முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புழுவை சாப்பிடும் சிங்கம்

மனிதர்கள் பற்றின நம் புரிதல் நாம் பார்க்கிறவர்களிடம் இருந்து உருவாகிறது. என்னுடன் இருப்பவர்கள் பளிச்சென்று புது சட்டை போட்டால் நான் சாயம் வெளுத்த சட்டை போடுவது பற்றி அவமானமாய் உணர்வேன். இப்படித் தான் ஒப்பிட்டு ஒப்பிட்டு ஒரு தரத்தை நமக்காய் நிர்ணயிக்கிறோம். அதன்படி நம்மை நாமே மதிப்பிடுகிறோம்.
 “லயன் கிங்” படத்தில் ஒரு அழகான காட்சி வரும். சிம்பா எனும் குட்டி சிங்கம் ஒரு பாலைவனத்திற்கு வந்து சேர்ந்து பசியிலும் களைப்பிலும் சோர்ந்து விழும். அப்போது அங்கு டிமன் எனும் மீர்க்கட்டும் (ஒரு சின்ன பாலூட்டி வகை) பும்பா எனும் பன்றியும் அவனுக்கு தோஸ்தாவார்கள். அவர்கள் அவனை உணவருந்த அழைப்பார்கள். சுற்றும் முற்றும் பார்த்தால் சாப்பிட மானோ முயலோ இல்லை. சிம்பா எதை சாப்பிட என யோசிக்கும் போது டிமனும் பும்பாவும் ஒரு பாறையை புரட்டிப் போடுவார்கள். கீழே ஈரமான இடத்தில் நிறைய புழுக்கள் நெளியும். டிமனும் பூம்பாவும் எச்சில் ஒழுக அவற்றை எடுத்து சுவைப்பார்கள். சிம்பாவுக்கு முதலில் குமட்டலெடுத்தாலும் மெல்ல மெல்ல அவற்றின் சுவையையும் அறிந்து ஏற்பான். நம்முடைய பழக்கத்தால் இதற்கு மேல் நம்மால் கீழே இறங்க முடியாது என நினைப்போம். ஆனால் எவ்வளவு கீழே போனாலும் உலகம் ஒன்று தான்.
சில வாரங்களுக்கு முன் என் டி.வி பழுதாகியது. கம்பெனி ஆள் பார்த்து விட்டு ரிப்பேர் செய்த பத்தாயிரம் ஆகும். புதிதாய் வாங்கி விடுங்கள் என்றார். புது டி.வி வாங்க என்னிடம் பணம் இல்லை. வீட்டில் அம்மா இருந்தார்கள். அவர்களுக்கு டி.வி இல்லாவிட்டால் வெறுப்பாகி விடும். முன்பு நான் வேலை பார்த்துக் கொண்டிருந்த காலத்தில் புது டி.வி தேவையென்றால் நேரே கடைக்கு போய் பணத்தை நீட்டி வாங்கி விடுவேன். அன்று சாத்தியமான ஒரு எளிய விசயம் இன்று அசாத்தியம். சரி பழைய டி.வி ஒன்று வாங்கலாம் என முடிவு செய்து பழைய பொருட்களை விற்கும் கடைகளுக்கு சென்று தேடினேன். பழைய டிவியே பெரிய விலை சொன்னார்கள். நான் ரெண்டாயிரம் ரூபாய்க்குள் தேடினேன். ஆரம்பத்தில் ரெண்டாயிரத்தை ஒரு பெரிய தொகையாக நினைக்கும் நிலை வந்து விட்டதே என சங்கடம் ஏற்பட்டது. ஆனால் பாருங்கள் என் பட்ஜெட்டுக்குள் பழைய டிவி கூட மாட்டவில்லை. ரெண்டு நாள் கழித்து வாருங்கள் என்றார்கள். ரெண்டு நாள் கழித்தும் கிடைக்கவில்லை.
 பிறகு எதேச்சையாய் இன்னொரு கடையில் ஒரு டி.வி மாட்டியது. அதன் போர்டை மட்டும் மாற்றி உள்ளதாய் கூறினார்கள். அதை வாங்க அங்கு காத்து நின்ற போது என் நிலைமை வேறு யாருக்கும் இருக்காது என தோன்றியது. அப்போது ஒரு இளம் தம்பதி அங்கு என்னைப் போல பழைய டிவி தேடி வந்தார்கள். பார்க்க ரொம்ப ஏழைகளாய் படவில்லை. ஆனால் அவர்கள் பட்ஜெட்டோ என்னை விட கீழே இருந்தது. ரெண்டாயிரம் ரூபாய் டிவி கூட அவர்களுக்கு கட்டுப்படியாக வில்லை. நான் அங்கு நின்றிருந்த கொஞ்ச நேரத்தில் இந்த உலகில் எல்லா நிலையிலும் மக்கள் இருக்கிறார்கள் என உணர்ந்தேன். பொருளாதார நிலையை பொறுத்து மதிப்பீடும் தேவையும் ரசனையும் மாறுகின்றன.
பழைய டிவி அங்கங்கே அழுக்குப் படிந்து ஒரு புராதனப் பொருள் போல் இருக்கிறது. சில இடங்களில் அழுக்கு கறை துடைத்தாலும் நீங்கவில்லை. யார் எப்படி பயன்படுத்தினார்களோ என நினைக்க அருவருப்பு ஏற்பட்டது. ஆனாலும் என்ன ஒழுங்காய் வேலை செய்கிறது. என்னிடம் முதலில் இருந்த எல்.ஜி எல்.சி.டி டிவி போல் இதில் நிறங்கள் துல்லியமாய் தெரியவில்லை. நீலம் பச்சையாகவும் சிவப்பு ஊதா போலவும் தோன்றியது. இடது பக்கம் மேல் ஓரத்தில் அலையலையாய் நெளிகிறது. சிலநேரம் நெளிவில் மட்டையாடும் தோனி டிஸ்கோ நடனம் ஆடுகிறார். ஆனாலும் இப்போது பழகி விட்டது. எந்த குறையும் தெரியவில்லை. இன்னும் கொஞ்ச நாளில் பணம் வந்தாலும் புது டிவி வாங்க தோன்றாது என நினைக்கிறேன்.
இப்போதெல்லாம் அந்த டிவியை பார்க்கும் போது கல்லைப் புரட்டிப் போட சிம்பாவின் முன் தோன்றின நெளியும் புழுக்களின் சித்திரம் தான் எனக்கு நினைவு வருகிறது. சிம்பா அதை சாப்பிட்டு பழகி பெரிதான பின் புழுக்களை மட்டும் தின்னும் சாதுவான சிங்கம் ஆகி விடுவான். எதற்கு கஷ்டப்பட்டு துரத்தி மான், மாடெல்லாம் வேட்டையாட வேண்டும், எதற்கு வேறு சிங்கங்களுடன் போட்டியிட்டு சண்டையெல்லாம் போட வேண்டும் என அவனுக்கு தோன்றும். கொஞ்சம் மாற்றி யோசித்தால் எல்லாம் இயல்பாகி விடுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.