிலு, கயம் சிறுகதைத் தொகுதிகள்,சமிபத்தில் வெளிவந்த குன்னிமுத்து நாவல் போன்றவை குறிப்பிடத்தக்கன. இக்கட்டுரையில் செல் சேவிஸ் எழுத்தாளரோடு இவரையும் இணைத்து வாசிக்கலாம் என்ற அடிப்படையில் இத்தகவலைப் பதிவிடுகிறேன். நன்றி
ஆர். அபிலாஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
அன்புள்ள சேம்
குமார செல்வா அதிகமும் பொதுத்தமிழில் தான் எழுதியதாய் என் நினைவு. உக்கிலு தொகுப்பு ஒரு உதாரணம். செல் சேவிஸ் கலப்பற வட்டார வழக்கில் கவிதை எழுதுகிறவர். உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...